என்ன பாவம் செய்தாள்? இந்தச் சிறுமி கொல்லப் படுவதற்கு? (81:9)

Share this:

ளைகுடாவின் கத்தர், சவூதி ஆகிய நாடுகளில் உள்ள இரு இந்தியப் பள்ளிக்கூடங்களில், கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் பள்ளிப் பேருந்து ஓட்டுநரின் அசட்டையினால் நிகழ்ந்த அதிர்ச்சிகரமான சிறார் இருவரது மரணங்களைத் தொடர்ந்து, பெற்றோரின் மனதில் நிம்மதியை ஏற்படுத்தும் வகையிலும் அசம்பாவிதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியிலும் கத்தரில் உள்ள இந்தியப் பள்ளி ஒன்று ஹை-டெக் தீர்வைக் கையில் எடுத்துள்ளது.

இப்புதியமுறை மூலம் வீட்டிலிருந்து பள்ளிவாகனத்தில் ஏறும் குழந்தைகள் வாகனத்திற்குள் நுழைவதையும் வெளியேறுவதையும் உடனுக்குடன் குறுஞ்செய்தி மூலம் பெற்றோர்கள் அறிந்து உறுதி செய்து கொள்ள முடியும். பள்ளிக்கு அனுப்பும் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று சேர்ந்தனரா இல்லையா? என்பதை வீட்டிலிருந்தே அறிந்து கொள்ள முடிவதால், இப்புதிய வசதி பெற்றோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

சாட்டிலைட் உதவியுடன் பல புதிய டெக்னாலஜிகளை உபயோகித்து, மிகுந்த பொருள் செலவில் இவ்வசதி செய்யப்படுவதற்கான கட்டாயத் தேவை யாது? எனும் வினாவுக்குப் பெட்டிச் செய்தியில் விளக்கமான விடை உள்ளது.

கடந்து போன ரணங்கள்

டந்த இருமாதங்களுக்குமுன் கத்தர் நாட்டின் தலைநகரான தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றின் மாணவ-மாணவியரை அழைத்துக் கொண்டுவரும் மினிவேன் ஒன்றினுள் இருந்து நான்கரை வயதான சாரா என்ற KG-1 வகுப்பில் பயிலும் ஒரு சிறுமி இறங்காமல் தூங்கி விட்டாள். இதனை அறியாத மினி வேன் ட்ரைவர், எப்போதும்போல் திறந்த வெளியில் உள்ள வாகன நிறுத்தத்தில் மினிவேனை நிறுத்திவிட்டுச் சென்று விட்டார்.

வளைகுடா நாட்டின் வெப்பம் உலகறிந்தது. அதிகபட்சமாக 55 டிகிரி செண்ட்டிகிரேட்வரை திறந்த வெளியில் உள்ள வெப்பம், கதவுகளையும் கண்ணாடி ஜன்னல்களையும் இறுக மூடிய ஒரு வாகனத்திற்குள் 70 டிகிரி செண்ட்டிகிரேட்வரை உயரும். இத்தகைய கடுமையான அவஸ்தையில் துடித்து இறந்துபோன அந்த ரோஜா மலர்களின் மறுமை வாழ்வு சிறக்க, அடிமனதில் இருந்து உருக்கமாக பிரார்த்திக்கிறோம்.

கடந்த மே 17, 2010இல் கத்தர் தோஹாவில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்துபோன சாரா முஹம்மத் குறித்த விரிவான செய்தி காண்க:

http://www.gulf-times.com/site/topics/article.asp?cu_no=2&item_no=362310&version=1&template_id=57&parent_id=56

oOo

இச்சம்பவத்தின் தாக்கம் மனதைவிட்டு அகலும் முன்னரே அடுத்த 25 தினங்களில் சவூதியிலுள்ள இந்தியப் பள்ளிக்கூடம் ஒன்றில் அச்சாக இதேபோன்றதொரு நிகழ்வில் மற்றொரு பிஞ்சு துடிதுடிக்க பலியானது.

கடந்த ஜூன் 13, 2010இல் சவூதியின் தம்மாம் புறநகர் அல்ராக்கா பகுதியில் உள்ள இந்தியப் பள்ளிக்கூடத்தில் இறந்து போன ஃபிதா ஹாரிஸ் குறித்த விரிவான செய்தி காண்க:

http://arabnews.com/saudiarabia/article65581.ece?comments=all#comments

எதிர் வரும் செப்டம்பர், 2010 கத்தர் நாட்டில் அறிமுகமாகவிருக்கும் பள்ளிச் சிறார்களுக்கான இந்தத் தானியங்கிக் கண்காணிக்கும் முறை(Automated Child Tracking System -ACTS)யின் மூலம் பெற்றோர்களோடு, பள்ளி நிர்வாகமும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டைத் தனித் தனியே அறிந்து கொள்ள இயலும்.

“இந்தப் புதிய ஏற்பாடு, வாகனங்கள் மூலம் தினமும் பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு உத்திரவாதத்தினை அளிக்கும்” என்கிறார் DPS பள்ளியின்  முதல்வரான A.K ஸ்ரீவஸ்தவா.

இப்புதிய ஏற்பாட்டிற்குத் தேவையான கருவிகளைப் பொருத்தும் பணியினைக் கத்தரில் உள்ள கணினி நிறுவனமான iNet Middle East செய்து வருகிறது. பள்ளிப் பேருந்துகளை சாட்டிலைட் உதவி கொண்டு தொடர்ச்சியாகக் கண்காணிக்கும் வகையில் automated Radio Frequency Identification (RFID)-இதில் பயன்படுத்தப் படுகிறது. இதற்காக iNet RFID, GPS (Global Positioning System) மற்றும் GPRS (General Packet Radio Service)ஆகிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப் படும்.

RFID என்பது தானியங்கி முறையில் அடையாளம் கண்டுணரும் முறையாகும். இதற்காகவே  செய்தியின் தொடக்கத்தில் காண்பிக்கப்பட்டுள்ள RFID அட்டைகளில் உள்ளீடு செய்யப் பட்ட விபரங்களைப் படிக்க, ரீடர்ஸ் எனப்படும் படிப்பான்கள் பள்ளிப் பேருந்துகளில் பொருத்தப்படும். பள்ளியிலுள்ள அனைத்து மாணவ-மாணவியரும் இந்த CHIP இணைக்கப்பட்ட அட்டையைத் தவறாமல் கொண்டுவர வேண்டும் என்பது முக்கிய விதியாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டைகளுடன் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டியது பெற்றோர்களின் கட்டாயக் கடமை என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த முறைமூலம், ஒரு குழந்தை வீட்டிலிருந்து கிளம்பிப் பள்ளிப் பேருந்திற்குள் நுழையும்போதும் வெளியேறும்போதும் நொடிப்பொழுதில் SMS குறுஞ்செய்தி ஒன்று பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் சென்றுவிடும்படி அமைக்கப் பட்டுள்ளது.

இம்முறையை மற்ற இந்தியப் பள்ளிகளும் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும் என்று தெரிகிறது.

இதற்கான கருவிகளைப் பேருந்தில் பொருத்தும் iNet நிறுவனத்தின் மேலாளர் சுனில் நாயர் செய்தியாளர்களிடையே பேசும்போது, “இப்புதிய வசதியின் உதவியால் பேருந்து சென்று கொண்டிருக்கும் இடத்தை ரியல் டைமில் உடனுக்குடன் அறிந்து கொள்வது மட்டுமின்றி, குறிப்பிட்ட மாணவரோ மாணவியோ அந்தப் பேருந்தில் பயணித்தவாறு உள்ளனரா? என்பதையும் அறிந்து கொள்ளலாம்” என்றார்.

இம்முறை பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் பெரும் நிம்மதியை ஏற்படுத்தும். இந்தமுறை பற்றிப் பெற்றோர்களுக்கு முறையான அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பெற்றோரிடையே பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது” என்று மேலும் அவர் கூறினார்.

குறுஞ்செய்தி அனுப்பும் முறைகளில் பல்வேறு வசதிகளை பயனர் விரும்பியவாறு மாற்றம் செய்து கொள்ளலாம். பேருந்தின் இஞ்சின் நிறுத்திய பிறகும் ஒரு மாணவர் பேருந்திலிருந்து இறங்காமல் இருந்தால், அதைப் பள்ளி நிர்வாகிகள் சிலருக்குத் தகவலாக அறிவிக்கும் வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது.

இரு இளம் தளிர்களின் கொடூர மரணம், புதிய முறையில் சிந்திக்கவும் பள்ளி செல்லும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் குழந்தைகளின் பள்ளி வருகை உறுதிப் படுத்துவதற்கான வசதியினைச் செய்யவும் வழிகோலியுள்ளது. இறைவனடி சேர்ந்து விட்டத் தளிர்களின் அநியாயமான மரணத்திற்குக் காரணமானவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, பெற்றோர்களிடமிருந்து பரவலான கோரிக்கை எழுந்திருந்த நேரத்தில், இனிமேலும் இதுபோன்ற கவனக்குறைவான மரணங்கள் நிகழ்வதைத் தவிர்ப்பதற்கான வழி என்ன? என்பது குறித்துச் சிந்தித்ததும் பொருட்செலவைப் பெரிய விஷயமாக நினைக்காமல் அதற்கான வழியை நடைமுறைபடுத்த முன்வந்ததும் பாராட்டத்தக்க செயல்பாடாகும்.

அதே சமயம், பள்ளி நிர்வாகம் இப்புதிய திட்டத்தில் பயன்படுத்தப்படும் மின்னணு சாதனங்களைச் சரியாகப் பராமரித்து வருவதும் குழந்தைகள் பள்ளி வாகனத்தில் ஏறி, இறங்கி விட்டதை உறுதிப்படுத்த, தமக்கு வரும் குறுஞ்செய்திகளில் கவனமாக இருக்க வேண்டியது பெற்றோர்களினதும் கடமையாகும். இழந்துவிட்ட இளந்தளிர்களின் பிரிவு இறுதியானதாக இருக்க பிரார்த்திப்போம்.

 

– அபூ ஸாலிஹா


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.