{mosimage}தலித்தியம், பெரியார், பவுத்தம், மார்க்சியம், மனித உரிமைகள், கட்டுடைத்தல், பின்நவீனம் எனப் பல களங்களில் செயலாற்றி வருபவர் பேராசிரியர். அ.மார்க்ஸ். 90களில் புதிதாய் எழுத வந்த இளைஞர்களின் ஆதர்சமாய் விளங்கியவர். சதாம் தூக்கிலிடப்பட்டதையொட்டிய அவரது பேட்டி ஒன்று வாசகர்கள் பார்வைக்காக:
சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
உலகமயமாக்கல் காலத்தில் அறங்களின் காலம் முடிந்துவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஈராக் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா மூன்று காரணங்களைச் சொன்னது.
1. ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருக்கின்றன.
2. செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் ஈராக்கிற்கும் தொடர்பு இருக்கிறது.
3. அல்கொய்தா அமைப்பிற்கும் சதாமுக்கும் தொடர்பு இருக்கிறது.
இப்போது நாம் சதாமுக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இது கூட நம் குற்ற உணர்வைத் தணித்துக் கொள்ளும் வழியோ என்று தோன்றுகிறது. நாம் கையாலாகாதவர்களாய் நின்று கொண்டிருக்கிறோம்.
சதாமுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதை ஷியா முஸ்லீம்கள் வரவேற்றுள்ளனரே, எனவே இதை ஒட்டுமொத்தமாக முஸ்லீம்களுக்கு எதிரான போக்கு என்று கூறமுடியுமா?
முஸ்லீம்களுக்குள் சன்னி, ஷியா பிரிவுகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் இதை அமெரிக்கா பயன்படுத்திக்கொள்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இப்போது உலக முஸ்லீம் தலைவர்கள் முஸ்லீம்கள் சன்னி, ஷியா பிரிவை மறந்து ஒன்றுபட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் அமைப்பும் லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பும் தியாகத் திருநாளில் சதாம் கொல்லப்பட்டிருபதைக் கண்டிக்கின்றன. இப்போது ‘அரசியல் இஸ்லாம்’ என்கிற கருத்தாக்கம் உருவாகியுள்ளது.
1992க்கு முன்பு இந்திய முஸ்லீம்கள் பெரிதும் மார்க்க விஷயங்களையே விவாதித்தனர். ஆனால் 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்பு முஸ்லீம்கள் அரசியல் ரீதியாக ஒருங்கிணைந்து அரசியல் அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கத்துவங்கினர். அப்படிப்பட்ட சூழல் இப்போது உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிரசினையில் இந்தியாவின் நிலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
இந்தியா சதாம் தூக்கிலிடப்பட்டது ‘துரதிர்ஷ்டவசமானது’ என்று கருத்து தெரிவித்துள்ளது. ஆனால் இது போதாது. இந்தியா அமெரிக்காவுடன் செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். சதாம் தன் ஆட்சியிலிருந்த காலம் முழுவதும் இந்தியாவின் ஆதரவாளராகத்தான் இருந்தார். தான் முஸ்லீமாக இருந்தபோதும் இந்தியா பாகிஸ்தான் போரின்போது இந்தியாவிற்கு ஆதரவாக நின்றவர் சதாம். அத்தகைய மாபெரும் மனிதரின் மரணத்திற்கு வெறுமனே கண்டனங்கள் மட்டுமே போதாது. ஆப்கானை ஆக்கிரமித்த அமெரிக்கா, ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்காவிற்கு இந்தியாவை அடிமை கொள்ள அதிகநேரம் ஆகாது என்பதை இந்தியா உணரவேண்டும்.
இந்த பிரச்சினையை உலகம் முழுக்க இடதுசாரிகள் எப்படிப் பார்க்கிறார்கள்?
வழக்கம்போல இடதுசாரிகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உறுதியாக நிற்கிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் அமெரிக்காவை எதிர்ப்பதற்கும் இடதுசாரிகள் எதிர்ப்பதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. ஈரானில் ஷா ஆட்சி லிபரலாகத்தான் இருந்தது. ஆனால் மோசமான அமெரிக்க ஆதரவு நிலையை ஷா ஆட்சி கடைப்பிடித்தது. ஆனால் கொமேனியின் ஆட்சிக்காலத்தில் முழுக்க முழுக்க அமெரிக்க எதிர்ப்பு இருந்தது. ஆனால் அது அடிப்படைவாதப் பண்புகளுடனே இயங்கியது. கொமேனியின் ஆட்சிக்காலத்தில்தான் சல்மான் ருஷ்டிக்கு ‘பத்வா’விதிக்கபட்டது உங்களுக்குத் தெரியும். இப்போது சதாமை எடுத்துக்கொண்டாலும் அவர் பல சந்தர்ப்பங்களில் சர்வாதிகாரியாகச் செயல்படார் என்பது உண்மைதான். பாத் கட்சி இடதுசாரி பண்புகளைக் கொண்டிருந்தாலும் சதாம் காலத்தில் அது மாறியது. சதாம் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அமெரிக்காவின் ஆதரவோடும் பின்னணியோடும்தான் செய்யப்பட்டன. அதேபோலதான் ஒசேமாவும். ஆனல் சதாம் குற்றம் செய்தவர் என்றால் அதைத் தண்டிக்கும் அதிகாரமும் உரிமையும் ஈராக் மக்களுக்கு இருக்கிறதே தவிர அமெரிக்காவிற்கு அல்ல. ஆனால் இப்போது காலம் மாறியிருக்கிறது. இனியும் உலக முஸ்லீம் மக்கள் அமெரிக்காவை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அவர்கள் ‘ஒன்றுபடட் இஸ்லாம்’ என்னும் கருத்தாக்கத்தோடு அமெரிக்காவிற்கு எதிராக போராடத் தயாராகிவருகிறார்கள்.
இந்தியாவில் முஸ்லீம் ஆதரவுச் சக்திகள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?