சத்தியமார்க்கம்.காம்

ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்! print Email
இஸ்லாம் - இஸ்லாமிய ஆய்வுக் கட்டுரைகள்
திங்கள், 12 மே 2008 10:39

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்:

يَا أَيُّهَا النَّاسُ كُلُواْ مِمَّا فِي الأَرْضِ حَلاَلاً طَيِّباً وَلاَ تَتَّبِعُواْ خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து (உணவாக) அனுமதிக்கப்பட்ட (நல்ல)வற்றையே உண்ணுங்கள்; ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்; நிச்சயமாக அவன் உங்களுக்கு  வெளிப்படையான விரோதியாவான்.
(அல்குர்ஆன் 002:168) 

உங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன், 008:028. 064:015)

ஒவ்வொரு மனிதருடைய வாழ்க்கையிலும் இரண்டுவிதமான வாழ்க்கைத் தெரிவுரிமைகள் (choices) இருக்கின்றன. ஒன்று ஆகுமான-ஹலாலான வரம்புக்குட்பட்டது; மற்றொன்று இந்த வரம்புகளை மீறிய, அல்லது தடுக்கப்பட்ட - ஹராமான செயல்பாடுகளைக் கொண்டது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஹலாலான வரம்புகளில் இருக்கின்றவரை, அதுவே அவருக்கு நேரான வழியாகும். 

இந்த அல்லாஹுதஆலா அனுமதித்த நேரான வழியில் அவர்கள் செய்கின்ற சிறிய நற்செயலும் - பாதையில் கிடக்கும் கல், முள் போன்ற இடர் தரும் பொருட்களை அகற்றுவது முதல், பிறரைப் பார்க்கும்பொழுது சிரித்த முகத்துடன் பார்ப்பது, அவர்களுக்கு ஸலாம் கூறுவது, உண்ணல், உறங்கல் மற்றும் சுயதேவைகளைப் பூர்த்தி செய்தலின்போது மார்க்கம் கூறுகின்ற சுன்னத்தான முறைகளைக் கடைப்பிடிப்பதுவரை - இதுபோன்ற எண்ணற்ற நற்செயல்களைச் செய்யும் பொழுது, வல்ல அல்லாஹ், அவர்களுக்கு எண்ணிலடங்கா அதிகமான நன்மைகளை வாரி வழங்குகின்றான்.
இப்படிப்பட்ட நற்செயல்களைச் செய்வதால் கிடைக்கும் நன்மைகளை எவராலும் நினைத்துக்கூடப் பார்த்திருக்க முடியாது; கணக்கிடவும் முடியாது. அவ்வளவு அதிகமான நன்மைகளை அவர்கள் செய்கின்ற நற்செயல்களுக்கு வல்ல அல்லாஹ் வைத்துள்ளான். உதாரணமாக, ஒருவர் "சுபுஹானல்லாஹ் - அல்லாஹ் மகாத்தூய்மையானவன்" என்று ஒரு தடவை சொல்வாரானால் ஏழு வான்களையும் ஏழு பூமிகளையும் ஏக காலத்தில் நிறுக்க வல்ல மீஜான் என்னும் தராசின் பாதிஅளவிற்கு நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். "அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் வல்லஅல்லாஹ்வுக்கே" என்று கூறினால் மீதமுள்ள பாதிஅளவையும் நன்மைகளைக் கொண்டு நிரப்பிவிடுகின்றான். "அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப்பெரியவன்" என்று கூறும்பொழுது வானம் பூமிக்கு இடையிலுள்ள பரப்பளவின் அளவுக்கு நன்மைகளால் நிரப்பிவிடுகின்றான். 

தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும், ''அல்ஹம்துலில்லாஹ் - எல்லாப்புகழும் இறைவனுக்கே'' என்பது தராசை நிரப்பக்கூடியதாகும். ''சுபஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி - அல்லாஹ் தூயவன், எல்லாப் புகழும் அவனுக்கே உரியது'' என்பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை (நன்மையால்) நிரப்பக்கூடியதாகும். தொழுகை ஒளியாகும், தானதர்மம் சான்றாகும், பொறுமை ஒரு வெளிச்சமாகும், குர்ஆன் உனக்கு ஒன்று ஆதரவான சான்றாகும், அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பு: நபித்தோழர் அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி) அவர்கள். (முஸ்லிம், 0381)

இம்மாதிரியான நற்செயல்கள் செய்யும்பொழுது, வல்ல அல்லாஹ் நமக்கு எண்ணிலடங்கா நன்மைகளைத் தருவதோடு மட்டுமில்லாமல் நம்முடைய பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். உதரணமாக, நாம் உளூச் செய்யும்பொழுது நம்முடைய கைகளால், பேச்சினால், பார்வையினால், கேட்டதினால் மற்றும் நடந்ததினால் நிகழ்ந்திட்ட பாவங்களையும் மன்னித்து விடுகின்றான். 

நான் ''அல்லாஹ்வின் தூதரே! அங்கத் தூய்மை (உளூ) செய்வது பற்றி எனக்குச் சொல்லுங்கள்!'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''உங்களில் ஒருவர் அங்கத் தூய்மை செய்வதற்குத் தண்ணீரை நெருங்கி வாய் கொப்புளித்து (மூக்கிற்கு நீர் செலுத்தி) மூக்குச் சிந்தினால் அவரது முகம், வாய், மூக்கு ஆகியவற்றால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் (தண்ணீரோடு சேர்ந்து கீழே) விழுந்து விடுகின்றன.

பிறகு அவர் அல்லாஹ் உத்தரவிட்டதைப் போன்று தமது முகத்தைக் கழுவினால் அவரது முகத்தால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது தாடி ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. 

பிறகு அவர் மூட்டுவரை இரு கைகளைக் கழுவும்போது அவருடைய கைகளின் பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்து விடுகின்றன. பிறகு அவர் ஈரக் கையால் தலையைத் தடவி (மஸஹுச் செய்தி)டும்போது அவரது தலையின் பாவங்கள் அனைத்தும் தலைமுடியின் ஓரங்களிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. 

பிறகு அவர் தம் பாதங்களைக் கணுக்கால்கள்வரைக் கழுவும்போது அவரது கால்களால் ஏற்பட்ட பாவங்கள் அனைத்தும் அவரது விரல் நுனிகளிலிருந்து தண்ணீரோடு சேர்ந்து விழுந்துவிடுகின்றன. (அதற்குப் பிறகு) அவர் எழுந்து தொழும்போது அல்லாஹ்வை அவனது தகதிக்கேற்றதைக் கூறிப் புகழ்ந்து பெருமைப்படுத்தித் தமது உள்ளத்தில் இறைவனுக்கு மட்டுமே இடமளித்தால் அவர் திரும்பிச் செல்கையில் அன்று பிறந்த பாலகனைப் போன்று பாவங்கள் நீங்கி (பரிசுத்தமாகத்) திரும்புகிறார்'' என்று கூறினார்கள்.
(முஸ்லிம்) 

மேலும், மூமினான ஆணுக்கோ பெண்ணுக்கோ பெரும் துன்பங்கள், துயரங்கள் ஏற்படும்பொழுது அவையும் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகின்றன. 

உங்கள் மக்கட் செல்வமும் பொருட்செல்வமும் சோதனையாக இருக்கின்றன. அல்லாஹ்விடம் மகத்தான கூலி உண்டு என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 008:028. 064:015)

ஒவ்வொருவரும் மரணத்தை சுகிப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 021:035)

எந்தக் குற்றமும் அற்றவர்களாக அல்லாஹ்வைச் சந்திக்கும்வரை மூஃமினான ஆண், மூஃமினான பெண் ஆகியோர் தங்களின் செல்வம், தங்களின் பிள்ளைகள், தங்களின் உயிர் ஆகிய விஷயத்தில் சோதிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதீ, முஅத்தா)

வல்ல அல்லாஹ், நாம் செய்த நற்செயல்களுக்கு நம்முடைய பாவங்களை மன்னித்து நம்மைத் தூய்மைப்படுத்தி நன்மைகளையும் பலமடங்காக, நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு வழங்கக்கூடியவன் ஆவான். 

நாம் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய சிலச் செயற்பாடுகளை நம்மீது அல்லாஹ் கடமையாக்கியுள்ளான். அந்தக் கடமையான செயற்பாடுகளை நாம் செய்யும்பொழுது அவை நமக்கு நன்மைகள் தரக்கூடியதாக ஆகிவிடுகிறது. இதில் அல்லாஹ்வுக்கு எவ்வித இலாபமும் ஏற்படுவதில்லை. அவன் விதித்த கடமைகளை நிறைவேற்றாமல் கைவிட்டோமெனில் அல்லாஹ்வுக்கு எவ்வித இழப்புமில்லை; அது நமக்குத்தான் இழப்பாகும்.  அல்லாஹ் கடமையாக்கிய செயற்பாடுகள் ஒட்டுமொத்தமாக நம்முடைய நலனுக்கேயாகும். அவற்றை நிறைவேற்றினால் கிடைக்கும் நன்மையும் நிறைவேற்றத் தவறினால் ஏற்படும் நன்மைகளின் இழப்பும் நமக்குத்தான்.  கடமையான செயற்பாடுகளைச் செய்வதற்கும் செய்யாததற்கும் நாம் பெறப் போகும் கூலி, நம்மால் நினைத்துப்பார்க்க முடியாத நன்மையாக அல்லது நஷ்டமாக அமையலாம். 

அல்லாஹ் வழங்கிய வாய்ப்புகளை நாம் உரிய வகையில் பயன்படுத்திக் கொண்டு, நன்மைகளை சேமித்துக் கொள்வதும் அவற்றுக்குப் பிரதி பலனாக, கொடிய-கொழுந்து விட்டெரியும் நரகத்தைவிட்டுப் பாதுகாப்புப் பெற்று, நமக்காக அல்லாஹ் தயார் படுத்தி வைத்துள்ள உயர்ந்த அந்தஸ்தையுடைய சொர்க்கத்தை அடைவதற்கு நம்மை நாமே தகுதி படைத்தோராய் ஆகிவிடுவதையுமே தன் அடியானுக்கு அல்லாஹ் விரும்புகிறான்.
அளவிடமுடியாத நன்மைகள் நமக்கு கிடைப்பதெல்லாம் நாம் ஹலாலான - ஆகுமான வரம்புக்குள் இருக்கின்றவரைதான். இதில் தவறிழைத்து விடுவோமானால் நாம் வரம்புகளை மீறி தடுக்கப்பட்ட - ஹராமானவற்றினுள் வீழ்ந்து படுவோம் என்பதை நாம் புரிந்து நடந்து கொள்ள வேண்டும். தடுக்கப்பட்டவை என்பது, அல்லாஹ் ஹராமாக்கிய அனைத்துச் செயல்களான, அல்லாஹ்விற்கு இணைவைப்பது, அல்லாஹ்வை மறுப்பது போன்ற படுபாதகச் செயல்களைச் செய்வதாகும். தடுக்கப்பட்ட வரம்புக்குள் புகுந்து கொண்டு எவ்வளவு அளப்பரிய நற்செயல்கள் செய்தாலும் அதில் நமக்கு ஒரு சிறிய நன்மைகூட கிடைக்க வாய்ப்பில்லை. 

இந்த ஹராமுடைய வரம்பென்பது ஷைத்தானின் வழியாகும். நமது செயற்பாடுகளில் ஷைத்தானுடைய வழியைப் பின்பற்றினால் அதனை அல்லாஹ் முற்றிலுமாக வெறுத்து ஒதுக்குகிறான். அதாவது ஒருவன் ஹராமான ஷைத்தானுடைய வழியில் இருந்து கொண்டு, ஹஜ்ஜு, உம்ரா, பெரிய பெரிய பள்ளிவாசல்கள் கட்டுவது, மதரஸாக்கள் கட்டுவது, வாழ்க்கை முழுவதும் வணக்கத்தில் கழிப்பது, நோன்பு நோற்பது போன்ற எண்ணற்ற நன்மையான செயற்பாடுகள் செய்தாலும் அந்த ஹராமான வரம்புக்குள் வீழ்ந்து இவற்றைச் செய்தால் அவற்றுக்குக் கடுகளவு நன்மைகூட அல்லாஹ்விடத்திலிருந்து பெற்றுக் கொள்ள முடியாது. 

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல், மனிதர்களுக்குக் காட்டுவதற்காகவே தன் பொருளைச் செலவழிப்பவனைப்போல், கொடுத்ததைச் சொல்லிக் காண்பித்தும், நோவினைகள் செய்தும் உங்கள் ஸதக்காவை (தான தர்மங்களைப்) பாழாக்கி விடாதீர்கள் அ(ப்படிச் செய்ப)வனுக்கு உவமையாவது: ஒரு வழுக்குப் பாறையாகும். அதன் மேல் சிறிது மண் படிந்துள்ளது. அதன் மீது பெருமழை பெய்து (அதிலிருந்த சிறிது மண்ணையும் கழுவித்) துடைத்து விட்டது. இவ்வாறே அவர்கள் செய்த -(தானத்)திலிருந்து யாதொரு பலனையும் அடைய மாட்டார்கள். இன்னும், அல்லாஹ் காஃபிரான மக்களை நேர் வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 2:264)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கு வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 47:33)

இஸ்லாம் கட்டளையிடாத வழியில் அறச்செயல்கள் செய்யும் போது அது பாழாகிவிடாமல் இருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.. 

உதாரணமாக, திருட்டு, கொள்ளை போன்ற மோசடி செய்த பொருட்களிலிருந்து தர்மம் செய்வதை அல்லாஹ் ஏற்கமாட்டான்.

''தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடி பொருட்களிலிருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (இறைவனால்) ஏற்கப்படாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸயீ, அஹ்மத், இப்னுமாஜா)

இந்த பூமியில் வாழக்கூடிய நம்முடைய வாழ்க்கையில் எவ்வாறு நாம் வாழவேண்டும் என்று நமக்குத் தேர்வு செய்வதற்கான முழுச் சுதந்திரம் உண்டு. ஒன்று, அல்லாஹ்வுடைய ஹலாலான வரம்புக்கு உட்பட்ட வாழ்க்கையாகும். மற்றொன்று, அதற்கு மாற்றமாக ஷைத்தானின் ஹராமான வரம்புகளில் அமைந்த வாழ்க்கையாகும். ஒரு மனிதருக்கு ஹலாலான வழிமுறையான குர்ஆன், ஹதீஸுடைய வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அல்லாஹ்வுடைய வேதத்தின்படியும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னத்தான வழிமுறையின்படியும் செல்லும் வழிதான் நேரானவழி. உலகத்திலேயே அனைத்து வழிமுறைகளைவிட மிகச் சிறந்த வழியுமாகும். இந்த வழிமுறை நேரான, நேர்மையான, எந்த ஒரு தவறும் இல்லாத, முழுமை பெற்ற வழிமுறையாக உள்ளது. வாழ்க்கையில் இந்த வழிமுறைகளைக் கடைபிடித்து நடக்கும்பொழுது, சின்னஞ்சிறு நற்செயல்களுக்கும் தயாளகுணமுடைய வல்லஅல்லாஹ் அளவிடமுடியாத நன்மைகளை நமக்கு வழங்குகிறான்.

Trackback(0)
கருத்துக்கள் (10)add comment
0
haneefm:
إِنَّ الَّذِينَ كَفَرُواْ سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنذَرْتَهُمْ أَمْ لَمْ تُنذِرْهُمْ لاَ يُؤْمِنُونَ நிச்சயமாக காஃபிர்களை (இறைவனை நிராகரிப்போரை) நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் (சரி) அல்லது எச்சரிக்காவிட்டாலும் சரியே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6) மிக்க பயனுள்ள ஆக்கம் இன்னும் இது போல ஆக்கங்கள் தொடரட்டும் ...வாழ்த்துகள் ஹனீஃப்-குவைத்
1

May 13, 2008 06:11
0
ஆரிஃப்:
சகோ ஹனீஃப்-குவைத், நீங்கள் எடுத்து வைத்த திருமறை வசனம் சரியானது என்றாலும், அதனை அது வழங்கப்பட்ட வரிசையில் பொருள் கொண்டால் தான் பொருத்தமாக இருக்கும் எனக் கருதுகிறேன். (நபியே!) எவர்கள் (இவ்வேதத்தை மனமுரண்டாக) நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரித்தாலும் அல்லது எச்சரிக்காவிட்டாலும் சமமே! அவர்கள் ஈமான் (இறை நம்பிக்கை) கொள்ள மாட்டார்கள். (2:6) இப்போது தெளிவாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி!
2

May 13, 2008 09:04
0
haneefm:
சகோ ஆரிஃப் அவர்களுக்கு நான் கண்ட படித்த குர்கான் தமிழ் ஆக்கத்தில் அப்படி தான் இருக்கு!! திரு குர்கான் அரபி வசனங்களுக்குகேற்றவாறு தான் தமிழ் ஆக்கம் இருக்கு இதில் தங்களுக்கு கேற்ப்ப மாற்றி நமக்குள் வேறுபாடுகளை உண்டு பண்னி மற்றவர்கலுக்கு இடம் குடுக்கவேண்டாம் இன்னும் அல்லாஹ் மிக அறிந்தவனாக இருக்கிறான் ஹஃனீப்- குவைத்
3

May 13, 2008 15:09
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் அன்பு சகோதரர் ஆரிப் அவர்களே நீங்கள் போட்டது போல் குர்ஆன் வசனம் வைத்தால் மூல மொழியில் ஒரு வார்த்தை நீக்கிவிட்டதாக அமையும் அது தான் `` இன்னல்லதீன '' `` நிச்சயமாக அவர்கள் '' அதனால் ஹநிப் போட்டது தான் சரி வேதத்தில் சற்று கவனமாக இருக்கவும் தங்கள் சகோதரர் வடக்குமான்குடி அப்துல் அசீஸ் மா சலாம். அப்துல் அசீஸ்.
4

May 14, 2008 03:39
0
ஆரிஃப்:
சுட்டிக் காட்டிய சகோதரர்களுக்கு நன்றி! சகோதரர் ஹனீஃப், முதலில் உங்களிடம் குர்ஆன் என்பதைச் சரியாக எழுதுமாறு வேண்டிக் கொள்கிறேன். எனக்கு அவ்வளவு அரபிப் புலமை இல்லை! நான் எடுத்துக்காட்டிய வசனத்தின் பொருளில் பிழையிருந்தால் மன்னிக்க! நான் கொடுத்த தமிழாக்கம் தாருல்ஹுதா பதிப்பகம் வெளியிட்டுள்ள குர்ஆன் தர்ஜூமாவில் உள்ளதைத்தான் காட்டியிருக்கிறேன். இனி எச்சரிக்கையாக இருந்து கொள்கிறேன். நீங்கள் எடுத்துக் காட்டியபடி பொருள் கொண்டால், நிராகரிப்பாளர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் என்று பொருள் வருகிறது. சத்தியம் எது எனச் சரியாகத் தெரிந்தும் வீம்புக்காக இறைச் செய்தியை மறுப்பவர்களைக் குறித்து இவ்வசனம் குறிப்பதாக உள்ள தமிழாக்கத்தையே நான் வைத்துள்ளேன்.
5

May 14, 2008 12:13
0
abdul azeez:
நம் சகோதரர்களாகிய அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். சகோதரர் ஆரிப் நீங்கள் வீம்புக்காக என்று குறிப்பிட்டது மூலத்தில் இருந்தாகணும் இல்லை என்றால் ப்ராக்கெட்டில் போட்டு அதிகமாக விளக்கவேண்டும் என்ற கட்டாயம் மொழிபெயர்ப்பாளருக்கு அவசியம் இல்லை. படிப்பவர்கள் அந்த வீம்புக்காக என்றதை உள்ளடக்கி புரிந்து கொள்ளவேண்டியது தான். இன்னும் கூட வேறு ஒரு வசனத்தை பார்த்து இருப்பீர்கள் அவர்களுடைய இதயங்கள் மீது அல்லாஹ் முத்திரை குத்தி விட்டான். அவர்களுடைய செவிப்புலங்களிலும், அவர்களுடைய பார்வையின் மீதும் ஒரு திரை இருக்கிறது. இந்த வசனத்துக்கு ஒரே ஒரு சொல் அரபியில் `` ஹதமல்லாஹு '' இது தான். அப்புறம் அலா குலூபிஹீம் வ அலா சம்இஹிம் வ அலா அப்சாரிஹீம் செவிப்புலனுக்கும், கண்களுக்கும் திரை என்று வைத்து கொள்ளவேண்டியது தான் முத்திரையும் போடலாம் மா சலாம். அப்துல் அசீஸ்.
6

May 15, 2008 20:41
0
முஸ்லிம்:
அல்குர்ஆன் 2:6வது வசனத்துக்கு காஃபிர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள் என்று பொருள் கொண்டால் அது வேறு வசனங்களுக்கு முரண்படும். நடைமுறையில் இனிமேல் காஃபிர்கள் எவரும் இஸ்லாத்தை ஏற்கமாட்டார்கள் என்ற தவறான பொருளையும் தருகிறது. இஸ்லாத்தை ஏற்பவர்கள் அன்றும் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். (அல்லாஹ் நாடினால் நாளையும் இஸ்லாத்தை ஏற்பவர்கள் இருப்பார்கள்.) இதை நாம் அனுபவமாக கண்டு வருகிறோம். எனவே ''நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமருலிப்பதும் ஒன்றுதான் அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்ற வசனம் மொத்தமாக காஃபிர்களைச் சுட்டுவதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு குறிப்பிட்ட நிராகரிப்பாளர்களைக் கூறுகிறது என்றே பொருள் கொள்ள வேண்டும். இஸ்லாத்தை நிராகரித்தவர்களில் எச்சரித்தப் பின்னரும் நம்பிக்கை கொள்ளாதவர்கள் யார் என்பதை அடுத்த வசனம் தெளிவுபடுத்துகிறது. ''அவர்களின் இதயங்கள் மற்றும் செவிப்புலன்கள் மீது அல்லாஹ் முத்திரையிட்டுவிட்டான். அவர்களின் பார்வை மீது திரை இருக்கிறது. (அல்குர்ஆன் 2:7) 2:6வது வசனத்தில் ''அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' என்று கூறிவிட்டு 2:7வது வசனத்தில் அந்த அவர்கள் யாரென அடையாளம் காட்டுகின்றான். ''நீர் எச்சரிப்பதும் எச்சரிக்காமலிருப்பதும் ஒன்றுதான்'' அவர்களின் உள்ளத்திலும் செவியிலும் முத்திரையிட்டதாலும் அவர்களின் பார்வையில் திரை உள்ளதாலும் நீர் எச்சரிக்கை செய்தாலும் அவர்கள் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். என 2:6-7 இரு வசனமும் விளக்குகின்றன. இதிலிருந்து உள்ளத்திலும் செவியிலும் முத்திரை குத்தப்படாதவர்கள் நம்பிக்கை கொள்வர் என்பது தெளிவு. ''எவருக்கு எதிராக அல்லாஹ்வின் கட்டளை உறுதியாகி விட்டதோ அவர்கள் எந்தச் சான்றுகள் தம்மிடம் வந்த போதும் துன்புறுத்தும் வேதனையைக் காணாத வரை நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்'' (அல்குர்ஆன் 10:96-97) நிராகரிப்பவர்களில் எவருக்கு எதிராக அல்லாஹ்வின் வாக்கு நிறைவேறியதோ அவர் ஒரு போதும் நம்பிக்கை கொள்ள மாட்டார். என்று 10:96-97 வசனம் கூறுகின்றன. இது 2:6-7 வசனத்துக்கு விளக்கமாக இருக்கிறது. நிராகரிப்பவர்களில் இஸ்லாத்தை ஏற்றவர்கள் முற்றாக மறுத்தவர்கள் இந்த இரு சாராரும் எல்லா காலத்திலும் இருப்பார்கள் என விளங்குவதே சரி. பத்ர் போர் சம்பவங்களை இறைவசனங்கள் ஓதும்போது ''அழிந்தவர்கள் தக்க காரணத்துடன் அழிவற்காகவும். தப்பி வாழ்பவர்கள் தக்க காரணத்துடன் வாழ்வதற்காகவும் (இறைவன் இவ்வாறு செய்தான்)'' (அல்குர்ஆன் 8:42) அபூசுஃப்யான் தலைமையில் வந்த வணிகக் கூட்டத்தை மறிப்பதே நபியவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் வணிகக் கூட்டத்தினர் தப்பித்து சென்று விட்டனர். பெருமைக்காகவும் மக்களுக்குக் காட்டுவதற்காகவும் வீடுகளிலிருந்து புறப்பட்ட மக்கத்து நிராகரிப்பாளர்களும் தலைவர்களும் பத்ர் போரில் மாண்டனர். இஸ்லாத்தை கடுமையாக எதிர்த்து வந்த நிராகரிப்பாளர்களின் தலைவர்களில் அபூசுஃப்யானும் ஒருவர். இவர் பின்னாளில் இஸ்லாத்தை ஏற்றார் என்பது பிரபலமான வரலாற்று சம்பவம். எதிர்காலத்தில் இஸ்லாத்தை ஏற்கவிருப்பவர்கள் என்பதையே தக்க காரணத்துடன் தப்பித்து சென்றார்கள் என்று குறிப்பிடுகின்றான் இறைவன் பரிசுத்தமானவன்.
7

May 16, 2008 15:04
0
ஆரிஃப்:
நான் சொல்ல வந்த கருத்தை மிக அழகிய வடிவில் சொல்லிவிட்ட சகோதரர் முஸ்லிம் அவர்களுக்கு நன்றி! இதே சத்தியமார்க்கம்.காம் தளத்தில் இது தொடர்பாக கண்ணில் பட்ட சுட்டி ஒன்று: http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=273&Itemid=40
8

May 16, 2008 15:44
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் முஸ்லிம் அவர்களே அல்ஹ்மதுலில்லாஹ் வ ஜஸாக்கல்லாஹு கைர் சகோதரர் முஸ்லிம் அவர்களின் அருமையான விளக்கத்தின் தொடராக கீழ் கண்ட வசனமும் நிராகரிப்பாளர்களில் பின்னர் ஈமான் கொள்ளக்கூடியவர்கள், மற்றும் நிராகரித்த நிலையிலேயே மரணிப்பவர் என்று இரு சாராரைக் குர் ஆன் மூலம் அல்லாஹ் அடையாளம் காட்டுவதை பார்க்கலாம், 3:91 எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவரிடமேனும் பூமிநிறைய தங்கத்தை ஈடாக கொடுத்தாலும் (அதனை) அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை. ஆக இரண்டாவது கலீஃபாவாகிய கண்ணியம் மிகுந்த உமர் (ரலி) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தை கடுமையாக நிராகரித்து எதிர்த்தவர் எது வரை எனில் நபி( ஸல்) அவர்களை கொலை செய்ய நாடி வாளேந்தி புறப்பட்டவர்... என்பதும் இங்கு அழகான உதாரணம். ஆகும். சிலர் மேற்கண்ட வசனத்தை குர் ஆனில் உள்ள முரண்பாடு போல் இறைவனே (ஒட்டு மொத்தமாக சில) நிராகரிப்பவர்கள் உள்ளத்தில் முத்திரை வைத்து விட்டதாக கூறும் போது யாரும் ஈமான் கொள்ள அழைக்க முடியாது என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கும் இது அழகான விளக்கம். அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.
9

May 17, 2008 14:31
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும். அனைத்து சகோதரர்களுக்கும் சகோதரர் முஸ்லீம் அவர்கள் அல்லது வேறு யாரவது விளக்குவார்கள் என்று எனக்கு தெரியும். இன்னும் இரு சாரார் உள்ளனர் செவிடர் காதில் சங்கு ஊதுவது போல் உள்ள மனிதர்களும், வேத வாக்குகளை உணர்ந்து அதன் பக்கம் பல பேர் தங்களை இணைத்து கொள்ளும் மக்களும் இருக்கத்தான் செய்கின்றனர். இன்னும் சிலர் சத்தியம் தெரிந்திரிந்தும் சந்தர்ப்ப சூழ்நிலை தங்களின் சமூக எதிர்ப்பு மற்றும் பொருளாதார வசதி குறைவு காரணமாக தங்கள் வேலையை இழக்கும் கட்டாயத்திற்கு ஆளாகிவிடுவோம்மற்றும் பாதுகாப்பு இன்மை என்ற அச்சம் காரணமாக கூட தங்களை மார்க்கத்தில் இணைத்துக்கொள்ள தயங்குகிறார்கள். மேலும் முஸ்லீம் அவர்களே சகோதரர் அப்துல் ரஹ்மான் உங்களுக்கு அத்தஹியாத்து விசயத்தில் பதில் அனுப்பியுள்ளார் // அல் அல்பானி அவர்க்கள் சரியான அறிவிப்பாளார் அல்ல மேலும் இதை ஏற்க கூடாது என்றும்,பலகினமானவர் என்று (மேலும் இது சாத் மற்றும் முன்கர் தரதில் அமைந்தவை ஆகும்) இமாம் அபுதாவுது (ரஹ்)பதிவு அமைத்து உள்ளார்கள் இதை யாருமே வெளியே சொல்ல மாட்டர்கள்.// என்று முஹம்மத் அப்பாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை உங்களுக்கு நினைவு படுத்தி.அந்த அறிவிப்பாளர் அல் அல்பானி அவர்களின் நண்பகதன்மை சான்று பிற அறிவிப்பாலரிடம் இருந்து கிடைக்கின்றதா ? என்று கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். மா சலாம். அப்துல் அசீஸ்.
10

May 17, 2008 19:36

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:42 நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் கட்டுரைகள் ஆகுமானவையும் விலக்கப்பட்டவையும்!
Twitter
RSS
YouTube
English