| எது பெண்ணுரிமை? |
|
|
| கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007 | |||||
| வியாழன், 17 ஏப்ரல் 2008 23:03 | |||||
|
"பிரபஞ்சத்தின் ராஜாவாகிய இறைவன் என்னைப் பெண்ணாகப் படைக்காதிருந்து, என்மீது அருள் பொழிந்துள்ளான்" -யூத ஆண்களின் பிரார்த்தனை. "மனைவியாக இருந்தாலும் தாயாக இருந்தாலும் ஒரு வித்தியாசமும் இல்லை. அவள் ஏவாள்தான். எனவே எந்தப் பெண்ணின் மீதும் நாம் மிக்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" -புனித அகஸ்டின். முஸ்லிம் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் கொலை செய்யப்படுவதோ, முஸ்லிம் பெண்கள் கற்பழிக்கப்படுவதோ, உலகின் பல பாகங்களிலும் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்பட்டுக் களையெடுக்கப்படுவதோ இங்கே மனித உரிமைகள் விவகாரம் இல்லை. மேற்கத்திய பார்வையில் இதனை நோக்கினால், பாதிக்கப்பட்டவர்கள்தான் இங்கே அதிகமாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் திட்டப்படுவார்கள். ஒடுக்குபவர்கள் இங்கே உத்தமர்கள். 'நாகரிகங்களின் மோதல்' உள்ள இக்கால கட்டத்தில் முஸ்லிம் பெண்கள் விவகாரம் பெரிய பெண்ணுரிமைப் பிரச்சினையாக மாறியிருக்கிறது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் 'தங்கமான தரத்தில்' வைத்துப் பெண்கள் பார்க்கப்படுகிறார்கள். பெண்களுக்கு அவர்களது சமூகத்தில் 'வழங்கப்பட்டுள்ள கண்ணியம்' பெரிதும் போற்றப்படுகிறது. முஸ்லிம்களும் அவ்வழியைப் பின்பற்ற வேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இந்த லாபங்களெல்லாம் மறைக்கப்பட்டு, பெண்கள் வீட்டை விட்டு வெளியேறுவதற்குப் பெண்ணிய இயக்கவாதிகளால் 'பெண்ணுரிமை' முலாம் பூசப்பட்டது. எந்த அளவுக்குப் பெண்கள் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டனரோ, அந்த அளவுக்கு 'பெண்ணுரிமை வளர்ந்ததாக'க் கணிக்கப்பட்டது. தொழிற்புரட்சி, இயந்திரப் புரட்சியால் ஏற்பட்ட சமூக மாற்றம் 'பெண்கள் முன்னேற்றம்' என்று பெயர் சூட்டப்பட்டது. பெண்ணியவாதிகளின் இந்த 'முன்னேற்றம்' முன்வைத்த வாதம் என்னவெனில், "ஒரு பெண் தன் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் உணவு பரிமாறினால் அது அடிமைத்தனம்! ஆனால் அதே பெண் யாருக்கோ, எவருக்கோ ஹோட்டல்களிலும் வீதிகளிலும் விமானங்களிலும் உணவு பரிமாறினால், அதனால் நேரிடும் பாலியல் தொல்லைகள் அனைத்தையும் தாங்கிக்கொண்டு சேவைகள் செய்தால் அது பெண்களின் முன்னேற்றம்"! என்னே அருமையான வாதம்! பழங்கால கிரேக்கத் தத்துவவியலாளர்கள் பெண்ணுக்கு ஆன்மா உண்டோ, இல்லையா என்று கடுமையான விவாதம் செய்தனர். ஆனால் 'நாகரிகத்தின்' உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருக்கும் ஐரோப்பியர்களும் அமேரிக்கர்களும் இந்தப் பொல்லாத விவாதத்திற்கு விடை தந்தனர். அதாவது பெண் என்பவள் ஓர் உடலைத் தவிர வேறொன்றும் இல்லை. ஆன்மாவாவது கத்தரிக்காயாவது. பெண் என்பாள் ஓர் அழகிய உடலுக்குச் சொந்தக்காரி. அவளை எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம்; ரசிக்கலாம்; பயன்படுத்தலாம். அவளை அரை நிர்வாணத்துடன் பார்க்கலாம்; முழு நிர்வாணமாகவும் பார்க்கலாம். "பெண்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்து விட்டார்கள்" என்று மேலைநாடுகள் மார்தட்டிக் கொண்டிருக்கும் பொழுதுதான் இந்த நிர்வாணக்கோலங்கள் அரங்கேறுகின்றன. 'லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்' என்ற பத்திரிகை இண்டர்நெட்டில் உலாவும் ஆபாசப் படங்கள் பற்றி ஓர் ஆய்வை மேற்கொண்டது. "நிர்வாணப்படங்கள் வேண்டுமானால் குறைந்திருக்கலாம். ஆனால் இந்த இண்டர்நெட் உலகம் உருவாக்கியிருக்கும் போக்கு எப்படிப் போய் விட்டதென்றால் பெண் தனது உடலை வியாபாரப் பொருளாக்கி, அதனை இண்டர்நெட்டில் உலாவ விட்டு வாடிக்கையாளர்களுக்கு வலை வீசும் அவலம் வந்து விட்டது" என்று அந்த ஆய்வு கூறுகின்றது. இந்தச் சூழ்நிலை நிலவும் ஒரு நாட்டில் பெண்களைப் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்திய ஒரு நாட்டின் அதிபர், பெண்களிடமிருந்தே அதிக ஓட்டுகளை வாங்கினால், அதில் ஆச்சரியப் படுவதற்கு எதுவும் இருக்கிறதா? யாரும் எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு சமுதாயம் அது. ஏனெனில் பாலியல் கொலைகள் என்பது அங்கு அன்றாடச் செய்தி; சாதாரண செய்தி. 'வீட்டு வாழ்க்கை அமைப்பு' அழிந்ததன் விளைவுதான் இந்தக் கேடுகெட்டச் சூழ்நிலை உண்டானதன் காரணம். 1994ஆம் ஆண்டு மட்டும் 12 லட்சம் விவாகரத்துகள் ஆணானப்பட்ட அமெரிக்காவில் அறங்கேறியிருக்கிறது. நிபுணர்கள், "புதிய திருமணங்களில் பாதி விவகாரத்தில்தான் முடியும்" என்று சர்வ சாதாரணமாகக் கணிக்கிறார்கள். ஓர் அநீதி அமைப்பால் சுரண்டலின் வடிவம்தான் மாறியிருக்கிறது. அவர்களால் வீடுகளின் உள்விஷயங்களை மாற்ற முடியவில்லை. ஆதலால் அவர்கள் வீடுகளை விட்டும் பெண்களை 'விடுதலை' செய்து விட்டனர். முற்காலத்தில் கெட்ட ஆண்களுக்கெதிராகப் போராடிய பெண் இன்று பெண்ணியம், நவீனப் பெண்ணியம் என்ற பெயரால் இன்றைய ஆண்களுக்கெதிராகப் போராடிக் கொண்டிருக்கிறாள். இதற்கெல்லாம் மாறாக, இஸ்லாம் பெண்களுக்கு அவர்களுக்குரிய உரிமைகளை அள்ளி வழங்குகிறது. பெண்களை வலுக்கட்டாயமாக வீட்டை விட்டு வெளியேற்றும் கொடுமை இஸ்லாத்தில் இடம் பெறவில்லை. அவளுக்குச் சொத்துக்களை சொந்தமாக்கும் உரிமை உண்டு. வாரிசுரிமையும் உண்டு. திருமணத்தில் கணவனுக்கு என்ன உரிமைகளெல்லாம் உண்டோ அத்தனை உரிமைகளும் மனைவிக்கு உண்டு. இஸ்லாத்தில் பெண்கள் வீட்டின் எஜமானிகள். குடும்பத்தை நிர்வகிக்கும் நிர்வாகிகள். குழந்தைகளை வளர்த்தெடுக்கும் பாதுகாவலர்கள். எதிர்கால சமுதாயத்தின் உயிர் நாடிகளான இன்றைய குழந்தைகளை வளர்த்தெடுக்கும் வார்த்தெடுக்கும் உன்னதப் பொறுப்பில் உள்ளவர்கள். அந்தக் குழந்தைகளின் சுவனம், தாய் என்ற ஒரு பெண்ணின் காலடியில்தான் உள்ளது. அவளது கணவனின் நன்மைகள் அவளை அவன் எவ்வாறு நடத்துகிறான் என்பதை வைத்தே இறைவனிடம் தீர்மானிக்கப்படும். ஒரு பெண்ணை நல்ல முறையில் அன்பு செலுத்தி அரவணைத்து வளர்த்தெடுக்கும் தந்தைக்கு நரகத்திலிருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது. ஆக ஒரு கணவனுக்கு, ஒரு மகனுக்கு, ஒரு தந்தைக்கு ஈடேற்றம் என்பது பெண்ணை மையமாக வைத்துத்தான் என்று இஸ்லாம் அன்றே தீர்மானித்து விட்டது. இது இன்றைய 'நவீனப் பெண்ணியவாதி'களுக்குப் புரியுமா? இன்ஷா அல்லாஹ் காலம் புரிய வைக்கும். ஆக்கம்: சகோ. முஹம்மத் அப்துல் கனி
2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]()
//ஆக ஒரு கணவனுக்கு, ஒரு மகனுக்கு, ஒரு தந்தைக்கு ஈடேற்றம் என்பது பெண்ணை மையமாக வைத்துத்தான் என்று இஸ்லாம் அன்றே தீர்மானித்து விட்டது. இது இன்றைய 'நவீனப் பெண்ணியவாதி'களுக்குப் புரியுமா?//
ஒரு பெண்ணின் கல்வியில்தான் அந்தக் குடும்பத்தின் கல்வி முன்னேற்றம் அடங்கியுள்ளது என்பதை கட்டுரையாளர் மிக அழகாக விவரித்திருக்கிறார் பாராட்டுகள்!
1
April 19, 2008 18:46
கருத்து எழுதுக :
|