| காதில் விழுமா? |
|
|
| ஏடு-இட்டோர்-இயல் - தலையங்கம் | |||
| செவ்வாய், 08 ஏப்ரல் 2008 14:35 | |||
|
"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்ற முதுமொழியை, தங்கள் சமுதாயத்துக்கு இடப் பட்டக் கட்டளையாகவே ஏற்றுக் கொண்டு, தாய்நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று தம் குடும்பத்தாருக்காகப் பொருளீட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறது தமிழக முஸ்லிம் சமுதாயம். "எம்புள்ள சவூதியிலே இருக்கான்" "எங்கண்ணன் துபாயிலே இருக்காரு" "என் ஊட்டுக்காரங்க கொய்த்தில இருக்காங்க" முஸ்லிம் சமுதாய மக்கள் பெருமை பொங்க விடுக்கும் அறிக்கைகளில் அவன் என்னவாக இருக்கிறான்? அவரு என்னவாக இருக்கிறார்? அவங்க என்னவாக இருக்காங்க? என்கிற முக்கியத் தகவல் மட்டும் இருக்காது. கேட்டாலும் அந்தத் தகவல் சொல்லப்பட மாட்டாது. ஏனெனில், வெளிநாடுகளில் பணியாற்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் கட்டடத் தொழிலில் கல் தூக்கிக் கொடுத்தோ, சாலைகளை வெட்டிக் குழாய் போட்டோ, தெருவைக் கூட்டிச் சுத்தம் செய்தோ கிடைக்கும் சம்பளத்தில் சுகமான, சொகுசான வாழ்க்கை வாழப் பழகி விட்ட நமது சமுதாயச் சொந்தங்களுக்கு இந்த முக்கியத் தகவல் என்பது தேவையில்லாத ஒன்று. மேற்சொன்ன கடின உழைப்பு நிறைந்த பணிகளைத் தவிர்த்து, அத்திப் பூத்தாற்போல் 'ஆஃபீஸ் பாய்' பணியில் இருப்பவர்களது பராக்கிரமம், "கம்பெனியே தம்பி தலையிலேதான்" என்கிற அளவுக்கு அவர்தம் குடும்பத்தாரால் அவ்வப்போது அதீத விளம்பரத்துக்குள்ளாகும். தன் கண்ணெதிரே பல நாடுகளைச் சேர்ந்த, நம் நாட்டைச் சேர்ந்த, தன்னைவிடச் சின்னப் பையன்களான பிற மதத்தவர்கள் ஏ.ஸி அறைகளில் உட்கார்ந்து கொண்டு தூசு படாமல் வேலை செய்து ஐந்திலக்கச் சம்பளம் வாங்குவதைப் பார்த்து ஏங்கும் நம் சமுதாயச் சொந்தங்களின் இந்த நிலைக்கு யார் காரணம்? விடை தேட தனியொரு ஆய்வுக்காகக் காலவிரயம் செய்ய வேண்டிய தேவை ஏதும் இல்லை. உடலுக்கு ஒவ்வாக் கடும் குளிரிலும் சூடிலும் இரத்தத்தை வியர்வையாக்கியப் பாமரனின் மறுமைக்கான சிறு சேமிப்பில் ஒய்யாரமாக வளைகுடா பவனிவரும் கட்சி/இயக்கத் தலைவர்களின் புண்ணியத்தில் சமுதாயத்திடம் அதற்கான பதில் தயாராகவே உள்ளது. ஆங்கிலேயரின் ஆட்சியில் நம் நாடு அடிமைப் பட்டுக் கிடந்தபோது, "அறிவு தேடுவது முஸ்லிமான ஆண்-பெண்களின் கடமையாகும்" என்ற நபிமொழிக்கு எதிராக, நாட்டுப் பற்று என்பது வெறியாக மாறிப்போய், "பரங்கியன் பாஷை படிப்பது ஹராம்" என்று முட்டாள்தனமான ஃபத்வா வெளியிட்ட - தம் முட்டாள்தனத்துக்கு விலையாக முழுச் சமுதாயமும் எத்துணை இழப்புகளை எத்தனை ஆண்டுகள் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறியாத - நம் முன்னோர்கள்தாம் இந்த இழிநிலைக்குக் காரணகர்த்தாக்கள். காரணம் என்னமோ கசப்பானது தான். ஆனால் இன்னும் எத்தனைக் காலத்திற்குத் தான் முன்னோர்களின் மீது பழியைப் போட்டு முடங்கிக் கிடப்போம்? என்ற கேள்விக்குத் தான் பதிலில்லை. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்ட ஒருவரின் சராசரி வயதை வைத்துக் கணக்கிட்டால், பரங்கியன் நாட்டைத் துறந்து ஒரு தலைமுறை வயதாகப் போகின்றது. 60 வருடங்கள் கடந்த பின்னரும் அறிவை வளர்க்க/கல்வி கற்க, முன்னோர்களின் "ஆங்கிலேய பாஷை ஹராம்" ஃபத்வாவின் மீது பழியைப் போடுவது அறியாமையா? அல்லது அறிவீனமா? எதிர்காலச் சமுதாயத்தின் தேவைகளுக்குக் கடந்த காலச் சமுதாயத்தின் மீது பழியைப் போட்டு கதை பேசி இருப்பது, அடுத்த தலைமுறைக்கு இச்சமுதாயம் செய்யும் மிகப்பெரிய துரோகம் அன்றி வேறென்ன? காரணம் கூறி வாளாவிருப்பதை விட, காரணம் அகல வழிமுறை தேடுவதன்றோ அறிவார்ந்த செயல்?. சமுதாய அவலம் அகல வழிமுறை தேடும் பயணத்தில்.....நேற்று (07.04.2008) திங்கட் கிழமையின் நாளிதழ்களில் இடம் பிடித்துக் கொண்ட ஒரு செய்தி: கல்வியில் பின்தங்கியுள்ள இஸ்லாமியர்களுக்குக் கல்வி கொடுக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு உரிய பங்கு இல்லை. முஸ்லிம் சமுதாயத்தில், 5 சதவீதம் ஓரளவு வசதி படைத்தவர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒன்றிணைத்து, ஏன் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களை உருவாக்கக் கூடாது? உலகத்தரமான சட்டக் கல்லூரியை உருவாக்கலாம். மைனாரிட்டி என்ற பெயரில் யார் யாரோ கல்லூரி தொடங்கும் போது இது சாத்தியம்தான். முஸ்லிம்கள் பிளஸ்-2 வரையாவது படித்திருக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்க வேண்டும். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி அளிக்கும் மையங்களை உருவாக்க வேண்டும். 95 சதவீத முஸ்லிம்கள் பாட்டாளிகள். பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக உழைக்கிறார்கள். பங்கேற்பதில் முன்னுரிமை என்ற வகையில், இத்தனை பங்கு முஸ்லிம்களுக்கு வேண்டும் என்று போராடுங்கள். போராட்ட களத்தில் நில்லுங்கள். நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். கல்வியில் பின்தங்கி இருக்கும் இஸ்லாமியர்களை முன்னேற்ற ஐ.ஐ.டி (Indian Institute of Technology), ஐ.ஐ.எம்(Indian Institute of Management) போன்ற உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குங்கள். மேற்கண்டவாறு ஆலோசனையும் தார்மீக ஆதரவும் அளித்திருப்பவர் முஸ்லிம்களுக்கு 'இதயத்தில்' இடம் கொடுத்து வைத்திருக்கும் நம் "மஞ்சள் துண்டு" முதல்வர் அல்லர். முஸ்லிம்களின் அரசியல் கட்சி/கழகங்களைச் சேர்ந்த தலைவர் அல்லர். "ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாய ஆதரவும் தங்களுக்குத்தான்" என்று பெருமை பேசும் முஸ்லிம்களின் பல இயக்கங்களின் ஒரு தலைவருமல்லர். மேற்கண்ட பயனுள்ள யோசனையை முன்வைத்திருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், மருத்துவர் ராமதாஸ் ஆவார். அவருக்கு நமது ஆழிய நன்றி உரித்தாகட்டும்! அவருடைய சொல் நம் சமுதாயச் செல்வந்தர்களின் காதுகளில் விழுமா? நம் சமுதாயச் சொந்தங்களுக்கு இனியாவது கல்வி என்பது கடமையென்றாகுமா? காலம் பதில் சொல்லட்டும்.
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (15)
![]()
அட என்னத்த சொல்றதுங்க. நம்ம பிள்ளைங்க ஆறாம் கிளாஸ் அல்லது எட்டாம் கிளாஸ் படிக்கிரதுக்குள்ள வெளியுலகம் தனக்கே வந்தது போல் சம்பாதிக்க போகிறேன் என்று ஆட்டோ ஒட்டுகிரவனையும், கார் ஒட்டுனரையும் தொத்திக்கொண்டு. படிப்பை உதறித்தள்ளிவிட்டு வாழ்க்கையை நாசம்பன்னிக்கொல்கிறார்கள். சாதரணமா ஆபீஸ்பாய் சம்பளத்துக்கும்.இங்குள்ள டிரைவர் சம்பளத்துக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசம் இல்லை முன்னூறு அல்லது ஐநூறு அரபு கரன்சி தான்.வித்தியாசப்படும் எப்படியும் இரண்டு வருடங்கள் கழித்து தான் தன் குடும்பத்தை பார்க்க முடியும். படிப்பின் அருமை தெரியாமல் விளையாட்டு தனத்தில் உள்ள வயது பிறகு கஷ்ட்டப்படும் பொழுது யோசித்து செய்த தவறை திருதிக்கொள்ளமுடியாத ஒன்று எது என்றால் அது இதுவாக தான் இருக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அப்துல் அசீஸ்.
1
April 08, 2008 22:55
NAMMAVARGAL YELLORIDAMUM VASOOL SAIYTHU SCHOOL COLLEGE AARAMBITHU SONTHA
SOTTAHAA AAKKIVEDUHIRAARHAL.10 PER SERDHU 2LACKS CAPITAL POOTTAAL KOODA 20LACKS
AAHIVEDUM.SHARE POOTU SCHOOL COLLEGE AARABIKKA ETTANAI PER THAYARAAHA ERUKKIRAARGAL.SHARE POODA ENNAI PONDRAVARHAL READY.
2
April 09, 2008 05:20
அன்புச் சகோதரர் ஹஸன் ஷேக்,
நமது தளத்தின் முகப்பின் இடப்பக்கத்தில் 'Taimil Typing' என்ற உதவிப் பலகையைச் சொடுக்கி, தமிழில் தட்டச்சப் பழகிக் கொள்க!
3
April 09, 2008 05:47
மேற்கண்ட பயனுள்ள யோசனையை முன்வைத்திருப்பவர் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர், மருத்துவர் ராமதாஸ் ஆவார். அவருக்கு நமது ஆழிய நன்றி உரித்தாகட்டும்////
நம் இஸ்லாமியா சமுதாய தலைவர்கள் என்று சொல்லிகொள்ளும் அவர்கள்[ அவர்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபட்டின் காரணமாக] இந்த இஸ்லாம் சமுதயாத்தை முன்னுக்கு வரவிடாமால் தடுத்துக்கொண்டுயிருக்கும் 'நந்திகள்' இனிவரும் கலங்களில் நாமும் நம் இஸ்லாமிய கல்வி தரதையும்/ஆண்+பெண் இருவருக்கும் உரியமேல் படிப்பையும்/இன்னும் முக்கியமாக பெற்றவர்கள் தங்களின் பிள்ளைகலுக்கு மேன்மேலும் கல்விதரதை உயர்த்த முன்வரனும்/ இன்னும் அரங்கமும் நம் சமுதயா தலைவர்கள் என்று சொல்லிக்கொல்லும் அவர்கலும் இஸ்லாமிய கல்வியில் ஒரு புரச்சிசை உண்டு பண்னனும்/இன்னும் மேற்கொண்டு படிக்க வசதியில் பிண்தங்கிய மாணவர்களுக்கு உதவ நம் இஸ்லாமிய நிருவணங்கள் முன்வரனும் அப்போது தான் மேற்கண்ட ஆக்கத்தை செயல்பாட்டில் கொண்டுவர இயலும்!!!
பெற்றவர்களும் இன்னும் இஸ்லாமிய நிருவனங்கள்/ அரங்கமும்+சமுதயா தலைவர்களும் நம் சமுதய கல்விதரதை உயர்த்த முன்வருவர்கள??
[ஏக்கத்துடன்]
ஹனீஃப்-குவைத்
4
April 09, 2008 06:43
அழுத்தமான தலையங்கம். சமுதாயப் புல்லுருவிகளுக்கும் சவுக்கடி. சத்யமார்க்கம் தளம் மெருகி மிளிர்கிறது. அல்லாஹ்வின் நற்கூலி கிடைக்கட்டுமாக.
5
April 09, 2008 08:13
அல்ஹம்துலில்லாஹ். கருத்துக்கள் அனைத்தும் மிகச் சரியானவை.
நான் படித்திருந்தும், அல்லாஹ்வின் அருளால் திறமைகள் பல பெற்றிருந்தும் 6 வருடங்கள் கழித்து மீண்டும் நிர்பந்தங்கள் - குழப்பங்கள் இவற்றின காரணமாக வேண்டா வெறுப்புடன் மீண்டும் வெளிநாட்டுக்கு வந்து, என் குடும்பத்தினை பிரிந்து மனஅழுத்தத்தினால் புழுங்குகிறேன்.
கடந்த ஆறு வருடங்களாக ஹலாலான வழியில் ஓரளவு முன்னேற்றமடையக்கூடிய வியாபாரம் (Computer Sales/Serice, Institute, and Printing/Wedding Cards) செய்து வந்தேன். ஆனால் பொருளாதார உதவிகள் கிடைக்காத காரணத்தினால் குடும்பத்தினரால் நிர்பந்திக்கப்பட்டு இப்போது மீண்டும்......
அன்பிற்குரிய செல்வந்தர்களே! என்னைப் போன்ற திறமையுள்ளவர்கள் வியாபாரத்திற்காக பொருளாதார உதவிக் கேட்டு தங்களிடம் வந்தால் அவர்களுக்கு அல்லாஹ்விற்காக அழகிய கடனை கொடுத்து இம்மைக்கும் மறுமைக்கும் வெற்றியைத் தேடிக்கொள்ளுங்கள். அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக!
6
April 09, 2008 09:15
அன்புச் சகோதரர் ஃபக்ருதீன்,
உங்களின் ஆதங்கமும் வேதனையும் புரிகிறது.
பொருளாதார மேம்பாட்டுக்காகக் குடும்பத்தை இழந்துத் தனிமையில் வளைகுடாவில் வாடும் கொடுமை உண்மையில் எவருக்கும் அமையக் கூடாது.
படிப்பும் வியாபாரத் திறமையும் இருந்தும் வெறும் பொருளாதார உதவி கிடைக்காதக் காரணத்தினால் வளைகுடாவில் அவதிபடுவது மிகவும் கொடுமை.
நான் செல்வந்தன் ஒன்றும் இல்லை.
எனினும் தங்களின் வேதனையுடன் கூடிய கருத்தினைப் படித்தப் பின் பாராமல் அப்படியே செல்ல மனம் வரவில்லை.
தாங்கள் மீண்டும் தங்களால் ஹலாலான வழியில் செய்ய இயன்ற அந்த வியாபாரத்தைத் துவக்க எவ்வளவு பொருளுதவி தேவை எனக் கூறுங்கள். தாங்கள் மீண்டும் நாடு திரும்பி அவ்வியாபாரத்தைத் துவக்கத் தயார் எனில், இன்ஷா அல்லாஹ் என்னால் இயன்ற உதவியை அல்லாஹ்வுக்காக அழகிய கடனாகக் கொடுத்து உதவ தயாராக உள்ளேன்.
எனது மடல் முகவரி:
எரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும்
சகோதரன் அல் அமீன்.
7
April 09, 2008 10:59
அன்புச் சகோதரர் அல் அமீன்,
அல்லாஹ் உங்களுக்குத் தன் அருள்மழையைச் சொரிவானாக, ஜஸாக்கல்லாஹு கைரா!
8
April 09, 2008 11:44
அனபிற்கினிய சகோ. அல் அமீன்!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
' நான் செல்வந்தன் ஒன்றும் இல்லை. இன்ஷா அல்லாஹ் என்னால் இயன்ற உதவியை அல்லாஹ்வுக்காக அழகிய கடனாகக் கொடுத்து உதவ தயாராக உள்ளேன்.' என்று தாங்கள் எழுதியிருப்பது எனக்கு நெகிழ்ச்சியை தருகிறது.... அல்ஹம்துலில்லாஹ்!. எல்லாம் வல்ல அல்லாஹ் தங்களுக்கு ரஹ்மத் செய்வானாக. இன்ஷா அல்லாஹ் இது குறித்து தங்களுக்கு விரைவில் மெயில் எழுதுகிறேன்.
9
April 10, 2008 06:03
சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் 'நிறத்தை' மாற்றிக் கொண்டு பேசும் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பேசியிருப்பதில் உள்ளர்த்தம் இருக்கலாம்.
ஆனால் இந்த உணர்வு கூட தமிழ் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஓவர் ஆல் அத்தாரிட்டி எடுத்திருக்கும் இயக்கத்தலைமைகளுக்கு இல்லையே என்பதுதான் வெட்கக் கேடு.
சக சகோதரனின் முதுகை முள் கொண்டு சொறிந்து மாமிசம் தின்பதை நிறுத்தினால் தான் சமூக நலனுக்கு என்ன செய்யனும் என்று தோணும்!
10
April 10, 2008 07:13
//சூழ்நிலைகளுக்கு ஏற்ப தன் 'நிறத்தை' மாற்றிக் கொண்டு பேசும் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பேசியிருப்பதில் உள்ளர்த்தம் இருக்கலாம்.//
உள்ளர்த்தம் இருக்கத்தான் செய்யும். அதே சமயத்தில் இந்த ஆலோசனைகளை நாம் ஏன் நடைமுறைப்படுத்தக் கூடாது. எத்தனையோ அமைப்புகளும் பணக்கார நிறுவனங்களும் இந்த ஆலோசனையை ஏற்று நடவடிக்கைகள் எடுத்தால் என்ன?
குறைந்தபட்சம் எல்லா முஸ்லிம் சகோதரர்களும் +2 வரை படித்திட வேண்டும் என்கிற கட்டாய நிலையை ஏற்படுத்த வேண்டும் இன்ஷாஅல்லாஹ். மேலும் IAS, IPS போன்ற உயர்கல்வி பயின்றிட ஆதரவும் ஒத்துழைப்பும் தரவேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் சிந்திப்பார்களா?
11
April 10, 2008 07:53
குழுவின் அனைவருக்கும் அஸ்ஸலாமுஅலைக்கும்...
முதலில் சத்திய மார்க்கம் குழுவினர்களுக்கு வாழ்த்துகள்... இஸ்லாமிய சகோதரத்துவத்தின் சான்றுகளை இங்கு காணமுடிவதில் மிக்க சந்தோசம். சகோ.எம்.ஜீ.ஃபக்ருத்தீன் அவர்களைப் பற்றியும் அவரின் உழைப்பினையும், திறமைகளையும் நான் அறிவேன். இவருக்கு சகோ.அல்அமீன் ஊக்களிப்பது நல்ல விசயம். இவர் இதை பயன்படுத்திக் கொள்வது நலமே!
அல்லாஹ் நம் அனைவர்களுக்கும் அருள் புரிவானாக. அல்லாஹ் மிக்க அருளாளன், பாதுகாப்பதில் அவனே சிறந்தவன்.
12
April 10, 2008 09:03
பிஸ்மில்லா.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
அன்பான அறிவான சகோதரர்கள் தோழர்கள் இஸ்லாமிய சமுதாய முன்னேற்ற ஆர்வலர்களுக்கு ஒரு வேண்டுகோள்
ராமதாஸ் பேசியது சரிதான்,அவருடைய நல்ல கருத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் ஒத்துழைப்பு அரசியல் சக்தியோடு பெற்று செயலாற்ற வேண்டும். நம்பினால் ஓரேயடியாக ஏமாந்து போவோம். இறையருளால் ஓரளவு விழிப்புணர்வு வந்துள்ளது. கருணாநிதியாகட்டும் ஜெயலலிதாவாகட்டும் ராமாதாஸாகட்டும் யாராகட்டும் இஸ்லாமிய சமுதாய ஓட்டுக்காக பேசுகிற வார்த்தைகள்தான். பா ம க வின் ஆரம்பகாலத்தில் பழனி பாபா அவர்கள் எவ்வளவு உழைத்தார்கள் பிறகு அவருக்கு நேர்ந்த கதி சமுதாயம் உணரணும். கழிந்த தேர்தலில் 31 இடத்தில் 1 இடத்தில் கூட இஸ்லாமியரை பா ம க நிறுத்தல. பா ம க வில் பொறுப்புகளில் இஸ்லாமியர்கள் இருக்காலாம் அது சபையில் குரல் கொடுக்க உதவாது தோழர்களே; 2011 ஆட்சி அமைக்க கனவுகாணும் போது இந்த பேச்சுக்கள். நல்லது நாமும் ஸீட்ல் பகிர்ந்து கொண்டு கூட்டணி கொள்வோம். சும்மா ததஜ சொல்வது போல் அல்ல.
கருணாநிதி ஜெயலலிதா மன்மோகன்சிங் சோனியா அத்வானி என்று பெயர் குறிப்பிட்டு எல்லா இடத்திலும் பேசும் போது இஸ்லாமியர்களும் கட்சியையும் நபர்களின் பெயரையும் குறிபிட்டு பேசுவதில் ஏன் தயக்கம் கழகம் இயக்கம் அமைப்பு என்றெல்லாம் குறிப்பிட்டாலும் புரிகிறவர்களுக்கு புரியும் புரிந்தாலும் புரியாதது மாதிரி உங்களைதான் குறை கூறினார்கள் என்று மாறி மாறி வசை பாடுவதை தவிர்க்கலாம்;. எனவே கருத்தை உறுதிபட சொல்லும் போது பெயரை குறிப்பிடுவது நல்லது. எப்படி சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் கட்சியின் நபரின் பெயரை குறிப்பிடாமலா பேசமுடியும்.அங்கேயும் போய் கழகம் இயக்கம் என்றா பேசமுடியும்.சொல்ல வேண்டும் சமுதாயத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று துணிந்தபின் ஏன் தயக்கம் பிஜே பாக்கர் ஹைதர் அலி (பொதுவாக அவர்கள்) என்று குறிப்பாய் எழுதுங்கள். இது சரி என்று உணருகிறீர்கள் சத்தியமார்கம் அதை தெரிவிக்க ஒரு வாய்ப்பை சமுதாய ஆர்வத்தோடு ஏற்படுத்தி தந்திருக்கிறது.அல்ஹம்துலில்லாஹ் தெளிவாய் தெரிவிக்கலாம். தே லீக் பஷீர் அவர்களுக்கு ததஜ தேர்தலில் அரசியலில் பாடுட்டது. அவர் தமிழன் தொலைக்காட்சியில் ஒரு இயக்கம ஜாமாத் ஆலிம்களின் குறைகளை ரொம்ப கிண்டலடிக்கவும் அவமானப்படுத்துவது மாதிரி இன்றும் நடப்பதால் மதர்ஸாக்களில் யாரும் மார்க்க கல்வி கற்க விரும்பல கண்ணியமான முறையில் குறைகளை எடுத்து சொல்லவேண்டும் என்று நீண்ட விளக்கத்தோடு சொல்கிறார்.எந்த இயக்கம் என்று குறிப்பிட்டு சொல்லல ஓரளவிற்கு எது என்று எல்லோர்க்கும் யுகிக்க முடியும்.ஆனால் வேடிக்கை என்னவென்றால் அதை சொன்னார் இதை சொன்னார் என்று மாறி மாறி சொன்னதை காண முடியும் இதை மாதிரி பல பல நிகழ்வுகள்.
எனவே மீண்டும் தயவாய் கேட்டுக்கொள்வது எழுதும் போது குறிப்பிட்டு எழுதுவது நல்லது என்பது என் எண்ணம். கருத்தில் மாறுபாடு இருந்தால் நண்பர்கள் சகோதரர்கள் அதை உணர்த்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.மூ.லீக் ஆனாலும் தே.லீக் ஆனாலும் அவர்கள் கூட்டணி கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவதால் தேர்தல் கமிஷன் விதிமுறையில் அவர்கள் அந்த சின்ன கட்சியாளராகவே பதிவு செய்யபடுவார். எனவே ஜ டி எம் கே போல தமுமுகவும் தனியாக பொது கட்சி ஆரம்பிக்கும் போது அந்த மாதிரி அரசியல் கட்சிகளுக்கு இஸ்லாமிய சமுதாயம் ஆதரவு தெரிவிக்கலாமா என்று தோன்றுகிறது. சத்தியமார்க்கம் அனுமதியோடு சகோதரர்கள் இது பற்றி விளக்கலாமா என்று கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸாலாம்.
13
April 10, 2008 09:20
சகோதரர் ரப்பீக்உதுமான் அவர்களுக்கும் மற்றும் முஸ்லீம் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் நீங்கள் குருப்பிட்டது போல் மற்ற சகோதரர்கள் மனம் புண்படும் போல் எந்த வார்த்தையும் போட முடியாது அது நமக்குள்ளேயே மேலும் விரிவினையை அதிகப்படுத்தும். ஒருவேளை அப்படி எழுதிவிட்டாலும். பிறகு அவர்கள் ஒரு லிஸ்ட் தயாரித்து போட்டுவிடுவார்கள் நாங்கள் சமுதாயத்திற்காக அது செய்தோம் இது செய்தோம் அப்படி செய்ததை சொல்லிக்கான்பிக்கும் அளவிற்கு சகோதரர்களை தள்ளிவிட நாம் காரனமாககூடாது.எவ்வளவு பெரிய இயக்கமானாலும். ஒரு அரசாங்கம் செய்யும் அளவிற்கு எல்லாக்கரியங்களையும் செய்து விடமுடியாது.இந்த கட்டுரையின் சாராம்சம் என்னவென்றால் மைனாரிட்டியா இருக்கும் நாம் ஏற்க்கனவே மெட்ரிக் ஸ்கூல் காலேஜ் என்று தனி நபரோ அல்லது ஒருகூட்டாகவோ! வழமையில் செய்துகொண்டிருக்கும் நாம் இந்த ஐ ஐ டி யும், ஐ ஐ எம் மும் நாம் ஏன் செய்யக்கூடாது என்பது தான் இது ஒரு பெரிய சிரமமான காரியமும் கிடையாதே!
மா சலாம்
அப்துல் அசீஸ்.
14
April 11, 2008 19:40
இஸ்லாமிய சமுதாய பெரியவர்கள் நினைத்தால் இது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் இதில் இயக்க கோளாறு இடையில் வந்து சேராமல் பார்த்துக்கொள்ளனும் அவ்வளவுதான். பெரும் தன்மையுடன் எந்த பெரியவர்கள், வசதி படைத்தவர்கள் இந்த மாதிரி கல்லூரிகளை ஆரம்பித்து, அதன் மூலம் இஸ்லாமிய மாணவர்கள் படித்து, நாமும் இந்தியாவில் புது ஒரு அத்தியாயத்தை தொடங்க வேண்டும் என்ற முயற்ச்சியில் வசதி படைத்தவர்கள் இன்ஷா அல்லாஹ் விரைவில் தொடங்கி புது சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும். இன்ஷா அல்லாஹ். வல்ல அல்லாஹ்வும் துணை புரிவானாக.
அல்ஹம்துலில்லாஹ்
அசலம் - பெஹ்ரேன். 28/04/2008
15
April 28, 2008 14:31
கருத்து எழுதுக :
|