சத்தியமார்க்கம்.காம்

கலாச்சார ஊடுருவல்! print Email
கட்டுரைப் போட்டிகள் - வருடம் 2007
வெள்ளி, 08 பிப்ரவரி 2008 12:17

சத்தியமார்க்கம்.காம் நடத்திய சர்வதேச அளவிலான கட்டுரைப் போட்டியில் சகோதரர்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற கட்டுரை. - சத்தியமார்க்கம் நடுவர் குழு


உலகின் பல்வேறு இன, மொழி, தேசக் கலாச்சாரங்களிலிருந்தும் வேறுபட்டு அகில உலகத்தையும் தன்பால் ஈர்த்தக் கலாச்சாரம் இஸ்லாமியக் கலாச்சாரமாகும். இறை வேத வரிகளும் இறைத்தூதர் மொழிகளும் போதித்த இஸ்லாமியக் கலாச்சாரத்தை இம்மியும் பிசகாமல் இஸ்லாமியச் சமுதாயம் கடைப்பிடித்த காலமெல்லாம் அகில உலகுக்கும் முன்மாதிரியாக அது திகழ்ந்தது.

இஸ்லாமிய ஏகத்துவக் கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டப் பல்வேறு சமுதாய மக்களும் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது, அதுநாள் வரை தாங்கள் பின்பற்றி வந்த சில கலாச்சாரங்களைத் தங்களையும் அறியாமல் சிலர் தங்களுடன் கொண்டு வந்தனர். காலப் போக்கில் அந்த அந்நியக் கலாச்சாரங்கள் வேர்விட்டு, கிளைபரப்பி, முழு இஸ்லாமியச் சமுதாயத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டு இஸ்லாமிய அடிப்படைக் கலாச்சாரத்துக்குக் குழிபறித்து விட்டது எனலாம்.

சிலை வணக்கக் கலாச்சாரம் போன்ற, "பாவம்" என்று பார்வையில் கண்காணத் தெரிந்த சில கலாச்சாரங்கள் நம்மிடம் நுழைய முடியவில்லையே தவிர, நல்லவைதாமே என்ற போர்வையில் நுழைந்த கலாச்சாரங்களைப் பாமர முஸ்லிம்கள் அலட்சியத்தோடு கண்டு கொள்ளாமல் விட்டதன் விளைவு பல சீர்கெட்டக் கலாச்சாரங்களின் ஊடுருவல் நம் இஸ்லாமியச் சமுதாயத்தையும் விட்டு வைக்கவில்லை என்பதே உண்மை. இந்தக் கலாச்சார ஊடுருவல்களில் பல, ஷிர்க் என்னும் இணைவைத்தலில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை நம் சமுதாயத்தில் பலர் இன்னமும் உணர்ந்ததாகத் தெரிய வில்லை.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை வைப்பதை மன்னிக்கவே மாட்டான் - (திருக்குர்ஆன் 4;:48)

இந்தக் காலாச்சார ஊடுருவலை அலட்சியம் செய்வோர், மற்றும் அவற்றுக்கு நியாயம் கற்பிப்போர் பின்வரும் நபி மொழியை நினைவிற் கொள்ள வேண்டும்.

"
எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" - அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); ஆதாரம்: அபூதாவூத்.

என்னும் நபி மொழியை நன்றாகப் புரிந்து கொண்டால் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வளவு மோசமானது என்பதை உணரலாம். "அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" என்னும் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் கருத்தாழமிக்க வார்த்தைகளை அலட்சியப் படுத்த எந்த ஒரு முஸ்லிமும் முன்வரமாட்டார்.

நமது அன்றாட வாழ்வில் இந்தக் கலாச்சார ஊடுருவல் எவ்வாறெல்லாம் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றது என்பதைச் சிந்தித்து, ஆராய்ந்து, நல்லுணர்வு பெற வேண்டும். பிறப்பில், இறப்பில், வாழ்வில், திருமணத்தில் மற்றும் அன்னறாடப் பழக்க வழக்கங்களில் நம்முடன் இரண்டறக் கலந்து விட்ட இந்தக் கேடு கெட்டக் கலாச்சார ஊடுருவலை நாம் வேரோடும் வேரடி மண்ணோடும் களைய வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டுவதில் தொடங்கி, பெண் குழந்தைகள் பருவமடைவதிலும் திருமணம் நடத்துவதிலும் புதிய வீடு கட்டுவதிலும், இப்படி அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவலால், "மற்ற மதங்களிலிருந்து இஸ்லாம் எவ்வகையிலும் வேறுபடவில்லையே" என்று பிற மதத்தவர் விமர்சிக்கும் அளவுக்குப் போய்விட்டது.

பிறமதச் சகோதரர்கள் இஸ்லாத்தைப் படித்து தெரிந்துக் கொள்வதை விட முஸ்லிம்களாகிய நமது நடவடிக்கைகளைப் பார்த்துத் தான் இஸ்லாத்தை தெரிந்துக் கொள்ள முடியும். அப்படியிருக்க நமது நடவடிக்கைகள் இஸ்லாமியக் கலாச்சாரத்திற்கு முரணாக இருந்தால் உண்மையான இஸ்லாத்தை எவ்விதம் மற்றவர்களால் புரிந்துக் கொள்ள முடியும் என்பதை நாம் உணர வேண்டாமா?

காலமும் நேரமும்

நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின்பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் "நல்ல நேரம்', "கெட்ட நேரம்' என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல; அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.

நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்குக் கைகொடுக்வில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து "முகூர்த்த நேரம்" என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை "முபாரக்கான நேரம்" என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.

பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய், தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்குச் சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.

வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தோல்வியும் அல்லாஹ்வின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி கொள்ள வேண்டும்.

நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காக அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காக இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.

அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். "காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்." (ஹதீஸ் குத்ஸி)

தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், "நேரம் சரியில்லை" என்று நேரத்தைக் குறை கூறுவதும் பிறமதத்திலிருந்து நம்மிடம் புகுந்து விட்ட ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.

சகுனம் பார்ப்பது சரியானதல்ல

ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது, "எங்கே போகிறீர்கள்?" என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும், நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும், போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும்,
விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.

நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல என்பதைச் சிந்தித்து உணர வேண்டும்.

பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ பேசும் பேச்சு உண்மையானது என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும், 'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி "பல்லி விழும் பலன்" பார்ப்பதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்கள் தாம்.

தேதி பார்க்கக் காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினாலே பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.

மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய குர்ஆன் வசனங்களும், பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.

நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.

நல்லதும் கெட்டதும் அல்லாஹ்விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது, "ஈமான்" என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.

அல்லாஹ் விதித்தபடிதான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.

"
மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்" என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி).

திருமணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட, 'சீர்திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!

மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவனுக்குச் சமமான மகிமை அளிப்பதும் திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், ஆகிய இவை யாவும் அந்நிய கலாச்சார ஊடுருவல்தான் என்பதில் ஐயமில்லை.

சமுதாயம் சீர் பெற, இதுபோன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும்.

"
நீங்கள் மணம் (செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர் (திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள்" (அல்குர்ஆன் 4:4)


என்னும் இறைவசனம் "மஹர் கொடையைக் கொடுத்து மணம் முடியுங்கள்" என்று தெளிவாகக் கூறும்போது இதற்கு நேர் முரணாகப் பெண் வீட்டாரிடம் பணம் கேட்கும் இழி செயலாகிய - தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடிப் போய்விட்ட வரதட்சணை என்னும் வன்கொடுமை ஒரு கலாச்சார ஊடுருவல்தான்.

இந்தக் கலாச்சாரச் சீர்கேட்டினால் எண்ணற்ற இஸ்லாமிய இளம் பெண்கள் வாழ முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றனர். பல பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் வருடங்கள் பல கடந்தும் தம் பெண்மக்களை வாழ வைக்க வழி தெரியாமல் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

இறையச்சமுள்ள இஸ்லாமிய இளைஞர்களே! நீங்கள் எங்கே சென்றீர்கள்? வரதட்சணை வாங்கித்தான் மணம் முடிக்க வேண்டும் என்று சொல்லும் உங்கள் பெற்றோர்களுக்கு மார்க்கத்தை எடுத்துச் சொல்லுங்கள். மறுமையில் இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்பதை நினைவு படுத்துங்கள்.

வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்

வீடு கட்டுவதற்கு முன், வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து, கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர். இஸ்லாத்திற்கு எள்ளளவும் தொடர்பில்லாத இந்த வாஸ்து சாஸ்திரமும் ஒரு கலாச்சார ஊடுருவல் தான்.

மனையடி சாஸ்திரத்தில், ஓர் அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப்படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணிப்பதில்லையா?

மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.

நாம் வசிக்க உருவாக்கும் வீட்டை, நம் வசதிக்கு ஏற்றபடியும், இடத்திற்குத் தக்கபடியும், நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர வாஸ்து சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது, மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்த வல்லதன்று.

எந்த சாஸ்திரமும் சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.

இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?

கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும் கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து நம்மிடம் கூலி வாங்கிக் கொண்டு கட்டுபவர்களின் பிறமதக் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் அங்கீகரிப்பதும் கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து, பூவும் பொட்டும் வைத்து, பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்துப் பலியிடுவதும் கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசணிக்காய் கட்டித் தொங்க விடுவதும் ஆகிய இவை யாவும் அந்நியக் கலாச்சாரத்தின் ஊடுருவல் தான். இஸ்லாத்துக்கும் இந்தக் கலாச்சாரங்களுக்கும் கடுகளவும் தொடர்பில்லை.

பிறந்தநாள்விழாவும் பெயர் சூட்டு விழாவும்

பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள், ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருப்பின் ஓர் ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும்; இது நபிவழி.

ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு, ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று அதற்கொரு பெயர் வைத்து, 'அசரத்தைக்' கூப்பிட்டுப் பெயர் சூட்டப்படுகிறது.

குழந்தை பிறந்தாலும் 40. திருமணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த, 'மண்டல'க் கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத்தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ, தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.

இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி, "ஹேப்பி பர்த் டே" கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை.

மானங்கெட்ட மஞ்சள் நீராட்டு விழா

பெண்கள் பருவம் அடைந்தால், அதற்காக அழைப்பிதழ் அடித்து, உறவினர்களை அழைத்து, பூமாலை போட்டு, பூப்பு நீராட்டு விழா நடத்துவதும் அதற்காக விருந்து போடுவதும் கேட்பதற்கே கேவலமாக இல்லையா? மறைக்க வேண்டிய ஒரு செய்தியை ஊர் முழுக்கத் தம்பட்டம் அடித்து அறிவிக்க, பிள்ளையைப் பெற்றோருக்கு வெட்கமாக இல்லையா? எங்கிருந்து காப்பியடிக்கப் பட்டது இந்த மானங்கெட்ட கலாச்சாரம்?

பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் தான் ஒரு குறிப்பிட்ட வயதில் பருவம் அடைகின்றனர். போகிற போக்கைப் பார்த்தால் அதற்கும் விழா நடத்த ஆரம்பித்து விடுவார்களோ?

பருவம் அடைதல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இறைவன் அளித்த அருட்கொடை. இயற்கையாக ஏற்படும் இந்த மாற்றத்தை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அவசியமில்லை.

தனக்கு ஏற்படும் இயற்கை மாற்றங்களை ஒரு பெண் தன் தாயுடன் பகிர்ந்துக் கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அதைத் தந்தை கூட அறிய வேண்டும் என்று அவசியமில்லை.

"
திருமணத்திற்குத் தயாராக ஒரு பெண் வீட்டில் இருப்பதைப் பலரும் அறிந்தால், பெண் கேட்டு வருவார்கள்" என்று சிலர் காரணம் சொல்வார்கள். பெண்கள் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்ததும் உறவினர்களுக்கும் அண்டை அயலாருக்கும் தெரியவரும். தாமாகவே பெண் கேட்டு வருவார்கள்.

இனியேனும் இதுபோன்ற கேவலமான விழாக்களைத் தவிர்ப்போம். மாற்றுக் கலாச்சாரங்களை ஒதுக்கி இஸ்லாமிய வழி நடப்போம்.

ஜாதகமும் ஜோதிடமும்

எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை ஏக இறைவனைத் தவிர வேறு எவருமே அறிய முடியாது என்று இறைமறை குர்ஆன் கூறுகிறது:

(
இன்னும் நபியே) நீர் கூறுவீராக! அல்லாஹ்வைத் தவிர்த்து வானங்களிலும் பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்கள். இன்னும் (மரித்தோர் இறுதியில்) எப்போது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 27 : 65)

ஜாதகம் எழுதி வைப்பதும் ஜோதிடத்தை நம்புவதும் பகுத்தறிவுக்கு மட்டுமல்ல, படைத்த இறைவனுக்கும் புறம்பானவை. இஸ்லாத்திற்கு முரணான இக்கொடிய குற்றங்கள் இன்று பல்வேறு பெயர்களில் பாமரர்களிடம் மட்டுமின்றி படித்தவர்களிடமும் பரவி விட்டன.

பெயர் ராசி, பிறந்தநாள் ராசி, பெண் ராசி, கல் ராசி, கலர் ராசி, இட ராசி, இனிஷியல் ராசி, என்று எத்தனைப் பெயர்களில் அவதாரம் எடுத்தாலும், கைரேகை ஜோதிடம், கம்ப்யூட்டர் ஜோதிடம், கிளி ஜோதிடம், பால் கிதாபு ஜோதிடம், என்று எத்தனைப் பெயர்களில் அழைக்கப்பட்டாலும், இவை அத்தனையும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தாம். இவை அனைத்துமே மூட நம்பிக்கை மட்டுமல்ல, மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும். இவை யாவும் அந்நியக் கலாச்சார ஊடுருவல்தான் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கிறார்கள்:

"
எவர் குறி சொல்பவனிடம் சென்று அவன் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ அவருடைய 40 நாள் தொழுகை ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" (அறிவிப்பவர் அபூ ஹுரைரா. ஆதாரம் முஸ்லிம்).

நமது எதிர் காலத்தைக் கணித்துச் சொல்வதாகக் கூறி ஏமாற்றுகிறவன், நாள் முழுவதும் வீதிக்கு வீதி காத்துக் கிடக்கிறான். வீடு வீடாக ஏறி இறங்குகிறான். அன்றைய தினத்தில் எத்தனை பேர் தன்னிடம் ஜோதிடம் பார்ப்பார்கள் என்பதைக்கூட அவனால் கணிக்க முடியவில்லை.

தன்னுடைய ஒரு நாள் பொழுதைப் பற்றிக் கூட அறிந்துக் கொள்ள முடியாதவன் அடுத்தவருடைய எதிர்காலத்தை கணித்துச் சொல்வான் என்று நம்புவது எவ்வளவு பெரிய அறிவீனம்?

ஜோதிடம் என்றதும், பிற மத ஜோதிடக் காரர்களை மட்டும் என்று பலரும் கருதுகின்றனர். 'பால் கிதாபு' என்பதும் அரபுப் பெயர் தாங்கிய ஒரு வகை ஜோதிடமே! பால் கிதாபு பார்க்கும் முஸ்லிம் பெயர் தாங்கிகளும் ஜோதிடக் காரர்களே! என்பதை மறந்து விடக்கூடாது.

பால் கிதாபுப் பார்த்துப் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சொல்பவர்களின் வாழ்க்கையையும் குடும்பத்தையும் கவனித்தால் அவர்களுக்கு ஏராளமான பிரச்சினைகள் இருக்கும். தமக்குத் தாமே பால் கிதாபு பார்த்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள வக்கற்றவர்கள், மற்றவர் வாழ்க்கையைச் சீர்படுத்துவார்கள் என்று எப்படி நம்புவது?

"
ஒவ்வொருவரும் பிறக்கும்போது ஏற்படும் கோள்களின் சஞ்சாரமே நல்லதும் கெட்டதும் நடப்பதற்குக் காரணம்" என்று நம்பும் புத்தி கெட்டவர்கள், புயல் வெள்ளத்திலும், பூகம்பத்திலும் ஒட்டு மொத்தமாக ஓர் ஊரே அழியும் போது, அந்த ஊரில் வாழ்ந்த, பல்வேறு காலங்களில் பிறந்த அனைவருக்குமே எப்படி ஒரே ஜாதகம் அமைந்தது? என்பதைக்கூட சிந்திக்க வேண்டாமா?

ஜாதகமும் ஜோதிடமும் மூட நம்பிக்கைகளில் முதலிடம் வகிப்பவை என்பதை உணர்ந்து, முஸ்லிம் சமுதாயம் முற்றிலும் விடுபட வேண்டும். இறை நம்பிக்கையில் இன்னும் உறுதி கொள்ள வேண்டும்.

தாயத்தும் தகடுகளும்

அல்லாஹ்வின் வசனங்களை, அரபி எண்களாக உருமாற்றி அப்படியே சுருட்டி அலுமினியக் குழாய்களில் அடைத்து, கருப்பு நூலில் கோர்த்துக் கழுத்திலும் கைகளிலும் இடுப்பிலும் கட்டிக் கொண்டால், பில்லி சூனியம் பேய் பிசாசுகளை விட்டும் பாதுகாப்புக் கிடைக்கும் என்று சில அரைக் கிறுக்குகள் சொன்னதை நம்பி, ஆயத்துகளைத் தாயத்துகளாக்கித் தொங்க விட்டுக் கொண்டவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டிக்கிறார்கள்:

"
எவர் தாயத்தைத் தொங்கவிட்டுக் கொண்டாரோ நிச்சயமாக அவர் இறைவனுக்கு இணை வைத்துவிட்டார்" (ஆதாரம்: அஹ்மத்).

தற்காப்புக்காகப் பலரும் கராத்தே கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் வாழ்ந்து கொண்டு வெறும் தாயத்துகளில் தற்காப்புத் தேடுபவர்களின் மடமையை என்னவென்பது?

தாயத்துகளை நியாயப் படுத்துவோர், "அதில் குர்ஆன் வசனங்கள்தாமே எழுதப்படுகின்றன" என்று கூறுவர். அப்படியானால், குர்ஆன் ஆயத்துகளைக் கட்டிக் கொண்டு மலம் கழிக்கச் செல்லலாமா? என்று கேட்டால், "ஆயத்துகளுக்கு பதிலாக அரபி எண்கள்தாமே எழுதப்படுகின்றன?" என்று அறிவு(?)ப்பூர்வமான பதில் கேள்வி கேட்பர்.

இதிலிருந்து எண்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை என்பதை இவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். எண்கள் எப்படி மனிதனைப் பாதுகாக்கும்? என்பதைப் புரிந்து கொள்ள முடியாத முட்டாள்களாக இருக்கின்றனர்.

சில தாயத்துகளைப் பிரித்துப் பார்த்தால், சினிமா டிக்கட்டுகளும், பஸ் டிக்கட்டுகளும் கூட இருக்கும். இவை அவசரமாகத் தயாரிக்கப்பட்ட, "அர்ஜன்ட்" தாயத்துகள். ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

தங்கள் வயிற்றை நிரப்ப, கயிற்றை விற்று ஏமாற்றுகிறார்கள். இன்னுமா நீங்கள் ஏமாறப் போகிறீர்கள்? ஷிர்க்கை ஏற்படுத்தும் தாயத்துகளை அறுத்து எறியுங்கள்.

இன்னொரு அநாச்சாரக் கலாச்சாரம் உண்டு. அதுதான் அரபி எண்களை குறுக்கெழுத்துப் போட்டிக் கோடுகளில் அடக்கிப் பித்தளைத் தகடுகளை பிரேம் போட்டு மாட்டி வைத்தால், வீட்டுக்குப் பாதுகாப்பு என்று மூளையற்றவர்கள் சொன்னதை நம்பி மூலைக்கு மூலைத் தொங்க விடுவது. வர்கள் இறை வணக்கங்களால் தங்கள் இல்லங்களை நிரப்புவதை விட்டு, ஈயம் பித்தளைத் தகடுகளில் தங்கள் ஈமானைப் பறி கொடுத்தவர்கள்; பில்லிச் சூனியத்திலிருந்து பாதுகாக்கும் என்று நம்பிப் படிகாரக் கற்களை வீட்டுப் படிகளில் மாட்டி வைத்தவர்கள்; கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று புத்தி கெட்டுப் போய் பூசணிக்காயைக் கட்டி வைத்தவர்கள்; வீடுகளில் மட்டுமின்றி, வியாபார நிறுவனங்களிலும் இந்த 'அஸ்மா'த் தகடுகளை மாட்டி வைத்தால், வியாபாரம் பெருகும் என்று மூட நம்பிக்கைக் கொண்டவர்கள்.


இந்தத் தகடுகளை விற்பனை செய்வோர், தாங்கள் தயாரித்தத் தகடுகள் முழுவதும் விற்றுத் தீரும்படித் தங்களுக்குத் தாங்களே தகடு செய்துக் கொள்ளாமல், கடைக் கடையாய் அலைவதைக் கண்ட பிறகாவது, இது ஏமாற்று வேலை என்பதை உணர வேண்டாமா?

இனியேனும், இவைகள் யாவும் இஸ்லாத்திற்கு முரணான மூடப் பழக்கங்கள் என்பதை உணர வேண்டும்.

தரமானப் பொருளும், நியாயமான விலையும், கனிவானப் பேச்சும்தான் வியாபாரத்தைப் பெருக்குமே தவிர, பித்தளைத் தகடுகளும் பிரேம் போட்ட அஸ்மாக்களும் ஒரு போதும் வியாபாரத்தைப் பெருக்காது. மாறாக, பாவப் படுகுழியில் கொண்டு போய் தள்ளும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மரணித்தவர் வீடுகளிலும்

அன்றாட வாழ்க்கையின் அனைத்துச் செயல்களிலும் புரையோடிப் போய்விட்ட அந்நியக் கலாச்சார ஊடுருவல் முஸ்லிமின் மரணத்தைக் கூட விட்டுவைக்கவில்லை.

ஒரு மனிதன் இறந்து விட்டால் இறந்து போனவர்களின் ஆத்மா சாந்தி அடைய திதி என்றும் திவசம் என்றும் புரோகிதர்ளைக் கொண்டு பிறமதத்தவர் நடத்தும் காரியங்கள் அவர்களுடைய கலாச்சாரமாக இருக்கலாம். ஆனால் இவை இஸ்லாத்தில் உள்ளவை அல்லவே!

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்த போதே அவர்கள் மிகவும் அன்புடன் நேசித்த அவர்களுடைய மனைவி, நமது அன்னை ஹதீஜா (ரலி) அவர்களும் இன்னும் எத்தனையோ அருமை சஹாபாக்களும் இறந்தனரே! அவர்களுக்கெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 7 ஆம் நாள், 40 ஆம் நாள் என்று எந்த பாத்திஹாவும் ஓதியதாக ஆதாரப்பூர்வமான எந்த நபி மொழியும் நமக்கு அறிவிக்க வில்லையே!

இஸ்லாமியப் பெயர் தாங்கிய புரோகிதர்கள் தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உருவாக்கிக் கொண்ட இந்த பாத்திஹாக்கள் அனைத்தும் பிறமதக் கலாச்சார ஊடுருவல் தானே தவிர இஸ்லாமியக் கலாச்சாரம் அல்ல.

வணக்கம் கூறுதல்

ஒருவரையொருவர் சந்திக்கும் போது அழகிய முகமன் கூறி அறிமுகம் செய்து கொள்வதற்கு இஸ்லாம், பொருள் பொதிந்த "அஸ்ஸலாமு அலைக்கும் (தங்கள் மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் வாக்கியத்தையும் அதனைக் கேட்டவர் மறுமொழியாக, "வஅலைக்குமுஸ்ஸலாம் (அவ்வாறே தங்கள் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக)" என்னும் அற்புத பதிலையும் சொல்லித் தருகிறது.

ஆனால் சிலர் மாற்று மத நண்பர்களைக் கண்டால், "வணக்கம்" என்று சொல்வதைப் பரவலாகக் காண்கிறோம். வணக்கம் என்னும் சொல்லின் பொருள், "நான் உங்களை வணங்குகிறேன்" என்பதாகும். மனிதனை மனிதன் வணங்கலாமா? இது இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடாகிய லாஇலாஹ இல்லல்லாஹ் என்னும் கலிமாவுக்கே முரணானதல்லவா?, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை" என்னும் திருக்கலிமாவை மன, மெய், மொழியால் மனதாரச் சொன்ன ஒரு முஸ்லிம் இன்னொரு மனிதனை வணங்குவதாகச் சொல்வது மிகப் பெரிய பாவம் அல்லவா?

நம்மில் பலர் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் இந்த வணக்கம் என்னும் தமிழ்ச் சொல்லும் 'நமஸ்காரம்', 'நமஸ்தே' என்னும் வடமொழிச் சொற்களும் கூட ஓர் அந்நிய கலாச்சாரம்தான். இவை அனைத்தும் வணங்குதல் என்னும் அதே பொருளையே தருபவையாகும்.

இந்த அந்நிய கலாச்சாரம் நம்மில் ஊடுருவியதால் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்த அழகிய இஸ்லாமியக் கலாச்சாத்தைப் புறக்கணித்தவர்களாகி விடுகிறோம் என்பது ஒரு புறமிருக்க, 'வணக்கம் கூறுதல்' மனிதனை மனிதன் வணங்கும் ஷிர்க் என்னும் இணைவைத்தலுக்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் நிறுத்த வேண்டும்.

இஸ்லாமிய சமுதாயம் பல பிரிவுகளாகப் பிரிந்து போனதற்கு, அந்நியக் கலாச்சார ஊடுருவல்கூட ஒரு காரணம் என்பது பலருக்கும் ஆச்சரியத்தைத் தரலாம். அந்நியக் கலாச்சாரச்சத்தின் ஊடுருவல் காரணமாகத்தான் நம் அன்றாட வாழ்வில் நாம் செய்யும் பல்வேறு காரியங்கள் இஸ்லாத்திற்கு முரணானவையாக இருந்தும், அவற்றை இஸ்லாத்தின் பார்வையில் தவறானவை என்று ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துச் சொல்லியும் ஏற்றுக் கொள்ள பலர் மறுக்கின்றனர்.

இக்கட்டுரையை முடிப்பதற்கு முன் மகத்துவமிக்க மாநபி (ஸல்) அவர்களின் மணிமொழியை மறுபடியும் ஒரு முறை நினைவு படுத்திக் கொள்வோம்:

"
எவர் அந்நிய கலாச்சாரத்தைப் பின்பற்றுகிறாரோ அவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்" மற்றொரு அறிவிப்பில், "அவர்களையே சார்ந்தவர்" என கூடுதலாக இன்னொரு வாசகமும் இடம் பெற்றுள்ளது.

இறைவன் தனது திருமறையில் இயம்பியவைகளையும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம் பொன்மொழிகளில் போதித்தவைகளையும் உள்ளது உள்ளபடி உணர்ந்து, நம்மில் நுழைந்து விட்ட அந்நிய கலாச்சார ஊடுருவல்களைக் கண்டு பிடித்து களையெடுத்தால், அறியாமையால் ஏற்பட்டுப் போன பிரிவுகளும் பிளவுகளும் நீங்கி ஒன்று பட்ட உயரிய சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் திகழும். இன்ஷா அல்லாஹ்.

ஆக்கம்: சகோதரர் அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா


இக்கட்டுரையாசிரியரான தஞ்சை மாவட்டம் திருப்பந்துருத்தியைச் சேர்ந்த சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்கள் தமிழில் இஸ்லாமியக் கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ஆக்கூர் ஓரியண்டல் மேனிலைப் பள்ளியிலும் பின்னர் உமராபாத் ஜாமிஆ தாருஸ்ஸலாம் அரபிக் கல்லூரியிலும் கல்வி பயின்ற இவர் தற்போது சவூதி அரேபியாவில் பணிபுரிந்து வருகிறார்.


'கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப்போகட்டும்', 'புண்ணியபூமிக்கு ஒரு பயணம்', 'மன்னிப்பே இல்லாத மாபெரும் பாவம்', 'மரணத் தொடக்கம் மறுமை வரைக்கும்' என்ற பெயர்களில் நூல்களை எழுதியுள்ள இவர், தமிழ் இஸ்லாமியத் தாரகை என்ற பெயரில் வலைப்பதிவையும் நடத்தி வருகிறார்.


2007ஆம் ஆண்டுக்கான சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆண்களுக்கான ஆறுதல் பரிசுகளில் ஒன்றை வென்ற சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா அவர்களுக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்! - சத்தியமார்க்கம்.காம்


2007-ஆம் ஆண்டு சத்தியமார்க்கம்.காம் நடத்திய கட்டுரைப்போட்டி முடிவுகளை அறியவும் பரிசுகளை வென்ற அனைத்துக் கட்டுரைகளையும் படிக்கவும் இங்கு சொடுக்குங்கள்.

Trackback(0)
கருத்துக்கள் (2)add comment
0
முத்துப்பேட்டை. அபூஆஃப்ரின்:
அஸ்ஸலாமு அலைக்கும்.. வரஹ்.. அன்பு சகோதரர். அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்களின் கலாச்சார ஊடுவருவல் என்ற கட்டுரையின படித்து பார்த்தேன். இன்று இஸ்லாமிய சமுதாயத்தினரிடையே பரவி இருக்கும் பிற மத கலாச்சாரங்களை அப்படியே படம் பிடித்துக்காட்டியது போல் உள்ளது அவரின் ஆக்கம். நம்முடைய சமுதாய மக்கள் சிந்தித்து செயல் படக்கூடிய சமுதாயமாக அல்லாஹ்தலா படைத்து இருக்கிறான். ஆகையால், இதனை படிக்கும் சகோதர மற்றும் சகோதரிகள் தவறுகளை திருத்திக்கொண்டால், நம்மை பார்க்கும் மற்ற சமுதாயத்தினரும் நம்முடன் சேர்ந்து திருந்த ஒரு வாய்ப்பாக அமையும்.
1

June 03, 2008 12:30
0
haneefm:
وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللّهِ وَبِالْيَوْمِ الآخِرِ وَمَا هُم بِمُؤْمِنِينَ இன்னும் மனிதர்களில் 'நாங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாள் மீதும் ஈமான் (நம்பிக்கை) கொள்கிறோம்' என்று கூறுவோறும் இருக்கின்றனர்; ஆனால் (உண்மையில்) அவர்கள் நம்பிக்கை கொண்டோர் அல்லர். (2:8) அன்பு சகோதரர். அப்துல் ஸலாம் மஸ்தூக்கா அவர்களின் கலாச்சார ஊடுவருவல் ஆக்கம் மிக்க பயனுள்ளதாக இருக்கு நாம் இந்திய இஸ்லாமிய சமுதயாம் இன்னும் பழைய காலசாரத்தை பின் பற்றி தான் இருக்கு என்பதை நாம் மறுக்கமுடியாது!! இன்னும் முன்பு இருந்தத்தை விட தற்போது உண்மையில்[இந்திய] இஸ்லமியர்கள் இனைவக்கும் அவர்களிடம் இருந்து பழைய இனைவக்கும் காலசாரத்தை தூக்கியெரிபட்டவர்களா இபோது நாம்காண்கிறோம் என்பது தான் உண்மை இந்த ஆக்கத்தை மீண்டும் ஒரு முறை என் கவனத்தில்கொண்டுவந்த முத்துப்பேட்டை. அபூஆஃப்ரின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஹனீஃப்-குவைத்
2

June 04, 2008 06:49

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:45 மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள். எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கு அன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு கட்டுரைப்போட்டி ஆண்டு 2007 கலாச்சார ஊடுருவல்!
Twitter
RSS
YouTube
English