சத்தியமார்க்கம்.காம்

ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா? print Email
ஐயமும்-தெளிவும் - பிற மதத்தினருக்காக
திங்கள், 01 அக்டோபர் 2007 10:04

ஐயம்:  தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி:

குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால் குரான் 13 வருடங்களாக சிறுகச் சிறுகவே இறங்கியது என்று படித்துள்ளேன். அப்படி இருக்க ரம்ஜான் என்பது துவங்கிய மாதமா அல்லது வந்து முடிந்த மாதமா?  - (மின் மடல் மூலம் சகோதரர் சம்பத்)


தெளிவு:


அன்புச் சகோதரர் சம்பத் அவர்களே,

"இக்குர்ஆன் உலக மாந்தர் அனைவருக்கும் ஓர் நேர்வழிகாட்டியே அன்றி வேறில்லை" எனத் திருமறை குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான். அந்த வகையில் திருக்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு மட்டும் தான் என்ற தவறான எண்ணம் சமூகத்தில் நிலவும் சூழலில், அது எங்களுக்கும் உரியது தான் என்ற கருத்து தொனிக்க உரிமையுடன் அதில் எழுந்த சந்தேகத்தைக் குறித்து இங்கு கேள்வி எழுப்பிய தங்களின் ஆர்வத்திற்கு நன்றி! நாம் நேர்வழியில் என்றென்றும் நிலைத்திருக்க உதவி இறைவன் புரிவானாக!

திருக்குர்ஆன் நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு 23 வருட காலமாக அருளப்பட்டதாக இருக்க ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் இறங்கியதாக முஸ்லிம்கள் கருதுவதில் தங்களுக்கு எழுந்த சந்தேகம் நியாயமானதே!

நபி(ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களின் 40 ஆவது வயதிலிருந்து அவர்கள் மரணித்த அவர்களின் 63 ஆவது வயது வரை சுமார் 23 வருடங்களாக சிறுகச் சிறுக காலச் சூழல்களுக்குத் தக்கவாறு திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்டது உண்மை தான்.

அதே போன்று சகோதரர் சம்பத் அவர்களுக்கு சந்தேகம் வந்த,

"தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! 'இதை' பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் " (அல்குர்ஆன் 044:002,003)

என்ற திருக்குர்ஆன் வசனம் கூறுவதும் உண்மையே. இவ்வசனத்திற்கு ரமலான் மாதத்தின் பாக்கியமிக்க அந்த லைலத்துல் கத்ர் இரவில், தற்போதைய முழு புத்தக வடிவிலான குர்ஆன் முழுமையும் அவ்வோர் இரவிலேயே அருளப்பட்டதாக அர்த்தம் கொண்டதாலேயே சகோதரருக்கு இச்சந்தேகம் வந்துள்ளது.

ஆனால் இவ்வசனத்தின் பொருள் அவ்வாறன்று. இங்கு குறிப்பிடப்படும் 'இதை' என்ற 'திருக்குர்ஆன்' வார்த்தை சுட்டுவது முழுக்குர்ஆனை இல்லை. அவ்விரவில் முதன்முதலாக இறக்கப்பட்ட திருக்குர்ஆனின் சில வசனங்களையே இவ்வசனம் சுட்டுகின்றது.

எவ்வாறு முழுக்குர்ஆனை திருக்குர்ஆன் என்கின்றோமோ அவ்வாறே திருக்குர்ஆனின் வசனங்களையும் குர்ஆன் என்றே திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகின்றான்.

இதற்குச் சில உதாரணங்களை திருக்குர்ஆனிலிருந்தே காணலாம்:

குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்விகள் கேட்டால் ... (அல்குர்ஆன் 005:106)

இந்தக் குர்ஆன் எனக்கு வஹீயாக - அருளப்பட்டது ... (அல்குர்ஆன் 006:019)

இந்தக் குர்ஆன் அல்லாஹ் அல்லாதோரிடமிருந்து இட்டுக்கட்டப்பட்டதாக இல்லை... (அல்குர்ஆன் 010:037)


மேற்கண்ட இந்த வசனங்களெல்லாம் அருளப்பட்ட நேரத்தில் மொத்தக் குர்ஆனும் முழுமையாக அருளப்பட்டிருக்கவில்லை. ஆயினும் மேற்கண்ட வசனங்களைப் போல் குர்ஆனின் பல இடங்களில், அதுவரை முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்டிந்த வசனங்களை குர்ஆன் என்றே இறைவன் குறிப்பிட்டுகிறான் . இதிலிருந்து திருமறைக் குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் குர்ஆன் என்ற  பொருளையே உணர்த்துவதை அறிந்து கொள்ளலாம்.

இந்த அடிப்படையில் திருக்குர்ஆன் (ரமளான் மாதத்தின்) "பாக்கியமிக்க இரவில் அருளப்பட்டதாக" குறிப்பிடும் அந்த வசனத்தை, "(ரமளான் மாதத்தின்)பாக்கியமிக்க இரவில் (திருக்குர்ஆன்) வசனம் அருளத்துவங்கியதாகவே" பொருள் கொள்ள வேண்டும்.

திண்ணமாக, நாம் இ(ந்த மறையை அருளுவ)தை மாண்புறு இரவொன்றில் அருளி(த் தொடங்கலா)னோம். (அல்குர்ஆன் 097:001)


எனவே குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது என்பது, குர்ஆன் 23 ஆண்டு காலமாகச் சிறுகச் சிறுக அருளப்பெற்றது என்பதற்கு முரணானக் கருத்து இல்லை. நபி முஹம்மத்(ஸல்) அவர்களுக்கு அவர்களின் 40 ஆவது வயதில் ரமலான் மாதத்தில், குர்ஆனின் 'அலக்' என்ற 96வது அத்தியாயத்தின் முதல் 5 வசனங்கள் முதன்முதலாக அருளப்பட்டது. இவ்வாறு ரமலான் மாதத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் இறக்கப்படத் துவங்கியதையே இறைவன், "பாக்கியமிக்க (ரமலான் மாத)இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக்" குறிப்பிடுகின்றான். ஆரம்பத்தில் ஐந்து வசனங்கள் மட்டுமே அருளப் பட்டிருந்த சூழலில், வசனங்களும் 'குர்ஆனையே குறித்து நிற்பதால் ரமளான் மாதத்தில் குர்ஆன் இறங்கியது என்பதில் எவ்வித முரணுக்கும் இடமில்லை!

(இறைவனே மிக்க அறிந்தவன்)

Trackback(0)
கருத்துக்கள் (16)add comment
0
haneefm:
தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! 'இதை' பாக்கியம் நிறைந்த ஓர் இரவில் அருளினோம் ' (அல்குர்ஆன் 044:002,003) \குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால் குரான் 13 வருடங்களாக சிறுகச்சிறுகவே இறங்கியது என்று படித்துள்ளேன். அப்படி இருக்க ரம்ஜான் என்பது துவங்கிய மாதமா அல்லது வந்து முடிந்த மாதமா? - (மின் மடல் மூலம் சகோதரர் சம்பத்.)//குர்கான் பற்றியும்இஸ்லாத்தில் கேள்விகளை கேக்க துவங்கிய சகோதரர் சம்பத் அவர்கலுக்கு அல்லாஹ் இன்னும் இஸ்லாத்தின் பால்அதிக இடுபாடு உள்ளவரக அல்லாஹ் அருள் புரியட்டும் அஸ்ஸலாமு அலைக்கும், திரு குர்கான் அருளியமாதம் ரம்ஜான் மாதத்தில் துவங்கியதா? குர்கான் நிறைவு பெற்றமாதமா? இது பற்றி இன்னும் விளக்கம் தரவும்!!! ஹஃணிப்-குவைத்
1

October 02, 2007 08:19
0
அபூ முஹை:
''ரமதான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், தெளிவானச் சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிக்கும் இந்தக் குர்ஆன் இறக்கியருளப்பட்டது''... (002:185) ''இதை அருள் நிறைந்த இரவில் அருளினோம் நாம் எச்சரிக்கை செய்வோராவோம்'' (044:003) ''நிச்சயமாக நாம் இதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்'' (097:001-003) மேற்கண்ட இறைவசனங்களிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு முதல்முதலாக வஹீ எனும் இறைச் செய்தி ரமதான் மாதத்தில், அருள் நிறைந்த, ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த - கண்ணியமிக்க ஓர் இரவில் இறங்கத் தொடங்கியது என்பதை விளங்கலாம். மேலும், நபி (ஸல்) அவர்கள் மரணமடையும் காலம் வரை ஒவ்வொரு ரமதானிலும் அண்ணல் நபியவர்களுக்கும், வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கும் குர்ஆன் பற்றிய நெருங்கிய தொடர்பு இருந்து கொண்டேயிருந்தது. ''நபி (ஸல்) அவர்கள் மக்களுக்கு நல்லதை வாரி வழங்குபவர்களாக இருந்தனர். ஜிப்ரீல் (அலை) ரமளான் மாதத்தில் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்கும் வேளையில் நபி (ஸல்) அவர்கள் அதிகமதிகம் வாரி வழங்குவார்கள். ஜிப்ரீல் (அலை) ரமதானின் ஒவ்வொரு இரவும் - ரமளான் முடியும்வரை - நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பார். நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலிடம் குர்ஆனை ஓதிக் காட்டுவார்கள். ஜிப்ரீல் (அலை) தம்மைச் சந்திக்கும்போது மழைக் காற்றைவிட அதிகமாக நபி (ஸல்) அவர்கள் வாரி வழங்குவார்கள். (புகாரி, 1902, 3220, 3554, 4997, 4998) ஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரகசியமாக: (வானவர்) ''ஜிப்ரீல் என்னை ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதச் செய்து வந்தார்கள். இந்த ஆண்டு மட்டும் அவர்கள் என்னை இரு முறை ஓதச்செய்தார்கள். என் வாழ்நாள் முடிவடையும் நேரம் வந்து விட்ட (தைக் குறிப்ப) தாவே அதை நான் கருதுகிறேன்'' என்று தெரிவித்தார்கள். (புகாரி, 4997வது ஹதீஸுக்கு முந்திய ஹதீஸ்) குர்ஆனைக் கொண்டு வந்து கொடுத்த வானவ இறைத்தூதரும், குர்ஆனைப் பெற்றுக்கொண்ட மானிட இறைத்தூதரும் இணைந்து ஒவ்வொரு ரமதானிலும் அதுவரை அருளப்பட்ட திருக்குர்ஆன் வசனங்கள் இங்கே ஓதி சரிபார்க்கப்ட்டிருக்கிறது. நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி 10ம் ஆண்டின் இறுதி ஹஜ்ஜின் அரஃபா தினம் அன்று, அல் மாயிதா எனும் 005வது அத்தியாயத்தின் - ''இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' என்ற - 003வது வசனம் இறக்கியருளப்பட்டது. இதிலிருந்து நாமறிவது, ஹிஜ்ரி 10ம் ஆண்டு ரமதான் மாதத்திலும் இறைச் செய்தியாகிய திருக்குர்ஆன் வசனங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருந்தது. அதாவது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் கடைசியாகச் சந்தித்த ரமதான் மாதத்திற்குப் பிறகும் ஹிஜ்ரி 10, ஹஜ் மாதம் வரை வஹீ தொடர்ந்து இறக்கியருளப்பட்டது. ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபிவுல் அவ்வல் மாதத்தில் நபி (ஸல்) அவர்கள் உயர்ந்தோனிடம் சென்றார்கள். இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்.
2

October 03, 2007 17:58
0
jenifer:
'இன்றுடன் நிறைவுப் பெற்றது' என்பதாக 'அறபாத்' தினத்தன்று குர்-ஆன் வசனம் இறங்கியதாக நம்பும் முஸ்லிம்களே, பின் ஏன் 'குர்-ஆனில்' சொல்லப்படாத விஷயங்களுக்காகத்தான் 'ஹதீஸ்களை' வால்யூம்களாக மதரஸாக்களில் போதிக்கப்படுதென்றால், நீங்களே உங்கள் குர்-ஆன் மீது அறியாமலே களங்கம் கற்பித்துக் கொண்டும்; உங்களுக்குள் ஹதீஸ்களின் பேரால் தர்கித்துக் கொண்டும்; குர்-ஆனில் இல்லாத பெருநாள் பிறைக்காக உலக முஸ்லிம்களுக்குள் பிரிந்து கொண்டாடி குழம்பி யுள்ள நீங்கள் 'ஒரே மறை' என்று கூறுவது பொருத்தமா?'குர்-ஆனில்' சொல்லப்படாத-விளக்கப்படாத விஷயங்'கள் நிறைய உள்ளன என்று நீங்களே 'வாக்குமூலம்' தருவது தான் வேடிக்கை.'மகன்'என்று ஏசுவை உடல் சம்பந்தம் இல்லாது மதிக்கும் 'ஜோஹுவா' வாகிய நான் கேட்கின்றேன்.'நீங்கள் தொழுகையின் போது உங்கள் நபியை நினைக்கலாமா? அதுவும் இணைவைப்பு தானே?
3

December 05, 2007 11:07
0
அபூ முஹை:
சகோதரி ஜெனிஃபர் அவர்களுக்கு, ''நீங்கள் இறைவனை நேசிப்பவர்கள் என்றால் என்னைப் பின்பற்றுங்கள்'' (003:031) நபியைப் பின்பற்ற வேண்டும் என்று திருக்குர்ஆனில் பல வசனங்கள் கூறுகின்றது. முஸ்லிம்கள் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதும் திருக்குர்ஆனின் கட்டளைதான். இஸ்லாத்தை விளங்கிப் பின்பற்றியொழுக குர்ஆன் மட்டும் போதும் என்றக் கருத்துடையவர்களுக்கு! ''அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை'' (009:036) ''புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றம்'' (002:217) இன்னும், 002:194. 005:002,097. 009:005 வசனங்களில் ''புனித மாதங்கள்'' என்று இறைவன் குறிப்பிடுகிறான். இந்த வசனங்களில் சொல்லப்படும் புனித மாதங்கள் எவை? அம்மாதங்களின் பெயர் என்ன? என்பதை ஹதீஸ்களின் உதவி இல்லாமல் குர்ஆன் வசனங்களிலிருந்து விளக்க வேண்டும். விளக்குவீர்களா? (இது வேறொரு பின்னூட்டத்திலும் கேட்டது போன்ற கேள்வியே) ''இன்றையதினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்'' (005:003) ஹஜ்ஜின் காலத்தில், அரஃபா தினத்தில், நபி (ஸல்) அவர்களுக்கு இறைச் செய்தியாக இவ்வசனம் அருளப்பட்டது. இந்த வசனம் அருளப்பட்டப் பின்னணியை அறிந்து கொள்வதற்கு ஹதீஸ் தேவைப்படுகிறதே கவனித்தீர்களா! பிறகு ஹதீஸின் துணை இல்லாமல் இந்த வசனம் அரஃபா தினத்தில்தான் இறங்கியது என்று எவ்வாறு அறிந்து கொண்டீர்கள்! சொல்லுங்களேன் தெரிந்து கொள்வோம். //குர்ஆனில் இல்லாத பெருநாள் பிறைக்கு// - - என்று நீங்கள் சொல்வது தவறு. ''பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அவை மக்களுக்கும், ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' (002:189) தேய்ந்து, வளரும் பிறைகளை மக்களுக்கு காலங்களை அறிந்து கொள்வதற்காக இறைவன் படைத்திருக்கிறான். பிறைகளைப் பார்த்துக் காலங்களை அறிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இது களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! குர்ஆனில் இல்லாத பெருநாள் பிறை என்று விளங்கியிருப்பதால் பிறைகள் பற்றியும் குர்ஆன் பேசுகிறது என்பதைச் சுட்டுவதே எமது நோக்கம் என்று கொள்க. //'மகன்'என்று ஏசுவை உடல் சம்பந்தம் இல்லாது மதிக்கும் 'ஜோஹுவா' வாகிய நான் கேட்கின்றேன்.'நீங்கள் தொழுகையின் போது உங்கள் நபியை நினைக்கலாமா? அதுவும் இணைவைப்பு தானே? // தொழுகையில் நபியை நினைக்கலாமா? என்றால் முஹம்மது நபி, ஈஸா நபி, இப்ராஹீம் நபி, மூஸா நபி என எல்லா நபிமார்களையும் இன்னும், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், ஊர் மக்கள், ஊர் தெரு, வீடுகள், தோட்டம், துரவு, ஆறு, குளம் குட்டைகள், கிணறுகள், வீட்டில் வளர்க்கும் பிராணிகள் இவைகளும் தொழுகையில் நினைவுக்கு வந்தால் அதைத் தவிர்க்க இயலாது. தொழுகையில் இவ்வாறு நினைவு வருவது இணைவைப்பு ஆகாது! இறைவனை இறைவனாகவும், நபிமார்களை நபிமார்களாகவும், மனிதர்களை மனிதர்களாவும், பிராணிகளைப் பிராணிகளாவும் நினைப்பது இணைவைத்தல் இல்லை! நபிமார்களை இறைவனுக்கு நிகராகக் கருதும் பொழுதுதான் இணைவைத்தல் ஏற்படும். தொழுகையில் - நிற்பது, கைகளைக் கட்டுவது, ஓதுவது, பிரார்த்திப்பது, கூனிந்து நிமிர்வது, சிரவணக்கம் செய்வது, அமர்வது போன்ற நிலைகள் உள்ளன. இவைகளை நிறைவேற்ற வேண்டுமென்றால் தாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற நினைவோடு செயல்பட வேண்டும். ஒருவர் உலகத்தையே மறந்த நிலையில் தொழுகையில் நிற்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவரால் தொழுகையில் அடுத்த நிலைக்கு இயங்க முடியாமல் போய்விடும். உலக நினைவே ஏற்படாமல் தொழ வேண்டும் என்று இஸ்லாம் விதிக்கவில்லை. நீங்கள் ஹதீஸ்களை நிராகரிப்பவராக இருப்பதால், நபியவர்களுக்கும் தொழுகையில் உலக நினைவு ஏற்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை இங்கு எழுதவில்லை நன்றி!
4

December 07, 2007 14:51
0
jenifer:
நாங்கள் ('ஜோஹூவா') கிறிஸ்த்மஸ் கொண்டாடுவதில்லை; காரணம்: அவ்வாறு கொண்டாடுமாறு வேத வசனம் இல்லை. அதுபோலவே 'பெருநாள்' கொண்டாடுங்கள் என்றும் உங்கள் வேத வசனத்தில் இல்லை அதாவது பெருநாள் பிறை பற்றி கூறப்படவில்லை என்பதே என் வாதமே தவிர நீங்கள் திசைத் திருப்பும் நோக்கில் 'பிறைகளைப் பற்றி' வேத்தில் இல்லை என்பதாக நான் கூறுவதாக எண்ணிக் கொண்டு விட்டீர்கள் சகோதரரே. அதுபோலவே, தொழுகைப் பாடம் பற்றி தெரிந்து கொள்ள முயன்ற போது அவற்றில் நீங்கள் கடைசியாக ஓதும் (அரபி) சொற்றொடரின் தமிழாக்கத்தை நான் புரிந்து கொண்டது இப்படித்தான்: அதாவது, தேவனை துதித்த பின் முகமது நபி மற்றும் ஆப்ரகாம் நபி மீதும் பிரார்த்தனை செய்வதென்பதாக அதன் அர்த்தம் போட்டிருந்தது. அதனால், உடனே என் மனதில் பட்டதைக் கேட்டேன். என்னைப் பொருத்தவரை தேவனிடத்தில் ஜெபம் செய்யும் போது நபி இருவர் மற்றும் குடும்பத்தார் இணைக்கப்படக் கூடாது என்பதாகவே என் கேள்வி என்றால் தங்களின் பதில் என்ன சகோதரரே.
5

December 09, 2007 12:19
0
ஸயீத்:
//தேய்ந்து, வளரும் பிறைகளை மக்களுக்கு காலங்களை அறிந்து கொள்வதற்காக இறைவன் படைத்திருக்கிறான். பிறைகளைப் பார்த்துக் காலங்களை அறிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இது களையப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை! குர்ஆனில் இல்லாத பெருநாள் பிறை என்று விளங்கியிருப்பதால் பிறைகள் பற்றியும் குர்ஆன் பேசுகிறது என்பதைச் சுட்டுவதே எமது நோக்கம் என்று கொள்க.// விளக்கம் மிக அருமை. //'மகன்'என்று ஏசுவை உடல் சம்பந்தம் இல்லாது மதிக்கும் 'ஜோஹுவா' வாகிய நான் கேட்கின்றேன்.'நீங்கள் தொழுகையின் போது உங்கள் நபியை நினைக்கலாமா? அதுவும் இணைவைப்பு தானே// நினப்பதெல்லாம் இணைவைப்பா?!. தொழுகையில் குர் ஆனை ஓதுவதன் மூலம் எத்தனையோ விஷயங்களை நினைவு கூறுகின்றோம் உதாரணத்திற்கு பிர் அவ்ன், மூஸா(அலை), மரியம் (அலை), கப்பல், இடி, தேனீ, சூரியன், சந்திரன் மற்றும் பிறை இவற்றைப்பற்றியெல்லாம் குர் ஆன் பேசுகின்றது, மிக முக்கியமாக மனிதனின் எதிரி ஷைத்தான் கூட குர் ஆனில் வருகின்றான். இணைவைப்பு என்பது இறைவனுக்கு நிகராக கருதி பூஜிப்பது.
6

December 09, 2007 13:55
0
அபூ முஹை:
சகோதரி ஜெனிஃபர் அவர்களே, குர்ஆனில் பிறை பற்றி இருக்கிறது. பெருநாள் பிறை பற்றி ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. நீங்கள் ஒருமுறை ஹதீஸ்களை மறுக்கின்றீர்கள், மறுமுறை ஹதீலிருந்தே ஆதாரத்தை வைக்கிறீர்கள். அதனால் திசை திருப்பும் நோக்கம் என்னிடம் இல்லை! நீங்கள்தான் நிலையான ஒரு கருத்தில் இல்லை. கீழ் வரும் உங்கள் கேள்வி தொழுகையில் வேண்டும் பிரார்த்தனைகளாகும். இங்கு ஹதீஸிலிருந்து ஆதாரத்தை எடுத்து வைத்துள்ளீர்கள். ஆனால் பெருநாள் பிறை சம்பந்தமாகவுள்ள ஹதீஸை நிராகரிக்கிறீர்கள் ஏனிந்த முரண்பாடு? அதை விளக்கி விடுங்களேன்! //ஓதும் (அரபி) சொற்றொடரின் தமிழாக்கத்தை நான் புரிந்து கொண்டது இப்படித்தான்: அதாவது, தேவனை துதித்த பின் முகமது நபி மற்றும் ஆப்ரகாம் நபி மீதும் பிரார்த்தனை செய்வதென்பதாக அதன் அர்த்தம் போட்டிருந்தது. அதனால், உடனே என் மனதில் பட்டதைக் கேட்டேன். என்னைப் பொருத்தவரை தேவனிடத்தில் ஜெபம் செய்யும் போது நபி இருவர் மற்றும் குடும்பத்தார் இணைக்கப்படக் கூடாது என்பதாகவே என் கேள்வி என்றால் தங்களின் பதில் என்ன சகோதரரே.// சகோதரியே, ''தேவனிடத்தில் ஜெபம் செய்யும் போது நபி இருவரின் குடும்பத்தார் இணைக்கப்படக் கூடாது'' என்பது உங்கள் தனிப்பட்டக் கருத்தாக இருப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை! அதுபோல் தொழுகையெனும் பிரார்த்தனையில் நபி இருவரின் குடும்பத்தாரையும் இணைக்கலாம் என்ற மற்றவர் கருத்தையும் உங்களால் ஆட்சேபிக்க முடியாது சரியா? மேலும், தொழுகையில் நபி இருவரும், அவர்களின் குடும்பத்தார்கள் மட்டும் இணைக்கப்படவில்லை. ''அனைத்து கண்ணியமும், தொழுகைகளும், ஏனைய நல்லறங்களும் இறைவனுக்கே உரியன! நபியே உங்கள் மீது சாந்தியும், இறைவனது அருளும், அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக. மேலும் எங்கள் மீதும் ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டுமாக. வணக்கத்திற்குரியவன் இறைவனைத்தவிர வேறு எவருமில்லை என்ற நான் உறுதியாக நம்புகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் இறைவனின் அடியாரும், தூதருமாவார் என்று உறுதியாக நம்புகிறேன்'' தொழுகை எனும் பிரார்த்தனையில் நபி இருவர் இணைக்கப்படுவதற்கு முன், மேற்கண்ட பிரார்த்தனைகள் இடம்பெறுகின்றன. அதில் ''எங்கள் மீதும், ஏனைய நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும்'' என்று வேண்டப்படுகிறது. இன்னும் தொழுகையில் - ''இறைவா என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக! எனது குறைகளை நிவர்த்தி செய்வாயாக! எனக்கு வழிகாட்டுவாயாக! எனக்குத் தேவையானவற்றை வழங்குவாயாக! எனக்கு நிவாரணம் அளிப்பாயாக!'' - இவ்வாறும் தொழுபவர் தமக்குத் தேவையானவற்றை இறைவனிடம் வேண்டிக்கொள்கிறார். எனவே தொழுகையில் இரு நபிகள் மட்டும் இல்லாமல், தொழுபவரும் தேவையானதைப் பிராத்திக்கிறார், உலகத்திலுள்ள அனைத்து நல்லடியார்களுக்காவும் வேண்டுகிறார். இஸ்லாத்தில் தொழுகை மிகச் சிறந்த பிரார்த்திக்கும் இறைவணக்கம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ''தேவனிடத்தில் ஜெபம் செய்யும் போது நபி இருவரின் குடும்பத்தார் இணைக்கப்படக் கூடாது'' - இது உங்கள் மார்க்கம். ''தொழுகையில் பிரார்த்தனை செய்யும் போது அதில் என்னையும், நல்லடியார்களையும், நபிமார்களையும் இணைத்துக் கொள்ளலாம்'' - இது எங்கள் மார்க்கம். உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம். நன்றி!
7

December 09, 2007 19:49
0
jenifer:
என்னை பின்பற்றுங்கள் என்று வேதம் மூலமாக கட்டளை உள்ளது என்று ஆதாரம் கூறும் சகோதரரே, முகமதை பின்பற்றுங்கள் என்பதிலிருந்தே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'வேதத்தை' பின்பற்றுங்கள் என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாமே. எனவே அவர்களுக்கு வேதத்தில் வழங்கப்படாத எதுவானாலும் அதற்கு கர்த்தர் அனுமதி உண்டா?
8

December 09, 2007 20:22
0
jenifer:
நீங்கள் ஹதீஸ்களை ஏற்று கொண்டிருக்கின்றீர்கள்; அதனால், அதிலிருந்து (உங்களுக்காக) உதாரணத்தைச் சுட்டிக்காட்டி விடுவதன் மூலம் நீங்கள் வேத்திலிருந்து மாறுபடுவதைச் சுட்டிக் காட்டுவது வாதத்திற்கான அணுகுமுறையே தானே தவிர அதனால் ஹதீஸ்களை ஏற்று கொண்டு விட்டேன் என்பதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா?
9

December 09, 2007 20:34
0
அல் அமீன்:
//அதனால் ஹதீஸ்களை ஏற்று கொண்டு விட்டேன் என்பதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியுமா?// ஜெனிஃபர், அவ்வாறெனில் நீங்கள் திருக்குர்ஆனை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றீர்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா? உங்கள் கேள்விகள் அனைத்திற்கும் பதிலளிக்க நான் தயாராக உள்ளேன். ஆனால், அதற்கு முன் சில தெளிவுபடுத்தல்கள் அவசியம். முதல் தெளிவு: 1. இங்கு கேள்விகள் வைப்பதன் மூலம் நீங்கள் என்ன நாடுகின்றீர்கள்?. உங்கள் நோக்கம் என்ன? உங்கள் பதிலை எதிர்பார்க்கின்றேன்.
10

December 10, 2007 08:35
0
அல் அமீன்:
//என்னைப் பொருத்தவரை தேவனிடத்தில் ஜெபம் செய்யும் போது நபி இருவர் மற்றும் குடும்பத்தார் இணைக்கப்படக் கூடாது என்பதாகவே என் கேள்வி என்றால் தங்களின் பதில் என்ன சகோதரரே.// ஜெனிஃபர், உங்கள் கேள்வி புரிந்தது. விளக்கமளிக்க தயாராக உள்ளேன். அதற்கு முன் 'உங்கள் நோக்கம்' என்ன? என்ற என் கேள்விக்கு பதிலளியுங்கள்.
11

December 10, 2007 08:44
0
ஸயீத்:
//முகமதை பின்பற்றுங்கள் என்பதிலிருந்தே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட 'வேதத்தை' பின்பற்றுங்கள் என்று தெளிவாக விளங்கிக் கொள்ளலாமே.// 'நாம் அருளிய வேதத்தைப் பின்பற்றுங்கள்' என்று கருணையாளன் இன்னும் ஒரு இடத்தில் தெளிவாகவே குர் ஆனில் கூறியிருக்கும் பொழுது வேதம் என்றால் முகமதுதான் என்று நீங்களாகவே நினைத்துக் கொள்வது சிறு பிள்ளைத்தனமாகத்தான் இருக்கிறது. மேலும் குர் ஆன் சிறுக சிறுக இரங்கிக்கொண்டிருக்கும் பொழுதே முகமது (ஸல்) அவர்களின் செயல்களை அன்றய முஸ்லிம்கள் பின்பற்றிக் கொண்டிருந்தனர். நீங்கள் கூறுவதுபோல் அது தடுக்கப் பட வேண்டுமென்றால் இறைவன் அப்பொழுதே தடுத்திருக்கலாம். அது இறைவனு(கர்த்தரு)க்கு மிக எளிதான காரியம்தான்.
12

December 10, 2007 13:44
0
jenifer:
'அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேதத்தை' என்று தானே நான் குறிப்பிட்டிருந்தேன் ; எனது நோக்கம் என்ன என்றும்; 'சிறுபிள்ளை தனம்' என்றும் வினவுகின்ற அன்புச் சகோதரர்களே... 'உண்மையைத் தேடி' உலகமெங்கும் உள்ள மதங்களை ஆய்ந்து பார்த்து தெளிவு கிடைக்கும் என்று தேடி வந்தேன் உங்களிடம். கிறித்துவம் பேசுபவர்கள் திரித்து பேசுபவர்களாகி விட்டனர். நல்ல வேளை 'ஜோஹுவாவில்' கிறித்துவம் இல்லை; வேத வசனங்களில் உள்ள செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் குர்-ஆன் என்றொரு வேதத்தினை பின்பற்றும் நீங்கள் எப்படி 'வேதத்தை மட்டும்' பின்பற்றுகின்றீர்களா அல்லது கிறித்துவம் பேசுபவர்கள் போல வேதம் அல்லாதவைகளையும் பின்பற்றுகின்றீர்களா என்பதை எனக்கு உங்கள் வேதத்தின் மற்றும் ஜெபிக்கும் முறைகளையும் படித்து வரும்போது அவ்வப்போது தோன்றும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து கொண்டபின் 'உண்மையான' வேதம் மட்டும் கடைபிடிக்கும் கூட்டத்தார் யார் என்று மிகத் துள்ளியமாகப் புரிந்து செயல்பட்டு அந்த வேதத்தின் அதிபதியான கர்த்தர்கு மட்டும் சரணடையப் பெரிதும் 'அவாவுடன்' இவ்வளைக்குள் வந்தேன். ஆனால், வார்த்தைகளில் மென்மையும் இல்லை உண்மையில் நான் யார் என்பதில் இருந்த ஆர்வம் தான் உங்கள்களிடம் காணப்பட்டது தவிர நான் சொல்ல வந்த கருத்தை அபூமுஹை அவர்கள் மட்டுமே புரிந்துகொண்டார்கள். நன்றி. இறுதியாக உங்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்புகளில் எல்லாம் () அடைப்புக்குறிக்குள் நீங்கள்-மொழிபெயர்ப்பாளரின் சொந்த'யூக' கருத்துக்களையேப் போடுவதால் தேவனின் கருத்து நேரடியாக வேதத்தில் கிடைக்காமல் போவதும் எனக்கு குழப்பமகி விடுகின்றது. உதாரணமக, 'குர்பானி' பற்றி வரும் தேவ வசனங்களில் ஹஜ் க்ரியையுடந்தான் 'குர்பானி' பற்றி வரும்போது நீங்கள் ()அடைப்புக்குறிக்குள் போடும் செருகல் மூலம் ஹஜ் அல்லாத மற்றவர்களுக்கும் 'குர்பானி' என்று வேதம் கட்டளை இட்டதாக உணர்த்த எத்தனிப்பதாகவே எனக்கு குழப்பம். எனக்கு மட்டுமல்ல குர்-ஆனை(மொழி பெயர்ப்பில்) படிக்கும் எல்லார்க்கும் இதே குழப்பம் வருவதாக கேள்விப்பட்டுள்ளேன். எனவே ()அடைப்புக்குறிக்குள் ஒளிந்திருக்கும் இடைச்செருகல் இல்லாத வேதத்தினைத் தேடி-'உண்மையைத்தேடி' உலகமெங்கும் சுற்றி வரும் ஓர் இறை அடிமையே நான். இனிமேல் உங்கள் வளைக்குள் வரமட்டேன். மீண்டும் நன்றி. கர்த்தர் காப்பாற்றுவாராக.....
13

December 10, 2007 19:39
0
அல் அமீன்:
//உண்மையில் நான் யார் என்பதில் இருந்த ஆர்வம் தான் உங்கள்களிடம் காணப்பட்டது// ஜெனிஃபர், ஒருவரிடம் 'நீங்கள் இந்தக் கேள்வி கேட்பதன் நோக்கம் என்ன' எனக் கேட்பதன் மூலம் அவர் இன்னார் என அறிந்து கொள்ள இயலுமா?. ஆச்சரியம் தான். உண்மையில் அறிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் கேட்பவர் கேட்ட கேள்வியில் தெளிவு பெறும் வரை அடுத்த கேள்விக்குச் செல்லமாட்டார். ஆனால் நீங்கள், ஒரு கேள்வி முடியும் முன்பே சம்பந்தமில்லாமல் வேறு வேறு கேள்விக்கு தாவுகிறீர்கள். இதனாலேயே 'உங்களின் நோக்கம் என்ன?' எனக் கேட்டேன். அது உங்களை கஷ்டப்படுத்தியது எனில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். உங்களை விரட்ட வேண்டும் என்ற நோக்கில் நான் கேள்வி கேட்கவில்லை. ஆனால், அதே சமயம் கேள்விகள் ஒரே பக்கமே இருப்பதும் சரியான கருத்துப்பரிமாற்றத்திற்கு அழகல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். 'கர்த்தரை உண்மையாக பின்பற்றுபவர் யார் என்ற உங்களின் தேடல்' தான் இங்கு கேள்விகள் கேட்பதற்கான அடிப்படை எனில் உங்களை மனமார நான் வரவேற்கின்றேன். இத்தகைய மனம் திறந்த கருத்துப்பரிமாற்றங்கள் உண்மையை அறிய மிக உதவிகரமாக இருக்கும். நாம் உண்மையை அலசுவோம். வாருங்கள். தேடலின் ஆரம்பம் ஒரு புள்ளியிலிருந்து இருக்கட்டும். அதற்கு ஏற்ற வகையில் என்னை முதலில் நான் அறிமுகம் செய்து கொள்கின்றேன். என் பெயர் அல் அமீன். நான் ஒரு முஸ்லிம். 'கர்த்தராகிய இவ்வுலக படைப்பாளனுக்கு என்னை முழுமையாக அர்ப்பணித்து அவருக்கு முழுமையாக கட்டுப்பட்டவன்' என்பது இதற்கு அர்த்தம். அந்த வகையில் கர்த்தர் இவ்வுலகுக்கு இறுதியாக அருளிய திருக்குர்ஆனையும், அதனைச் செயல்வடிவில் செயல்படுத்திக் காண்பிக்க தனது அடியார்களிலிருந்து தேர்ந்தெடுத்துக் கொண்ட முஹம்மது(ஸல்) அவர்களையும், அவர்கள் கற்பித்துத் தந்த இஸ்லாத்தையும் ஏற்று வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். எனது தேடலில் திருக்குர்ஆன், கர்த்தரால் இவ்வுலகுக்கு வழங்கப்பட்ட வேதங்களில் எவ்வித இடைச்செருகல்களோ, திருத்தங்களோ செய்யப்படாத தூய வேதம் என்ற நம்பிக்கைப் பிறந்ததாலேயே இஸ்லாத்தினை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளேன். நான் அறிந்த வரை திருக்குர்ஆன் தூயது என்றும், மற்றைய இன்று உலகில் அறியப்படும் கர்த்தரால் வழங்கப்பட்ட ஏனைய வேதங்கள் அனைத்தும் இடைச்செருகல்களும், கையாடல்களும் செய்யப்பட்டவை என்றும் என்னால் நிரூபிக்க இயலும். இனி, உங்களின் அறிமுகத்தையும் உங்களின் நம்பிக்கையையும் அறியத் தாருங்கள். அதனைத் தொடர்ந்து உங்களின் கேள்விகளை ஒவ்வொன்றாக வையுங்கள். அனைத்தையும் நாம் அலசுவோம்.
14

December 11, 2007 10:31
0
ஸயீத்:
ஜெனிஃபர் அவர்களே!. நான் கூறிய 'சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது' என்ற வார்த்தை உங்களைக் காயப்படுத்தியிருந்தால் அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கோரும் அதே வேலையில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் கீழுள்ள வாசகங்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள் //'இன்றுடன் நிறைவுப் பெற்றது' என்பதாக 'அறபாத்' தினத்தன்று குர்-ஆன் வசனம் இறங்கியதாக நம்பும் முஸ்லிம்களே பின் ஏன் 'குர்-ஆனில்' சொல்லப்படாத விஷயங்களுக்காகத்தான் 'ஹதீஸ்களை' வால்யூம்களாக மதரஸாக்களில் போதிக்கப்படுதென்றால், நீங்களே உங்கள் குர்-ஆன் மீது அறியாமலே களங்கம் கற்பித்துக் கொண்டும்; உங்களுக்குள் ஹதீஸ்களின் பேரால் தர்கித்துக் கொண்டும்; குர்-ஆனில் இல்லாத பெருநாள் பிறைக்காக உலக முஸ்லிம்களுக்குள் பிரிந்து கொண்டாடி குழம்பி யுள்ள நீங்கள் 'ஒரே மறை' என்று கூறுவது பொருத்தமா?'குர்-ஆனில்' சொல்லப்படாத-விளக்கப்படாத விஷயங்'கள் நிறைய உள்ளன என்று நீங்களே 'வாக்குமூலம்' தருவது தான் வேடிக்கை// இதில் நீங்கள் பயன்படுத்தியிருக்கும் 'வேடிக்கை, தர்க்கித்தல், குர் ஆனில் இல்லாத பெருநாள் பிறைக்காக பிரிந்து கொண்டாடி குழம்பியுள்ள நீங்கள்' எந்த வகையில் இவை மென்மையான வார்த்தை என்று தெரியவில்லை. கேள்விகள் விளங்கிக் கொள்வதற்க்காக கேட்க்கப்படுவது ஒரு ரகம். இன்னொரு ரகம் குறைகள் உள்ளதைச்சுட்டிக்காட்டுவது, இதில் நீங்கள் முன்னால் கேட்டது அனைத்தும் விளங்குவதற்க்காக கேட்டது இல்லை என்பதையும், முஸ்லிம்கள் தவறான கொள்கையில்தான் இருக்கிறார்கள் என்று முன்னதாகவே நீங்கள் தீர்மானித்து விட்டதையும் நீங்கள் பயன்படுத்தி இருக்கும் 'கடுமையான' வார்த்தைகளிலிருந்து விளங்கலாம். 'மகன்'என்று ஏசுவை உடல் சம்பந்தம் இல்லாது மதிக்கும் 'ஜோஹுவா' வாகிய நான் கேட்கின்றேன்.\ இதைத்தீர்மானித்து விட்டுதான் இங்கு வந்துள்ளீர்கள். \'உண்மையைத் தேடி' உலகமெங்கும் உள்ள மதங்களை ஆய்ந்து பார்த்து தெளிவு கிடைக்கும் என்று//'
15

December 12, 2007 19:31
0
அபூ முஹை:
கருத்தாட வந்த ஜெனிஃபர் சகோதரி, இங்கும் மற்ற இழைகளிலும் குறிப்பிட்டு எழுதிய கருத்துகளிலிருந்து, இஸ்லாத்தைப் பின்பற்ற குர்ஆன் மட்டும் போதும், ஹதீஸ்கள் தேவையில்லை என்ற தோரணையில் தமது வாதங்களை எழுதியிருந்தார். ஹதீஸ்களின் விளக்கம் இல்லாமல் குர்ஆனின் பல வசனங்களை விளங்க முடியாது என நாம் கருத்தை வைத்திருந்தோம். குறிப்பாக ஹஜ்ஜுடைய மாதங்களும், நான்கு புனித மாதங்களும் எவை? என்பதை குர்ஆனிலிருந்தே விளக்கும்படிக் கேட்டிருந்தோம். ஆனால், சகோதரி இவைகளுக்கு விளக்கங்கள் எழுதாமல் தொடர்ந்து, ''நாங்கள் (ஜோஹூவா) கிறிஸ்த்மஸ் கொண்டாடுவதில்லை'' என்றே எழுதியிருந்தார். கிறிஸ்தவ மதத்தின் ஜோஹூவாப் பிரிவினர் கிறிஸ்த்மஸ் கொண்டாடுவதில்லை என்றால் அதற்கும், முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. அவர்களின் வேதத்தில் இல்லை அதனால் சகோதரி கிறிஸ்த்மஸ் கொண்டாடுவதில்லை. முஸ்லிம்களின் வேதத்தின் விளக்கமாகிய நபிவழிப் பெருநாள் கொண்டாட அனுமதிக்கிறது. அதனால் முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுகின்றனர். முஸ்லிம்கள் பெருநாள் கொண்டாடுவதால் ஜோஹூவாப் பிரிவினராகிய சகோதரிக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுவிடாது. சகோதரி இறுதியாக விடைபெறும்போது, //உங்கள் குர்-ஆன் மொழிபெயர்ப்புகளில் எல்லாம் () அடைப்புக்குறிக்குள் நீங்கள்-மொழிபெயர்ப்பாளரின் சொந்த'யூக' கருத்துக்களையேப் போடுவதால் தேவனின் கருத்து நேரடியாக வேதத்தில் கிடைக்காமல் போவதும் எனக்கு குழப்பமகி விடுகின்றது.// - என்று கூறிச் சென்றிருக்கிறார். திருக்குர்ஆனின் எந்த மொழிபெயர்பாளரும், மொழி ஆக்கத்தில் தமது சொந்தக் கருத்தைத் திணிக்க முடியாது. ஏனெனில் மொழிபெயர்ப்புகளைப் பரிசீலிக்க திருக்குர்ஆனின் மூலமொழி உயிரோடு இருக்கிறது அதனால் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள முடியும். அதுபோல், அடைப்பு () குறிக்குள்ளும் மொழிபெயர்ப்பாளர்கள் தமது சுய கருத்தைத் திணித்திட முடியாது. திருக்குர்ஆன் வசனங்களுக்கு நபியவர்களின் வரலாற்று விளக்கங்களே இறுதியானது. அந்த விளக்கத்துக்கு முரண்பாடாக மொழிபெயர்ப்பாளரின் விளக்கங்கள் () அடைப்புக்குறிக்குள் சொல்லப்பட்டடிருந்தால் அதுவும் நீக்கப்பட வேண்டும். ஏனெனில் நபிமொழிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக: ''புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும் இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள், அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'' (002:194) இந்த வசனத்தில் மட்டுமல்ல குர்ஆனின் எந்த வசனத்திலும் புனித மாதங்களின் பெயர் குறிப்பிட்டுச் சொல்லப்படவில்லை. ஆனால் ஹதீஸில் புனித மாதங்கள் எவை என்று சொல்லப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புகளைப் படிக்கும்போது மக்கள் எளிதாக விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக மொழிபெயர்ப்பாளர்கள், ஹதீஸின் விளக்கத்தை () அடைப்புக்குறிக்குள் எழுதுகிறார்கள். 002:194வது வசனம் மீண்டும் மாதிரிக்காக, (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும். இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு - ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (002:194) ரஜப், துல்காஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய நான்கு மாதங்களும் புனித மாதங்கள் என்ற விளக்கத்தை ஹதீஸிலிருந்து பெற்று, அதே விளக்கத்தை மேற்கண்ட தமிழாக்கத்தின் () அடைப்புக் குறிக்குள் எழுதியிருக்கிறார்கள். () அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்டுள்ளது நபியவர்களின் விளக்கம் என்று, இதைப்படிக்கும் முஸ்லிம்கள் அனைவருக்கும் தெரியும், தெரியாத முஸ்லிம்கள் கேட்டுத் தெரிந்து கொள்வார்கள். ஆனால், சகோதரி மாற்று மதத்தைச் சார்ந்தவர் என்பதால் திருக்குர்ஆனின் () அடைப்புக் குறிக்குள் சொல்லப்பட்டுள்ளதை மொழிபெயர்ப்பாளரின் கருத்து என்று தவறாக விளங்கிக்கொண்டார். குர்ஆனை விளங்க நபியவர்களைப் பின்பற்ற வேண்டுமா? என்றால், வேறு வழி இல்லை! நபியவர்களைப் பின்பற்றியே தீர வேண்டும் என குர்ஆனும் கட்டளையிடுகிறது. ''அவர் அவர்களைத் தூய்மைப்படுத்துகிறார், வேதத்தையும், ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார்'' (003:164) இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வேதம் மட்டும் வழங்கப்படவில்லை. வேதத்திற்கு விளக்கமாக அவர்கள் வாழந்து காட்டிய வாழ்க்கையும் ஞானமாக வழங்கப்பட்டுள்ளது. இதை முஸ்லிம்கள் நபிவழி - சுன்னா என்பார்கள். வேதத்தை அப்படியே ஓதி அறிவுரை சொல்லோடு நிறுத்திக்கொள்வது வேறு, மக்களுக்கு அனைத்து விஷயங்களிலும் அழகிய முன்மாதிரியாக வேதத்தையும் ஓதி, வேதமாகவே வாழ்ந்து காட்டுவது என்பது வேறு. ''நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது'' குர்ஆனுக்கு விளக்கமாகவே நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். அந்த வாழ்க்கை தான் முஸ்லிம்களுக்குப் படிப்பினை. இவ்வுலக வாழ்க்கை மற்றும் நித்திய ஜீவன் பெறும் மறுமை வாழ்க்கை இரு வாழ்க்கைக்கும் முஹம்மது நபியவர்களே ஆன்மீகம் மற்றும் அனைத்து வாழ்க்கை நெறிகளுக்கும் வழிகாட்டி. ''நான் வேதமும் கொடுக்கப்பட்டுள்ளேன், அதைப்போன்று ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளேன்'' - முஸ்லிம்களுக்கு வேதமும், நபிவழியும் மிக அவசியம் என்பதே நபியின் வாக்கு. வேதத்தின் தெளிவுகள் தான் நபியின் வாழ்க்கையெங்கும் வியாபித்து நிற்கிறது. என்பது சகோதரியின் சிந்தனைக்கு. ''மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம். (016:044) நன்றி!
16

December 13, 2007 13:45

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:119 (நபியே!) நாம் உம்மை உண்மையுடன், (நல்லடியாருக்கு) நன்மாராயம் கூறுபவராகவும், (தீயோருக்கு) அச்சமுட்டி எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பியுள்ளோம். நரகவாதிகளைப் பற்றி நீர் வினவப்பட மாட்டீர்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் பிற-மதத்தினருக்காக ரம்ஜான் மாதம் குர்ஆன் இறங்கத் துவங்கிய மாதமா?
Twitter
RSS
YouTube
English