சத்தியமார்க்கம்.காம்

காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-4) print Email
தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள்
வெள்ளி, 31 ஆகஸ்டு 2007 20:43

{mosimage}நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டிய காபா ஆலயம், பலவீனமாக இருந்ததால் குறைஷியர் அதை இடித்துவிட்டுப் புதுப்பித்துக் கட்டினார்கள். நபித்துவ வாழ்வுக்கு முன், காபாவைப் புதுப்பித்துக் கட்டும் அறப்பணியில் நபி (ஸல்) அவர்களும் கலந்து கொண்டு கல் சுமந்திருக்கிறார்கள். குறைஷியர் காபாவைக் கட்டும்போது பொருளாதார நெருக்கடியினால் காபாவைச் சுருக்கி விட்டனர். படம் காண்க.

"நான் காபா ஆலயத்தில் நுழைந்து அதில் தொழ விருப்பம் கொண்டிருந்தேன், அப்போது நபி (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து ஹிஜ்ருக்குள் என்னை நுழையச் செய்து ஆலயத்தின் உள்ளே நுழைய நீ விரும்பினால் இங்கே தொழுவாயாக! ஏனெனில் இதுவும் ஆலயத்தின் ஒரு பகுதியாகும். எனினும் உனது கூட்டத்தினர் காபாவைக் கட்டியபோது அதைச் சுருக்கி விட்டனர். மேலும் இந்த இடத்தை ஆலயத்தை விட்டும் அப்புறப்படுத்தி விட்டனர்" என்று கூறினார்கள். (திர்மிதீ, நஸயீ)

இந்த செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மாஷா அல்லாஹ், இதை இறைவன் இந்த சமுதாயத்துக்கு வழங்கிய மாபெரும் அருள் என்றே சொல்ல வேண்டும்.

நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் சரியான அடித்தளத்திலிருந்து (002:127) உயர்த்திப் புதுப்பித்துக்கட்டிய காபா நான்கு மூலைகளைக் கொண்டதாக இருக்கவில்லை. இரு யமனிய மூலைகள் (ருக்னைன் யமானீயன்) என்று சொல்லப்படும் வடகிழக்கு, தென் கிழக்கு ஆகிய இரு மூலைகளை மட்டும் கொண்டதாக இருந்தது. இப்போது இருக்கும் காபாவுக்கு வடக்கே உள்ள ஷாமியா மூலைகள் (ருக்னுஷ் ஷாமியா) இருக்கவில்லை. படம் 1ல் ஒட்டகத் திமில் போல் வளைந்து காணப்படும் 'ஹிஜ்ர்' அல்லது 'ஹத்தீம்' என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் சேர்த்து காபா செவ்வையான வடிவத்தில் இருந்தது. குறைஷியர் காபாவைப் புதுப்பித்துக் கட்டியபோது பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஹத்தீம் பகுதியில் ஐந்து அல்லது ஆறு முழங்களைக் கொண்ட அரைவட்டப் பகுதியை அப்புறப்படுத்தி, சதுர வடிவத்தில் சுருக்கிக்கட்டி விட்டனர். ஆயினும், இன்றும் ஹிஜ்ர் அல்லது ஹத்தீம் என்று அழைக்கப்படும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சேர்ந்த பகுதியே என்பதற்கு காபாவைத் தவாஃப் செய்பவர்கள் அந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்தே சுற்றுகிறார்கள் என்பதிலிருந்து விளங்கலாம். மேலும் நபி (ஸல்) அவர்களும் அரைவட்டப் பகுதியும் காபாவைச் சார்ந்தது என்றே அங்கீகரித்திருக்கிறார்கள். இதற்கான ஆதாரங்கள் பல நபிவழித் தொகுப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன.

இப்போது இருக்கும் சதுர வடிவான காபாவை, நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் புதுப்பித்துக் கட்டியிருந்தது போல் செவ்வக வடிவான அமைப்பில் கட்டுவதற்கும், காபாவுக்கு கிழக்கு, மேற்குமாக இரு வாயில்களை அமைக்கவும் நபி (ஸல்) அவர்கள் நாடியிருந்தார்கள். ஆனால் குறைஷியர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றிருந்ததால் அதை வெறுப்பார்கள் என்ற எண்ணத்தில் நபி (ஸல்) அவர்கள் அதைக் கைவிட்டார்கள். இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த அறிவிப்பை தமது சிறிய தாயார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாகச் செவியேற்றிருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் மறைவுக்குப்பின் ஹிஜ்ரி 64ம் ஆண்டில், நபி (ஸல்) அவர்கள் காபாவை எவ்வாறு கட்டுவதற்கு நாடியிருந்தார்களோ அதைப் போன்று ஹிஜ்ர், ஹத்தீம் என்ற அரைவட்டப் பகுதியையும் காபாவோடுச் சேர்த்துக் கட்டினார்கள், காபாவுக்குள் நுழைந்து வெளியேற மேற்கு, கிழக்கு என இரு வாயில்களையும் அமைத்தார்கள்.

அதற்கான காரணம்...

யஸீது பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்தபோது, இறையில்லம் காபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும்வரை இறையில்லத்தை அது நிலையிலையிலேயே விட்டு வைத்தார்கள். (பனூ உமய்யாக்களான) ஷாம்வாசிகளுக்கு எதிராக மக்களுக்கு எழுச்சியூட்டுவதற்ாகவே அல்லது அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே அவ்வாறு விட்டு வைத்தார்கள். (ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்டபோது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''மக்களே காபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்துவிட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ''எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதிருந்த அதே நிலையில் காபாவை விட்டுவிடுங்கள், மக்கள் இஸ்லாத்தை ஏற்றபோதும், நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பெற்றபோதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)'' என்றார்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள், ''உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (காபாவை இடித்துப் புதுப்பிப்பதா, அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்'' என்றார். நன்முடிவு வேண்டி பிரார்த்தித்தபின், இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்.

அப்போது மக்கள் முதலில் காபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கிவிடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் காபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லைக் கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டுமானப்பணி நிறைவடையும்வரை (இறையில்லத்திற்குத் தற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள். 

மேலும், அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் ''என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறைமறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் காபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக்கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒருபுறம்) இருக்க - நான் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களை காபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன். என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

இன்று என்னிடம் பொருளாதாரமிருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை'' என்று கூறி(விட்டு காபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் காபாவில் 'ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே காபாவை எழுப்பினார்கள். (முடிவில்) காபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது. எனவே மேலும் பத்து முழங்கள் அதிகமாக்கினார்கள், அத்துடன் உள்ளே நுழைவதற்கும் ஒரு வாயில், வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள். (முஸ்லிம்)

குறைஷியர் சுருக்கிக் கட்டிய காபாவை - அன்று மக்காவின் ஆட்சியாளராக இருந்த அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் - இடித்து விட்டு விரிவுபடுத்தி புதுப்பித்துக் கட்டினார்கள். இப்னு ஸுபைர் கொலை செய்யப்பட்டபோது, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் மக்காவின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். கலீஃபா அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதன் பிறகு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்து விரிவாக்கிக் கட்டிய காபா, மீண்டும் ஹிஜ்ரி 74ல் இடிக்கப்பட்டு, குறைஷிகள் கட்டியது போல சுருக்கிக் கட்டப்படுகிறது.

ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் ''அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித்தளத்தின் மீது காபாவை எழுப்பியுள்ளார், அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான், ''நாம் இப்னு ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை, எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டுவிடுவீராக! 'ஹிஜ்ர்' பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்துவிட்ட வாயிலை மூடிவிடுவீராக!'' என்று பதில் எழுதினார். எனவே, ஹஜ்ஜாஜ் ('ஹிஜ்ர்' பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார். (முஸ்லிம்)

பிறகு...

அப்துல் மலிக் மர்வான் ஆட்சிக் காலத்தில், அவரிடம் ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் பின் அபீரபீஆ (ரஹ்) அவர்கள் ஒரு தூதுக் குழுவில் சென்றார்கள். அப்போது அப்துல் மலிக் பின் மர்வான், ''அபூகுபைப் (இப்னுஸ் ஸுபைர்) ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து தாம் கேட்டதாகக் கூறும் செய்தியை, அவர் அவர்களிடமிருந்து கேட்டிருக்கமாட்டார் என்றே நான் எண்ணுகிறேன்'' என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், ''ஆம் (அபூகுபைப் உண்மையே சொல்கிறார்) இதை நானும் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றுள்ளேன்'' என்றார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்றதைக் கூறுங்கள்'' என்றார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) கூறினார், ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னார்கள், என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ''உன்னுடைய சமுதாயத்தார் இறையில்லம் காபாவின் கட்டடத்தைச் சுருக்கிவிட்டனர். அவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின், அவர்கள் விட்டுவிட்டதை நான் மறுபடியும் இணைத்துக் கட்டியிருப்பேன். எனக்குப் பின் உன் சமுதாயத்தாருக்கு அதை (விரிவாக்கிக்) கட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றினால் (அவ்வாறு செய்யட்டும்!) என் அருகில் வா! அவர்கள் விட்டுவிட்ட (இடத்)தை உனக்கு நான் காட்டுகிறேன்'' என்று கூறிவிட்டு, (காபா அருகில்) ஏழு முழங்கள் அளவிற்கு இடத்தை எனக்குக் காட்டினார்கள். (முஸ்லிம்)

பிறகு ஹாரிஸ் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்களிடம் அப்துல் மலிக் பின் மர்வான் ''ஆயிஷா (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியதை நீங்கள் செவியுற்றீர்களா?'' என்று கேட்டார். அதற்கு ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் ''ஆம்'' என்றார்கள். பிறகு அப்துல் மலிக் பின் மர்வான் தம்மிடமிருந்த குச்சியால் தரையைச் சிறிது நேரம் குத்திக் கீறி (யபடி ஆழ்ந்து யோசித்து) விட்டு, ''இறையில்லத்தையும் இப்னுஸ் ஸுபைர் மேற்கொண்டதையும் (அதே நிலையில்) விட்டிருக்க வேண்டுமென (இப்போது) விரும்புகிறேன்'' என்றார். (முஸ்லிம்)

இவ்வாறாக...

- நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காபாவைப் புதுப்பித்துக் கட்டினார்கள்.

- பிறகு, குறைஷியர் காபாவை இடித்துவிட்டுப் புதுப்பித்துச் சுருக்கிக் கட்டினர்.

- பிறகு, ஹிஜ்ரி 64ல் மக்காவின் ஆட்சியாளாராக இருந்த  அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் காபாவை இடித்துவிட்டு ஹத்தீமை காபாவோடு இணைத்து விரிவாக்கிக் கட்டினார்கள்.

- பிறகு, ஹிஜ்ரி 74ல் மக்காவின் ஆட்சியாளராக இருந்த ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப், விரிவாகக் கட்டப்பட்டிருந்த காபாவில் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியை இடித்து நீக்கிவிட்டு குறைஷியர் கட்டியிருந்த அளவுக்குச் சுருக்கிக் கட்டினார்.

- இன்று இருக்கும் காபாவின் அமைப்பு, ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் கட்டியது. தற்போது புனித காபாவின் கட்டட அமைப்பு: சதுர வடிவம். இதற்குப்பின் மாற்றம் செய்வதை அறிஞர்கள் சிலர் விரும்பவில்லை. இதற்கு எடுத்துக்காட்டாக பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலாம்.

இறைநம்பிக்கையாளரின் தலைவர் ஹாரூன் அர்ரஷீத் அல்லது அவருடைய தந்தை மஹ்தீ, காபாவை இடித்துவிட்டு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் செய்த மாற்றத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து இமாம் மாலிக் (ரஹ்) அவர்களிடம் யோசனை கேட்டார். அதற்கு அவர்கள், ''இறைநம்பிக்கையாளரின் தலைவரே! இறையில்லம் காபாவை அரசர்களின் விளையாட்டுத் தலமாக ஆக்கி விடாதீர்கள். ஆளாளுக்கு அதை இடிக்க நினைப்பார்கள், இடித்தும் விடுவார்கள்'' என்று கூறினார்கள். எனவே ஹாரூன் அர்ரஷீத் அந்த முடிவைக் கைவிட்டார். (தஃப்ஸீர் இப்னு கஃதீர்)

{mosimage}காபா சிலமுறைகள் இடிக்கப்பட்டுக் கட்டப்பட்டிருந்தாலும் காபாவின் பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே கட்டப்பட்டிருக்கிறது. பழைய அஸ்திவாரத்தை விட்டு வெளியே கட்டப்படவில்லை. குறைஷியர் காபாவைச் சுருக்கி விட்டனர் என்பது பழைய அஸ்திவாரத்திற்குள்ளேயே சுருக்கிக் கட்டினார்கள். மேலும் ஹத்தீம் என்ற வளைந்த பகுதியை அப்புறப்படுத்திச் சுருக்கிக் கட்டினார்கள். அதனால் காபா இடம் மாற்றிக் கட்டப்படவில்லை! காபாவுக்குள்ளேயே காபா சுருக்கப்பட்டது இடம் மாறி காட்டியதாக ஆகாது. இன்றும் காபாவை வலம் வருபவர்கள் ஹத்தீம் - வளைந்த அரைவட்டப் பகுதியையும் சேர்த்து சுற்றி வருகிறார்கள். அருகிலுள்ள படம் காண்க.

மேலும்,

{mosimage}காபாவின் மேல் பகுதி முகடுகளைத் தாங்கி நிற்க காபாவின் உட்பகுதியில் மூன்று தூண்கள் நிறுவப்பட்டுள்ளன.

இப்போது இருக்கும் தரையை விட்டு சற்று மேல் பகுதியில் அமைந்த காபாவின் நுழைவாயில் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா (ரலி) அறிவிக்கும் செய்தியில்,

நான் நபி(ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, 'இது காபாவில் சேர்ந்ததா?' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் 'ஆம்!'' என்றார்கள். பிறகு நான் 'எதற்காக அவர்கள் இதனை காபாவோடு இணைக்கவில்லை?' எனக் கேட்டேன். அதற்கவர்கள் 'உன்னுடைய சமூகத்தாருக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் 'காபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதின் காரணம் என்ன?' எனக் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'தங்களுக்கு வேண்டியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்து விடுவதற்காகவுமே உன்னுடைய கூட்டத்தார் அவ்வாறு செய்தார்கள். 'உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும்' என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை காபாவினுள் இணைத்து அதன் கதவைத் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தால் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள். (புகாரி)

இன்றும் காபாவின் வாயில் கதவு தரையோடு இல்லாமல் சற்று உயரமான இடத்திலேயே அமைப்பட்டிருக்கிறது. காபாவின் நிர்வாகத்தினர் நாடினாலன்றி காபாவினுள் எவரும் செல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் காபாவினுள் நுழைந்து தொழ விரும்புபவர்கள் காபா புனித ஆலயத்தின் ஒரு பகுதியாகிய திறந்தவெளியாக இருக்கும் ஹத்தீம் எனும் அரைவட்டப் பகுதியில் நுழைந்து தொழுது கொள்ளலாம். இதுவும் காபாவைச் சேர்ந்ததுதான். மக்கள் ஹத்தீம் பகுதிக்குள் செல்வதை யாரும் தடுக்க மாட்டார்கள். இன்னும் இறுதி காலம்வரை, அல்லாஹ் நாடியவரை காபா இந்த நிலையிலேயே இருக்கும். (அல்லாஹ் மிக அறிந்தவன்)

(அல்குர்ஆன், மற்றும் ஹதீஸ் தொகுப்புகள், தப்ஸீர், திருக்குர்ஆனின் நிழலில் ஆகிய நூற்களிலிருந்து ஆதாரங்களைத் திரட்டி இத்தொடர் எழுதப்பட்டது.)

ஆக்கம்: அபூமுஹை

(தொடர் நிறைவடைந்தது)

< பகுதி 3

Trackback(0)
கருத்துக்கள் (14)add comment
0
haneefm:
பிஸ்மில்லாஹி ர்ரஹ்மான் னிர்ரஹிம் அன்பு சகோதரர் அபூ முஹை அவர்கலுக்கு இது போல இன்னும் பயனுள்ள ஆக்கங்களை[ தக்க ஆதரங்களுடன் பதிக்கவும்]என்னை போன்றவர்களுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் மேன்மேலும் உங்கள் ஆக்கங்கள் தொடர்ந்து வர வழ்த்துக்கள் ஹஃணிப்-குவைத்
1

September 01, 2007 05:47
0
அபூ ஸாலிஹா:
குதர்க்கமாக ஒரு வாசகர் பின்னூட்டம் ஒன்றில் காஅபத்துல்லாஹ் பற்றிக் கேட்டிருந்த கேள்விக்கு சிரத்தை எடுத்து முழு விபரங்கள் கொண்ட அழகிய தொகுப்பு ஒன்றை தொடராக அளித்த அபூமுஹை அவர்களுக்கும், தரத்துடன் இதனைப் பதித்திருக்கும் சத்தியமார்க்கம்.காம் தளத்தினருக்கும், மிக முக்கியமாக குதர்க்கக் கேள்வி எழுப்பிய அந்த சகோதரருக்கும் நன்றி! (அவர் கேட்டிராவிட்டால் இத்தகைய அருமையான விஷயங்கள் என்னைப் போன்றவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையே?) அன்புடன், அபூ ஸாலிஹா
2

September 01, 2007 07:17
0
இப்னுஷாஹ்:
அபூ முஹை அவர்களே!தங்களின் ஆய்வு மிகவும் அருமை.பிரமாதம்.ஜஸாகல்லாஹு கைரா.தங்களின் இப்படிப்பட்ட ஆழமிகு ஆய்வு ஆக்கங்கள் ''சத்திய மார்க்கத்தை''இன்னும் அலங்கரிக்கவேண்டும் என வாழ்த்துகிறேன்.மேலும் கஃபா சம்பந்தமாக ஒரு சில மேலதிக விபரங்களையும் எழுத ஆசைப்படுகிறேன்:ஹிஜ்ரி 1240ம் ஆண்டு வெள்ளத்தால் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது.அக்காலத்திலிருந்த அறிஞர்கள் அதை இடித்து விட்டு புதுப்பிக்க அனுமதி வழங்கினார்கள் எனவே மீண்டும் கட்டி நிறுத்தினார்கள்.பிறகு 1339ம் ஆண்டு ''உஸ்மானியா''கிலாஃபத் நடந்து கொண்டிருந்தபோது அப்போதைய கலீஃபா''சுல்தான் முராத்''ஆட்சியில் மிகப்பெரும் வெள்ளம் ஏற்பட்டு''கஃபா''சிதிலமடைந்தது.ஆனால் அப்போதைய அறிஞர்கள் மீண்டும் இடித்து விட்டு கட்ட எதிர்ப்பு தெரிவிக்கவே வேறு வழியின்றி''சுல்தான் முராத்''80 ஆயிரம் தீனார் முடக்கி, தங்கம் கொண்டு''பெல்ட்''உண்டாக்கி,அச்சுவரை பெல்ட் இட்டு நிறுத்தினார்.''அபீஸீனியாவைச்சார்ந்த மெலிந்த கால்களைக்கொண்ட மனிதர்கள் ''கஃபா''வை இடித்து பாழ்படுத்துவார்கள்''என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(அபூஹுரைரா(ரழி)புகாரி1591)''வெளிப்பக்கமாக வளைந்த கால்களைக்கொண்ட கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாக பிடுங்கி உடைப்பதை நான் பார்ப்பது போன்று இருக்கிறது''எனவும் நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்(இப்னு அப்பாஸ்(ரழி)புகாரி1595)''யஃஜூஜ் மஃஜூஜ் வந்த பிறகும்''கஃபா''வில் ஹஜ்,உம்ரா செய்யப்படும்.எப்போது ஹஜ்,உம்ரா செய்யப்படாமல் போகுமோ அப்போது மறுமை நாள் வந்து விடும் என ரஸூல்(ஸல்)அவர்கள் சொன்ன ஹதீஸ் புகாரியில் இடம் பெருகிறது. (1593)அறிவிப்பாளர்:அபூ ஸயீத் அல்குத்ரீ(ரழி)மேலும் அல்லாஹ்வே மிக அறிந்தவன்.தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.வஸ்ஸலாம்.
3

September 03, 2007 01:13
0
அபூ முஹை:
மதிப்பிற்குரிய ஷாஹ் மைந்தன் அவர்களே! உங்கள் தகவல்களுக்கும், வாழ்த்துக்கும் நிறைந்த நன்றிகள்! تاريخ كعبة - தாரீக் கஅபா என்று கனத்த வரலாற்று நூல் அரபியில் உண்டு. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் ஹிஜ்ரி 74ல் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுஃப் காபாவைக் கட்டிய சரித்திரக் குறிப்போடு கட்டுரை நிறைவு செய்யப்பட்டது. மேலும், காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி 2ல், அபீசீனியாவைச் சேர்ந்த கருப்பர்கள் காபாவை இடிப்பார்கள் என்ற (புகாரி) நபிமொழிகள் இடம் பெற்றிருக்கின்றன நன்றி!  
4

September 03, 2007 17:09
0
நம்பிராஜன்:
விளக்கமான ஆய்வுக்கட்டுரைக்கு நன்றி. காபாவின் உள்ளே இருக்கும் இந்த மூன்று சிலைகளையும்தான் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் வணங்குகிறார்கள் என்று என் ஆசிரியர் கூறினார். அதனை நீங்களும் நிரூபித்ததற்கு நன்றி நீங்கள் தூண்கள் என்று கூறுவது சிலைகள் என்று கூறுகிறார்களே. நடுவில் இருப்பது கபாலீஸ்வரர் என்றும் வலது புறம் இருப்பது உஷா என்றும் (உஜ்ஜா) இடது புறம் இருப்பது லதா (லத்) என்றும் கூறுகிறார்களே ? உண்மையா? இது கபாலீஸ்வரர் கோவில் என்பதால்தான் அது காபா என்றும் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்களே? நன்றி இது கபாலீஸ்வரர் கோவில் என்பதால்தான் அது காபா என்றும் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்களே? நன்றி
5

September 04, 2007 02:13
0
Jaffer:
NambiRajan, Just your statments proved how naturally you guys can change any TEXT according to your need. Just dont fool yourself.I just got irriatated as well as laughed at your stupidity.Some where I read you can guys can even interpretate Shakespeare as 'Seshu Iyer'.Dont show your cunningness here.Here is the place you can educate yourself as well as you can question your own belief.But thanks for reading it.Insha Allah you will be guided in straight path.
6

September 04, 2007 17:46
0
இறை நேசன்:
//காபாவின் உள்ளே இருக்கும் இந்த மூன்று சிலைகளையும்தான் உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் வணங்குகிறார்கள் என்று என் ஆசிரியர் கூறினார்.// எந்த மூன்று சிலைகள்? இந்த ஆக்கத்தில் காபாவின் உள்ளே எந்த சிலையும் இருப்பதாக குறிப்பிடப்படவில்லையே? பின்னர் 'இந்த மூன்று சிலைகள்' என நம்பிராஜன் அவர்கள் எந்த சிலைகளை குறிப்பிடுகிறார்? //அதனை நீங்களும் நிரூபித்ததற்கு நன்றி// மொள்ளமாரித்தனம் என்பது இது தானோ? சகோதரர் அபூ முஹை எங்கே காபாவினுள் சிலைகள் உள்ளன எனக் கூறியுள்ளார்? நம்பிராஜனின் அப்பட்ட புழுகில் சங்க்பரிவாரத்தனம் அப்பட்டமாக வெளிப்படுகிறது. //நீங்கள் தூண்கள் என்று கூறுவது சிலைகள் என்று கூறுகிறார்களே.// அப்படிக் கூறுங்கள்! இந்தியாவில் வந்தேறிய இரத்தவெறிப்பிடித்த சங்க் கூட்டத்தைப் பொறுத்தவரை தூண்கள் மட்டும் சிலைகள் அல்லவே! நடுரோடில் வாகாக ஒரு 'மைல்கல்' இருந்தால் கூட அதற்கும் குங்குமம் பூசி, சிலையாக்கி மக்களை முட்டாளாக்கி உண்டியல் நிரப்பித் தின்று கொழுக்கும் கயமைக் கூட்டத்திற்கு, தூண்கள் சிலைகளாக தோன்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஒருவேளை இதையும் வைத்து அவ்வாறு கல்லா கட்ட முடியவில்லையே என்ற ஆதங்கத்தைக் கொட்டியுள்ளது மட்டும் தெளிவாகப் புரிகிறது!   லாத், உஜ்ஜா வைத் தேடிய நம்பிராஜனுக்கு மனாத் என்ற பெயர் கிடைக்கவில்லையா? மனாத் எப்படி கபாலின்னு மாறிச்சுன்னும் அவருக்கு இதச் சொல்லிக் கொடுத்த ஆள்கிட்ட கேட்டுச் சொல்லலாமே!! //நடுவில் இருப்பது கபாலீஸ்வரர் என்றும் வலது புறம் இருப்பது உஷா என்றும் (உஜ்ஜா) இடது புறம் இருப்பது லதா (லத்) என்றும் கூறுகிறார்களே ? இது கபாலீஸ்வரர் கோவில் என்பதால்தான் அது காபா என்றும் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்களே?// யார் அவ்வாறு கூறுகிறார் என்பதை நம்பிராஜன் பெயர் குறிப்பிட்டு ஆதாரத்தோடு கூறினால் நன்று. //உஜ்ஜா-உஷா, லாத்-லதா, காபா-கபாலீசுவரர்// ஆகா என்ன அருமையான ஒப்புமைபடுத்தல். நம்பிராஜன் - மடராஜன் என நேரடியாக எந்த ஆதாரமும் இன்றியே ஒப்புமைபடுத்தலாம். ஆமா... மொத்த 'சங்'கும் இந்த மாதிரி டைப் தானா? தலையெழுத்து!
7

September 05, 2007 14:53
0
அபூ முஹை:
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை அணுவளவு கூட விளங்காத, சறுகிய விமர்சனமே நம்பிராஜனின் சிலை வழிபாடு விமர்சனம்! இஸ்லாம் உருவ வழிபாட்டிற்கு சாவு மணியடித்து சிலைகளையெல்லாம் அடித்து நொறுக்கக் கட்டளையிடுகிறது என்று ஒரு பக்கம் புலம்பிக்கொண்டே, மறுபுறம் காபாவெனும் இறையாலத்தில் சிலைவழிபாடு நடக்கிறது என்று மாறுபட்டக் கோணத்தில் அறிவீனர்களால் மட்டுமே விமர்சிக்க முடியும். மக்கா வெற்றியின் போது காபாவில் வைக்கப்பட்ட சிலைகள் அத்தனையையும் அப்புறப்படுத்தப்பட்ட பிறகே நபி (ஸல்) அவர்கள் காபாவில் நுழைகிறார்கள். அப்படிப்பட்ட சத்திய நபி போதித்த மார்க்கத்தில், அதுவும் உலகின் முதல் ஆலயத்தில் இன்று சிலைவழிபாடு நடக்கிறது என்று சொல்பவர் எவரும் பைத்தியக்காரனாகத்தான் இருப்பார். காபாவின் மேல் முகட்டைத் தாங்கி நிற்கும் மூன்று தூண்களை மூன்று சிலைகளாகக் கற்பனை செய்து அதை நோக்கியே உலக முஸ்லிம்கள் வணங்குகிறார்கள் என்று சொன்ன உங்களது ஆசிரியரும் அதை அப்படியே நம்பியராஜனும் மகா மூடர்களய்யா! உலக முஸ்லிம்கள் காபாவை முன்னோக்கி வணக்க வழிபாடு செய்வதற்கானக் காரணம், மனிதர்கள் வணங்குவதற்காக முதலில் அமைப்பட்ட இறையாலயத்தை நோக்கி இருக்க வேண்டும் அதுவே ஒரு ஒழுங்கு முறையாக இருக்கும் என்றே இன்று உலக முஸ்லிம்கள் அனைவரும் காபாவை முன்னோக்கித் தொழுகிறார்கள் அதுதான் இறையுத்தரவாகவும் இருந்தது. பார்க்க: காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? பகுதி-2. வணக்க வழிபாட்டில் முன்னோக்கும் திசையில் ஒருவர் காபாவின் திசை தெரியாமல் வேறு திசையை முன்னோக்கினாலும் அதனால் அவரின் வழிபாட்டில் எந்தக் குறைவும் ஏற்பட்டுவிடாது. திருநெல்வேலியிலிருந்து முக்கூடல் வழியாக கடையம் செல்லும் பாதையில் முக்கூடலைக் கடந்து செல்லும் வழியில் கபாலிப்பாறை என்ற பெயரில் ஓர் ஊர் உண்டு. இனி வரும் விமர்சனங்களில் மறக்காமல் கபாலிப்பாறையிலிருந்துதான் காபா என்ற பெயர் விளங்கியது என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்! சென்னை தோன்றிய பிறகுதான் கபாலீஸ்வரர் கோவில் தோன்றியது. ஆனால் மக்காவில் அமைந்த காபா எனும் இறையாலயம் வரலாற்று குறிப்புகள் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத மிகப் பழமையான இறையாலயம் என்பதை மதியீனர்களால் உணர முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை!
8

September 05, 2007 18:34
0
மு முஹம்மத்:
அன்பு சகோதரர் நம்பி ராஜன் அவர்களே தாங்கள் ஆத்திக நம்பிக்கை உடையவரா அல்லது நாத்திகரா என்பது தெரிய வில்லை. தாங்கள் ஆத்திகராக இருப்பீர் என்று நம்பி பின் வரும் கருத்துக்களை தங்கள் பார்வைக்கு வைக்கிறேன். இறைவன் மனிதனுக்கு பகுத்தறிவு கொடுத்துள்ளது எதையும் முறையாக ஆய்வு செய்து பகுத்தறிந்து ஏற்றுக் கொள்வதற்காகவே அன்றி , அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று யார் எதை சொன்னாலும் நம்புவதற்கல்ல. இது தான் சரி என்றால் எல்லோருக்கும் இறைவன் பகுத்தறிவு தர வேண்டிய அவசியமே இல்லை. உங்கள் ஆசிரியர் 2ம் 2ம் 5 என்றால் எப்படி நம்ப மாட்டீரோ அப்படி தான் எதையும் நம்ப வேண்டும். இந்த சாதாரண உதாரணம் தாங்கள் கொண்டுள்ள எந்த நம்பிக்கையும் அது நாத்திகமாக இருப்பினும் தங்கள் மனம் புண்படக்கூடாது எனும் நோக்கத்திலேயே தரப் பட்டுள்ளது, இல்லையேல் பல உதாரணங்களை தரலாம். ஆக சத்தியம் எது அசத்தியம் எது என்று நாம் முறையான ஆய்வாதாரங்கள் மூலம் ஆய்வு செய்து நம்ப கடமை பட்டுள்ளோம், ஒரே தாய் தந்தைக்கு பிறந்தவர்களும் உலக காரியங்களில் இந்த ஆய்வை செய்து தமது காரியங்களை செயல் படுத்தும் விதததில் மாறுபட்ட கருத்தை கொண்டவர்களாக இருப்பதை காணலாம். ஆனால் இது போன்ற நம்பிக்கை எனும் மிகவும் முக்கியமான நிலையான மறுமை எனும் மரணத்தின் பின்னர் வாழ இருக்கும் வாழ்க்கையை பற்றி முடிவு எடுக்கும் விஷயத்தில் முரண்பட்டு எதையாவது நம்பி செய்து மிகப்பெரும் இழப்புகுரியவர்களாகி விடுகிறார்கள். சகோதரர் நம்பிராஜன் அவர்களே உங்கள் ஆய்வை விரிவு படுத்தி பரந்த மனப்பானமையுடன் தூய எண்ணத்துடன் சத்தியத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன் அது தான் உங்க்களுக்கு நல்லது. இது போன்று அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையாவது நம்பினால் மிகப் பெரிய இழப்புக்கு ஆளாகிவிடுவீர்கள்.இப்போக்கை கைவிட்டு விடுங்கள். முறையாக உங்கள் நம்பிக்கையை மாற்ற முனையுங்கள் இறைவன் உங்களுக்கு அருள் புரிந்து நம்பிராஜனாகிய உங்களையும் மன்னித்து வாரலாற்றில் தங்களைப் போன்றவர்கள் பலரை மாற்றிய இறைவன், முறையான நம்பிக்கையாளராக உங்களையும் ஆக்கலாம். தங்கள் நலன் நாடும் தங்கள் அன்பு சகோதரன்
9

September 06, 2007 03:50
0
muslimeen:
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் சரியாகச்சொன்னீர்கள் இறைநேசன்.சங்க்பரிவாரங்கள் நடத்தும் பள்ளிக்கூடங்களில் இதைத்தான் போதிக்கின்றார்கள்.வரலாற்றுப்புரட்டன் ஓக் என்பவன் எழுதிய நூல்தான் இவர்களது ஆதாரம்.பாபர் மஸ்ஜித் விவாகரத்திலும் வரலாற்றுப்புரட்டுகளைத்தான் இவர்கள் நம்புகிறார்கள்.சங்க்பரிவாரைப்பொறுத்தவரை பொய்களை வரலாறாக காண்பிப்பார்கள், அதை பொய்யென நிரூபித்தால் நம்பிக்கைக்கு ஆதாரம் தேவையில்லை என்பார்கள்.
10

September 06, 2007 06:17
0
அதி. அழகு:
'ரகு(ராமன்)வுக்குத் தண்ணி காட்டிக் கொண்டே ஓடிய மானைப் பிடிக்க ஓடியவன் ரகுமான்' என்று உங்களுடைய ஆ(சி)ரியர் சொல்லிக் கொடுத்ததை எழுத மறந்திட்டிங்களே! ஆ(சி)ரியரை நம்பின ராஜா! இறைநேசனிடம் மாட்டிட்டீங்களா? கூப்புட்டு, ஒக்கார வச்சு, அவர் 'அன்பா' அடிப்பார்; பரவயில்லையா?
11

September 06, 2007 10:50
0
haneefm:
அன்புள்ள சத்தியமார்க்கம்.காம் ஆசிரியர் குழுவினருக்கு, இந்தத் தளத்தில் அழகனா ஆக்கங்களும் அதில் தோன்றும் சந்தேக கேள்விகளும் அதற்கேற்ற விளக்கங்களும் தரப்படுகின்றது. இன்னும், கேலியாக கேட்கும் கருத்துக்களை ஆய்வு செய்து அல்லது [விலக்கினாலும்]சத்தியமார்க்கத்தில் பதிவு செய்தால் வீணான கேளிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்பது என் கருத்து. ஹஃணிப்-குவைத்
12

September 07, 2007 12:00
0
அபூ முஹை:
சகோதரர் haneefm, அவர்களுக்கு முஸ்லிம்களை நிலைகுலையச் செய்வதற்காகவே சிலர் இதுபோன்ற ஆதாரமற்ற கேலியான விமர்சனங்களைத் தொடுக்கிறார்கள். அதற்குப் பதிலடி கொடுக்க வேண்டுமேயல்லாது பதுங்கக்கூடாது, விமர்சனத்தையும் பதுக்கவும் கூடாது. விமர்சனம் தரங்கெட்டு கண்ணியமில்லாமல் இருந்தால் தவிர. நீங்கள் பார்த்தீர்களல்லவா! காபாவின் உள்ளே முகட்டைத் தாங்கிக்கொள்ள மூன்று தூண்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன என்று படம் போட்டுக்காண்பித்தும் தூண்களை சிலைகள் என்று நையாண்டி செய்தவரை விட்டுவிடவாச் சொல்கிறீர்கள்! அறிவற்றவருக்கு பாடம் புகட்ட வேண்டாமா? நபி (ஸல்) அவர்களை யூதர்கள் செய்த கேலியை விடவா இன்றைய இஸ்லாத்தின் எதிரிகள் செய்து விடப்போகிறார்கள்? அஸ்ஸலாமு அலைக்கும் என்பது அழகிய முகமன் வாழ்த்து. இதைச் சற்று மாற்றி நபி (ஸல்) அவர்களை நோக்கி ''அஸ்ஸாமு அலைக்கும்'' (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று யூதர்கள் கேலியாகச் சொல்கிறார்கள். உத்தம நபி (ஸல்) அவர்கள் இது கேலிதானே என்று விலகிவிடவில்லை! மாறாக, ''வஅலைக்கும்'' (அவ்வாறே உங்களுக்கும் உண்டாகட்டும்) என்று கூறுகிறார்கள். (புகாரி- 6024, 6030, 6256, 6395, 6927. முஸ்லிம்- 4373, 4374) இந்த ஹதீஸில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அஸ்ஸாமு அலைக்கும் என்று சொன்ன யூதர்களின் விஷமத்தைப் புரிந்த கொண்டு, ''அலைக்குமுஸ் ஸாமு வல்லஅனா'' (உங்களுக்கு மரணமும், சாபமும் உண்டாகட்டும்) என்று கூறுகிறார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய அதிகமான வார்த்தைகள் தான், நபி (ஸல்) அவர்களால் கண்டிக்கப்படுகிறது. என்பதை கவனத்தில் கொள்க! அதனால் நம்மை நோக்கி எறியும் விமர்சனங்கள், அது கேலியாகவே இருந்தாலும் ''வ அலைக்கும்'' என்றாவது பதில் சொல்ல வேண்டும். புரிந்து கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன் நன்றி!
13

September 07, 2007 20:40
0
Ashik:
ஸலாம், மற்ற மதத்தினர் ஏன் இறைவனின் பள்ளிக்கு வர அனுமதி இல்லை. எனக்கு தெரியும் ஆனால் தகுந்த ஆதாரத்தொடு நான் என் நண்பர்களுக்கு எடுத்து சொல்லனும்.
14

September 12, 2008 12:45

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:149 ஆகவே (நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை-அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பாராமுகமாக இல்லை.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு தொகுப்பு தொடர்கள் இஸ்லாம் காபா இடம் மாறிக் கட்டப்பட்டிருக்கிறதா? (பகுதி-4)
Twitter
RSS
YouTube
English