| மிஃராஜ் தரும் படிப்பினைகள்...! (பகுதி 2) |
|
|
| தொடர்கள் - இஸ்லாமிய தொடர்கள் | |||||||
| செவ்வாய், 14 ஆகஸ்டு 2007 12:48 | |||||||
|
மிஃராஜை நினைவு கூரும் போது என்ன தான் அந்நாளில் செய்ய வேண்டும் என்கிற கேள்வியோடு முதல் பகுதியை நிறுத்தியிருந்தோம். இதற்கு மிஃராஜின் பொழுது என்னென்ன சம்பவங்கள் நடந்தன என்று நபி(ஸல்) கூறும் அச்சம்பவத்தில் தெளிவான வழிகாட்டுதல் உள்ளது.
மிஃராஜின் பொழுது நடந்த முக்கிய சம்பவங்கள் என்னென்ன என்று பட்டியல் போடுவோமானால் கீழ்க்கண்டவற்றை சொல்லலாம்: 1. நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்கு தொழுகை நடக்கின்றது. 2. நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள். 3. சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது. 4. நரகில் அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை காட்டப்படுகின்றது. 5. திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்கு செவிகொடுத்து இறைவனால் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்படுகின்றது.
படிப்பினைகள் என எடுத்துக்கொள்ள வேண்டுமெனில், மேற்கண்ட ஐந்து நிகழ்ச்சிகளை குறிப்பிடலாம்.
இதில் ஒவ்வொன்றும் ஒரு நீண்ட வழிகாட்டுதலை இச்சமூகத்திற்கு வழங்குகின்றது. அதனை ஒவ்வொன்றாக மிகச் சுருக்கமாக இங்கு காணலாம்.
1. நபி(ஸல்) அவர்கள் மஸ்ஜித் அல்-ஹராமிலிருந்து மஸ்ஜத் அல்-அக்ஸாவிற்கு அழைத்துச் செல்லப்படுகின்றார்கள். அங்கு அவர்கள் தலைமையில் நபிமார்களுக்கு தொழுகை நடக்கின்றது.
ஒரு பயணத்தின் துவக்கம் எவ்விதம் அமைய வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டலாக மிஃராஜின் துவக்க நிகழ்வான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்த இத்தொழுகையினைக் குறிப்பிடலாம். மிஃராஜின் இறுதியில் தான் முஸ்லிம்களுக்கு 5 வேளை தொழுகை கடமையாக்கப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். “ஒருவன் எந்த நோக்கத்திற்காக பயணம் செய்கின்றானோ அவன் அந்நோக்கத்தை பெற்றுக் கொள்கின்றான்”, “பிரயாணியின் பிரார்த்தனையை இறைவன் அங்கீகரிக்கின்றான்” என்ற நபி மொழிகளை இங்கு நினைவுகூர்தல் சிறப்பானதாகும்.
ஒரு பயணத்தின் நோக்கம் பூர்த்தியடைய இறை வணக்கத்தைக் கொண்டு அப்பயணத்தை துவங்குதல் சிறப்பானது என்பது இங்கு உணர்த்தப்படுகின்றது. அதேவேளை நபி(ஸல்) அவர்களின் இந்த மிஃராஜ் பயணத்தின் போது அனைத்து நபிமார்களுக்கும் தலைமை ஏற்று நபி(ஸல்) அவர்களால் நடத்தப்பட்ட இத்தொழுகை தற்பொழுது உலக முஸ்லிம்களின் கிப்லாவான மஸ்ஜித் அல்-ஹராமில் நடக்காமல், முதல் கிப்லாவான மஸ்ஜித் அல்-அக்ஸாவில் நடந்தது கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.
அனைத்து நபிமார்களும் இவ்வுலகில் ஒரே இடத்தில் கூடிய சிறப்பை வல்ல நாயன் ஒரு பள்ளிவாசலுக்கு கொடுக்கின்றான் எனில், அப்பள்ளிவாசல் இறைவனிடத்தில் எத்தகைய சிறப்புக்குரியதாக இருக்கும் என்பதை தனியாக கூறிப் புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பகால முஸ்லிம்களின் கிப்லாவாக (தொழுகையில் முன்னோக்கப்படும் திசை) இருந்த பைத்துல் முகத்தஸ் என்ற மஸ்ஜித் அல்-அக்ஸாவிலிருந்து கிப்லாவை இன்றைய மஸ்ஜித் அல்-ஹராமிற்கு (கஃபா ஆலயம்) இறைவன் மாற்றியது நபி(ஸல்) அவர்களின் பிரார்த்தனையினாலாகும். அதுவரை முஸ்லிம்களாக வேடமிட்டு நபி(ஸல்) அவர்களையும் முஸ்லிம்களையும் ஏமாற்றிக் கொண்டிருந்த யூதர்களை மக்களுக்கு அடையாளம் காண்பிக்க இக்கிப்லாமாற்றம் பெருந்துணையாக இருந்தது.
கிப்லாவாக இருந்த பைத்துல் முகத்தஸ் மாற்றப்பட்டிருப்பினும் இறைவனிடத்தில் அதற்கு இருக்கும் மகத்துவத்தையும், முக்கியத்துவத்தையும் தெளிவாக மக்களுக்கு எடுத்தியம்பும் ஒரு நிகழ்ச்சியாகவே மிஃராஜின் பொழுது நடந்த இத்தொழுகை நிகழ்ச்சியைக் கருத முடிகின்றது.
இதன் காரணத்தாலேயே அன்று முதல் இன்று வரை ஃபலஸ்தீனத்தில் நிலைகொள்ளும் இறையில்லமான இந்த பைத்துல் முகத்தஸிற்காக ஆயிரமாயிரம் முஃமின்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து வருகின்றனர்.
இந்தியாவில் 400 ஆண்டு கால பழமை வாய்ந்த பாபரி மஸ்ஜிதை தகர்த்த சங் பரிவாரத்திற்கு எதிராக இன்று அணி திரண்டு, அதே இடத்தில் பாபரி மஸ்ஜிதை கட்டியெழுப்பவும் மீண்டும் இதுபோன்ற அக்கிரமங்கள் நடக்காமல் தடுக்கவும் போராட முன் வந்திருக்கும் இந்திய முஸ்லிம்கள் ஒரு கணம் பைத்துல் முகத்தஸின் இன்றைய நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஆரம்பகாலங்களில் உமர்(ரலி) அவர்கள் ஆரம்பித்து பிற்காலத்தில் ஸலாஹுத்தீன் அய்யூபி வரை பைத்துல் முகத்தஸிற்காக மிகப்பெரும் தியாகங்களை செய்தது எதற்காக? இறைவனிடம் இத்தனை மகத்துவமும், சிறப்பும் பெற்ற பைத்துல் முகத்தஸை இறை விரோதிகளிடம் எப்படி விடுவது என்ற ஒரே காரணமன்றி வேறு என்ன இருக்க முடியும்?
அன்று இஸ்லாத்தின் வீரச் செம்மல்களான இவர்களால் துவங்கப்பட்ட பைத்துல் முகத்தஸிற்கான இவ்வீர போராட்டம் இதோ இன்றைய அதிநவீன நூற்றாண்டிலும் மிக வீரியத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எகிப்திலும், ஃபலஸ்தீனும் உள்ள இஸ்லாமிய வீரர்கள் இதனை தீரத்துடன் செய்து வருகின்றனர். சமீபத்தில் மீள்பார்வை இதழில் வெளியான இது தொடர்பான ஓர் கட்டுரையை இவ்விடத்தில் மறுவாசிப்பு செய்வது மெத்த பொருத்தமாக இருக்கும்.
இவ்வாறு இஸ்லாமிய வரலாற்றின் ஆரம்பகட்டத்திலிருந்து பைத்துல் முகத்தஸ் இஸ்லாமிய உலகோடு பின்னிப்பிணைந்தே காணப்படுகின்றது. முஸ்லிம்களின் இரத்தத்தோடு கலந்த உணர்வு என்று கூறும் அளவிற்கு பைத்துல் முகத்தஸ் இன்று இஸ்லாத்தின் நிலைநிற்பிற்கான காரணியை போன்று முக்கியத்துவம் பெற்றதன் காரணத்தை மிஃராஜின் தொழுகை நிகழ்ச்சி தெளிவாக வெளிப்படுத்துகின்றது.
நபி(ஸல்) அவர்களின் மிஃராஜ் பிரயாணத்தின் மூலம் முஸ்லிம்களுக்கு கிடைக்க வேண்டிய உணர்வு இவ்வாறிருக்க, இன்று மிஃராஜ் நினைவு கூர்தல் என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பிரயாணத்தில் பயன்பட்ட புராக் என்ற வாகனத்திற்கு ஒரு வினோத உருவம் கொடுத்து, சிறு பிள்ளைகள் தங்களுக்குப் பிடித்த பொம்மைகள் கிடைக்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சியை போன்று அதனை வீட்டில் வைத்துக் கொண்டு பூரிப்படைவதில் என்ன பிரயோஜனம் இருக்கின்றது? இன்று உலகில் இறைவனிடம் மிகப்பெரும் மதிப்பு வாய்ந்த அந்த இறை இல்லத்திற்காக, நபி(ஸல்) அவர்கள் முதல் இவ்வுலகில் அதற்கு முன்னர் வந்துள்ள அனைத்து நபிமார்களும் ஒருங்கே ஒரே நேரத்தில் கூடி தொழுத சிறப்பு வாய்ந்த இஸ்லாமிய சமூகத்தின் இதயநாடியான மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஒரு கூட்டம் முஸ்லிம் சகோதரர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்து தியாகம் செய்து கொண்டிருக்கும் வேளையில், கையில் புராக் என்ற பெயரில் ஒரு வினோதப் படத்தை வைத்துக் கொண்டு “மிஃராஜ் நினைவு கூர்தல்” எனத் தங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் முஸ்லிம்களின் மற்றொரு சாராரை நினைத்து பரிதாபப்படுவதை தவிர வேறு ஒன்றும் சொல்ல இயலவில்லை.
யூதர்களின் சூழ்ச்சிகளுக்கு எதிராக குடும்பம் குடும்பமாக தங்கள் இன்னுயிரை மஸ்ஜித் அல்-அக்ஸாவிற்காக ஈந்து கொண்டிருக்கும் அந்த ஷஹீத்களின் போராட்டங்களுக்கு எதிராக யூதர்களுக்கே, முஸ்லிம் சமூகத்தின் புராக் என்ற பெயரில் பட ஆராதனைச் செயல்களும், சடங்குகளும் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத வணக்கங்களும் துணையாக இருக்கும் என்பதை இச்செயல்களில் ஈடுபடும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் உணர வேண்டும்.
2. நபி(ஸல்) அவர்கள் நபிமார்கள் அனைவரையும் சந்தித்து ஸலாம் கூறி நலம் விசாரிக்கின்றார்கள். மிஃராஜ் பயணத்தின் மற்றுமோர் அரிய படிப்பினையாக நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த இந்நிகழ்வைக் குறிப்பிடலாம். இவ்விடம், “முஃமின்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்களாவர்……..”, “ஸலாத்தினை கொண்டு சமாதானத்தைப் பரப்புங்கள்”, “நலம் விசாரித்தலும், சலாம் கூறலும் ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு செய்ய வேண்டிய கடமைகளாகும்” என்பன போன்ற நபிமொழிகள் நினைவு கூரத்தக்கது.
இறைவனின் அருளுக்கு பாத்திரமான இஸ்லாமிய சமூகம் இன்று உலகில் சந்திக்கும் பிரச்சனைகள் அனைத்திற்குமான அடிப்படைத் தவறு இங்கே இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.
சகோதரத்துவத்தை தலையாய கடமையை போன்று வலியுறுத்தும் இஸ்லாத்தில் இருந்து கொண்டு மூச்சுக்கு முன்னூறு தரம் ஒற்றுமை, சகோதரத்துவம் என வாய், கை வலிக்க பேசவும் எழுதவும் செய்யும் இன்றைய இஸ்லாமியத் தலைவர்களிடையே, அவர்கள் ஒரே கொள்கை, கருத்து, சிந்தனையில் இருந்தாலும் கூட ஒருவொருக்கொருவர் குறைந்தபட்சம் ஸலாம் மட்டுமாவது சொல்லிக் கொள்கின்றார்களா என்றால் இல்லை என்கிற துர்பாக்கிய நிலையைக் காண்கிறோம்.
ஒருமுறை சென்னை மண்ணடியில் உள்ள ஒரு பள்ளிவாசலில், துவக்கத்தில் ஒரே சிந்தனையில் ஒரே இடத்தில் பயிற்சி பெற்று பின்னர் வெவ்வேறு இயக்கங்களாக பரிணமித்த இருபெரும் சமூக தலைவர்கள் ஒரு ஜும்ஆ தொழுகையின் பொழுது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இது கூட சமூகத்தின் மீது அக்கறை கொண்ட சில நல்ல உள்ளங்களின் முயற்சியினால் முன்னெடுக்கப்பட்ட சம்பவமே. ஆனால், நடந்தது என்ன? தொழுகை முடிந்து இருவரும் வெளியேறும் இடத்தில் ஒருவொருக்கொருவர் நேரில் சந்தித்துக் கொண்ட பொழுது குறைந்த பட்சம் ஒரு சலாம் கூட கூறிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் அவரவர், அவரவர் வழியில் பிரிந்து சென்றனர்.
இவ்வுலக நன்மையில் மட்டும் நாட்டம் வைத்து, மேடைகளிலும், பத்திரிக்கைகளிலும் சரமாரியாக ஒருவர் மீது ஒருவர் அநாகரிக வசைமாரி பொழிந்து கொண்டு, நாட்டு மக்களின் சொத்தை கொள்ளையடிப்பதில் மட்டும் கவனமாக ஒன்று சேர்ந்து போட்டி போடும் அரசியல் கட்சி தலைவர்கள் கூட, நேரில் சந்திக்கும் பொழுது ஒரு மரியாதைக்காகவாது நலம் விசாரித்துக் கொள்கின்றனர். இந்த ஒரு சாதாரண நாகரீகச் செயலை கூட இத்தலைவர்களிடம் காணமுடிவதில்லை. இது தான் இவர்கள் கற்ற இஸ்லாமிய பழக்க வழக்கங்களா?
“சகோதரர்கள் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக்கூடாது என்பதும், முதலில் சலாமுக்கு யார் முந்திக் கொள்கின்றார்களோ அவர்களே அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்” என்பதும் இவர்கள் தானே இச்சமுதாயத்திற்கு மேடையில் பேசிப் புரிய வைத்தார்கள்?. இப்படிப்பட்டவர்கள் ஒற்றுமை, சகோதரத்துவம் எனக் கூறி யாரை ஏமாற்றப் பார்க்கின்றார்கள்?. இவர்களால் சமூகத்திற்கு என்ன பயன் விளைந்திட முடியும்?.
இஸ்லாம் தனது ஒவ்வொரு வழிகாட்டுதலிலும் இது போன்று சகோதரத்துவத்தையும் அதனை பேணுவதன் அவசியத்தையும் வலியுறுத்தும் பொழுது, அதனை போதித்து சமூகத்தை ஒற்றுமைபடுத்தி வழிகாட்ட வேண்டிய தலைவர்கள் இவ்வாறு ஒவ்வொரு திசையில் சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு இருக்க, சமூகத்தின் ஒரு பகுதி மக்களோ, சகோதரத்துவத்தை வளர்க்கும் விதத்தில் நினைவுகூர வேண்டிய இதுபோன்ற இஸ்லாமிய நிகழ்வுகளில் ஒருவொருக்கொருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி யார் வழிகெட்டவர், யார் நேர்வழி பெற்றவர் என்ற ஆராய்ச்சி செய்து கொண்டு திரிகின்றனர். மிஃராஜ் பயண நிகழ்ச்சி மனதில் எழும் பொழுதே நபி(ஸல்) அவர்கள் சந்தித்த நபிமார்களுக்கு ஸலாம் கூறி நலம் விசாரித்த சம்பவம் நினைவில் வந்து உடனடியாக, தான் அதுவரை பேசாமல் இருந்து கொண்டிருக்கும் சகோதரரை அழைத்து நலம் விசாரித்து சலாம் கூற வேண்டாமோ?
3. சுவர்க்கத்தின் மகத்துவம் காட்டப்படுகின்றது.
நபி(ஸல்) அவர்களின் மிஹ்ராஜ் நிகழ்வின் பொழுது ஏழு வானம் கடந்த உடன் முதலில் அவர்களுக்கு சுவர்க்கத்தின் காட்சிகள் காண்பிக்கப்படுகின்றன. இது இஸ்லாமிய வழிகாட்டுதலின் சிறப்பான ஓர் அடிப்படையாகும்.
இஸ்லாம் எதையும் நன்மையிலிருந்தும், நல்ல விஷயங்களிலிருந்தும் ஆரம்பிக்க கூறுகின்றது. இதனை திருக்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் உற்று நோக்குபவர்களுக்கு எளிதாக விளங்கும். இஸ்லாம் நன்மையை ஏவித் தீமையை தடுக்க கூறுகின்றது. அதாவது தீமையைத் தடுத்து விட்டு நன்மையை ஏவ கூறவில்லை. இரண்டையும் ஒருங்கே செய்ய வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் தீமையைத் தடுக்கும் பொழுது நன்மைக்கான வழிகாட்டுதலைக் கொடுத்துத் தீமையைத் தடுக்கக் கூறுகின்றது. அதே போன்றே ஒரு விஷயத்தைக் குறித்து அறிவுரை கூறும் பொழுது முதலில் நல்ல விஷயங்களை பேசி அதில் ஆர்வமூட்டிக் கொண்டு பின்னர் தீமைகளையும், தவறுகளையும் குறித்து பட்டியலிட்டு அதிலிருந்து தவறுவதால் விளையும் கேடுகளை விவரிக்கின்றது. இது போன்றே சுவர்க்கம் நரகம் விஷயத்திலும் இஸ்லாம் செய்கின்றது.
நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையின் ஆரம்ப காலகட்டங்களில் அவர்களின் செயல்திட்டம் முதலில் மக்களை நன்மையை நோக்கி அழைப்பதிலேயே குறியாக இருந்தது. நன்மையை – இஸ்லாத்தை நோக்கிய அழைப்பிற்கான அவசியத்தைக் குறித்து விவரிக்கும் பொழுது இஸ்லாத்தை விட்டு இருப்பதால் விளையும் தீமைகளை விவரிக்கும் நரகத்திற்குரிய வசனங்கள் இறங்கின. சாதாரணமாகவே ஒருவிஷயத்தைக் குறித்து மக்களிடம் பேசும் பொழுது முதலில் நல்ல விஷயங்களுடன் ஆரம்பிக்கும் பொழுது, அதில் மக்களின் கவனம் முழுமையாக திரும்பும். இந்த வகையில் முதலில் சுவர்க்கத்தின் வளங்கள் காண்பிக்கப்பட்டு பின்னர் நரகத்தின் கொடுமைகள் நபி(ஸல்) அவர்களுக்கு காணிபித்துத் தரப்பட்டன.
சுவர்க்க, நரக காட்சிகள் நபி(ஸல்) அவர்களுக்கு காண்பிக்கப்பட்டது மிஃராஜ் பயணத்தின் மூலம் இச்சமூகத்திற்கு இறைவன் அறிவித்துக் கொடுக்கும் மிகப்பெரிய அத்தாட்சியாகும். கண்களால் காணாமல் வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சுவர்க்கம், நரகத்தை நம்பி இஸ்லாத்தை ஏற்றிருக்கும் முஸ்லிம்களுக்கும், இதெல்லாம் நடக்கக்கூடிய காரியமா என விட்டேற்றியாக நம்பாமல் இருக்கும் மற்ற மக்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்கு நேரில் அவற்றை காண்பித்துக் கொடுத்து அவை எதுவும் பொய்களல்ல; அனைத்தும் உண்மைகளே என ஆணித்தரமாக எடுத்துக்கூறி மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர இறைவன் செய்த மிகப்பெரும் அற்புதம் தான் இந்நிகழ்ச்சியாகும். இதன் மூலம் நம்பிக்கை கொண்டவர்கள் இன்னும் நம்பிக்கையில் அதிகம் உறுதிபடவும், அங்கும் இங்குமாக அலைபாய்ந்து கொண்டிருப்பவர்கள் இஸ்லாத்தை உறுதியாக நம்பவும், நிராகரித்துக் கொண்டிருப்பவர்களுக்கு அதன் உண்மை நிலையை எடுத்துக் கூறி அதற்கு சாட்சியாக இருந்து கொண்டு அவர்களை இஸ்லாத்தில் அழைக்கவும் இறைவன் செய்த மகத்தான காரியமே இந்நிகழ்வாகும்.
எனவே இஸ்லாத்தின் கொள்கைகளை உறுதிப்படுத்தி மேலும் வீரியத்துடன் மக்களிடையே சுவர்க்கம், நரகத்தின் உண்மை நிலையினை விளக்கிக் கூறி இஸ்லாத்தை எடுத்துச் செல்ல ஊக்கம் வழங்கும் இச்சிறப்பு மிகு மிஃராஜ் சம்பவத்தின் பெயரைக் கூறிக் கொண்டு, இஸ்லாம் காட்டித்தராத அனாச்சாரங்களைச் செய்து கொண்டிருப்பது எவ்வகையில் இறைவனிடத்தில் பொருத்தத்திற்குரிய செயலாகும் என்பதை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் சிந்திக்க வேண்டும்.
4. நரகில் அனாதைகளின் சொத்தை உண்டவன், வட்டி வாங்கியவன், விபச்சாரம் செய்தவன் இவர்களின் கோர நிலை காட்டப்படுகின்றது.
மிஃராஜ் நிகழ்வில் இச்சமூக மக்களுக்கு செய்யும் தீமைகளினால் விளையக் கூடிய மிகக் கொடிய தண்டனைகளை குறித்து ஆதாரத்துடன் கூறும் வகையில் நபி(ஸல்) அவர்களுக்குக் காட்டப்பட்ட நரகக்காட்சிகள் அமைந்துள்ளன. அதிலும் குறிப்பாக அனாதைகளின் சொத்துக்களை அநியாயமாக அபகரித்து உண்டவர்கள், மக்களின் உழைப்பை அநியாயமான முறையில் வட்டி மூலம் உண்டவர்கள் மற்றும் விபச்சாரம் செய்து கொண்டிருந்தவர்கள் அனுபவிக்கும் தண்டனைகளை மட்டும் குறிப்பாக எடுத்துக் காட்டியதிலிருந்து இம்மூன்று பாவங்களும் இறைவனிடத்தில் எவ்வளவு வெறுப்புக்குரிய செயல்கள் என்று அறியமுடிகின்றது.
உண்மையிலேயே இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்று, இறைவனின் மீதும் இறை மார்க்கத்தின் மீதும் அதீத அன்பு வைத்துள்ளவன் ஒரு போதும் இத்தகைய பாவங்களைச் செய்யலாகாது என்பதைத் தனியாக எடுத்துக் கூறி உணர்த்தும் வகையிலும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
உலகில் இன்று வட்டியின் மூலம் கொழுக்கும் முதலாளிகள் ஒரு பக்கம் பெருகிச் செல்ல அதனால் இருக்கும் வசிப்பிடம் கூட இல்லாமல், உண்பதற்கு உணவில்லாத நிலையில், பல குடும்பத்தினர் தற்கொலை செய்து கொள்ளுதல் சர்வ சாதாரணமாக நடந்து வருகின்றது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில், வங்கியிலிருந்து வாங்கிய கடனை அடைக்க இயலாமல் குடும்பத்தோடு மாண்டு போன ஏழை விவசாயிகள் ஏராளம். ஒருசில நாட்களுக்கு முன்னர் கூட வட மாநிலம் ஒன்றில் “இந்திய வங்கி”யிலிருந்து வாங்கிய கடனை குறிப்பிட்ட தினத்தில் அடைக்க இயலாமல் வங்கியினர் கொடுத்த கொடும் தொல்லை தாங்க முடியாமல் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இவ்வாறு இன்று மக்களை ஆளும் அரசாங்கமே வட்டியை ஏழை மக்கள் மீது சுமத்தி அவர்களை கூட்டம் கூட்டமாக கொலை செய்து கொண்டு வருகின்றது.
“தன்னைச் சுற்றி ஓர் அநியாயம் நடக்கக்கண்டால் அதனை கையால் தடுக்க வேண்டும்; இயலவில்லை எனில் அதனை வாயால் தடுக்க வேண்டும்; அதற்கும் இயவில்லையேல் விட்டு ஒதுங்கி விட வேண்டும்; இது ஈமானின் கடைசி நிலையாகும்” என்ற எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்று மனதில் ஏற்றிருக்கும் இந்நடுநிலை சமுதாயம், இந்த அநியாயங்களைக் கண்டு எதிர்த்து போராடி அவைகளைக் களையவும், அப்பாவிகளைக் காக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு முனைய வேண்டிய இவ்வுயர்ந்த சமுதாய அங்கங்கள் குறைந்த பட்சம், அப்படிப்பட்ட அநியாயத்திலிருந்து ஒதுங்கி ஈமானின் கடை நிலையிலாவது வாழ்கின்றதா? என்பதை உற்று நோக்கினால் அதிர்ச்சியே மேலோங்குகிறது.
வட்டியின் கொடுமையையும், அதனால் விளையும் கெடுதியையும் உணர்த்தும் இந்த மிஃராஜ் சம்பவத்தை காரணம் வைத்து பல்வேறு இஸ்லாம் காட்டித்தராத சம்பவங்களை செய்ய முன்வரும் இஸ்லாமிய சகோதரர்கள், மிஃராஜ் சம்பவம் உண்மையிலேயே தரும் படிப்பினையான வட்டிக்கு எதிராக போராடும் சிந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து அதற்காக உழைக்க முன்வருவார்களா?
5. திரும்பும் வழியில், நபி(ஸல்) அவர்களின் தொடர் கோரிக்கைக்கு செவிகொடுத்து இறைவனால் ஐவேளை தொழுகை கடமையாக்கப் படுகின்றது.
இச்சம்பவத்தில் இரு விஷயங்கள் இச்சமூகத்திற்கு உணர்த்தப்படுகின்றது. ஒன்று தினசரி 5 வேளை தொழுகை கட்டாயக் கடமை என உணர்த்தப்படுகின்றது. அது தினசரி 50 வேளையாக இருந்தது இறைவனின் மிகப்பெரும் கருணையினால் குறைக்கப்பட்டது என்பதும் தெளிவிக்கப்பட்டுள்ளது. மற்றொன்று இறைவனிடம் கேட்பதற்கு எவ்வித வரம்பும் இல்லையெனவும், என்ன கேட்டாலும், எவ்வளவு முறை கேட்டாலும் முகம் சுளிக்காமல் வாரி வழங்கும் மிகப்பெரும் கொடையாளன், அன்பு உள்ளம் படைத்தவன் தான் இவ்வுலக இறைவன் எனவும், அவ்வாறு கேட்பவர்களுக்கு நிச்சயம் வல்ல நாயன் பதிலளிக்கின்றான் என்பதையும் ஆதாரத்துடனும் இங்கு சுட்டி உணர்த்தப்படுகின்றது.
“இன்னும் நான் குறைக்கக் கேட்டிருந்தால் வல்ல இறைவன் குறைத்திருப்பான் என்றும், ஆனால் அதற்கு மேல் குறைத்துக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்தது; எனவே திரும்பி விட்டேன்” என எம்பெருமானார்(ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும், இதை ஐந்து வேளையாகக் குறைத்தாலும் இதை ஒவ்வொரு நாளும் ஐவேளையும் முறையாகக் கடைபிடிப்பவர்களுக்கு அதே ஐம்பது வேளை தொழுகையின் நன்மையளிப்பேன் என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்தும், பிரார்த்தனை செய்வதன் முக்கியத்துவமும்,கேட்பவர்களை வெறும் கையுடன் திருப்பி அனுப்பாத மிகப்பெரும் கொடையாளன் தான் இவ்வுலக இறைவன் என்பதும் தெளிவாகின்றது.
ஒருநாளைக்கு 50 முறை என்பது 5 ஆக குறைத்து கருணை காட்டிய அந்த இறைவனை மனதார ஏற்றுக் கொண்ட இச்சமூகத்தில் உள்ள ஒரு பெரும் கூட்டத்தினரான மக்களே தொழுகையின் முக்கியத்துவத்தையும், பிரார்த்தனையின் முக்கியத்துவத்தினையும் அறியாமல் இருக்கும் பொழுது அவர்களிடம் இப்புனித மிஃராஜின் சிந்தனையாக கேட்பவர்களுக்கு வாரி வழங்கும் இறைவனின் மகிமையையும் இஸ்லாத்தின் மகத்துவத்தையும் எடுத்துச் சொல்வது இந்நாளினை நினைவு கூர்ந்தது ஆகாதோ? அதனை விடுத்து இப்புனிதமிகு சம்பவம் நிகழ்ந்த இரவின் பெயரைக் கூறிக் கொண்டே இஸ்லாமும், நபி(ஸல்) அவர்களும் கற்றுத்தராத அனாச்சார செயல்களையும், தஸ்பீஹ் என்ற பெயரில் புதிதாக தொழுகைகளையும் நிறைவேற்றி இரவு முழுவதும் விழித்திருந்து காலையில் இந்நாளிலேயே கடமையாக்கப்பட்ட அந்த ஐவேளை தொழுகையில் தலையாயதான ஃபஜ்ர் தொழுகையைக் கூட தொழ முடியாமல் களைப்பில் தூங்கி விடுவதும் எத்தகைய கொடிய பாவமான செயல் என்பதை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
எனவே மிஃராஜ் என்பது ஏதோ இரவு முழுவதும் விழித்திருந்து இஸ்லாம் காண்பித்துத் தராத செயல்களை செய்வதற்கோ, அனாச்சாரங்களையும் கட்டுக்கதைகளையும் நம்பி அறியாமையில் வீழ்வதற்கானதோ அல்ல. இந்நாளை மனதில் நினைத்தாலே, இறைவனின் மகத்துவமிக்க இல்லமான பைத்துல் முகத்தஸ் கண்முன் வர வேண்டும். அதனை மீட்டெடுப்பதற்காக அன்று முதல் இன்று வரை வீர மரணம் எய்யும் வீரப்போராட்ட சகோதர, சகோதரிகள் நினைவுக்கு வரவேண்டும். இறைவனின் இல்லத்திற்கான போராட்டத்தில் எவ்வகையில் பங்கு பெறுவது என்பதைக் குறித்த சிந்தனையும் திட்டங்களும் மனதில் உதிக்க வேண்டும். அவ்விறை இல்லத்தைக் காப்பதற்காக ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் இருக்க வேண்டிய அவசியத்தையும் அதனை செயல்படுத்துவதற்கான ஸலாம் கூறி நலம் விசாரிக்கும் எளிய வழிமுறையையும் குறித்து நினைவுக்கு வர வேண்டும். அவ்வாறான ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் சிந்தப்படும் இரத்தத்திற்கு இறை சந்நிதியில் கிடைக்கும் மகத்தான பதவிகளைக் குறித்து நினைவுக்கு வர வேண்டும். அதைவிடுத்து சகோதரத்துவ சிந்தையின்றி சமூகத்தை பிளவுபடுத்திக் கொண்டு சென்றாலோ, இஸ்லாமிய வழிகாட்டுதலுக்கு எதிராக செயல்பட்டாலோ அல்லது வட்டி, விபச்சாரம்,போன்ற ஏனைய பாவமான காரியங்களில் ஈடுபட்டால் கிடைக்கும் நரக வேதனையை குறித்து மனதில் பயம் ஏற்பட வேண்டும். அப்படிப்பட்ட நரக வேதனையிலிருந்து காத்து சுவனத்தின் உயர் அந்தஸ்தையும் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் உயர்ந்த சுவனத்தினை தருமாறு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகைகளிலும் வல்ல நாயனிடம் இறைஞ்சி துஆ செய்யவேண்டும்.
இதுவே மிஃராஜ் எனும் புனிய விண்ணுல பயண நிகழ்வின் நினைவுபடுத்தல்களாகவும் படிப்பினையாகவும் என்றென்றும் இருக்கச் செய்ய முஸ்லிம் சமுதாயம் முனையட்டுமாக!
தொடர் நிறைவுற்றது.
கருத்துக்கள் (1)
![]() எழுதியவர்: haneefm , August 15, 2007 06:45 புகழ் அனைத்தும் வல்லமையுடைய அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் இன்னும் மஸ்ஜித் அல்-ஹராம் மஸ்ஜித் அல்-அக்ஸாவை அல்லாஹ் காப்பற்றுவானக மேலும் இந்த முஸ்லிம் சமுதயம் தீனுடைய காயிரை பலமாக பிடித்துக்கொள்ளட்டும் இன்னும் சத்தியமார்க்கம் இது போல பயனுள்ள வரலாற்று சான்றுகளை தொடர்ந்து எழுதவும் இதுவே மிஃராஜ் எனும் புனிய விண்ணுல பயண நிகழ்வின் நினைவுபடுத்தல்களாகவும் படிப்பினையாகவும் என்றென்றும் இருக்கச் செய்ய முஸ்லிம் சமுதாயம் முனையட்டுமாக! ஹஃனிப்-குவைத் கருத்து எழுதுக :
|
|||||||