| காஷ்மீரிகள் ஏன் கல்லெறிகின்றார்கள்? |
|
|
| பொதுவானவை - பொதுவானவை | ||||
| புதன், 08 செப்டம்பர் 2010 12:26 | ||||
நான் எப்பொழுதும் சண்டையை விரும்பியது கிடையாது. கல்லூரி காலங்களில் என் நண்பர்கள் குழு என்னை எப்போதும் கோழை என்றே விமர்சனம் செய்வார்கள். என்னால் ஒரு உடல் வலு இல்லாதவனை கூட அடிக்க இயலாது என்றும் கூட சொல்வார்கள். ஆனால் நான் கோழை அல்ல. என்னை பொருத்தவரை பெரும்பான்மையான சண்டைகள் பயனில்லாதவை. அகிம்சாவாதி என்ற வார்த்தை எனக்கு பிடிக்காது என்றாலும் நான் ஒரு அகிம்சாவாதி தான். வன்முறையை விட பிரச்சனைகளை தீர்ப்பதற்கு பேச்சுவார்த்தை, கருத்து விவாதங்கள் போன்ற பல நல்ல வழிகள் உள்ளன என்பதே என் கருத்து.
ஆனால் இன்று நான் ஒரு ஊடகவியலாளனாக எழுத்தை எதிர்ப்பின் ஒரு அடையாளமாக நான் கொண்டிருக்காவிட்டால், எனது நண்பர்களை போலே நானும் காஷ்மீரத்து நகரவீதிகளில் கல்லெறிந்து கொண்டிருப்பேன். ஆரம்ப காலங்களில் காஷ்மீரில் நான் கண்ட அடக்குமுறைகளும், படுகொலைகளும் என்னுள் எப்பொழுதும் ஒரு தெளிவின்மையை மட்டுமே ஏற்படுத்தி வந்தன. ஆனால் கடந்த இரு மாதங்களாக காஷ்மீரில் நடப்பவை எல்லாம் தெளிவான நீரோடையை போல உள்ளது. உலகம் காஷ்மீரில் நடப்பதை கண்டும் காணாமல் வாய் மூடி மௌனித்துள்ளது. இந்த மௌனம் அகிம்சாவாதத்தை தினமும் கொஞ்சம் கொஞ்சமாக தின்றுகொண்டே வருகின்றது. இந்த கள்ள மௌனமே எல்லா வன்முறைகளும் ஆரம்பிக்க காரணமாகும்.
தில்லியில் காஷ்மீரை மேற்பார்வையிடும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் என் நண்பன் கடந்த வாரம் ஒரு நாள் மாலையில் என்னை அழைத்தான். அவனது பணிகளுக்கு இடையிலும் அவன் காஷ்மீரில் அரச படையினால் அடித்தே கொல்லப்பட்ட ஒன்பது வயது சிறுவன் சமீர் அகமதின் உடலை அவனும் பார்த்திருப்பான் என நினைக்கின்றேன்.அவனது உடலெங்கும் லத்தி குச்சியின் வரிகள் சாரை, சாரையாக உள்ளன. அவன் தின்று கொண்டிருந்த மிட்டாயின் மீதம் இன்னும் அவனது வாயில் அப்படியே உள்ளது. நான் அவனை சமாதனப்படுத்த முயல இறுதியில், இருவரும் ஒருவரை ஒருவர் சமாதனப்படுத்திக் கொண்டோம். அடுத்த நாள் காலை அவன் தில்லியிலிருந்து காஷ்மீருக்கு செல்லப் போவதாக கூறினான். "இங்கு எல்லோரும் பொய்யை மட்டுமே கூறுகின்றனர். மேலும் அவர்களின் பொய்யை அவர்கள் உண்மையென்று நம்புகின்றார்கள்" என்றான் அவன். இந்தியாவில் ஒரு "பொய்" எல்லோராலும் பரவலாக நம்பப்படுகின்றது, அதாவது அரச படைகள் காஷ்மீரத்து மக்களை பாதுகாக்கின்றனர் என்பதே அந்த "பொய்". ஆனால் காஷ்மீரிகள் தாங்கள் அரசபடைகளால் பாதுகாக்கப்படுவதாக நம்புவதே இல்லை. இந்தியாவில் உள்ளவர்கள் அரசபடையை "பாதுகாவலர்கள்" என்றும், அவர்கள் தான் தீவிரவாதிகளிடம் இருந்து காஷ்மீரிகளை பாதுகாக்கின்றனர் என்றும் எண்ணுகின்றனர். ஆனால் அவர்களிடம் இருந்து தான் காஷ்மீரிகளை பாதுகாக்க வேண்டியுள்ளது என்பதே உண்மை. காஷ்மீரிகள் தங்களை ஆக்கிமிரத்துள்ள இந்த படைகள் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோருகின்றனர். அரசபடைகள் மீது அவர்கள் கொண்டுள்ள உணர்வு பயம், வெறுப்பு, பழிஉணர்ச்சி போன்றவை மட்டுமே. கடந்த இரண்டு மாதத்தில் மட்டும் காவல் துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை சுட்டதில் 55 ஆயுதம் ஏந்தாத பொதுமக்கள் காஷ்மீரில் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள். ஒன்று இவர்கள் கல்லெறிந்து கொண்டிருந்திருக்கலாம் அல்லது அண்டை வீடுகளில் விளையாடிக் கொண்டிருந்திருக்கும் போது சுடப்பட்டிருக்கலாம். காஷ்மீரில் பதட்டநிலை ஆரம்பிக்கும் காலகட்டங்களில் நான் அங்கு இருந்தேன். ஒவ்வொரு இறுதி ஊர்வலத்திற்கும் சென்ற நான் மக்கள் மிகக்கடுமையான கோபத்துடன் இருப்பதை கண்டேன். கங்பக் என்ற பகுதியில் 17 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவனது இரு நண்பர்கள் அவனை காவல்துறை அழைத்துச் சென்றதாகவும், பின்னால் அவன் நீரில் மூழ்கி இறந்துவிட்டான் என காவல் துறையை கூறியதாகவும் ஊடகங்களுக்கு சொன்னார்கள். ஆனால் இறந்த சிறுவன் நன்கு நீச்சல் தெரிந்தவன், ரண அறுவை சிகிச்சையில் தலையில் இரண்டு பலத்த காயங்கள் இருப்பது தெரிந்தது.
காஷ்மீரிகளுக்கும், அப்துல்லாக்களுக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. காஷ்மிரீகளை நோக்கி எப்பொழுதும் துப்பாக்கிகள் தயாராக இருக்கும், அப்துல்லாக்களை நோக்கி அல்ல. தங்கள் உயிரை பற்றிய கவலையில்லாமல் ஏன் தடையையும் மீறி இறுதி ஊர்வலத்திலும், அரச படைகளை எதிர்த்தும் கல்லெறிந்து கொண்டிருக்கின்றனர் என அப்துல்லாக்களும், முப்திக்களும் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். இருபது வருட காலங்களில் இங்கு கொல்லப்பட்டுள்ள 70,000 மக்களின் புதைகுழிகளில் தங்கள் பொய்யையும் சேர்த்தே அவர்கள் புதைத்து வந்துள்ளனர். ஒரு காலத்தில் தேசிய காங்கிரசின் தீவிரமான ஊழியராக இருந்த எங்கள் உறவினர் ஒருவர் பிற்காலத்தில் அதே கட்சி காஷ்மீரிகளுக்கு துரோகம் செய்து விட்டது எனக் கூறினார் என்பதன் பொருள் எனக்கு இப்பொழுது தான் புரிகின்றது. சேக் அப்துல்லா டோர்கா மன்னர்களின் இரும்புப் பிடியிலிருந்து காஷ்மீரை மீட்டு அதை விட மோசமான அடக்குமுறை அரசிடம் ஒப்படைத்து விட்டார் என அவர் தினமும் கூறுவார். சிறீநகரின் கசூரி பாக் பகுதியில் வயதான தந்தை ஒருவர் கொல்லப்பட்ட தனது மகனின் உடலை பிடித்து கொண்டிருந்த படத்தை பார்த்தேன். ஆனால் ஆறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அவரை அவரது மகனின் உடலை விட்டு பிரித்துச் செல்ல முயன்று கொண்டிருந்தனர். ஆனால் அவர் மகனின் உடலை விட்டு பிரியாமல் அருகிலேயே இருந்தார். அவரது சட்டை மகனின் இரத்ததில் நனைந்து போனது, அவரது வெள்ளை தாடி இரத்தத்தால் சிகப்பு நிறமானது. அந்த படத்தை நான் பார்க்க பார்க்க என்னுள் ஏற்படும் வலியின் ரணம் அதிகரித்துக் கொண்டே சென்றது. இறந்த தனது மகனின் உடலை கட்டியணைத்து தனது சோகத்தை ஒரு தந்தை வெளிபடுத்துவதை தவிர அவரால் என்ன செய்ய முடியும் என்று எனக்கு தெரியவில்லை. பரூக் அப்துல்லாவால் அந்த தந்தையை அடக்குமுறையை மீறி அரச படைக்கு எதிராக கல்லெறிவதை தடுக்க குடியுமா? அந்த வயதான மனிதரின் இடத்தில் பரூக் அப்துல்லா இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பார், ஒரு தந்தையைப் போலவா? ஒரு முதல்வரை போலவா?. இந்நேரம் இந்நகரமே துண்டாடப்பட்டிருக்காதா? சிறீநகரம் பற்றி எரிந்திருக்காதா? தங்களின் நேசத்திற்குரிய இறந்த உறவுகளை கல்லெறிவதன் மூலமாகவும், அரசு வாகனங்களை எரிப்பதன் மூலமாகவும் மிகச்சிறிய அளவில் மட்டுமே நினைவு கொள்கின்றார்கள் அவர்களின் தந்தைகள், சகோதரர்கள், உறவினர்கள், நண்பர்கள். இது மட்டும் எப்படி தவறாகும்? காஷ்மீரை சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று சுருக்கி பார்த்திட முடியாது, அது ஒரு மீக நீண்ட குருதி தோய்ந்த வரலாற்றை கொண்டது. மத்திய ஆயுத படையால் அனாதையாக ஆக்கப்பட்ட சிறுவர்கள் மட்டும் கல்லெறிய ஆரம்பித்தால் உங்களால் 60,000 கல்லெறிபவர்களை காண முடியும், இவர்களுடன் அரச படையால் விதவையாக்கப்பட்டவர்களும் சேர்ந்தாலே 30,000 பெண்கள் ஒவ்வொரு பதுங்கு குழி மற்றும் ஒவ்வொரு படை வீரரை நோக்கியும் கல்லெறிவதை நீங்கள் காணலாம். கையில் கல்லுடன் ஒரு சிறுவன் படை வீரருக்கு எதிராக வந்து நிற்கும் போது அவனுக்கு படை வீரனுக்கும், தனக்கும் இடையே உள்ள படை வலுவின் வித்தியாசம் நன்கு தெரியும். அவன் என்ன தான் சரியாக குறி பார்த்து எறிந்தாலும் ஒரு சிறிய காயமோ அல்லது ஒன்றிரண்டு தையல்களுடனான காயத்தை மட்டும் தான் படை வீரனுக்கு கொடுக்க முடியும் இதற்கே அவன் படைவீரனின் காலில் உள்ள பாதுகாப்பு உறை, குண்டு துளைக்காத மேல் சட்டை, தலைக் கவசம் இதை எல்லாம் மீறி அவன் எறியும் கல் செல்ல வேண்டும். ஆனால் படை வீரனின் துப்பாக்கியில் இருந்து வரும் துவக்கு(Bullet) மற்றும் படை வீரன் எறியும் கண்ணீர் புகைக்குண்டுகளினால் அந்த சிறுவன் மிகக் கடுமையாக பாதிக்கப்படலாம் அல்லது உயிரையும் கூட இழக்கக்கூடும் என்பது அந்த சிறுவன் மற்றும் படைவீரன் என இருவருக்குமே தெரியும். தனது ஆயுதமாக எப்பொழுது அந்த சிறுவன் கல்லை கையிலெடுக்கத் தொடங்கினானோ அப்பொழுதே அவனது போராட்டம் சமூக நெறிகளின் படி(Social Moral) உயர் நிலையை அடைந்துவிடுகின்றது. அந்த சிறுவனது நோக்கம் படைவீரனை கொல்வது தான் என்பது மிகவும் முட்டாள்தனமான ஒரு கருத்து. இந்த ஒரு காரணத்தினால் தான் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெற்றுவரும் கல்லெறியும் போராட்டங்களில் ஒரு படை வீரனோ, காவல் துறையைச் சேர்ந்தோரோ கூட இதுவரை இறக்கவில்லை. ஐந்து கல்லெறியும் போராளிகளுக்கு நடுவே சிக்கிக்கொண்ட காவல்துறை அல்லது படை வீரர்கள் பலரது புகைப்படங்களை நாம் பார்த்திருக்கின்றோம் ஆனால் இவர்களில் ஒருவர் கூட இது வரை இறந்ததில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. உலகமும், இந்தியாவும் தங்கள் துயரமான வரலாற்றை கேட்பார்கள் என பல காலம் காஷ்மீரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்களின் மொழியை யாரும் புரிந்துகொள்ளவில்லை. இதனால் எல்லா மனிதர்களும் புரிந்த ஒரு மொழியில் பேச வேண்டும் என காஷ்மீரிகள் எண்ணினார்கள். கடந்த இரண்டு மாதங்களாக கல்லெறியும் மொழியின் மூலமாக தங்கள் துயரத்தை காஷ்மீரிகள் உலகத்தாரிடம் எடுத்துக் கூறுகின்றார்கள்.
பெண்கள் தான் இந்த பிரச்சனையில் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள். கற்பழிப்புகளும், பாலியல் வன்முறைகளும் அரச படைகள் நடத்தும் உளவியல் தாக்குதல்களாகும். ஆனால் இவை எல்லாம் மிகவும் குறைத்தே இது வரை மதிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அந்த வலி பெண்களுக்கும், மனவியல் மருத்துவர்களுக்கும் மட்டுமே தெரிந்த ஒன்றாகும். கல்லெறிவதை அவர்கள் இராணுவத்திற்கு தரும் பேதி மருந்தாக பார்க்கின்றனர். ஒவ்வொரு முறை கல்லை எறியும் போதும் தங்கள் இதயக்கூட்டினுள் எரிந்துகொண்டிருக்கும் ஒவ்வொரு பாடத்தையும் அவர்கள் இராணுவத்திற்கு கற்பிக்கின்றனர். சில வாரங்களுக்கு முன்பு பாட்டிமலூவில் உள்ள தனது வீட்டின் அருகில் விளையாடிக்கொண்டிருந்த எனது அத்தையின் மகன் அதாரை உன்னை நாங்கள் கொன்று விடுவோம் என மிரட்டி உள்ளனர் மத்திய ஆயுத படையைச் சார்ந்தவர்கள். அவன் உள்ளே சென்று ஒழிந்து கொண்டான். எனது அத்தையின் பத்து நிமிட கெஞ்சலுக்கு பின்னரே அவன் படைவீரர்கள் அவனை பார்த்து மிரட்டிய வார்த்தைகளை சொன்னான். எனது அத்தை வணிகவியலில் இளங்கலை பட்டம் பெற்றவர். கோபத்தில் தன் கண்களில் வந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு தனது வீட்டின் அருகே நடந்து கொண்டிருந்த விடுதலை போராட்ட ஊர்வலத்தில் தன்னையும் தன் மகனையும் இணைத்து கொண்டு, தங்களின் பயன் போகும் வரையில் விடுதலை முழக்கங்களை எழுப்பினார். இது அவர்களுக்கு பயனும் தந்தது. அவர்கள் இருவருமே வீட்டை விட்டு வந்து இது போன்ற ஊர்வலத்தில் கலந்து கொள்வது இது தான் முதல் முறை. எனது அத்தை தனது கைகளில் உள்ள ரூபாய் நோட்டுகளில் எல்லாம் "இந்தியாவே வெளியேறு, இந்தியாவே திரும்பி போ (Go India, Go Back)" என்ற வாசகங்களையும், அந்த ஐந்து வயது சிறுவனோ அதே வாசகங்களை தனது வீட்டு சுவர்களில் எழுதிவைத்தான். இந்த ஒரு வாக்கியம் மட்டும் தான் அவனுக்கு ஆங்கிலத்தில் அவனுக்குத் தெரியும்.இது போன்ற சிறுவர்கள் தான் சிறீநகரின் அடைக்கப்பட்ட கடைக் கதவுகளிலும், யாருமில்லாத சாலைகளிலும், சுவர்களிலும் இது போன்ற விடுதலை முழக்கங்களை எழுதுகின்றனர். பாகிசுதான், ஆப்கானிசுதான் போன்ற பிரச்சனைகளை எல்லாம் தாண்டி காஷ்மீர் விடுதலை நிகழ்வு சென்று விட்டது. காஷ்மீர் துப்பாக்கிகளிலிருந்து விடுதலை முழக்கங்களுக்கு மாறிவிட்டது. இதில் கல்லெறிவது கூட தங்கள் அமைதி வழி போராட்டம் அரசால் மிகக்கடுமையாக அடக்கப்படும் போது மட்டுமே நிகழ்கின்றது. 2008ல் 3 இலட்சம் மக்கள் வீதிகளுக்கு வந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிராக மனித சங்கலி போராட்டம் நடத்தினர். அப்பொழுது ஒருவர் கூட எந்த ஒரு பதுங்கு குழியையும், படை வீரரையும் தொடக்கூட இல்லை. ஆனால் இந்த வருடம் காஷ்மீர் மக்களின் அமைதி ஊர்வலங்கள் அரசால் கட்டாயமாக தடை செய்யப்பட்டன. கூட்டத்தை கலைப்பதற்காக மக்களை சுடுவதற்கு இராணுவத்திற்கு அனுமதி கொடுக்கப்பட்டது. இந்த வருடத்தில் எந்த ஒரு சூழ்நிலையிலும் மக்கள் கூடுவதற்கு இராணுவம் அனுமதியே கொடுக்கவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்றவர்களை நோக்கி அவர்கள் பலமுறை சுட்டனர். இதனால் பலர் கல்லெறிபவர்களாக ஆக்கப்பட்டார்கள். காஷ்மீரில் இன்று இராணுவத்தினால் ஒரு மருத்துவமனையையோ, தங்களுக்கு உதவக் கூடிய வீட்டையோ காண்பது அரிதான ஒன்று. காஷ்மீரிகள் இந்தியாவுடனான தங்கள் பிரச்சனையை துப்பாக்கிகள் இல்லாமல் தீர்வு காணுகின்றனர். ஊடகங்கள் காஷ்மீரிகளை பாகிஸ்தானின் உளவு நிறுவனத்தின் காசுக்காகவும், PDP யின் காசுக்காகவும் போராடுபவர்களை போல காட்டும் போது நான் கடுமையான கோபத்திற்கு உள்ளாகின்றேன். சிறீநகரின் எல்லா தொகுதிகளையும் வென்றது தேசிய காங்கிரசு, PDP அல்ல. இந்த இடம் தான் கல்லெறிதலில் மிக முக்கியமான நகரமாகும். இந்த வருடத்தின் ஆரம்பத்தில் ஒரு நேர்காணலில் பரூக் அப்துல்லாவிடம் இந்த கேள்வியை கேட்டேன், நீங்கள் உங்களை காஷ்மீரிகளின் தலைவராக பார்க்கின்றீர்களா?, அல்லது காஷ்மீரில் உள்ள ஒரு அரசியல் கட்சியின் தலைவராக பார்க்கின்றீர்களா?. அவர் மிகவும் கோபமாக சொன்னார் நான் 60 விழுக்காடு வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றுள்ளேன். இப்பொழுது அந்த வாக்குகள் எல்லாம் எங்கு சென்று விட்டன என எண்ணுகிறார் அவர்? கல்லெறிபவர்களும், அமைதி வழியில் போராடுபவர்களும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு கொல்லப்படுவது தொடர்ந்தால் காஷ்மீரிகள் தாங்கள் முன்பு வைத்திருந்த துப்பாகிகளை கண்டிப்பாக மீண்டும் கையிலெடுப்பார்கள். உலகிலேயே அதிக ஆயுத கொள்வனவு செய்யும் நாடான இந்தியாவிற்க்கும், காஷ்மீரில் உள்ள 7,00,000 துருப்புகளுக்கும் எதிரான இன்னொரு ஆயுத புரட்சியும் தீவிரவாதம் என்ற பெயரில் மறைத்து அழிக்கப்படும். AK 47 துப்பாக்கிக்கு எதிராக கையில் கல்லுடன் மோதும் இன்றைய தலைமுறை இளைஞர்கள் கையில் உள்ள கல்லை கீழே வைத்து விட்டு தாங்களும் AK 47 துப்பாக்கியை கையிலெடுத்தால் நிலைமை 1990களில் இருந்ததைவிட மிக மோசமாக மாறிவிடும். காஷ்மீர்களுக்கு தெரியும் எவ்வாறு ஆயுதப் போராட்டம் தங்கள் குழந்தைகளையே அரித்து தின்னும் என்று, ஆனாலும் அவர்கள் தங்கள் விடுதலைக்காக அதைச் செய்வார்கள். ஆனால் தற்போது காஷ்மீர் போராட்டம் வெறும் கற்களுடன் மட்டுமே நடைபெறுகின்றனது. ஆனால் தங்களைச் சுற்றி உள்ள இந்த கண்ணாடி மாளிகைகள் அப்படியே இருக்காது. போர் மிகத் தீவிரமான ஒன்றாக மாறும், இருந்தபோதிலும் என்னுள் உள்ள அமைதி விரும்பி அந்த நிலைக்கு காஷ்மீர் தள்ளப்படாது என்று கூறுகிறான். காஷ்மீரில் இசுலாம் என்ற வார்த்தை தொன்று தொட்டு இருந்து வருகின்றது, இதை காஷ்மீரிகள் தங்களுக்கே உரிய தனித்துவ முறையில் புரிந்துகொண்டுள்ளனர். எனது தாயார் புனித தளங்களுக்கு செல்வார். எனது பெண் தோழியும் கூட. எனக்கு தெரிந்த எல்லா பெண்களும் அங்கே செல்வார்கள். மசூதிகளை விட அதிகமான கூட்டம் இந்த புனித தளங்களில் எப்போதும் இருக்கும். சூபி இசுலாம் இங்கு பல நூறு வருடங்களாக இருந்து வருகின்றது. இந்த புரட்சிகளும் கூட ஒழுக்கு நெறிகளை பின்பற்றியே நடக்கின்றது. காஷ்மீரிகள் பணிவானவர்கள் மற்றும் விட்டுக் கொடுப்பவர்கள் என்பதை எப்பொழுது எங்களின் பலவீனமாக அரசு கருத ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது அரசு அடக்குமுறை தகர்க்கப்படும். 1990களில் காஷ்மீர் பண்டிட்டுகளுக்கு என்ன நடைபெற்றது என்பது எனக்கு தெரியாது. நான் அப்பொழுது சிறியவன். ஆனால் இன்று அந்த நிகழ்வு பல திரிபுகளுக்கு உள்ளாகிவிட்டது. காஷ்மீரில் பண்டிட்டுகளையே காணாத இசுலாமிய இளைய தலைமுறைகளில் நானும் ஒருவன். ஆனால் அந்த வருடம் என்ன நடைபெற்றது என்பது பற்றிய பல கதைகளை நான் கேள்விப்பட்டுள்ளேன். எப்பொழுதெல்லாம் அன்று என்ன நடைபெற்றது என தெளிவாக தெரிந்துகொள்ள ஆரம்பிக்கின்றோனோ அப்பொழுதே அது தெளிவில்லாமல் செல்ல ஆரம்பிக்கின்றது. எங்களது பழைய குடும்ப புகைப்படங்களில், பல காஷ்மீர் பண்டிட்டுகளை நான் பார்த்ததுண்டு. எங்களது குடும்பத்தை பொருத்தவரையில் பண்டிட்டுகளுக்கு எதிராக பேசுவது தவறு, அவர்கள் விடுதலையை எதிர்க்கும் வலது சாரி இயக்கத்தை சார்ந்தவர்களாக(இதை ஒரு மத போராட்டமாக பார்ப்பவர்கள்) இருந்தாலும் சரி. பண்டிட்டுகள் மீண்டும் அவர்களின் பூர்விக நிலங்களில் வந்து குடியேற வேண்டும். என்னை போன்ற இளைஞர்கள் அவர்களை வேறு யாரோ ஒருவர் என எண்ணாமல் நண்பர்கள் போல பழகவேண்டும் என்ற எண்ணம் என்னுள் எப்போதும் உண்டு. என்னை பொருத்தவரை காஷ்மீர் என்பது கென்றி காரிட்டர் பிரசனின் புகைப்படத்தை போல. அந்த புகைப்படத்தில் ஒரு பெண்கள் கோ.இ.மாரன் மலை உச்சியில் நின்று கொண்டு தங்களது தெய்வங்களை வணங்கிக் கொண்டிருப்பார்கள். ஒருவர் பழைய காஷ்மீரி பர்காவிலும், இன்னொருவர் காஷ்மீரின் பாரம்பரிய உடையுடனும் மலைகளையும், அகண்ட வானவெளியை பார்த்த மாதிரி இருப்பார்கள். அவர்களின் இறைவழிபாட்டு முறைகளில் வேறுபாடிருப்பினும், அவர்களின் கோரிக்கை ஒன்றாக இருந்தது. இந்த பிரச்சனை ஏற்கனவே அவர்கள் பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியுள்ளது. அமைதி வழி போராளிகள் கொல்லப்படுவது தொடர்ந்தால் இந்த பெண்களும் ஒரு நாள் காணாமல் போய் விடுவார்கள். நாம் கனவு கண்ட காஷ்மீர் கனவிலேயே போய்விடும் போல் உள்ளது. ஐந்து வருடங்களுக்கு முன்னால் நானும் "விடுதலை" போராட்டம் முடிவடைந்து விட்டதாக நினைத்தேன். ஆனால் துப்பாக்கிகளிலிருந்து கல் என்ற ஆயுதமாக மாற எடுத்துக் கொண்ட காலம் தான் அது என்பது எனக்கு இன்று புரிகின்றது. 1953களில் சர்வசன வாக்கெடுப்பு என்று இருந்தது. 1970களின் ஆரம்பத்தில் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமான "Al Fatah" (அல் பாத்தா என்பதற்கு வெற்றி எனப் பொருள். இந்த இயக்கம் முன்னெடுத்த போராட்டமே சுய நிர்ணய உரிமை போராட்டம் ஆகும்) என்றானது , 1989களில் சம்மு காஷ்மீர் விடுதலை அமைப்பு என்றானது, இன்று ஒன்பது வயது கல்லெறியும் சிறுவன் என்றிருக்கும் போராட்ட நிலையில் என்றும் விடுதலை முழக்கம் மட்டும் மாறவே இல்லை. போராட்ட வழிமுறைகள் மட்டுமே மாறியுள்ளன. "பெரிய பொருளாதார மற்றும் அதிகார போட்டியில் வளர்ந்து வரும் நாடான இந்தியா" காஷ்மீரி மக்களின் மனங்களை கவர பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்து முயற்சி செய்தது. பெரும்பான்மையானோர் அந்த பணத்தை பெற்றிருப்பினும் தங்கள் உணர்வுகளை ஒரு பொழுதும் அவர்கள் மாற்றிகொள்வதாயில்லை. இது வழிமுறை 1. இது சரியாக நடைபெறாததால் வழிமுறை 2ல் தவறான நபர்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கவனிப்பு நடந்தது. ஆனால் அதுவும் வேலை செய்யவில்லை. இந்தியா தனது பணத்தையும், ஆயுதத்தையும் கீழே வைத்து விட்டு காஷ்மீர் பிரச்சனையை காஷ்மீரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க வேண்டும். இரண்டு வழிகளில் இப்பிரச்சனைக்கு தீர்வு காணலாம். முதலில் இதை பிரச்சனை என்றுணர்து, பிரச்சனையில் சம பங்குள்ளவர்கள் என கருதி தில்லி காஷ்மீரி மக்களுடன் சரியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது. அல்லது இது சட்டம் ஒழுங்கு பிரச்சனை எனக் கூறி நோயை அல்லாமல் நோயின் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தும் வேலையில் ஈடுபடுதல். தேசிய காங்கிரசு PDP போன்ற அரசியல் கட்சிகள் கூறும் இந்திய அரசமைப்பின் எல்லைக்குள் "சுயாட்சி" போன்றவற்றை எல்லாம் மைய அரசு தூக்கியெறிந்து பல நாளாகி விட்டது. மக்கள் கூட்டமைப்பின் தலைவர் "சாச்சத் லோனோ கூறும் "அடையக்கூடிய தேசியம்" என்பதை பற்றி இரண்டு வருடமாக ஒருவர் கூட இதுவரை வாயே திறக்கவில்லை. குரியத் கூட்டமைப்பின் தலைவரான மிர்வாசு உமர் கூறுகையில் "தில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் நாங்கள் எங்கள் நேர்மை மற்றும் நம்பகத்தன்மையை ஊசலாட்டதில் வைத்துள்ளோம்" என்கிறார். இந்தியா வெறும் புகைப்படத்திற்கு மட்டும் அல்லாமல் குறைந்தபட்சம் நேர்மையுடன் பேச்சு வார்த்தை நடத்தும் என நாங்கள் நம்புகின்றோம் என்றார் அவர். இந்திய படை வீரர்களோ மிகவும் ஏழ்மையான கிராமத்திலிருந்து வந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை யாருமற்ற பதுங்கு குழிகளில் கழிக்கின்றனர். கல்லுக்கு பதிலாக காஷ்மீரத்து சிறுவர்களின் வாழ்க்கையை முடித்து விடுகின்றார்கள். சுற்றி போடப்பட்டுள்ள முள்வேலிகள், உளவியல் ரீதியான கோளாறுகளால் அதிக பட்சமான தற்கொலைகளும், தங்கள் குடும்பத்தினரையே கொலை செய்தல் போன்றவையும் காஷ்மீரில் மிக அதிக அளவில் உள்ளன. இந்தியா இவர்களை தேச பகதிக்காக எரியும் மெழுகாய் மட்டும் பார்க்காமல் தகுதி வாய்ந்த குடிமகன்களாய் என்று பார்க்கத் தொடங்குகின்றதோ அன்று தான் காஷ்மீரிகளுக்கும், படையினருக்கும் உண்மையான விடுதலை ஆகும். இந்தியா ஒன்று காஷ்மீரை விட்டு வெளியேறலாம் அல்லது அங்குள்ள மக்களின் மனதில் இடம்பிடிக்கலாம். ஆனால் 63 வருடங்களாகியும் இந்தியாவால் காஷ்மீர் மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவே இல்லை. மூலப்பதிவு : I am a pacifist. But here's why I want to be a stone-pelter http://www.tehelka.com/story_main46.asp?filename=Ne280810Iamapracifist.asp தமிழாக்கம். ப. நற்றமிழன் ஆப்கானிஸ்தான் / காஷ்மீர் தொடர்பான அரசியல் விளையாட்டு பற்றி பிரபல பத்திரிகையாளரான ராபர்ட் ஃபிஸ்க் (Robert Fisk) கடந்த மே 2009 இல் அளித்த பேட்டி ஒன்றினை இங்கே இணைப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம். - சத்தியமார்க்கம்.காம்
Dim lights
Embed Embed this video on your site
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (15)
![]()
இந்தியாவை துண்டாட, காஷ்மீரத்தை பிரிக்க நினைக்கும், பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கட்டுரையை நீங்கள் பிரசுரித்திருப்பது வேதனை அளிக்கிறது.
இந்தியாவில் செக்யூலரிசம் தழைக்க வேண்டும் என்று பாடுபடும் முஸ்லிம்கள், மதத்தின் பெயரால் நாட்டை பிரிக்க நினைக்கும் மதவாதிகளுக்கு ஏன் ஆதரவு தருகிறீர்கள்? Tehelka சவுதி அரசாங்கத்தில் இருந்து பணம் பெற்று நடந்து வரும் ஒரு ஊடகம். அவர்களுக்கு இந்திய ஒற்றுமை கண்ணை உறுத்துகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத ராணுவம், காஷ்மீரத்தில் ஏன் நிலை கொண்டுள்ளது. இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் சக்திகளும், பாகிஸ்தான் ஏவலின் பெயரில் அரசை எதிர்ப்போரும் நிரந்து இருப்பதினாலேயே இந்த மாநிலத்தில் ராணுவம் இருக்கிறது. பிரிவினைவாதம் முற்றிலுமாக கைவிடப்பட்டு, செக்யூலரிசம் மேலோங்கி நின்றால், காஷ்மீரத்தில் ராணுவம் இருக்க போவதும் இல்லை. இது போன்ற கல்லெறிவதற்கு வாய்ப்பு எதுவும் இருக்காது. முஸ்லிம்கள், காஷ்மிர பிரிவினைவதிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தை, இந்திய ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும். நீங்கள் இந்த கட்டுரையை பதிவு செய்துள்ளது, நீங்கள் அவர்களின் பிரிவினை வாதத்தை ஆதரிப்பது ஆகும். 1
September 09, 2010 15:33
சகோதரர் பரத்,
உண்மையை சொல்லும்பொழுது, குற்ற உணர்ச்சியுள்ள மனது குறுகுறுக்கும். உங்கள் வறட்டு கவுரவத்தை நிலைநாட்ட, ஒரு சமூகம் இரையாக்கப் படுவது கொடுமையில்லையா? சிந்தியுங்கள்! 2
September 10, 2010 08:57
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்.... சில திருத்தங்கள்.. 1. பேச்சைக் பார்க்க - பேச்சை பார்க்க 2. காவல் துறையை கூறியதாகவும் - காவல் துறை கூறியதாகவும் 3. இந்தியாவிற்க்கும், - இந்தியாவிற்கும், 4. ஒரு பெண்கள் - இரு பெண்கள் 5. என்றுணர்து - என்றுணர்ந்து 6. பகதிக்காக - பக்திக்காக 3
September 12, 2010 15:30
தினமணி இன்று அக்கிரமமான தலையங்கம் எழுதியுள்ளது. உங்கள் கட்டுரையை அனுப்பினேன். வாசகர் கருத்துகளில் பதிந்துள்ளது.
4
September 13, 2010 08:29
முதலில் காஸ்மீரிகள் இந்தியர்களாக இருக்கவேண்டும். எதையும் அரசியல் அதிகாரத்தின் வழியாகத்தான் தீர்ப்பது இலகுவானது என்பதை உணரவேண்டும்.பாகிஸ்தானோடு சேர்வது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று நன்கு தெரிந்த பின்பும் அறிவு கெட்டத்தனமாக இந்தியாவில் இந்தியன் பாஸ்போர்டில் இருந்து கொண்டு பாகிஸ்தான் கொடியை ஏந்தி போரடுகிற முட்டாள்தனம் விலகவேண்டும்.அறிவு கெட்டவர்களாக வதந்தியை நம்பாது தீர விசாரித்து அரசியல் ரீதியாக போராடவேண்டும்.குர்ஆனை எரித்துவிட்டான் என்ற வதந்தியை நம்பி 18 உயிர் போனது.அரசாங்க சொத்துக்கு ஏன் தீ வைத்தார்கள்.நிறைய பாகிஸ்தானியர்களுடன் பல சந்தர்பத்தில் பேசி பார்த்துவிட்டேன். அவர்கள் காஸ்மீர் எங்களது என்கிறார்கள். பல காஸ்மீரிகளிடம் பேசி பார்த்துவிட்டேன் நாங்கள் பாகிஸ்தானேடு இருக்கவேண்டும் என்று எங்கள் பெற்றோர்களால் மூளை சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்கிறார்கள்.இங்கே சவுதி அரேபியாவில் யாரேடு இருக்கிறீர்கள் பாகிஸ்தானியரோடா என்றால் இல்லை நாங்கள் இந்திய முஸ்லீம் இந்துக்களோடு தங்கியிருக்கிறோம் என்கிறார்கள். ஏன் பாகிஸ்தானியரோடு இருக்கவேண்டியதுதானே என்றால் இந்தியர்களோடு இருப்பதில் அதைவிட திருப்தியாக உணர்கிறோம் என்கிறார்கள். ஏன் எங்கள் பெற்றோர்களாலும் காஸ்மீரிலும் அப்படி மூளை சலவை செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று புரியவில்லை என்கிறார்கள்.பாகிஸ்தானின் இஸ்லாமிய பொருளாதார நிலை என்ன.தனி மாநிலமாக என்ன வருமானங்களை பெற்று எப்படி வாழ்க்கையை தமிழ் நாட்டை போல நடத்தலாம் எப்படி மத்தியில் அதிகாரத்தில் பங்கு பெறலாம் என்று புரியவேண்டும். இறைவா நல்ல தலைவர்களை அவர்களுக்கு ஏற்படுத்துவாயாக என்று துஆ செய்வதை தவிர வேறு வழி தெரியவில்லை. ஒருவர் பயங்கரவாதத்தின் நிறம் காவி என்றார். அவர் சொல்லி சில நாட்களிலேயே இந்த மாதிரி கிறுக்குத்தனமாக நடந்து கொண்டு இப்போ இதற்கு என்ன நிறம் என்று சொல் என்று திப்பி கேட்க சந்தர்பத்தை ஏற்படுத்தி கொடுக்கிறார்கள். ஒருவர் எப்பவாவது உண்மையை சொல்ல வேண்டும் என்று பேசினால் உடனே அதற்கு மாறாக ஒன்றை செய்து பேசியவரையும் மற்ற இந்திய முஸ்லீம்களையும் அதால பள்ளத்திற்கு தள்ளுவதில் இவர்கள் பலமுறை முன் நின்றிருக்கிறார்கள். எவ்வளவு எழுதினாலும் தகும் என்னத எழுத.
5
September 15, 2010 11:58
Anbulla Rafiq,
உங்கள் கருது மிகவும் எளிதாக, அரிதாக வரவேர்க்கதக்கதாக உள்ளது. இந்தியாவில் ஜனநாயகம், மத சார்பின்மை ஆகியவை இரு தூண்கள். உங்களை ஆள யாரையும் நீங்கள் தீர்மானிக்கலாம். எந்த மதத்தினையும் பின்பற்றி ஒழுகலாம். இது போன்ற நல்ல வாய்ப்பை கண் பாராமல், AAzadi என்று கூவுபவர்கள் என்ன சாதிக்க போகிறார்கள். இந்தியாவில் முழுக்க முழுக்க முஸ்லிம்களால் ஆளப்படும் ஒரு மாநிலம், எப்படி சிறப்பாக செயல்பட்டு மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க முடியும். அதை பார்த்து அணைத்து மக்களும் அத்தகயோரையே மற்ற மாநிலங்களும் தேர்ந்து எடுப்பார்கள் அல்லவா. இந்தியாவிற்கு எதிரானவன், முஸ்லிமாக இருந்தாலும், தங்களுக்கும் எதிரி தான் என்று உணரவேண்டும். பலோசிஸ்தானில் இருக்கும் முஸ்லிம்கள் தான் பாகிஸ்தான் இஸ்லாமிய அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். முஸ்லிம்கள் என்றும் பாராமல் தான் பாகிஸ்தான் அந்த பகுதிகளில் இன்றும் அநியாயம் செய்து வருகின்றது. 6
September 15, 2010 14:28
மிஸ்டர் பரத்,
நீங்கள் உண்மையை மறந்து ஒரு தலைபட்சமாக சிந்திக்கின்றீர்கள். அநியாயமாக பெண்களும், குழந்தைகளும் கொல்லப்படுவது உங்கள் கண்களுக்கு தெரியவில்லை. இது நாடு சம்பந்தப்பட்ட விஷயமல்ல மாறாக உயிர் மற்றும் கற்புகள் சம்பந்த பட்டது. இராணுவமும் செய்வது சரி என்று உங்க கேவளமான புத்தியை காட்டியுள்ளீர்கள். யார் பிரிவினைவாதிகள், காப்பாற்றுகிறோம் என்ற பேரில் அப்பாவி குழந்தைகளை கொல்வதும், பெண்களை கற்பழிப்பதும் உங்களுக்கு தவறாக தெரியவில்லை. அதைப்பற்றி எழுதினால் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான கட்டுரை என்ன நியாயம், முதலில் மனிதனாக யோசியுங்கள். மதத்தின் பெயரால் நாட்டை பிரிக்க நினைக்கும் மதவாதிகள் யாரென்று தெரியாது, சிந்தித்துப்பாருங்கள். தன் மதம் தான் உயர்ந்தது மற்ற மதம் தாழ்ந்தது இந்தியா இந்து நாடு, முஸ்லிம்கள் வந்தேரிகள் என்று கூறி குஜராத்தில் 20,000 முஸ்லிம்களை கொண்றவர்கள் தியாகிகளா? ஆங்கிலேயனிடமிருந்து நாட்டை மீட்க தியாகி திப்பு சுல்த்தானுடன் எவ்வளவு முஸ்லிம்கள் தன் உயிரை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் நினைத்திருப்பார்களா தன் மதம் தான் வாழ வேண்டுமென்று. முஸ்லிம்கள் என்றுமே மதவாதம் பேசியதில்லை அப்படி பேசினால் அவர் மூஸ்லிமில்லை. காஷ்மீரைப்பற்றி தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் கேட்பது சுதந்திரம். மேலும் அறிய இந்த வார விடியல் வெள்ளி புத்தகத்தில் நேரடி காஷ்மீர் ரிப்போர்ட் படியுங்கள் 7
September 19, 2010 10:40
அன்புள்ள அன்வர் அவர்களுக்கு காஷ்மீரில் ராணுவம் தொடர்ந்து இருக்கவும் இந்த மாதிரி கலவரங்கள் நடப்பதற்கும் யார் காரணம் என்று யோசித்தீர்களா.நீங்கள் எதிர்பார்ப்பது போல் தனி நாடாக இந்தியா அதற்கு சுதந்திரம் ஒருபோதும் கொடுக்காது.இதற்காக வேண்டியே எங்கெல்லாம் தனிநாடாக சுதந்திரம் கொடுக்கப்படுகிறதோ அதையெல்லாம் இந்தியா எதிர்கிறது(சமீபத்திய உதாரணம் கொசோவா)லங்கா தமிழ் ஈழம். எனவே இப்போதைக்கு எது நல்லது என்று உணருங்கள்.நீங்களும் நானும் மற்ற உலக முஸ்லீம்களுக்கும் குர்ஆன் எரிக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக்கொண்டா இருக்கப்போகிறோம். நமக்கும் நியாயவான்களுக்கும் உணர்ச்சி இல்லையா.ஆனால் காஸ்மீரிகளை பொய்யை சொல்லி கலவரத்தை தூண்டியது யார். ஆதனால் யாருக்கு இழப்பு.அவர்களுடைய ஒவ்வொரு ஆர்பாட்டத்தின் ஆரம்பத்தின் வேர்களை பாருங்கள்.நான் இந்திய ராணும் செய்வது ஒருபோதும் சரி என்று வாதிட வரவில்லை.மேலும் மேலும் காஷ்மீரில் சில முட்டாள் தலைவர்கள் மக்களை வழிகெடுக்கிறார்கள்.சட்டத்திற்குள் நின்றுகொண்டு கிடைத்த அதிக்படியான சலுகைகளை நல்லவழியில் எப்படி பயன்படுத்துவது என்று பார்த்து அரசியல் துணையோடு தனி நாடு சாத்தியப்பட்டால் கேளுங்கள்.இப்போதைக்கு நண்பர் பரத் சொல்வது போல் உரிமைகளை முறையாக பயன்படுத்தி முடிந்ந அளவு இஸ்லாமிய முறைபடி ஆட்சிசெய்து இந்தியாவிற்கே முன்னுதாரணமாய் திகழலாம்.எக்கச்சக்க வருமானத்தை அந்த மாநிலத்திற்கு இறைவன் அள்ளிக்கொடுத்திருக்கிறான்.இப்போதைக்கு புதிதாக பனிலிங்க டூரிஸம் வேறு சேர்ந்திருக்கிறது.முறைபடுத்தினால் செல்லசெழிப்பிற்கும் அங்குள்ள மக்களுக்கு வருமானமும். எங்கேயோ போய்விடும்.பாகிஸ்தானுக்கு காஸ்மீர் என்பது அரசியல். யார் ஆட்சிக்கு வந்தாலும் அதை பேசுவார்கள். ராமர் கோயிலை சொல்லி பீ ஸே பி அரசியல் செய்ததை இந்துக்கள் 20 வருடத்திற்குள் புரிந்து ஓரம் கட்ட ஆரம்பித்து விட்டார்கள்.ஆனால் 63 ஆண்டுகளாகியும் காஷ்மீரிகள் பாகிஸ்தானின் காஷ்மீர் அரசியலை புரிந்து கொள்ளவில்லை என்பது வேதனையுடன் கூடிய உண்மை.
8
September 19, 2010 19:36
இந்திய முஸ்லிம்களே......., காஸ்மீரில் இந்திய இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனம் நடப்பது உண்மை தான்....... மறுக்க முடியாது.... அதே நேரம் முஸ்லிம்கள் என்ற நிலையில் நமக்கு ஒரு வழிகாட்டல் , வரலாறு முன்மாதிர்ரி இருக்கின்றது அல்லவா..... நபி அவர்கள் காலத்தில் பட்ட துன்பங்களில் ஒரு சதா வீதமாவது இந்த காச்மீரிகளோ, அல்லது ,மற்ற போரடுகொறோம் என கூறி அநியாயமாக பெண்கள், குழந்தைகள் போன்றவர்களை கொலை செய்யும், முஸ்லிம்கள் பட்டிருப்பார்களா ?? அவர்கள் , அப்படி கொடுமைபடுத்த்ப்பட்டும் , பலி வாங்கும் என்னத்துக்கு பதில் , பொறுமையாக இருந்து , கொடுமைபடுத்துபவர்களை கூட இறைவனின் தண்டனை இலிருந்து பாதுகாத்து சுவர்க்கத்துக்கு போக வைக்க அல்லவா முயன்றார்கள்........ ஆனால், நாம் இஸ்லாத்தின் தூய்மையான வழிகாட்டல்களை எரிந்து விட்டு , சில கேடு கேட்ட வர்களின் பேச்சால் மதீழந்து , சிந்தனை இன்றி போராட்டம் என்ற பெயரில் எதோ செய்து கொண்டு அதற்கு இஸ்லாத்தின் வழி என என பெயர் வைத்துக் கொண்டு வாழ்ந்தால் இறைவனின் உதவிக்கு பதில் சாபம் தான் வரும்........... இங்கு அநியாயமாக செத்துக் கொண்டிருக்கும் காச்மீரிகள், புத்தி இன்றி கல் எறிந்து தன் முட்டாள்தனமான வீரத்த காட்டும் ( பாலஸ்தீனிய முட்டால்போல்) செயல்களை விட்டு விட்டு ,
, தான் ஒரு முஸ்லிம் , இங்கு நமக்கு எதிரிகள் இறைவனின் தூய்மையான வழிகாட்டல்கள் செய்திகளை , மறுமையை பற்றி ஏதும் தெரியாதவர்கள் , எனவே இவர்கள் கொடுமை செய்தாலும் பரவாயில்லை , நாம் பொறுமையுடன் இருந்து இவர்களுக்கு , இறைவனின் ஏகத்துவத்தை சொல்லி, இல்லை எனில் மறுமையில் இறைவன் முன் நிற்ற்போம் , இறைவன் விசாரிப்பான் என்ற கட்டளையை சொல்லி, முடிந்தால் குர்'ஆன் இன் மொழிபெயர்ப்பை கொடுத்து அவர்களையும் இஸ்லாத்தின் செய்தியை முதலில் செவி மடுக்க செய்ய வேண்டும் , என்ற தூய்மையான சிந்தனையின் பக்கம் திசை திரும்பி , இதை அமுல் நடத்துங்கள்........ அதன் பின் பாருங்கள்...... உலகமே வியாக்கும் வண்ணம் இறைவனின் உதவி வரும்...... ஆனால் ,இதற்க்கு ஒரு உண்மையான சிந்தனை உள்ள ஒரு MUSLIMதலைவர் தேவை..... அப்படி இல்லை எனில் தனி தனித்தயாகவேனும் யோசித்து அமுல் நடத்த வேண்டும்............. இப்படி யான சிந்தனை காச்மீரிகளுக்கும், ( பாலஸ்த்தீனர்களுக்கும் ) வர நாம் பிரார்த்திக்கின்றோம்.............. 9
September 22, 2010 08:43
ஆமாம், வாருங்கள் ப்பீஸ்ஃபுல் முஸ்லிம்களே!
தாயும் சகோதரியும் மானபங்கபடுத்தப்படும் போது குர்'ஆனின் மொழிபெயர்ப்பைக் கொடுத்து அவர்களுக்கு இஸ்லாத்தின் செய்தியை முதலில் எத்தி வைப்போம்! 10
September 22, 2010 20:17
அஸ்ஸலாமு அலைக்கும்,
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின்.. அமைதியான மற்றும் அமைதியில்லாத(?) மனிதர்களே! இந்திய ராணுவம் கஷ்மீரில் மட்டும் அட்டூழியம் புரியவில்லை. மனிப்பூர் போன்ற வடகிழக்கு மாநிலங்களிலும் தான். அவர்களும் அதை எதிர்த்து போராட்டம் நடத்துகிறார்கள். சில சமயங்களில் ஆடையில்லாப் போராட்டம்(அல்லாஹ் அந்த சகோதரிகளின் மானத்தை காப்பானாக). நாம் உலகின் எங்கோ ஒரு மூலையில் சுதந்திரமாக இருந்து கொண்டு, ஃபலஸ்தீன் கஷ்மீர் உள்ளிட்ட உலகின் மற்ற பாகங்களில் தங்கள் சுதந்திரம், நிலம், மானம், செல்வம் மற்றும் உயிர்களை பறிகொடுத்து அதை மீட்பதற்காக ஏதோ ஒருவகையில் போராடும் மக்களை கொச்சைப்படுத்த நாம் தயங்குவதில்லை. கஷ்மீரிகள் ஏன் கல்லெறிகிறார்கள் என்பதை விளக்கும் கட்டுரையிலேயே அதை முட்டாள்த்தனம் என கூறவும் நாம் தயங்குவதில்லை. சிந்திக்கிறோமோ என்னவோ? "போரடுகொறோம் என கூறி அநியாயமாக பெண்கள், குழந்தைகள் போன்றவர்களை கொலை செய்யும்" இவை யாரைக் குறிப்பிடுகிறது எனத் தெரியவில்லை. கல்லெறியும் இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் குடும்பப் பெண்கள் ஆகியோரை குறிப்பிடுகிறதென்றால், மன்னிக்கவும். அத்தைகய சூழ்நிலை உங்களுக்கும் எங்களுக்கும் வராமல் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தங்களை கொடுமைப்படுத்துபவர்களுக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது, மரணிக்கும் வரை அவர்களுடனேயே இருந்து விடவில்லை. மாறாக, அல்லாஹ்வின் கட்டளைப்படி அபிசினீயாவிற்கும் மதீனாவிற்கும் ஹிஜ்ரத் செய்தார்கள். இன்றைய காலகட்டத்தில் ஹிஜ்ரத் இல்லை. அதனால், அவர்கள் அவர்களது உரிமைகளை மீட்க போராடுவது தான் சரியானது என நடுநிலையாளர்கள் கருதுகிறார்கள். "அவனவனுக்கு வந்தால் தெரியும் வாந்தியும் பேதியும் என்று சொல்வார்கள்". அதுபோல, அத்தகைய சூழ்நிலையில் எத்தகைய பொருமையுள்ளவர்களாயினும், மான ரோஷமுள்ள மனிதர்கள் என்ன செய்வார்கள் என்பதை யாரும் கணித்துவிட முடியாது என்பதே உண்மை. என் வீட்டினுள் அநியாயமாக நுழைந்து, கற்பழிப்பு கொலை கொள்ளையில் ஈடுபடுவோரை அல்லாஹ்வின் உதவி கொண்டு என்னால் இயன்றவரை எதிர்கொள்ள வேண்டுமே தவிர, அவர்களிடம் எல்லாவற்றையும் இழந்துவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க என்னால் இயலாது. (அது ஒரு நாடாகவோ அல்லது ராணுவமாகவோ இருப்பினும் சரியே). அமைதியான முஸ்லிம்களால் இயலுமா? அது எந்த அளவுக்கு சாத்தியம் என்பதுவெல்லாம் எனக்கு தெரியாது. அவ்வாறு இஸ்லாமோ அல்லது மற்ற எந்தவொரு கொள்கையுமோ சொல்லவில்லை. சும்மா எல்லாவற்றிற்கும் அல்லாஹ் பார்த்து கொள்வான், மறுமையில் முறையிடலாம் என்று சொல்வது மடமையிலும் மடமை. அது தான் தீர்வெனில், எக்காலத்திற்கும் பொருந்தும் தீனுல் இஸ்லாத்தை எதற்கு நாம் கையில் வைத்திருக்கிறோம் எனத் தெரியவில்லை. அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பாதவர்களுக்கு நரகம் நிச்சயம். அதன் பின்னர், மறுமையில் அவர்களிடம் நாம் எதை எதிர்பார்க்கின்றோம் எனத் தெரியவில்லை. காலகாலமாக தலைவர் தேவை! தலைவர் தேவை! என விளம்பரம் தான் கொடுக்கின்றோம். அத்தகைய தலைவரை இன்னும் காணவில்லை. பண்டுத்துவதற்காக எழுதப்பட்ட இது யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் அல்லாஹ்வுக்காக மன்னிக்கவும். 11
September 23, 2010 10:30
ok friends u must go and see the kashmir and told some karhmiri peoples after u may share some useful sharings and feelings
12
October 29, 2010 18:25
அட்வகேட் ஐயா,
பாமரனின் சுட்டிகளில் உள்ளவற்றைப் படித்துப் பாருங்கள்: http://pamaran.wordpress.com/2...ம்…/ http://pamaran.wordpress.com/2...ுவம/ 13
October 31, 2010 12:42
கருத்து எழுதுக :
|