சத்தியமார்க்கம்.காம்

காலித் பின் வலீத் (ரலி) print Email
இஸ்லாம் - இஸ்லாமிய நூல்கள்
செவ்வாய், 25 ஜூலை 2006 12:42

இஸ்லாமிய படைத்தளபதிகள்


காலித் பின் வலீத் (ரலி)

இஸ்லாமிய வரலாற்றில் காலித் பின் வலீத் (ரழி) ஒரு தனிச்சிறப்பிடம் உண்டு. உயரமான மலை போன்ற உறுதியான தோற்றம், மற்றும் பரந்த மார்புகள், குறிப்பிட்டுச் சொல்லும் தகுதிகளான கழுகு போன்ற கூர்ந்த பார்வை, தொலை நோக்குச் சிந்தனைத் திறன், சிறந்த அறிவாற்றல், நல்ல நினைவாற்றல் மற்றும் உயர்ந்த சிந்தனைகள், உறுதியான கொள்கைப் பிடிப்பு ஆகிய குணநலன்களை ஒருங்கே பெற்றவர் தான் காலித் பின் வலீத் (ரழி). இஸ்லாமிய போர் வரலாற்றில் இவருக்கென தனி இடம் உண்டு. இவருக்கு நிகரான குதிரை ஏற்ற வீரரும், வாள் வீச்சு மற்றும் பல்வேறு ஆயுதங்களைப் பிரயோகிக்கும் திறமை படைத்தவர்கள் கிடையாது என்று சொல்லும் அளவுக்கு வீரத்தின் விளைநிலமாகத் திகழ்ந்தார்.

உஹதுப் போர்க்களத்தில் எதிரிகளின் தரப்பில் இருந்து கொண்டு, முஸ்லிம்களை கதிகலங்கச் செய்த காலித் பின் வலீத் அவர்கள், அல் முஃதா போரிலே முஸ்லிம்கள் தரப்பில் கலந்து கொண்டு, இஸ்லாமிய எதிரிகளைக் கதிகலங்க வைத்த பெருமைக்குரியவர்.


தன்னுடைய தனித் திறமை மற்றும் போர்த்திட்டத்தின் காரணமாக ரோமர்களைப் புறமுதுகிட்டோடச் செய்து, முஸ்லிம்களுக்கு மிகப் பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த மாவீரர். ரோமும், பாரசீகமும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் படை நடத்தி வருகின்றார் என்ற செய்தி கேட்டவுடன், அவர்களின் கைகளில் இருந்த வாள் ஆட்டம் காணும் அளவுக்கு எதிரிகளின் இதயத்தில் அச்சத்தை ஊட்டிய வீரத்தின் விளைநிலம் காலித் பின் வலீத் (ரழி) ஆவார்கள்.


இறைநிராகரிப்பாளர்களின் முன்பு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பெயர் உச்சரிக்கப்படுமானால், அவர்கள் கதிகலங்கினார்கள், அவரது வலிமை மிக்க தாக்குதல்கள் அவர்களை நிலைகுலையச் செய்தன. அதன் மூலம் மிகப் பெரிய வெற்றியை இஸ்லாமியப் போர் வரலாற்றில் ஈட்டிக் கொடுத்த பெருமை காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சாரும்.

இதன் காரணமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ்வின் வாள்" என்றழைக்கக் கூடிய சைபுல்லாஹ் என்ற பட்டப் பெயரைச் சூட்டி காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பெருமைப்படுத்தினார்கள். இஸ்லாமிய வரலாற்றிலும் சரி.., இன்னும் வரக் கூடிய நாட்களின் போர் வரலாற்றிலும் சரி.., காலித் பின் வலீத் (ரழி), என்ற மாபெரும் வீரருக்கு தனிச் சிறப்பிடம் என்றென்றும் உண்டு.

வெற்றிகள் அவரது காலை வந்து முத்தமிட்டன, அவரது எதிரிகள் கூட அவரது வீரத்தை மெச்சும் அளவுக்கு அவர் தன்னிகரற்ற வீரராகத் திகழ்ந்தார்.

பிறப்பும் வளர்ப்பு;பும் மக்காவின் பனூ மக்சூம் என்ற குலத்தில் வலீத் பின் முகீரா என்பவருக்கு மகனாகப் பிறந்த காரணத்தால், அவரது பெருமைமிக்க குலப் பெருமையின் காரணமாக, இளமையிலேயே  எல்லோராலும் அறியப்படக் கூடிய மனிதராகக் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் திகழ்ந்தார்கள். அவரது இளமைக் காலத்திலேயே தூர நோக்கு, திட்டமிட்டு செயலாற்றுதல், எடுத்த காரியத்தை கனகச்சிதமாக நிறைவேற்றுதல் ஆகியவற்றின் காரணமாக பனூ மக்சூம் கோத்திரத்து வாலிபர்களில் மிகச் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தார்கள்.

உஹதுப் போர் முதல் ஹுதைபிய்யா வரைக்கும் இஸ்லாமிய எதிரிகளின் தரப்பில் இருந்த காலித் பின் வலீத் அவர்கள், இஸ்லாமிய எதிரிகளின் இராணுவத்தின் துணைப் பிரிவுக்குத் தலைவராகவும், குதிரைப் படைக்குத் தலைவராகவும் இருந்து பணியாற்றிய அனுபவமிக்க இவர், அதற்குப் பின் இஸ்லாத்தின் வெளிச்சப் புள்ளிகள் அவரது வாழ்வை வெளிச்சமேற்றியதன் காரணமாக, பின்னாளில் இஸ்லாமியப் போர்ப்படைத்தளபதியாகப் பரிணமித்தார். இஸ்லாத்தின் எதிரிகளை நிலைகுலையச் செய்து, இஸ்லாமிய சாம்ராஜ்யம் அரபுப் பிரதேசத்தை விட்டும் பரவத் துணை புரிந்தார்.

இஸ்ல்லாத்தைத் தழுவும் முன் இஸ்லாத்தினை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக கலந்து கொண்ட அத்தனை போர்களிலும் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக மார்தட்டி நின்ற காலித் பின் வலீத் அவர்கள், ஒவ்வொரு முறையும் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களது குணநலன்களால் கவரப்பட்டு, தன்னுடைய நோக்கத்தை சிறிது சிறிதாக மாற்றிக் கொண்டார். இறுதியாக இஸ்லாம் என்னும் வெளிச்சப் புள்ளி, அவரது இதயத்தைக் கவ்வி இருந்த இருளைத் துடைத்தெறிந்தது. அவரது தலைமை இஸ்லாமிய போர் வரலாற்றில் சூரியனாகப் பிரகாசித்தது.

ஒருமுறை போரின் பொழுது, நபித்தோழர்கள் பின்னிற்க இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதிய லுஹர் தொழுகையை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தார்கள். இது தான் தக்க சமயம் என்று எண்ணிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் தாக்கி, அந்தப் போரைத் தங்களுக்கு சாதகமாக ஆக்கிக் கொள்வதற்குத் தாயரானார். ஆனால் கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு படை ஒன்று, அவரைப் பின்னுக்கு இழுப்பதைப் போல உணர்ந்த காலித் பின் வலீத் அவர்கள், தன்னுடைய முயற்சியைக் கைவிட்டார்.

முஸ்லிம்களை எதிர்க்கும் துணிவையும் இழந்து விட்டார்.

மீண்டும் அஸர் தொழுகை நடந்து கொண்டிருந்தது. இந்தமுறை கண்டிப்பாக சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது என்று சூளுரைத்து, இறைத்தூதர் (ஸல்) அவர்களையும் அவர்களைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்த தோழர்களையும் நெருங்கிய பொழுது, கண்ணுக்குத் தெரியாத ஏதோ ஒரு சக்தி அவரைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டதோடு, அவரால் நகரக் கூட இயலாமல் போனது. அப்பொழுது தான் ஒரு முடிவுக்கு வந்தார், இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் மோதுவது வெட்டி வேலை, அவரை ஏதோ ஒரு சக்தி பாதுகாத்துக் கொண்டிருக்கின்றது, இந்த நிலையில் அரேபியாவை மட்டுமல்ல, அரபுப் பிரதேசத்தையும்  கடந்து இந்த முழு உலகத்தையும் அவர் ஒரு நாள் வென்று விடுவார் என்று தனக்குத் தானே கூறிக் கொண்டு, தனது முயற்சிகளைக் கை விட்டு விட்டார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் இறைநிராகரிப்பாளர்களுக்கும் ஹுதைபிய்யாவில் வைத்து உடன்படிக்கை நடந்து முடிந்ததுடன், இனி நமது நிலை என்ன? நாம் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்ற மனநிலைத் தடுமாற்றத்துக்கு உள்ளானார். அடுத்து எந்த முடிவை எடுப்பது என்ற குழப்பத்தில் தடுமாறிய காலித் பின் வலீத் அவர்கள், எத்தியோப்பியாவிற்குச் சென்று விடலாமா? என்று கூட நினைத்தார். பின் எத்தியோப்பியாவிற்கு நாம் எப்படிச் செல்வது? ஏற்கனவே, எத்தியோப்பியாவின் மன்னர் நஜ்ஜாஸி முஸ்லிம்களின் ஆதரவாளராக மாறி, முஸ்லிம்கள் அங்கு பாதுகாப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற நினைவு அவருக்கு வந்ததும் தன்னுடைய அந்த முடிவையும் மாற்றிக் கொண்டார். பின் நாம் ஹர்கல் தேசத்துக்குச் சென்று தன்னுடைய மதத்தை விட்டு விட்டு, ஒரு கிறிஸ்தவனாகவோ அல்லது யூதனாகவோ மதம் மாறி விடலாமா? என்று பல்வேறு சிந்தனைகள் அவரது மனதை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. ஆனால் எந்த முடிவுக்கும் அவரால் வர இயலவில்லை. இன்னும் எதுவாக இருப்பினும் இந்த அரேபியா மண்ணிற்குள் இருந்து தான் அந்த மாற்றம் நிகழ வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். போர், சண்டை என்று அனைத்தையும் விட்டு விட்டு அமைதியாக வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாமா? என்று பலவித நினைவுகள் அவரது நினைவை அலைக்கழித்துக் கொண்டிருந்தன, ஆனால் எதிலும் ஒரு முடிவுக்கு வர இயலாதவராக இருந்தார்.

அப்பொழுது ஏற்கனவே இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டிருந்த அவரது சகோதரர், காலித் பின் வலீத் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் தன்னுடைய சகோதரரைப் பற்றி விசாரித்தும், இன்னும் அதற்கும் மேலாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களைப் பற்றி விசாரித்தார்கள் என்ற செய்தியையும் அதில் குறிப்பிட்டிருந்ததைக் கண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு இனம் புரியாததொரு உளக் கிளர்ச்சி ஏற்பட்டது. இன்னும் காலித் பின் வலீத் அவர்கள் ஒரு நாள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்கள். அவரது அறிவு, ஆற்றல், சிந்தனைத் திறன், தொலை நோக்குப் பார்வை ஆகிய இறைவனின் அருட்கொடைகள் அனைத்தும், காலித் பின் வலீத் அவர்களை இதே நிலையில் விட்டு வைத்திருக்கப் போவதில்லை என்பதனையும் அதில், அந்த சகோதரர் குறிப்பிட்டுக் கூறியிருந்தார்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் மேலே உள்ள செய்திகள் யாவும் காலித் பின் வலீத் அவர்களை பல்வேறு சிந்தனைகளைத் தோற்றுவித்ததோடு, என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்களா? நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வேன் என்று சொன்னார்களா? எனக்கென பிரகாசமான எதிர்காலம் ஒன்று இருக்கின்றது போல் தெரிகின்றது என்று தனக்குத் தானே கூறிக் கொண்ட காலித் பின் வலீத் அவர்கள், தான் கண்ட கனவை இப்பொழுது அசை போட்டுப்  பார்க்க ஆரம்பித்தார். அடர்ந்த, காற்றோட்டம் இல்லாத குகை போன்ற இடத்தை விட்டு பச்சைப் பசேலென்ற மிகப் பரந்த பசுஞ்சோலைகளின் பக்கம் தான் மீண்டு வருவதாகக் கண்ட கனவையும், இப்பொழுது தனக்குள் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் உணர்வலைகளையும் ஒப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்தார். இனி நாம் இங்கு தங்கியிருப்பதில் பயனில்லை என்பதை உணர்ந்தவராக, இனி மதீனாவை நோக்கிச் செல்வது என்ற இறுதி முடிவை எடுத்த அவர், நாம் தனியாகப் போவதை விட, நம்முடன் யாரையாவது துணைக்கழைத்துச் செல்வது நல்லது என்று நினைத்து, யாருடன் செல்வது என்ற சிந்தனைக் குழப்பத்தில் ஆழ்ந்த பொழுது, உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களின் நினைவு வர, தனது நோக்கத்தை அவரிடம் தெரிவித்தார்.

உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் தனக்கும் அப்படியொரு நோக்கம் இருப்பதாகக் கூறிய அவர், சரி இருவரும் சேர்ந்து இணைந்தே மதீனாவிற்குச் சென்று இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்திப்பதென்று முடிவாகியது. இருவரும் மதீனா நோக்கிப் புறப்பட்ட பொழுது, இடையில் அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களைச் சந்தித்தனர். அவர், நீங்கள் இருவரும் எங்கே புறப்பட்டு விட்டீர்கள் என்று கேட்ட பொழுது, அவர்கள் தங்களது நோக்கத்தைத் தெரிவித்தார்கள். தாங்கள் மதீனா சென்று இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைச் சந்தித்து, அவர்களது கரங்களில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்கள். மதீனா செல்லும் குழுவின் எண்ணிக்கை, இரண்டு இப்பொழுது மூன்றாக மாறியது.

மூவரும் மதீனாவை ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஸஃபர் மாதம் முதல் தேதியன்று சென்றடைந்தார்கள். முதலில் இறைத்தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புன்னகை தவழ வரவேற்றார்கள். பின் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, திருக்கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். மிகவும் பாசத்துடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நோக்கிய அண்ணலார் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : காலித் பின் வலீத் (ரழி) அவர்களே....! உங்களது புத்திசாலித்தனம், கல்வி ஞானம், தொலை நோக்குப் பார்வை ஆகிய நற்பண்புகளை வைத்துக் கணித்து, என்றாவது ஒருநாள் நீங்கள் இஸ்லாத்திற்குள் நுழைவீர்கள் என்று நான் நினைத்தேன் என்றார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களே..! எனக்கு மன்னிப்பு உண்டா? என்ற கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..! நான் என்னுடைய வாள் பலத்தினால் பல்வேறு இன்னல்களையும், தீமைகளையும் புரிந்துள்ளேன். இதற்கு முன் இஸ்லாத்திற்கு நான் இழைத்த கொடுமைகளுக்காக மன்னிப்புக் கோரி இறைவனிடம் பிரார்த்தனை புரியுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்களை வேண்டிக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, இறைநிராகரிப்பில் இருந்து  கொண்டு நீங்கள் செய்த அத்தனை பாவங்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக, தானாகவே அழிந்து போய் விடுகின்றன என்று பதில் கூறினார்கள்.

இல்லை..! யா ராசூலுல்லாஹ்..! இருப்பினும், நீங்கள் எனக்காக பிரார்த்தனை செய்தாக வேண்டும் என்று மீண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வலியுறுத்தவே, இறைவா! காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பாவங்களை மன்னித்தருள்வாயாக! அவர் மீது கருணை காட்டுவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

அதன் பின்பு அம்ர் பின் ஆஸ் (ரழி) அவர்களும், பின்பு உதுமான் பின் தல்ஹா (ரழி) அவர்களும் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

கண்ட கனவு நனவாகுதல்.! பின்பு தான் கண்ட கனவைப் பற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

காரிருள் கொண்ட அறை என்பது நீங்கள் அறியாமைக்காலத்தில் இருந்து கொண்டிருந்த இறைநிராகரிப்பு என்பதாகும். பின் அதனை விட்டு வெளியேறி பரந்த புல்வெளியை நோக்கி வருவது என்பது, இறைநிராகரிப்பில் இருந்து வெளியேறி, இஸ்லாத்தினுள் நுழைவதனைக் குறிக்கும். அந்தக் கனவு நீங்கள் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதன் காரணமாக இப்பொழுது நனவாகி இருக்கின்றது என்றும், அவர்களது கனவிற்கு அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் விளக்கமளித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பயம் காரணமாகவோ அல்லது பெருமைக்காகவோ இஸ்லாத்தினை ஏற்றுக் கொள்ளவில்லை, இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்வியல் முன்மாதிரிகள் தான் அவரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கக் காரணமாக அமைந்தன. மனித குல வரலாற்றில் சத்தியத்தை நிலைநிறுத்துவதற்காக பாடுபடுகின்ற மனிதர்கள் தொலை நோக்குச் சிந்தனையுடனும், வெளிப்படையான போக்குகளுடனும் தங்களது வாழ்வை அமைத்துக் கொள்வது என்பது, அவர்களது அடிப்படை மற்றும் சிறப்புத் தன்மைகளாக இருந்து வந்துள்ளன. எனவே தான் எதனை சத்தியம் என்று ஏற்றுக் கொண்டார்களோ அதனை வெளிப்படையாக மக்களுக்குத் துணிவுடன் அறிவிக்க அல்லது எடுத்து வைக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். இந்த இரண்டு அடிப்படை அம்சங்களாகிய துணிவு மற்றும் வெளிப்படையான தன்மை ஆகிய இரண்டும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் காணப்பட்டதே, அவர்களை இஸ்லாமிய வரலாறு போற்றும் மாவீரராக உயர்த்திக் காட்டிக் கொண்டிருக்கின்றது.

அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் வரைக்கும், இஸ்லாத்தின் பரம விரோதியாகவே இருந்தார். உஹத் போரிலே முஸ்லிம்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்கக் கூடிய அந்த வாய்ப்பை தவிடு பொடியாக்கி, தான் எந்த நோக்கத்திற்காக வந்தாரோ அந்த நோக்கத்தை அடைவதில் அவர் காட்டிய உறுதி மற்றும் தீவிரப் போக்கு ஆகியவைகள் தான் முஸ்லிம்களின் வெற்றியை நிலைகுலையச் செய்தது எனலாம். இருப்பினும், அந்தப் போரில்  இறைநிராகரிப்பாளர்கள் வெற்றி பெற இயலாமல் போனதுடன், இனி நாம் முஹம்மது (ஸல்) அவர்களை வெற்றி பெற இயலாது என்ற நிலைக்கு, மன ரீதியாகத் தள்ளப்பட்டனர்.

முஸ்லிம்கள் நம்மை விஞ்சி விட்டார்கள், இனி அவர்களை நாம் எதுவும் செய்துவிட இயலாது என்று அனைத்து குறைஷித் தலைவர்களும் முடிவுக்கு வந்த பின்னரும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. மற்றவர்களது முடிவை மண்ணில் போட்டுப் புதைத்து விட்டு, ஒரு குதிரைப் படையை ஒருங்கிணைத்துக் கொண்டு மலைப் பகுதியில் புகுந்து முஸ்லிம்களை எதிர்த்துப் போரிட்டு, முஸ்லிம்களுக்கு கடுமையான சேதத்தோடு, உயிர் சேதத்தையும் அதிகம் ஏற்படுத்தி விட்டார் காலித் பின் வலீத் அவர்கள்.

இத்தகைய மனிதர் தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பும் அதே வீரத்தோடும், விவேகத்தோடும் தான் எந்த நோக்கத்தை அடைய போர் முகத்துக்கு வந்தோமோ அந்த நோக்கத்தை அடைந்து கொள்வதற்காக, வேகம் குன்றாது போரிட்டார் இந்த வீரமகன்.

அவர் தனது உயிரையும், பொருளையும், ஆவியையும் இறைமார்க்கத்திற்காக அற்பணித்து விட்டிருந்தார். அவர் என்றைக்கு இஸ்லாத்தை தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து, சத்தியத்தை மேலோங்கச் செய்யவும், அசத்தியத்தை வேரோடு சாய்க்கவும் போரிட்டுக் கொண்டே இருந்தார். இன்னும் மிகவும் கடுமையாக கால கட்டங்களில் கூட அவர், கொஞ்சம் கூட தடுமாற்றத்தை தன்னுடைய உள்ளத்தில் உலா விட்டதில்லை, நம்பிக்கையை இழந்து விடவில்லை.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீர தீர சாகசங்களை இன்றளவும் உலகம் வியந்து போற்றிக் கொண்டிருக்கின்றது. அவரது வீரம் செறிந்த அந்த தருணங்களை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, இஸ்லாத்தின் எதிரிகள் கூட போற்றும் அளவுக்கு, அவரது வீரத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். முந்தைய ஜெர்மன் படைத்தளபதியாக இருந்த ஜெனரல் அரோன் ரோம்மல் என்பவரிடம், அவருடைய வெற்றியைக் குறித்துக் கேட்ட பொழுது, நான் காலித் பின் வலீத் அவர்களது தந்திரத்தைக் கையாண்டு கொண்டிருப்பதன் மூலம் தான் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கின்றேன் என்று பதில் கூறியிருக்கின்றார்.

ரோமப் பேரரசன் சீஸரை மண்ணுக்கு இரையாக்கி வைத்தது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டமிட்ட தாக்குதல்களும், அவர் தன்னுடைய படைவீரர்களை ஒருங்கிணைத்து செயலாற்றச் செய்ததது தான், அதன் காரணமாகும்.

ரோமும், பாரசீகமும் அன்றைக்கு இருந்த செல்வச் செழிப்பில் மற்றும் இராணுவ அமைப்பில் முஸ்லிம் படை அவர்களை வெற்றி கொள்வது என்பது இயலாத காரியம் என்றே, உலகத்தின் கணிப்பு இருந்திருக்கும். ஆனால், அத்தகைய படையை மண்ணோடு மண்ணாக ஆக்கி, அவர்களது பேரரசை புழுதி படியச் செய்த வரலாற்று நிகழ்ச்சியை ஏற்படுத்திக் காட்டியவர் காலித் பின் வலீத் (ரழி). சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையே நடந்த அந்த இடையறாத போரில், இறைவனது துணை கொண்டு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வெற்றியைத் தவிர வேறெதனையும் கண்டதில்லை. தோல்வி என்பதே அவரது வரலாற்றில் இல்லை, என்ற சரித்திரத்தைப் படைத்தவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

அல் முஃதா போர் இன்றைய சிரியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதி அல் முஃதா. இந்த இடத்தில் நடந்த போர் தான் இஸ்லாமிய வரலாற்றில் முஃதா போர் என்றழைக்கப்படுகின்றது. இஸ்லாத்தைத் தன்னுடைய வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன்முதலாக இந்த முஃதா போரில் சாதாரண படை வீரராகக் கலந்து கொண்டார்கள்.

இந்தப் போரில் கலந்து கொண்ட தளபதிகள் மூவர் ஒருவர் பின் ஒருவராக வீர மரணம் அடைந்து விட, நான்காவதாக தலைமைப் பொறுப்பை ஏற்கும் பாக்கியம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் வந்தடைந்தது. அப்பொழுது, முஸ்லிம்களின் படையில் வெறும் 3000 படைவீரர்கள் தான் இருந்தனர், இன்னும் அவர்கள் மிக நீண்ட காலம் போர் செய்து சற்று களைப்படைந்தும் இருந்தனர். ஆனால் எதிரிகளின் பக்கமோ 2 லட்சம் படைவீரர்களும், இன்னும் அவர்கள் முழு ஆயுத பலத்தோடும் போருக்கு வந்திருந்தனர். அவர்களின் கண்களில் போர் கனல் தெறித்துக் கொண்டிருந்தது. பின்வரும் சம்பவத்திற்குப் பின் போர் மும்மூரமாக ஆரம்பித்தது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நம்பிக்கையைப் பெற்றதொரு தோழர், ஹாரிஸ் பின் அம்ர் அஸ்தி (ரழி). இந்தத் தோழர் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு கடிதத்தை, பஸ்ராவின் மன்னர் ஹாரிஸ் பின் அமி ஷம்மார் கஸ்ஸானி என்பவருக்கு அனுப்பி வைத்தார்கள். அவர் செல்லும் வழியில் முஃதா என்ற இடத்தில் அமைந்துள்ள சிறு நகரமான பல்கா என்ற இடத்தை இந்தத் தோழர் அடைந்தவுடன், அந்தப் பகுதியின் கவர்னராக இருந்த சர்ஜீல் பின் அம்ர் கஸ்ஸானி என்பவர், இவரின் வருகையை அறிந்து, அந்த நபித்தோழரை கைது செய்து, கொலையும் செய்து விட்டார். இந்தத் துயரச் செய்தி இறைத்தூதர் (ஸல்) அவர்களை அடைந்தவுடன், மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள். இதே காலகட்டத்தின் இன்னுமொரு நிகழ்ச்சியும் நடந்தது. அதாவது, ஒரு பதினைந்து நபர் கொண்ட முஸ்லிம்களின் குழு ஒன்று, சாத் அல் அத்லா என்ற பகுதியில் இஸ்லாமியப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பொழுது, இந்தப் பதினைந்து பேர் கொண்ட குழுவும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதே கால கட்டத்தில் ரோமப் பேரரசன் மதீனாவைத் தாக்கப் போவதாகவும் அறிவித்திருந்தான்.

எனவே, மேற்கூறிய சம்பவங்கள் தான் இந்த முஃதா போர் நடைபெறுவதற்கு முக்கியக் காரணங்களாக அமைந்தன. எனவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மிகப் பெரிய படையைத் தயார் செய்து, அந்தப் படைக்கு முதல் தளபதியாக ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், அவர் இறந்து விட்டால் பின் ஜாஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களையும், இன்னும் அவரும் வீரமரணம் எய்து விட்டால், அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்களையும் தளபதிகளாக முறையே நியமித்துக் கொள்ளும்படி, முஸ்லிம்களுக்கு அறிவுரை வழங்கி முஃதா போருக்கு முஸ்லிம் வீரர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இந்த மூன்று தளபதிகளும் மரணமடைந்து விட்டால், பின் படைவீரர்கள் தங்களுக்குள் கலந்தாலோசனை செய்து கொண்டு, தங்களுக்குள் ஒரு தளபதியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அறிவுரையும் வழங்கி அனுப்பி வைத்தார்கள்.

ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, வெள்ளைக் கொடியைத் தனது கையில் ஏந்திய வண்ணம் போர் முகத்துக்கு தனது படையை அழைத்துச் சென்று, எந்த இடத்தில் ஹாரித் பின் அம்ர் அஸ்தி (ரழி) அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்களோ, அந்த இடத்திலேயே தனது படையை இறக்கி, கூடாரம் அடித்து நிலைப்படுத்தினார்கள். இன்னும் நிலைகுலையாத தன்மையையும், எதிரிகளை எதிர்க்கும் போது தங்களது பாதங்கள் உறுதியாக இருப்பதற்கும் அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள்.

இன்னும் வயதானவர்களையும், இன்னும் குழந்தைகளையும் பெண்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். இன்னும் இந்த உலக வாழ்வை ஒதுக்கி விட்டு, இறைதியானத்தில் ஈடுபடக் கூடிய துறவிகள் மற்றும் சந்நியாசிகள் ஆகியோரையும் கொலை செய்வதைத் தடுத்தார்கள். இன்னும் நீங்கள் ஏற்றுக் கொண்ட உடன்படிக்கையை மீறாதீர்கள், நீங்கள் ஏற்றுக் கொண்ட அமானிதங்களையும் முறித்து விடாதீர்கள் என்று அறிவுரை வழங்கினார்கள். எந்தக் கட்டடம் தரை மட்டமாக்கப்படுவதையோ இன்னும் மரங்களை வெட்டி நிலத்தில் சாய்க்ப்படுவதையோ படைவீரர்கள் செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டார்கள். தங்களது தளபதியான இறைத்தூதர் (ஸல்) அவர்களது மேற்கண்ட அறிவுரையைச் செவி மடுத்த பின், உண்மையில் மிகவும் சிரமமாக கடிமானதொரு பணியை நிறைவேற்றுமுகமாக முஸ்லிம் படைவீரர்கள் போர்க்களம் நோக்கித் தங்களது பயணத்தைத் துவங்கினார்கள். கடுமையாக நிலப்பரப்புகளின் ஊடாகப் பயணித்த பின் இறுதியாக பால்கா என்ற அந்த குறிப்பிட்ட இடத்தை முஸ்லிம்கள் அடைந்தார்கள். அந்த இடத்தை அடைந்த பின்பு, அங்கு ஏற்கனவே இவர்களை எதிர்பார்த்து, ஹிர்கல் நாட்டு மன்னன் ஒரு படையை அனுப்பி வைத்திருப்பதை அறிந்து கொண்டார்கள். தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பின் கனத்தை எடை போட்டுப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களது தோழர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்ட சத்தியத்தை நிலைநாட்டுவதற்கு, தங்களது உயிர், பொருள், ஆவி அத்தனையையும் அற்பணிக்குமுகமாக களத்தில் இறங்கினாhகள்.

தளபதிப் பொறுப்பை ஏற்றிருந்த ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள், தனக்குக் கீழ் உள்ள தோழர்களின் வீரத்தை ஊக்குவிக்குமுகமாக தான் வெகு விரைவாக எதிரிப்படைகளுக்குள் ஊடுறுவிச் சென்று முன்னேறிக் காட்டினார். ஒருவர் நான்கு நபரைச் சமாளித்து, அவர்களை உற்சாகப்படுத்திக் காட்டினார். எங்கும் அழிவும், மரண ஒலமும் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. எதிரிகளை ஊடறுத்துச் சென்ற ஜைத் பின் ஹாரிதா (ரழி) அவர்கள் இப்பொழுது வீர மரணம் எய்தினார்கள். பின் ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். எதிரிகளை ஊடறுத்துச் செல்ல விரும்பிய ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்களுக்கு, எதிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்த காரணத்தால், அந்த வாய்ப்பு எளிதாக இருக்கவில்லை. எனவே, தான் ஏறி வந்த குதிரையில் இருந்து இறங்கி, எதிரிகளின் தலைகளைக் கொய்ய ஆரம்பித்தார். ஆனால், எதிhகளில் ஒருவன் அவரது வலது புஜத்தில் கடுமையானதொரு தாக்குதலைத் தொடுத்ததன் காரணமாக, அவரது வலது கரம் துண்டிக்கப்பட்டுக் கீழே விழுந்தது. வலது கரத்தில் ஏந்தியிருந்த கொடியை இடது கரத்திற்கு ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள்  மாற்றிக் கொண்டார்கள். பின் அந்த எதிரி இடது கரத்தையும் வெட்டிச் சாய்த்தான்.

இருப்பினும் தான் ஏந்திய அந்தக் கொடியை தரையில் விழ அனுமதிக்காத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள், தனது கால்களைக் கொண்டு அந்தக் கொடியை ஏந்திக் கொண்டார். இறுதியாக எதிரிப்படை வீரன் கொடுத்த அடியை தாங்கவியலாத ஜஃபர் பின் அபீதாலிப் (ரழி) அவர்கள் வீர மரணமடைந்தார்கள். இப்பொழுது, இறைத்தூதர்(ஸல்) அவர்களின் அறிவுரைப்படி, மூன்றாவது தளபதிப் பொறுப்பை அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். கீழே விழ இருந்த கொடியை கையில் ஏந்திப் பிடித்த அப்துல்லா பின் ரவாஹா (ரழி) அவர்கள், தளபதிப் பொறுப்பின் கீழ் மிகச் சிறந்த வீரத்தை காட்டி எதிரிகளைக் கலங்கடித்தபின் அவரும் வீரமரணம் எய்தினார்.

எண்ணிக்கையில் வந்த பலவீனம் தங்களது படைத்தளபதிகளில் மூவரை ஒருவர் பின் ஒருவராக இழந்து விட்டிருந்த முஸ்லிம் படைவீரர்கள், இப்பொழுது மனதளவில் சற்று நிலைகுலைந்து போயிருந்தார்கள். இன்னும் எதிரிப் படைக்கும் முஸ்லிம் படைக்கும் இடையே இருந்த எண்ணிக்கை வித்தியாசமும் அவர்களது மனோ பலத்தை சற்று அசைத்துத் தான் பார்த்துக் கொண்டிருந்தது. வெற்றி கிடைக்குமா? என்ற அச்சமும் நிலவியது. ரோமப் படையின் எண்ணிக்கையே அவர்களை இந்த எண்ணத்திற்கு இட்டுச் சென்று கொண்டிருந்தது.

இன்னும் முஸ்லிம்களின் கொடி கீழே விழக் கூடிய நிலையில், எதிரிகளின் கரங்களுக்குள் சிக்கக் கூடிய நிலையில் இருந்து தப்பித்துமிருந்தது. கீழே விழ இருந்த கொடியை தாவிப் பிடித்து கைகளில் ஏந்திக் கொண்ட தாபித் பின் அர்க்கம் (ரழி) அவர்கள், தான் ஏந்திய அந்தக் கொடியை, சற்றும் எதிர்பாராத நிலையில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கரங்களில் சேர்த்தார். அந்தக் கொடியை காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கைகளில் சேர்க்கும் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே! தயவுசெய்து இந்தக் கொடியைப் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் உங்களால் தான் தலைமைப் பொறுப்பை ஏற்று, அதனை செவ்வனே நிறைவேற்ற முடியும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.

கைகளில் கொடியைப் பிடித்துக் கொண்டு, என்னருமைத் தோழரே! இது இக்கட்டான சூழ்நிலை என்பதை நானறிவேன், ஆனால் என்னை விட நீங்கள் தான் இறைநம்பிக்கையில் முந்திக் கொண்டவரும், இன்னும் பத்ருப் போரில் கலந்து கொண்ட அனுபவமிக்கவரும் கூட.

எனவே நீங்கள் தான் தலைமைப் பொறுப்பிற்கு தகுதி வாய்ந்த நபர் என்று கனிந்த குரலில் கூறினார். இறைவன் மீது சத்தியாக..! உங்களது மன வலிமையும், உங்களது தியாகமும் அற்பணமும் ஏற்கனவே நிரூபணமானதொன்று. கீழே விழுந்த அந்தக் கொடியை தங்களது கைகளில் சேர்ப்பித்து விட வேண்டும் என்ற நோக்கமல்லாது வேறு நோக்கத்திற்காக நான் அதனை எடுத்துக் கொள்ளவில்லை. தயவு செய்து இந்தக் கொடியைப் பெற்றுக் கொண்டு, தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதன் மூலம் இந்த இக்கட்டான சூழ்நிலையை,  தங்களது அனுபவம் மற்றும் செயல்திறன், திட்டமிடும் ஆற்றல் மூலம் சமாளித்துக் காட்டுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுதல் இராணுவத் தந்திரங்கள் மூலமாக எதிரிகளை அச்சுறுத்தக் கூடிய தலைவர் ஒருவர் தான் இப்பொழுது நமது வீரர்களுக்கு தேவைப்படுகின்றார். எதிரிகளைத் துவம்சம் செய்யும் திட்டங்களுடன் நமது வீரர்களை வழிநடத்திச் சென்று, எதிரிகளை நிலைகுலையச் செய்வதன் மூலம் நமது வீரர்கள் சற்று மனவலிமை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துங்கள் என்று கேட்டுக் கொண்டார். பின் படையினரின் பக்கம் திரும்பிய அவர், என்னருமைத் தோழர்களே! காலித் பின் வலீத் (ரழி) அவர்களை நமது தலைவராக நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா? என்று கேட்டார். அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எங்களுக்கு தளபதியாகப் பொறுப்பேற்பதில் சந்தோஷமே என்று கூறினார்கள். இப்பொழுது, கொடியைக் கைகளில் ஏந்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மிகவும் உக்கிரமாக நடந்த அந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக இன்னொரு வாளை மாற்றி மாற்றி, இவ்வாறாக அந்தப் போரில் ஒன்பது வாள்களைப் பயன்படுத்தி எதிரிகளைத் துவம்சம் செய்தார்.

எதிரிகளுடன் ஒப்பிடும் பொழுது, முஸ்லிம் படைவீரர்கள் மிகக் குறைந்த அளவே இருந்தனர்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தந்திரமும், போர் திட்டங்களும் எதிரிகளின் திட்டங்களை தவிடுபொடியாக்கின. ஒரு சில முஸ்லிம் வீரர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களை மறைந்திருக்கச் செய்து, திடீரென போர்க்களத்திற்குள் நுழையுமாறு பணித்தார்கள். திடீரென ஏற்பட்ட இந்த போர்க்களச் சூழலில், ஏற்பட்ட புழுதிப் படலம் மற்றும் ஆரவாரம் எதிரிகளை நிலைகுலையச் செய்தது. திடீர் திடீர் என வந்து போர்க்களத்திற்குள் குதித்த முஸ்லிம்களைப் பார்த்த ரோமப் படைகள், புதிய படைப் பிரிவு வந்து கலந்து கொண்டிருக்கின்றது என்று நினைத்து, அச்சத்திற்குள்ளாயினர்.

ரோமப் படைவீரர்களின் இந்த மனநிலைத் தடுமாற்றத்தைத் தங்களுக்கு சாதமாகப் பயன்படுத்திக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், எதிரிகளின் வளையத்திலிருந்து தனது படைவீரர்களை பாதுகாப்பான பகுதிக்கு அனைவரையும் அப்படியே, ஒதுக்கி அழைத்துச் சென்று விட்டார்கள். இதற்கு முன்பு ரோமர்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற மமதையில் இருந்தார்கள். ஆனால், முஸ்லிம்களோ அவர்களின் ஒருவரையும் உயிருடன் போர்க்களத்திலிருந்து திருப்பி அனுப்பவில்லை. அவர்களது நம்பிக்கைக்கும் காரணமிருந்தது.

அதுவென்னவெனில், சற்று சில காலங்களுக்கு முன்பு தான் பாரசீகத்தை அவர்கள் வெற்றி கொண்டிருந்தார்கள். அந்த வெற்றிப் போதையானது, எண்ணி விடக் கூடிய அளவிற்கு இருந்த முஸ்லிம்களையும், வெகு எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற போதையை ஏற்றி இருந்தது.

இறைவன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு வழங்கியிருந்த அந்த ஆற்றல்களும், திட்டமிடல்கள், வீரம், நிலைகுலையாத தன்மை ஆகியவற்றின் காரணமாக, எதிரிகளை வென்றெடுக்கக் கூடிய ஆற்றலைத் தந்திருந்தான்.

முதல் நாள் போரிலேயே காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஒரு வாள் உடைந்து போக மறுவாள் என்று, ஒன்பது வாள்களை அவர் மாற்றி மாற்றி போர் செய்தததைப் பார்த்து விட்ட, ரோமர்கள் இனி நாம் ஒருக்காலும் வெற்றி பெற முடியாது என்ற நிலைக்கு வந்து விட்டனர். இரண்டாவது நாள் போரில், எதிரிகளுக்கு அச்சத்தை ஊட்டி, அந்த அச்சத்தைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதோடல்லாது, தனது படைவீரர்களை மீண்டும் ஒருங்கிணைத்து, எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதையும் அவர்கள் கண்டு விட்டு, இனி வெற்றி என்பது இல்லை என்ற முடிவுக்கே வந்து விட்டனர். மோசமான, மிகவும் ஆபத்தான இந்தச் சூழ்நிலையில் தனது படைவீரர்களை ஒருங்கிணைத்து அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்திச் சென்றதோடல்லாமல், எதிரிகளையும் நிலைகுலையச் செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திட்டம், இன்றைக்கும் உலகப் போர் வரலாற்றில் மறக்க முடியாத சம்பவங்களாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மக்க்கா வெற்ற்றி காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பின்பு நடந்த முக்கியமான நிகழ்ச்சி மக்கா வெற்றியாகும். இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பனூ சலீம், பனூ கஸீமா, பனூ ஃகஃப்பார் மற்றும் பனூ ஜஹீனா ஆகிய குலங்களை ஒருங்கிணைத்த படைப்பிரிவுக்கு தளபதியாக நியமித்து, மக்காவின் கதா என்ற பகுதியின் வழியாக நுழையும்படிப் பணித்தார்கள். இன்னும், மக்காவிற்குள் நுழையும் சமயத்தில் மக்கா வாசிகளில் எந்தக் குலமாவது உங்களை எதிர்த்தால் என்னுடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட பின்பு, அவர்களுடன் போர் புரியுங்கள், எந்த எதிர்ப்பும் இல்லை என்று சொன்னால், எந்த நிலையிலும் போரை நீங்களாகத் துவங்க வேண்டாம் என்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள். இன்னும் உங்களது ஒவ்வொரு முயற்சியிலும், இந்தப்புனித நகரத்தில் எந்தவித இரத்தமும் சிந்தப்படக் கூடாது, இந்த நகரத்தின் புனிதத் தன்மை கெட்டு விடாது பாதுகாப்பதில் குறியாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.

மக்கா வெற்றியின் பொழுது, 10 ஆயிரம் முஸ்லிம் வீரர்கள் கலந்து கொண்டார்கள், இந்த எண்ணிக்கையானது மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த மக்களின் எண்ணிக்கையை விட அதிகமானதாகும். எனவே மக்காவின் சூழ்நிலை இப்பொழுது இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு எதிராக ஆயுதம் தூக்கும் நிலையில் இல்லை. மக்காவை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிக எளிதாகவே எந்தவித இரத்த சிந்தப்படாது வெற்றி கொண்டார்கள்.

இருப்பினும், இக்ரிமா பின் அபீ ஜஹ்ல், சஃப்வான் பின் உமைய்யா, சஹ்ல் பின் அம்ர் ஆகியோரின் தலைமையில் திரண்ட மக்கத்து குறைஷி வாலிபர்கள், காலித் பின் தலைமையில் மக்காவிற்கு நுழைந்து கொண்டிருந்த படைப்பிரிவை தடுத்து நிறுத்தும் நோக்குடன், கந்தமா என்ற இடத்தில் திரண்டார்கள். முஸ்லிம்களின் படைப்பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்கி வருவதைக் கண்ட அவர்கள் தாங்கள் வெற்றி பெறுவோம் நம்பிக்கையை இழந்த அவர்களது, வாள்களும், ஆயுதங்களும் ஏன் பாதங்களும் கூட ஆட்டம் கண்டன. இந்தப் போரில் பனூ பக்ர் மற்றும் பனூ கதீலைச் சேர்ந்த 12 ஆண்கள் கொல்லப்பட்டார்கள். இரண்டு முஸ்லிம்கள் தங்களது பாதையைத் தவற விட்டதன் காரணமாக வேறு இடங்களுக்குப் போய் விட்டார்கள். இந்த இருவர் தான் முஸ்லிம்களின் தரப்பில் உயிரிழந்தவர்கள். இது தவிர 10 ஆயிரம் படைவீரர்களைக் கொண்ட முஸ்லிம் படை மக்காவிற்குள் எந்த எதிர்ப்பும் இன்றி, இரத்தம் சிந்தாமல் உள்ளே வெற்றியுடன் நுழைந்தது.

இந்த வெற்றி ஹிஜ்ரி 8 ல் ரமளான் மாதம் 12 ம் நாள் வெள்ளிக் கிழமை நிகழ்ந்தது.

மக்காவை வெற்றி கொண்டபின், முழு மக்காவையும் தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், பின்னர் கஃபாவிற்குள் நுழைந்தார்கள். கஃபாவிற்கு உள்ளும் புறமும் இருந்த இணைவைப்பின் அழுக்குகளை அகற்றினார்கள். அங்கிருந்த சிலைகளை அப்புறப்படுத்தினார்கள். அதன் பின் பொது மன்னிப்பை அறிவித்தார்கள்.

· யார் ஹரம் என்று சொல்லக் கூடிய கஃபா பகுதியில் நுழைந்தாரோ அவர் பாதுகாக்கப்பட்டவராவார்.

· யார் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்து விடுகின்றாரோ, அவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

· தங்களது வீட்டுக் கதவுகளைத் தாழிட்டுக் கொண்டு, வீட்டுக்குள் இருப்பவரும் பாதுகாப்புப் பெற்றவராவார்.

· இன்னும் அபூசுஃப்யானின் வீட்டிற்குள் நுழைந்து கொண்டவர்களும் பாதுகாப்புப் பெற்றவர்களாவார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களது இந்த பரந்த மனம் படைத்த அறிவிப்பின் காரணமாக, அப்பாஸ் (ரழி) அவர்களின் உதவியுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கவனத்தைக் கவர்ந்த அபூசுஃப்யான் அவர்கள், இறைத்தூதர்(ஸல்) அவர்களின் திருக்கரங்களைப் பற்றிக் கொண்டு, முழு மனதுடன் இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

முஸ்லிம்கள் புடை சூழ இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ஸீ தவா என்ற பெருவெளியில் நின்று கொண்டிருந்த பொழுது, அவர்களது கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் ஆறாய் ஓடியது. அப்பொழுது, இதே மக்காவில் தன்னை மிக அநியாயமாக ஊரை விட்டே விரட்டி விட்ட அந்த சோக நாட்களையும் நினைத்துப் பார்த்தார்கள். ஆனால் அதே நகரம் இன்றைக்கு தனது இறக்கையைத் தாழ விரித்துக் கொண்டு, தன்னை வரவேற்கத் திரண்டு நிற்பதை இட்டு, ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது. இதே நகரத்தில் தானே லாத்தையும், உஸ்ஸா வையும் தங்களது இணைத் தெய்வங்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டும், இதனை ஏற்க மறுத்து ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, அதில் சிலரது இரத்தத்தையும் இந்தப் புனித பூமியில் ஓட்டிய இவர்கள் தான் இன்றைக்கு, தங்களுக்கு முஹம்மது அவர்கள் மன்னிப்பு வழங்க மாட்டாரா? என்று ஏங்கி நிற்கின்றார்கள். இப்பொழுது உயிர்ப் பிச்சை கேட்டு நிற்கின்றார்கள்.

இன்னும் ஷாப் அபீதாலிப் என்ற கணவாயில் வைத்து, பசிக் கொடுமையில் முஸ்லிம்களை வறுத்தெடுத்தவர்களும் இவர்கள் தானே. இன்றைக்கு அதே மக்கள் தங்கள் மீது கருணை காட்டும்படி வேண்டி நிற்கின்றார்கள்.

இந்த மாற்றத்தை ஏற்படுத்தித் தந்த இறைவனுக்கு நன்றி செலுத்துமுகமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிரம் பணிந்து வெற்றியை அளித்த இறைவனுக்கு நன்றி கூறினார்கள்.

இணைவைப்பின் கோட்ப்i;டை தகர்க்க்கப்ப்படல் மக்காவிற்குப் பின் ஐந்து நாட்கள் கழித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையில் 30 முஸ்லிம் படைவீரர்களை நக்லா என்ற இடத்திற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இந்த இடத்தில் தான் மக்கத்துக் குறைஷிகளும், இணைவைப்பாளர்களும் அபயம் தேடி இருந்து கொண்டு, அங்கு உஸ்ஸா என்ற தெய்வத்திற்கு சிலை எடுத்து கோயில் ஒன்றையும் நிர்மாணித்து வைத்திருந்தனர்.

இணைவைப்பாளர்களின் இந்த கோயிலையும், அவர்கள் அபயம் புகுந்திருந்த அந்த கோட்டையையும் தகர்த்தெறியுமாறு காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சென்ற படைக்கு உத்தரவு பிறக்கப்பட்டது. மேற்கண்ட இந்த நடவடிக்கை இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் கடுமையான எதிர்விளைவை ஏற்படுத்தியிருந்தது.

அதிலும் போர்க்குணம் படைத்த, பயமறியாது போரிடக் கூடிய கன்னானா மற்றும் மஸார் குலத்தவர்களிடையே இந்த போர் நடவடிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

மேலும் இந்த உஸ்ஸா தெய்வத்திற்காக கட்டப்பட்ட கோயில், பனூ ஹிஸாம் குலத்தின் துணைக் கோத்திரமான பனூ ஷைபான் குலத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது.

இந்தப் படையெடுப்பு ஒன்றும் மிகவும் எளிதானதொரு செயலல்ல. மாறாக அது இணைவைப்பின் கோட்டையாகத் திகழ்ந்து கொண்டிருந்ததால், இறைநிராகரிப்பாளர்கள் வெகு எளிதாக அதனைக் கைப்பற்ற முஸ்லிம்களை விட்டு விட மாட்டார்கள். ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களும், அவர்களது படையினரும் கொண்ட இறைநம்பிக்கையின் தாக்கத்தால், அந்தக் கடுமையான பணியை மிக இலகுவாக முடித்துக் காட்டினார்கள். உஸ்ஸா துண்டு துண்டாக நொருக்கித் தள்ளப்பட்டது.

ஓ உஸ்ஸாவே, நீ ஒரு பொய்க் கடவுள், உனக்கு எந்தப் புகழும் கிடையாது, எந்த இறைத்தன்மையும் கிடையாது. புகழுக்குரிய நாயனான அல்லாஹ் உனது தரத்தைத் தாழ்த்தி விட்டான், எனது கைகளினால் உன்னைச் சிறுமைப்படுத்தி விட்டான் என்று முழங்கிக் கொண்டே அதனைத் துண்டு துண்டாக ஆக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், பின் அந்தத் துண்டுகளை ஒன்றிணைத்து தீ வைத்துக் கொளுத்தி விட்டார்.

மக்கா வெற்றிக்குப் பின், மக்காவைச் சுற்றிலும் உள்ள பகுதிகளுக்கு இஸ்லாத்தின் தூதைப் பற்றி எடுத்துச் சொல்வதற்காக பல்வேறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட குழு ஒன்றுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அனுப்பப்பட்டார்கள். அவ்வாறு இவரின் தலைமையின் கீழ் அனுப்பப்பட்ட குழுவில், பைஅத்துர் ரிழ்வான் என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒப்பந்தத்தின் பொழுது கலந்து கொண்ட, மதிப்புமிக்க நபித்தோழர்களான அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி), அப்துல்லா பின் உமர் (ரழி) போன்றவர்கள் இருந்தார்கள்.

பனூ கஸீமா என்றொரு நகரம் மக்காவில் இருந்து ஒரு நாள் பயண தூரத்தில் இருந்தது.

காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழு அவர்களது நகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த அந்த நகரத்து மக்கள், நகரை விட்டு வெளியே ஆயுதங்களுடன் வந்து நின்றனர். அவ்வாறு நின்ற அந்த மக்களைப் பார்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றீர்களா? என்று கேடடார்.

அதற்கு அந்த மக்கள் நாங்கள் சாபியீன்கள் - அதாவது எந்த மதத்தையும் ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் என்று கூறினார்கள். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) உடனே அந்த மக்கள் மீது போர் தொடுத்தார்கள். சிலர் கொல்லப்பட்டனர். பலர் பயந்து தங்கள் வீடுகளுக்குள் ஒளிந்து கொண்டார்கள். வெகு சீக்கிரமே அவர்களது இல்லங்களிலிருந்து வெளிக் கொணரப்பட்டு, கைது செய்யப்பட்டனர். இன்னும் மறுநாள் அவர்கள் கொலை செய்யப்பட இருக்கின்றார்கள் என்றும் கூறப்பட்டது. ஆனால் இந்த உத்தரவுக்கு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரழி) மற்றும் அப்துல்லா பின் உமர் (ரழி) போன்ற நபித்தோழர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர்களைக் கொலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். இன்னும் அந்த மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிம்களாகி விட்டவர்கள் என்று நாங்கள் கேள்விப்படுகின்றோம் என்றும் இருவரும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களிடம் கூறினார்கள்.

அவர்கள் முஸ்லிம்கள் என்று சொன்னால் ஏன் என்னிடம் சாபியீன்கள் என்று கூற வேண்டும். தயக்கமில்லாது நாங்கள் முஸ்லிம்கள் என்று அவர்கள் கூறியிருக்கலாமே என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களிடம் கருத்துத் தெரிவித்தார்கள். அவர்கள் பயன்படுத்தி சாபியீன்கள் என்ற வார்த்தை மூலம் அவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்றல்லவா தெரிகின்றது என்றும் கேட்டார்கள். இன்னும் இதனால் இவர்கள் கொலை செய்யப்பட வேண்டியவர்கள் என்று காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது கருத்தைக் கூறினார்கள்.

இமாம் இப்னு தமீமா, அல்லாமா ஐனி மற்றும் ஹாபிஸ் இப்னு ஹஜர் போன்ற அறிஞர் பெருமக்கள் கூறுவதாவது, அந்த பனூ குஸமா கோத்திரத்து மக்கள், நாங்கள் முஸ்லிம்கள் தான் என்ற பதிலைத் தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

இது தான் ஒரு படைத்தளபதியின் அடிப்படைக் குணாதிசயங்களும், பண்புகளுமாகும், அவர்கள் தங்களது நேரங்கள் விரையமாகுவதை விரும்ப மாட்டார்கள். இக்கட்டான சூழ்நிலையில் மிக விரைந்து முடிவெடுத்து, பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வருவதையே விரும்புவார்கள். எனவே தான் அவர்கள் தங்களது உதடுகளில் சாபியீன்கள் என்ற வார்த்தையை மொழிந்ததுடன், இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை என்பதை முடிவெடுத்து விட்டார், இன்னும் எந்த முஸ்லிமும் நான் இறைநம்பிக்கை கொண்டவனல்லன் என்ற பொருள் கொண்ட வார்த்தையை என்றைக்கும் மொழிய மாட்டான். எனவே தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், உடனே தனது நடவடிக்கையைத் தொடுத்து விட்டார்கள். பனூ குஸாமா குலத்தவர்களின் இந்த தவறான நடவடிக்கையின் காரணமாக அவர்கள் கடுமையான உயிர்ச் சேதங்களையும், பொருட் சேதங்களையும் அடைந்து விட்டார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்த போதிலும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை எந்த விதத்திலும் குற்றப்படுத்திப் பார்க்கவில்லை. ஏனெனில் இது முற்றிலும் தவறான புரிந்துணர்வின் காரணமாக எழுந்த நடவடிக்கை தான் என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புரிந்து கொண்டது தான் காரணமாகும். பனூ குஸாமா குலத்தவர்களுக்கு ஏற்பட்ட உயிர்ச்சேதங்களுக்கும், இன்னும் பொருட்சேதங்களையும் ஈடு செய்யும் பொருட்டு, பொருட்களையும், செல்வங்களையும் கொடுத்து அதற்கு ஈடுசெய்து விட்டு வருமாறு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அலி (ரழி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த சம்பவத்திற்குப் பின்பும், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பல போர்களுக்கு தளபதியாக நியமித்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைத்திருக்கின்றார்கள் என்பதன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் சிறப்புக்களை நாம் அறிந்து கொள்ள முடிகின்றது.

ஹ{னைன் யுத்தம் ஹ{னைன் என்பது ஒரு பெருவெளி, இது தாயிஃப் நகரத்திற்கு வடமேற்காக 40 மைல் தூரத்தில் உதாஸ் மலைக்கருகில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஹவாஸான் என்ற போர்க்குணம் படைத்த குலத்தவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இந்தப் பகுதியில் இவர்களின் கிளைக் குலத்தவர்கள் பரவி வாழ்ந்து வந்தார்கள். இவர்கள் மிகச் சிறந்த வில் வித்தையில் கெட்டிக்காரர்களும் கூட. இவர்கள் ஆரம்பம் முதலே, முஸ்லிம்களை நோக்கி எதிர்த் தாக்குதல் தொடுப்பதற்கு முயற்சி செய்து வந்தவர்கள். மக்கா வெற்றிக்குப் பின்னர் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குலத்தவர்களது நடவடிக்கைகளுக்குப் பதில் நடவடிக்கை எடுக்க விரும்பினார்கள்.

எனவே, இந்தக் குலத்தவர்களுக்கு எதிரான இந்தப் போரில் கலந்து கொள்வதற்காக பத்தாயிரம் பேர் கொண்ட படை ஒன்று மதீனாவில் இருந்து வந்திறங்கியது. இன்னும் மக்காவில் இருந்து இரண்டாயிரம் படைவீரர்கள் சேர்ந்து கொள்ள, ஆக மொத்தம் 12 ஆயிரம் படைவீரர்களுடன் ஹ{னைனை நோக்கி இஸ்லாமியப் படை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் நகர்ந்தது.

இந்தப் படையின் பல பிரிவுகளுக்கு பல தலைவர்கள் நியமிக்கப்பட்டார்கள். இதில் முஹாஜிர்களுக்குத் தலைவராக உமர் (ரழி) அவர்களும், அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த அஸீத் பின் ஹீஸைர் (ரழி) அவர்கள் கொடியை ஏந்திக் கொள்பவராகவும், சஅத் பின் இபாதா (ரழி) அவர்கள் கஸ்ரஜ் குலத்தவர்களுக்கும், இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ சலீம் குலத்தவர்களுக்கும் தலைவர்களாக நியமிக்கப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தலைமையில், ஹ{னைன் பெருவெளியை, ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு, ஷவ்வால் மாதம் 10 ஆம் நாள் அன்று அடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பப்பட்ட படை முன்னணிப் படையாக அனுப்பப்பட்டது. எதிரிகளின் படையோ வெறும் நான்காயிரம் மட்டுமே இருந்தது.

இதனைப் பார்த்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள், நிச்சயம் நாம் வெற்றி பெற்று விடுவோம் என்ற உறுதியான நம்பிக்கைக்கு வந்து விட்டார்கள். ஆனால், இதற்கு முன் நடைபெற்ற பல போர்களில் கலந்து கொண்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக இருந்த போதிலும், இறைவனின் உதவியினால் தான் நாம் அந்த வெற்றியைப் பெற்றுக் கொள்ள முடிந்தது என்ற நம்பிக்கைக்கு அவர்கள் வராமல், நாம் எண்ணிக்கையில் அதிமாக உள்ளதால் கண்டிப்பாக வெற்றி பெற்றே தீருவோம் என்ற தவறான முடிவுக்கு வந்ததன் காரணமாக, இறைவன் அங்கு சோதனையை அவர்களுக்கு ஏற்படுத்தினான். எளிதாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய வெற்றியை மிகவும் கடினமாக மாற்றிக் காட்டினான். இதனைத் தான் இறைமறைக்குர்ஆன் இவ்வாறு விளக்குகின்றது.

நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குப் பல போர்க்களங்களில் உதவி செய்திருக்கின்றான்.

(நினைவு கூறுங்கள்). ஆனால் ஹ{னைன் (போர் நடந்த) அன்று. உங்களைப் பெருமகிழ்ச்சி கொள்ளச் செய்த உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எவ்விதப் பலனும் அளிக்கவில்லை, (மிகவும்) பரந்த பூமி உங்களுக்கு (அப்போது) சுருக்கமாகி விட்டது. அன்றியும் நீங்கள் புறங்காட்டிப் பின்வாங்கலானீர்கள். பின்னர் அல்லாஹ் தன்னுடைய தூதர் மீதும், முஃமின்கள் மீதும் தன்னுடைய சாந்தியை இறக்கியருளினான். நீங்கள் பார்க்க முடியாப் படைகளையும் இறக்கி வைத்தான். (அதன் மூலம்) நிராகரிப்போரை வேதனைக்குள்ளாக்கினான் - இன்னும் இதுவே நிராகரிப்போரின் கூலியாகும். (9:25-26) பனூ தக்கீஃப் மற்றும் ஹவாஸான் ஆகிய குலத்தவர்கள் பதுங்கி இருந்து கொண்டு தாக்குதலுக்குத் தயாராக இருந்த அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் வரும் படைவீரர்கள் இவர்களது எல்லைக்குள் நுழைந்ததும், அம்பு மழையைப் பொழிய ஆரம்பித்தார்கள். நாம் வேரறுக்கப்பட்டு விட்டோம் என்று எண்ணுமளவுக்கு இறைநிராகரிப்பாளர்களின் தாக்குதல்கள் இருந்தன, இன்னும், இந்தத் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாத முஸ்லிம்கள், எதிர்த்தாக்குதலைத் தொடுப்பதை விட்டு விட்டு விரண்டோட ஆரம்பித்தார்கள். குதிரைகளும், ஒட்டகங்களும் எந்தப் பக்கம் திரும்பினவோ, அந்தப் பக்கமாக கிடைத்த வழிகளை பயன்படுத்தி ஓட்டமெடுக்க ஆரம்பித்தன. எங்கும் மரணக் கூச்சல் ஆர்ப்பரித்தது. இன்னும் ஒரு சில முஸ்லிம் வீரர்கள் தான் தங்களது தலைமைக்குக் கட்டுப்பட்டு, நிலைகுலையாமல் தங்களுடைய தலைமைகளுடன் களத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒட்டு மொத்த தளபதியாகச் சென்றிந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இப்பொழுது முஸ்லிம்களைப் பார்த்த அறைகூவல் விடுக்கலானார்கள் : நிச்சயமாக சந்தேகமின்றி, நான் இறைத்தூதராவேன். நான் அப்துல் முத்தலிப் அவர்களின் மகனுமாவேன் என்று கூறி விட்டு, உங்களது கண்களால் என்னைப் பாருங்கள், உங்களுக்கு முன்பாக நான் நின்று கொண்டிருக்கின்றேன், இன்னும் உறுதியாகவும், நிலைகுலையாமலும், இன்னும் (எதிரிகளைக் கண்டு) பயந்து ஓடாமலும்..! அப்பாஸ் (ரழி) அவர்கள் பின்பு கூவி அழைக்கலானார்கள்..! இறைநம்பிக்கையாளர்களே! எங்கே ஓடுகின்றீர்கள்? உங்களது தூதரின் பக்கம் திரும்பி வாருங்கள். வல்லமை மிக்க அல்லாஹ்வின் தூதர் உங்களை அழைக்கின்றார்! திரும்பி வாருங்கள்..! இன்னும் உங்களது தூதர் (ஸல்) பக்கம் வாருங்கள் என்று உரக்கக் கூவி அழைக்கலானார்கள்.

அப்பாஸ் (ரழி) அவர்களின் ஓங்கிய குரலோசையைச் செவிமடுத்த நபித்தோழர்கள் அனைவரும், ஆகா..! நாம் தவறு செய்து விட்டோமே..! என்று வருந்தியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மீண்டும் திரும்பி வந்தார்கள். இன்னும் அவர்கள் குரல் கொடுத்தவர்களாக..! ஓ! அல்லாஹ்வின் தூதரவர்களே! உங்களது அழைப்பைக் கேட்டு நாங்கள் திரும்பி வந்து விட்டோம் என்று மறுமொழி கூறினார்கள்.

சிதறி ஓடிய நபித்தோழர்கள் இப்பொழுது, தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டு, இழந்த சக்தியை மீண்டும் பெற்றவர்களாக எதிரிகளை நோக்கிப் பாய ஆரம்பித்தார்கள். இப்பொழுது எதிரிகள் நபித்தோழர்களின் தாக்குதல்களைச் சமாளிக்க இயலாமல், பின் வாங்கினார்கள்.

சிறிது நேரத்திற்குள்ளாக..! போர்க்களக் காட்சிகள் முற்றிலும் மாறி விட்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் கூர்மையான வாள், எதிரிகளின் படைகளை குத்திக் கீறிக் கொண்டு சென்றதோடல்லாமல், எதிர் கொண்ட அத்தனை எதிரிகளையும் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களது உரை மற்றும் இறைநம்பிக்கையின் மீது கொண்ட ஆவலில் பிறந்த உயிர்த் துடிப்பான சக்தியானது, இப்பொழுது இறைஉவப்புப் பெற்றுத் தரக் கூடிய, மரணத்தைச் சுவைத்துப் பார்ப்பதற்காக கொழுந்து விட்டெறிந்த ஆவலாக மாறியது, சிங்கத்தைப் போல எதிரிகளை எதிர்த்துப் போராடத் தூண்டியது.

இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு கடுமையான காயங்கள் ஏற்பட்டன.

இறுதியாக முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான காயங்கள், ரணத்தைத் தராமல் வெற்றியின் களிப்பை அனுபவித்துக் கொண்டிருந்தன. இன்னும், தனது அபிமானமிக்க படைத்தளபதி காயத்தால் துவண்டு கிடப்பதை காண விரைந்தார்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களைப் பார்க்க வந்ததும், அதுவே தனக்குக் கிடைத்த மிகப் பெரும் பாக்கியமாகக் கருதிய காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்கு, சந்தோஷம் கரையுடைத்துச் சென்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களது மலரிதழ்களிலிருந்து, எச்சிலை உமிழ்ந்து, காலித் பின் வலீத் (ரழி) அவர்களது காயங்களில் தடவி விட்டு, விரைந்து ஆறுவதற்கு பிரார்த்தித்தார்கள்.

ஹுனைன் போரில் வெற்றி பெற்ற பின்பு, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் சிறிது காலம் அங்கே தங்கியிருந்து, காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையையும், ஓய்வும் எடுத்துக் கொண்டார்கள். இன்னும் தோற்று ஓடிய சில எதிரிகள் தாயிஃப் நகரத்தில் திரண்டு கொண்டிருப்பதாகச் செய்தியைக் கேள்விப்பட்டார்கள். தாயிஃப் நகரம் இரண்டு மலைகளுக்கிடையில் அமைந்த, விவசாய வளமிக்க மற்றும் குளிர்ச்சியான நகரமும் கூட.

இங்குள்ள தண்ணீர் ஊற்றுக்களும், கனிவர்க்கமும், காய்கறி வர்க்கமும் பிரசித்தி பெற்றவை.

இந்த நகரம் தான் முந்தைய மக்கா வாழ்க்கையில் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் தூதை எடுத்து வைக்கச் சென்ற பொழுது, இஸ்லாத்தை இதமாக வரவேற்பதற்குப் பதிலாக, இறைத்தூதர் (ஸல்) அவர்களை சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாக்கியதோடு, இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றியது. இஸ்லாத்தைப் புறக்கணித்தது. படுகாயமடைந்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தோட்டத்திற்குள் சென்று தஞ்சமடைந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு நேர்ந்த இந்தக் கொடுமைகளையும், இரத்தம் சொட்டச் சொட்ட மரநிழலில் அமர்ந்திருப்பதைக் கண்ட வானவர்கள், உங்களைத் துன்புறுத்திய இந்த மக்களை இந்த இரு மலைகளுக்கு இடையே வைத்து நாங்கள் நசுக்கி, அழித்து விடுகின்றோம் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்ட பொழுது, அதற்கு அனுமதி மறுத்த இறைத்தூதர் (ஸல்) அவர்கள், நான் மக்களைத் துன்புறுத்துவதற்காகவோ அல்லது அழித்தொழிப்பதற்காகவோ அனுப்பப்பட்ட தூதனல்ல, இன்றில்லா விட்டாலும் நாளை இவர்களது சந்ததியினராவது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளக் கூடுமல்லவா? என்று விளக்கமளித்தார்கள். அன்றைக்கு இரத்தம் சொட்டச் சொட்ட வெளியேற்றப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், இன்றைக்கு அதே நகரத்தில் ஒரு மிகப் பெரிய படையின் தலைமைத் தளபதியாக உள்ளே நுழைகின்றார்கள். நுழைந்ததோடு மட்டுமல்லாது அன்றைய மிகப் பெரிய குலங்களாக விளங்கிய பனூ கவஸான் மற்றும் அவர்களது நட்புக் குலங்களுக்கு எதிராகவே படை நடத்தி வந்திருந்தார்கள். பனூ கவஸான்கள் முஸ்லிம்களின் மிகப் பெரிய படையைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது, பனூ தக்கீப் குலத்தவர்கள் தங்களது கோட்டைக்குள் சென்று ஒளிந்து கொண்டார்கள்.

கோட்டையை முற்றுகையிட்ட முஸ்லிம்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் வழியாக.., எதிரிகளே...! எங்களை நேரில் வந்து சந்தியுங்கள்...!! என்று அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். காலித் பின் வலீத் (ரழி) அவர்களோ சளைக்காது எதிரிகளை நோக்கி அறைகூவல் விட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களின் அறைகூவலை நேரில் வந்து சந்திக்கத் திராணியற்ற எதிரிகள் கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்து கொண்டார்கள். இன்னும் கோட்டைக்குள் ஒரு வருடத்திற்குத் தேவையான உணவுப் பொருட்கள், தண்ணீர் போன்றவற்றையும் அவர்கள் முன்பே சேகரித்தும் வைத்திருந்தார்கள்.

இதே நிலை தொடர்ந்து கொண்டிருந்த பொழுது, முற்றுகையைக் கைவிடுமாறு அபுபக்கர் (ரழி) அவர்கள் ஆலோசனை கூற, இறைத்தூதர் (ஸல்) அவர்களும் சம்மதித்த பின் முற்றுகையானது 18 நாட்களுக்குப் பின் கைவிடப்பட்டது. முற்றுகை கைவிடப்பட்ட சிறிது நாட்களுக்குள் பனூ கவாஸான் மற்றும் பனூ தக்கீப் குலத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். முற்றுகையின் பொழுது, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் காட்டிய வீரம், மற்றும் கொண்ட கொள்கையில் உறுதி, அற்பணிப்பு ஆகிய அனைத்தும் இணைந்து இஸ்லாத்தினை மேலோங்கச் செய்ய வேண்டும் என்ற அவரது உறுதியை வெளிப்படுத்திக் காட்டியது. சந்தேகமில்லாமல் ஒவ்வொரு தளபதிக்கும் இந்த பேரார்வம் இருக்க வேண்டியது அவசியமும், இன்னும் இது தான் தலைமைக்கே உரிய பண்புமாகும்.

பனூ கவஸா என்பது பனூ முஸ்தலக் என்ற குலத்தின் ஒரு கிளையினராவர். இந்தக் குலத்தவர்கள் ஹிஜ்ரி 6 ஆம் ஆண்டு வாக்கில் இஸ்லாத்தினை தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிரதிநிதி ஒருவரை அனுப்பி, அந்த மக்களிடம் ஜகாத் என்ற ஏழை வரியை வசூலித்து வரும்படி அனுப்பி வைத்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து பிரதிநிதிகளின் குழு ஒன்று வருவதை அறிந்து, அந்தக் குலத்தலைவர்கள் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளிக்கிளம்பி, புறநகர்ப் பகுதிக்கு வந்து வரக் கூடிய தலைவர்களை வரவேற்கக் காத்திருந்தார்கள். பிரதிநிதிகள் நகரை நெருங்க, அவர்களை எதிர்கொண்டழைப்பதற்க்காக தலைவர்கள் வருவதைத் தவறாகப் புரிந்து கொண்ட பிரதிநிதிகள், அவர்கள் தங்களைத் தாக்கத் தான் வருகின்றார்கள் என நினைத்து, பயந்தவர்களாக மதீனாவிற்கே மீண்டும் திரும்பி வந்து விடுகின்றார்கள். இன்னும் பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுத்து விட்டார்கள் என்ற செய்தியை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரதிநிதிகள் கூறியவுடன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பேரதிர்ச்சி அடைந்தார்கள். மேலும், இது விஷயமாக அவர்கள் மீது போர் தொடுப்பதற்கு முன்பு, காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவை அனுப்பி உண்மை நிலவரத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பியதோடல்லாமல், காலித் பில் வலீத் (ரழி) தலைமையில் ஒரு குழுவையும் அனுப்பி வைத்தார்கள். இக்குழுவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணமென்னவெனில், அவர்களின் தொலைநோக்குப் பார்வை, அறிவு மற்றும் நிரம்பிய பல தகுதிகள் தான் காரணமாகும் என்பதில் சந்தேகமில்லை.

இன்னும் அந்த மக்களைச் சந்திக்குமிடத்து எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடங்கொடாமல், நிலைமையை நன்கு அவதானித்து நடந்து கொள்ளும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி அனுப்பி வைத்தார்கள். இன்னும் பொறுமையும், சகிப்புத் தன்மையும் தான் இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படக் கூடிய நற்பண்புகளாகும் என்றும் அவர்கள் கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பனூ முஸ்தலக் குலத்தவர்களின் இருப்பிடத்தை இரவின் நடுப்பகுதியில் அடைந்தார்கள். நகரின் நிலவரத்தை சரியாகக் கணிப்பிட வேண்டும் என்று நினைத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது தோழர் ஒருவரை மாறுவேடம் அணியச் செய்து நகருக்குள் அனுப்பி வைத்தார்கள். மாறுவேடம் அணிந்து நகருக்குள் சென்ற அந்த மனிதர் திரும்பி வந்து, நிச்சயமாக அந்த மக்கள் முஸ்லிம்கள் தான். அவர்கள் அதிகாலைத் தொழுகையை பள்ளிவாசலில் நிறைவேற்றுவதைக் கண்டேன், இன்னும் அவர்கள் குறைவான மக்கள் தொகையினராகத் தான் இருக்கின்றார்கள் என்றும் கூறினார். இதனைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சந்தோஷமடைந்தவர்களாக, அவர்களது நல வாழ்வுக்காகவும், மறுமைக்காகவும் பிரார்த்தித்தார்கள்.

அதிகாலை நேரம் சற்று வெளிச்சம் பரவியதும் தானே நகருக்குள் சென்று, நகரின் முக்கியத் தலைவர்களைச் சந்தித்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், ஜகாத் கொடுக்க மறுத்ததன் காரணத்தை அவர்களிடம் வினவினார்கள். அப்பொழுது, நடந்த உண்மை விபரத்தை அந்தத் தலைவர்கள் விளக்கினார்கள். தாங்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து வந்த பிரதிநிதிகளை எதிர்கொண்டு வரவழைக்க நகரின் வெளிப்பகுதிக்கு வந்ததாகவும், நாங்கள் வருவதைப் பார்த்த அவர்கள் தாக்குதல் நடத்தத் தான் வருகின்றோம் என்று தவறாகப் புரிந்து கொண்டு, திரும்பி வந்து விட்டதாகவும் விளக்கமளித்தார்கள்.

பனூ முஸ்தலக் தலைவர்கள் தந்த விளக்கத்தைக் கேட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இன்னும் அந்த மக்களின் மார்க்க அடிப்படை அறிவு மற்றும் இஸ்லாமிய ஒழுக்க விழுமியங்களைப் பேணுவதில் அவர்கள் காட்டிய ஆர்வம் ஆகிய அனைத்தைப் பற்றியும் அறிந்து கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், திருப்தியும், சந்தோஷமும் அடைந்தார்கள்.

மதீனா திரும்பியதும் நடந்த விபரங்களை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் விளக்கிய காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அவர்கள் எந்த குற்றச்சாட்டுக்கும் உரித்தானவர்கள் அல்ல என்பதையும், ஜகாத் கொடுப்பதில் அவர்கள் ஆர்வமுள்ளவர்கள் தான் என்பதையும் விளக்கினார்கள். நாம் அனுப்பிய முந்தைய பிரதிநிதிகள் தான், நடந்த சம்பவங்களைப் பற்றி நமக்கு தெளிவான தகவல்களைத் தராமல் மாறுபட்ட தகவல்களைத் தந்திருக்கின்றார்கள் என்றும் கூறினார்கள். அப்பொழுது, இந்த நிகழ்ச்சியின் பொருட்டு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தை இறக்கி அருளினான் : முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப்படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (49:6) இங்கே நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், பனூ முஸ்தலக் குலத்தவர்கள் ஜகாத் தர மறுக்கின்றார்கள் என்ற தவறான செய்தியைக் கேள்விப்பட்டு அவர்கள் மீது போர் முஸ்தீபுகள் செய்யப்பட்டன, பின் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் சென்ற படை இதற்கான சரியான தீர்வைக் கொண்டு வந்தது, பிரச்னையை மிகவும் இலகுவாகத் தீர்த்து விட்டும் வந்தது. இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை அனுப்பி வைக்கும் பொழுது, தனது தளபதிக்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தனுப்பிய அறிவுரையும் கவனிக்கத்தக்கது. இந்த அறிவுரையானது காலித் பின் வலீத் (ரழி) அவர்களை பொறுமையாகவும், நிதானமாகவும் நடவடிக்கையை எடுக்கத் துணை புரிந்ததோடல்லாமல், அவரது தூர நோக்கு மற்றும் பிரச்னையைத் தீர்த்து வைக்கக் கூடிய பேராற்றல் ஆகியவற்றையும் வெளிப்படுத்திக் காட்டியது, இறைவனுக்கு மாறு செய்து விட்டார்களே என்று எண்ணி அவர்கள் மீது கடும் போரைத் திணக்காது நிலைமைச் சீர்தூக்கிப் பார்க்க வைத்தது. மிகப் பெரியதொரு போர் தவிர்க்கப்பட்டதோடல்லாமல், விலை மதிக்க முடியாத உயிர்கள் மற்றும் பொருட் சேதங்களும் தவிர்க்கப்பட்டன. இதே போன்றதொரு நிகழ்வு பனூ கஸீமா குலத்தவர்களிடமும் நடந்தது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கொடி நாட்டி விட்டு வந்தார்கள். அவரது அறிவு, துணிவு, பெருமை யாவும் இப்பொழுது முஸ்லிம்களை பெருமை கொள்ளச் செய்தது. அவரது தலைமையின் கீழ் பணியாற்றுவது முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கையை அளித்தது, மன உறுதியையும் அளித்தது. அவர் சென்ற இடமெல்லாம் வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் திரும்பியதில்லை. அவர் சென்ற இடமெல்லாம் இஸ்லாமியக் கொடி வானுயரப் பறக்க விடப்பட்டது. இஸ்லாத்தின் பெருமை நிலைநாட்டப்பட்டது. மிகப் பெரிய சாம்ராஜ்யங்களாக ரோமும், பாரசீகமும் அவரது வீரத்தின் முன் மண்டியிட்டு நின்றன. நிச்சயமாக, காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீரமும், தீரமும் மெச்சத்தக்க ஒன்று தான்.

தபூக் யுத்தம் தபூக் என்ற இடம் மதீனாவிற்கு வடக்கே சற்று 680 மைல்கள் தொலைவில் உள்ள இடமாகும். ஹிஜ்ரி 9 ஆம் வருடம் கடுமையான கோடையின் பொழுது, மிகச் சிரரமமானதொரு சூழ்நிலையில் வெயிலின் கொடுமை ஒரு புறம், தொடர்ந்தாற் போல பல போர்கள், இன்னும் கரடுமுரடான பாதை ஆகிய அனைத்தையும் கடந்து, தபூக் என்ற இந்த இடத்திற்கு 30 ஆயிரம் முஸ்லிம் படைவீரர்களைக் கொண்ட படையுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வருகின்றார்கள். இந்தப் பகுதியில் குடிப்பதற்குக் கூட அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காததொரு சூழ்நிலை. ஆனால் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தண்ணீர் சிறிது கசிந்து கொண்டிருந்தது. ஒளுச் செய்து தன்னைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்காக அதிலிருந்து சிறிது தண்ணீரைத் பிடித்துக் கொண்டு வரும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களை வேண்டிக் கொள்கின்றார்கள். கசிந்து வந்து கொண்டிருந்த அந்தத் தண்ணீரைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் தோழர்கள். அதிலிருந்து தனது கை, கால்கள், முகத்தையும் கழுவிக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மீதித் தண்ணீரை, எங்கே தண்ணீர் கசிந்து கொண்டிருந்ததோ அதன் மீதே திருப்பி ஊற்றி விட்டார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள். எங்கே தண்ணீரை ஊற்றினார்களோ, அங்கிருந்தே இடி போன்ற சப்தத்துடன் தண்ணீர்ச் சுனை ஒன்று பொங்கிக் கொண்டு வந்தது.

அந்தக் கோடையின் வெப்பத்தால் எங்கே தங்களது தோல்கள் வெடித்து விடுமோ என்று இறைத்தோழர்கள் நினைக்கும் அளவுக்கு அப்பொழுது வெயிலின் கொடுமை இருந்தது.

இந்த நேரத்தில் அங்கே தண்ணீர் ஊற்றுப் பொங்கி வந்தது, அவர்களது வேதனைகளையும் தீர்த்தது, இன்னும் அது அருட்கொடையாகவும் அமைந்தது. இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் வந்திருந்த அனைத்து முஸ்லிம் படைவீரர்களும் அந்தத் தண்ணீரைப் பருகினார்கள், குளித்தார்கள். இன்னும் தங்களுக்குத் தேவையான தண்ணீரைச் சேமித்தும் வைத்துக் கொண்டார்கள், இன்னும் அதனை விட இழந்த சக்தியை அதன் மூலம் மீட்டுக் கொண்டார்கள். இந்த அருட்கொடைக்காக அனைவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள், புகழ்ந்தார்கள். இப்பொழுது, முஆத் பின் ஜபல் (ரழி) அவர்களைப் பார்த்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீண்ட நாட்கள் நீங்கள் வாழ்ந்தீர்கள் என்று சொன்னால், இந்த இடத்தில் பச்சைப் பசேலென்று தோட்டங்களைக் காண்பீர்கள் என்று கூறினார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு, வார்த்தைக்கு வார்த்தை உண்மையானது. அற்புதமாக வெளிவந்த அந்த நீரூற்றிலிருந்து வெளிக்கிளம்பிய நீரானது அந்தப் பகுதியையே பச்சைப் பசேலென்ற தோட்டமாக, உயிர்த் துடிப்புள்ள பூமியாக மாற்றியது. இன்றளவும் அந்தப் பூமி பசுமையாகவே காணப்படுகின்றது. காண்போர் கண்களை குளிர்வித்து வருகின்றது. இன்னும் அன்று வெளிக்கிளம்பிய அந்த நீரூற்று இன்றளவும் தொடர்ந்து தனது அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டு வருவதோடு, அந்தப் பகுதியானது இன்றளவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தளமாகத் திகழ்ந்து வருகின்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தப் பகுதியை மக்கள் காண்பதோடு, இஸ்லாத்தின் மகத்துவத்தையும் கண்டு வருகின்றார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கை நோக்கி படை நோக்கிப் படை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, சிரியாவில் இருந்து வந்து கொண்டிருந்த வணிகக் கூட்டம் மூலம், ரோமச் சக்கரவர்த்தி முஸ்லிம்களை அழித்தொழிப்பதற்காக மிகப் பெரும் படை ஒன்றைத் திரட்டிக் கொண்டு மதீனாவிற்குள் நுழைவதற்காக தயார்படுத்தி வருகின்றார் என்ற செய்தியைக் கேள்விப்படுகின்றார்கள். இன்னும் அவர்களோடு பல அரபுக் குலத்தவர்களும் கை கோர்க்கக் காத்திருப்பதாகவும், அவர்கள் அனைவரும் சேர்ந்து முஸ்லிம்களை இந்தப் பூமிப் பந்திலிருந்து துடைத்தெறிவதற்குக் கங்கணம் கட்டி, தங்களது படைகளைத் திரட்டி வருவதாகவும் அறிந்தார்கள். இன்னும் ரோமச் சக்கரவர்த்தியின் படைகள் ஏற்கனவே மதீனாவை நோக்கிப் புறப்பட்டு விட்டதாகவும், அந்தப் படை இப்பொழுது சிரியாவின் எல்லைப் பகுதியாகிய பல்கா என்ற இடத்தை அடைந்திருப்பதாகவும் என்ற செய்தியைக் கேள்விப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ரோமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போர் புரிவதற்கு தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தத்தம் செய்தவற்கு தாயராகும்படி தனது தோழர்களுக்குக் கட்டளை இட்டார்கள்.

பயணம் மிக தூரமானதாக இருப்பதின் காரணமாக, மிக நீண்ட தொலைவுக்கு ஏற்றாற் போல உணவு மற்றும் படைத் தளவாடங்களைத் தயாரிக்கும்படி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதோடு, எதிரிகள் நமது எல்லைக்குள் நுழைவதற்குள், நாம் அவர்களை முந்திக் கொண்டு அவர்களை எதிர்நோக்க வேண்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினார்கள். எனவே அதற்கேற்றாற் போல உடனடி நடவடிக்கையை மேற்கொண்டார்கள்.

30 ஆயிரம் படை வீரர்களில் 10 ஆயிரம் குதிரைப்படை வீரர்களும் அடங்குவர். ரோமப் படை முஸ்லிம்களின் பிரதேசங்களுக்குள் நுழைவதற்குள் முஸ்லிம்களின் படை அணி, தபூக் போய்ச் சேர்ந்து விட்டது. முன்னணிப் படைக்கு காலித் பின் வலித் (ரழி) அவர்களும், வலது புற அணிக்கு தல்ஹா பின் அபய்துல்லா (ரழி) அவர்களும், இடது புற அணிக்கு அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் சென்றார்கள்.

20 நாட்கள் ரோமப் படைகளை தபூக்கில் எதிர்பார்த்து முஸ்லிம்களின் படை காத்துக் கொண்டிருந்தது. ஆனால் முஸ்லிம்களை எதிர்கொள்ளத் துணிவற்ற ரோமப் படை களத்திற்கு வரவே இல்லை. முஸ்லிம்களின் படைத்தயாரிப்புகளைப் பற்றி ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்ட ரோமப் பேரரசன் சீஸர், இது போர் செய்வதற்குத் தகுந்த தருணமல்ல என்று போரைக் கைவிட்டு விட்டான்.

போர் கைவிடப்பட்ட நிலையில், இறைத்தூதர் (ஸல்) தபூக்கைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குத் தனது தோழர்களை அனுப்பி, அங்குள்ள குலத்தவர்களுக்கு இஸ்லாத்தின் போதனை எடுத்து வைத்தார்கள். இஸ்லாத்தின் அழைப்பில் கவரப்பட்ட பல குலங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டன. இன்னும் பல கிறிஸ்தவத் தலைவர்கள் இஸ்லாத்தின் உன்னதத்தை அறிந்து கொண்டு, முஸ்லிம்களிடம் ஒப்பந்தங்களைச் செய்து கொண்டார்கள்.

இன்னும் முஸ்லிம்களின் வீரம் மற்றும் துணிவு கண்டு சிரியாவின் மன்னர் மிகவும் பிரமித்துப் போனார். முஸ்லிம்களைப் பற்றிய தாக்கம் அவரிடம் அதிகமாகியது.

தாத்து ஜன்தல் என்ற குலத்தினர் வசிக்கும் பிரதேசத்தைக் கைப்பற்றுவதற்காக 500 பேர் கொண்ட படைப் பிரிவை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அந்தக் குலத் தலைவர் அகீதர் பின் அப்துல் மாலிக் என்பவரை உயிருடன் பிடித்து இங்கு கொண்டு வாருங்கள் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். காலித் பின் வலீத் (ரழி) தலைமையில் சென்ற படையானது மிக வேகமாகப் பயணித்து, தாத்து ஜன்தலை இரவிலேயே அடைந்து விட்டார்கள். இன்னும் அந்த இடத்தை அடைந்ததும், தனது தோழர்களை மெதுவாகப் பேசிக் கொள்ளும்படியும், இன்னும் குதிரைகளை மெதுவாக நடக்க விட்டு சலசலப்பு இல்லாமல் நகரத்திற்குள் நுழையும்படியும் கட்டளையிட்டார்கள்.

இப்பொழுது, முழுச் சூழ்நிலையும் மிகவும் அமைதியாக இருந்தது. அகீதர் பின் அப்துல் மாலிக் தனது மனைவியுடன் உல்லாசமாக இருந்து கொண்டு, மதுபானத்தையும் அருந்திக் கொண்டிருந்தான். காட்டில் இருந்து ஊருக்குள் வந்ததொரு வெள்ளை நிற மிருகம் ஒன்று, கோட்டையின் கதவை தனது தலையால் முட்டிக் கொண்டிருந்தது. கதவு தட்டப்படும் ஓசையைச் செவி மடுத்த அவனது மனைவி, நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உங்களது வேட்டைப் பிராணி இப்பொழுது உங்களது கதவுக்கருகில் வந்து விட்டது, இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள், அவசரம் என்றாள். மது அருந்திக் கொண்டிருந்த அவன், மதுக்கிண்ணத்தை தரையில் வைத்து விட்டு, அம்பை எடுத்து வில்லில் பூட்டிக் கொண்டு, தனது சகோதரன் ஹஸனையும் இன்னும் தனது பணியாட்களையும் துணைக்கழைத்தான்.

தனது குதிரையின் மீது ஏறி அமர்ந்து கொண்டு, தனது வேட்டைப் பிராணியைத் தேடிப் புறப்பட்டான். அவன் ஓரடி எடுத்து வைப்பதற்குள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் அவர்களது தோழர்களும் அவனை முற்றுகையிட்டு விட்டார்கள். அவனோ தனது இரையைத் தேடி வெளியே வந்தான், ஆனால் விதியோ இங்கே அவனை இரையாக்கி வைத்து விட்டது.

அவனது சகோதரன் ஹஸன் முஸ்லிம்களை எதிர்த்து சற்று எதிர்ப்புக் காண்பித்தான், அவனால் அவனது எதிர்ப்பு பயனளிக்கவில்லை, கொல்லப்பட்டு விட்டான். ஆனால் எந்த எதிர்ப்பும் காட்டாத அகீதர் கைது செய்யப்பட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் கொண்டு செல்லப்பட்டான். ஆனால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காமல், ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியைக் கட்டும்படி உத்தரவிட்டு, அவனை விடுதலை செய்ததோடு அவனது பிரதேசத்தை அவனுக்கே விட்டுக் கொடுத்தார்கள்.

தாத்துஜன்தல் தலைவன் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட பொழுது, அவன் விலையுயர்ந்த ஆடைகளையும், அதில் விலையுயர்ந்த தங்கத்தால் நெய்யப்பட்ட கயிற்றை தலையில் அணிந்திருந்தான். இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர்கள் இந்தக் காட்சியைப் பார்த்து விட்டு, இது என்ன பெருமையும், அகங்காரமும் என்று வியந்து போனார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், என்ன ஆச்சரியமாய் இருக்கின்றதா? சுவனத்தில் சஅத் பின் முஆத் அவர்களின் கைக்குட்டையானது, இதனை விட மிகச் சிறந்தது, விலை உயர்ந்தது என்று கூறினார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகச் சிறந்த, வெற்றி வீரர் மற்றும் தளபதியாக மட்டும் அவர் பரிணமிக்கவில்லை. இன்னும் அவர் மிகச் சிறந்த இஸ்லாமிய அழைப்பாளரும் கூட.

இவரது அழைப்பின் மூலமாக பலர் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சிகளும் நடந்தேறி உள்ளன. ஹிஜ்ரி 10 ஆம் ஆண்டு, 400 படைவீரர்களுடன் காலித் பின் வலீத் (ரழி) அவர்களை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நஜ்ரான் என்ற பிரதேசத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பகுதியில் வாழக் கூடிய பனூ ஹாரிஸ் குலத்தவர்களை இஸ்லாத்தின் பால் அழைக்குமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், அங்கிருந்து கொண்டு அவர்களுக்கு இஸ்லாத்தையும், குர்ஆனையும், சுன்னாவையும் கற்றுக் கொடுங்கள். அவர்கள் மறுத்தால் அவர்கள் மீது போர்ப்பிரகடனம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நஜ்ரான் பிரதேசத்தை அடைந்தவுடன், அந்தப் பகுதி மக்களைச் சந்தித்து இஸ்லாத்தின் மேன்மைகளைப் பற்றியும், அதன் கொள்கைகளையும் பற்றியும் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மிகவும் மென்மையான முறையில் அந்த மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். இன்னும் உறுதியான குரலில் கூறினார், நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் அது தான் உங்களைப் பாதுகாக்கும், அதுவன்றி இந்த உலகத்திலும் மறுமையிலும் உங்களைப் பாதுகாக்கக் கூடிய சக்தி எதுவுமில்லை. இன்னும் இழிவிலிருந்தும், அவமானத்திலிருந்தும் உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்று கூறி அவர்களை இஸ்லாத்தின் பால் அழைத்தார். நீங்கள் எனது உரையை செவிமடுத்தால் அது உங்களுக்கு சுபிட்சத்தைக் கொண்டு வரும், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் உறுதியான குரலில்.., இல்லையெனில், இந்தப் பகுதியே குப்பைக் கிடங்காக மாற்றப்படும். இதனைக் கேட்ட நஜ்ரான் மக்கள், இனி நம்முடைய எதிர்காலம் என்பது இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதில் தான் இருக்கின்றது என்று முடிவெடுத்தவர்களாக, இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும், இடைவிடாது இஸ்லாமியப் பிரச்சாரப் பணிகள் மூலமாக மக்களை இஸ்லாத்தின் பால் அழைத்துக் கொண்டும், இன்னும் இஸ்லாத்திற்கு எதிராக கிளந்தெழுவோர்களுக்கு எதிராகப் போர் புரிந்து கொண்டும், இஸ்லாமியப் பணிக்காகத் தன்னை அற்பணித்த வாழ்வை மேற்கொண்டு வாழ்ந்து வந்தார்.

அந்த கால கட்டங்களில் எந்த தொய்வோ அல்லது நயவஞ்சக எண்ணங்களோ, பலவீனங்களோ அவரிடம் ஏற்பட்டது கிடையாது. அவர் என்றைக்கு இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டாரோ அன்றிலிருந்து இறைத்தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியும், அவர்களின் தலைமைக்குக் கீழ்ப்படிந்தும் போர்களில் கலந்து கொண்டார்.

இன்னும் போர்களில் முன்னணிப் படைத்தளபதியாக இவரை நியமித்ததன் மூலம், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் மீது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்தளவு நன்னம்பிக்கை கொண்டிருப்பார்கள் என்பது நமக்குப் புலனாகின்றது. இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணத்தை தழுவிய பொழுது, இவரைப் போன்ற வீரத்தியாகிகளின் கைகளில் இஸ்லாத்தை ஒப்படைத்து விட்டுப் போவது குறித்து, மிகவும் சந்தோஷமடைந்தார்கள்.

இந்த உலகத்தில் பல நாடுகள் தங்களுக்கு கீழ் பணியாற்றக் கூடிய படைவீரர்களுக்குக் கொடுக்கக் கூடிய பதக்கங்கள், பட்டங்கள், கேடயங்கள் ஆகிய அனைத்தையும் விடவும், இறைவனது திருப்தியும், இறைத்தூதர் (ஸல்) அவர்களது திருப்தியும் எவ்வளவு மேன்மையானது..! அந்தத் திருப்தியைத் தான் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மூலமாகப் பெற்றுக் கொண்டார்கள்.

அகில உலமெல்லாம் அருள் செய்யப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமியப் பணிக்காக அற்பணித்தவர்களாக தனது 63 வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். அவர்களது பிரிவு நபித்தோழர்களை ஒரு உலுக்கு உலுக்கி எடுத்தது, வானமே இடிந்து தலையில் வீழ்ந்து விட்டது போல நபித்தோழர்கள் உணர்ந்தார்கள்.

உமர் (ரழி) அவர்களோ..., இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறக்கவில்லை, அதனை நான் ஏற்றுக் கொள்ள முடியாது என பிடிவாதம் பிடித்தார்கள். இன்னும் எவராவது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்று சொன்னீர்கள் என்றால், எனது வாளுக்கு இறையாக நேரிடும் என்று, தனது வாளை உருவிக் கொண்டு எதிர்ப்படுபவர்களை அச்சமூட்டிக் கொண்டிருந்தார். இந்த இக்கட்டான நிலையில், அபுபக்கர் (ரழி) அவர்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு உரையை நிகழ்த்தி, அந்த அமளி துமளிகளை அடக்கிப் போட்டார். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தியைக் கேட்ட சிலர், இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். இவர்கள் இஸ்லாம் விதிக்கக் கூடிய வரம்புகளையும் சட்ட திட்டங்களையும் பேண முடியாது, பலவீனமானவர்களாக இருந்த காரணத்தால் இஸ்லாத்தை விட்டும் வெளியேறினார்கள். உண்மையிலேயே இவர்கள் இஸ்லாத்தை விரும்பவில்லை, இறைவனையும், இறைத் தூதர் (ஸல்) அவர்களையும்  நேசிக்கவில்லை. அவர்களிடம் இயற்கையிலேயே அசுத்தங்களும், கடப எண்ணங்களும் மிச்சமிருந்தன. அவர்களிடம் இஸ்லாமியப் போதனைகளின் தாக்கம் இருக்கவில்லை மாறாக, இணைவைக்கும் கொடிய பழக்கம் குடிகொண்டிருந்தது. இதுவே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மரணித்த பின்பு அவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியேறச் செய்தது. இன்னும் சிலர் ஜகாத் கொடுக்க மாட்டோம் என்று மறுத்தனர்.

இன்னும் அஸ்வத் அன்ஸி, முஸைலமா கத்தாப், பின்பு தலீஹா மற்றும் சஜ்ஜா ஆகிய குலத்தலைவர்கள், குழப்பக்காரர்களாக இவர்கள் தங்களை இறைத்தூதர்கள் எனப் பிரகடனப்படுத்திக் கொண்டார்கள். உண்மை முஸ்லிம்கள் இதனால் கலவரமடைந்தார்கள், கலங்கினார்கள். ஒரு பக்கம் தங்களது வழிகாட்டியும், தலைவருமான இறைத்தூதர் (ஸல்) அவர்களை இழந்து துக்கத்தில், அவர்களை அடுத்து யாரை தங்களது தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, யாரை கலீஃபாவாக ஆட்சித் தலைவராக நியமிப்பது என்ற கவலையில் இருந்தார்கள். இந்த பிரச்னைகளுக்கிடையில், இஸ்லாத்தினை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் போலித் தூதர்களது பிரகடனங்கள் ஆகிய அனைத்தும், முஸ்லிம்களைக் கவலையில் ஆழ்த்தியது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் அபுபக்கர் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பேற்றார்கள், அவர்கள் பொறுப்பேற்றபின்பு, நிலைகுலையாது உறுதியான திடமான பல நடவடிக்கைகள் எடுத்தார்கள், தீமைகள் பலவற்றைக் களைந்ததோடு, குழப்பக்காரர்களையும் ஒழித்தார்கள்.

குழப்பக்காரர்களுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் செய்த அபுபக்கர் (ரழி) அவர்கள், தலீஹா பின் கவாலித் மற்றும் மாலிக் பின் நவீரா என்ற போலித் இறைத்தூதர்களை எதிர்த்து காலித் பின் வலீத் (ரழி) அவர்களை படையுடன் அனுப்பி வைத்தார்கள். இன்னும் முஸைலமா பின் கத்தாப் - க்கு எதிராக இக்ரிமா (ரழி) அவர்களையும், அஸ்வத் அன்ஸி - க்கு எதிராக முஹாஜிர் பின் அபீ உமைய்யா (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இன்னும் திஹாமா பகுதியை வெற்றி கொள்வதற்காக சுவைத் பின் மக்ரான் (ரழி) அவர்களையும், இன்னும் கததா வை வெற்றி கொள்வதற்காக அம்ர் இப்னுல் ஆஸ் (ரழி) அவர்களையும் அனுப்பி வைத்தார்கள்.

இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட படைத்தளபதிகளில் தலீஹா பின் கவாலித் என்பவனை, காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் முதன் முதலாக வெற்றி கொண்டார்கள். கவாலித் என்பவன், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கின்றார்கள் என்பதைக் கேள்விப்பட்டவுடனேயே தன்னைத் தானே இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டான்.

இவனது இடத்தை அடைந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவனைக் கொன்றதோடு, இவனது ஆதரவாளர்களையும் வெற்றி கொண்டார். இதனை அடுத்து, மாலிக் பின் நவீரா என்பவனை வெற்றி கொள்வதற்காகப் புறப்பட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

அஸத், கதஃபான், தாய், ஆபஸ் மற்றும் பனூ தீபான் போன்ற குலத்தவர்கள் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாகையினால், இவர்கள் அனைவரும் அவர்களது கோத்திரத்தைச் சேர்ந்த மாலிக் பின் நவீராவை இறைத்தூதர் என்று ஏற்றுக் கொண்டதோடு, அவனை ஆதரிக்கவும், பின்பற்றவும் செய்தனர். எனவே, ஒருங்கிணைந்த இந்த கோத்திரத்தவர்களை வெற்றி கொள்வதென்பது சாதாரண விஷயமல்ல, ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அதனைச் செய்து காட்டினார்கள். அவரது இராணுவப் பயிற்சி, அனுபவம், வீரம், தந்திரங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்று திரட்டிப் போரடி வெற்றி பெற்றார். எதிரியைப் பூண்டோடு அழித்தார். போர் தொடங்குவதற்கு முன்பாக அதீ பனி ஹாதிம் அவர்கள், தாய் குலத்தவர்களுடன் பேசி தாய் குலத்தவர்களை போரிலிருந்து விலகி இருக்கச் செய்ததோடு, முஸ்லிம்களுக்கு ஆதரவாகச் செயல்பட வைத்தார்.

இந்தப் போருக்குப் பின்னர் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இஸ்லாமிய தலைமையகமான மதீனாவிற்குச் சென்றார். பின்னர் அபுபக்கர் (ரழி) அவர்களது ஆணைப்படி, அன்ஸார்களையும், முஹாஜிர்களையும் கொண்டதொரு படையை, நானும் ஒரு இறைத்தூதர் தான் என வாதாடிக் கொண்டிருந்த முஸைலமா பின் கத்தாப்பை சந்திக்க காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் அனுப்பி வைத்தார்கள். இதற்கு முன்பாக சர்ஜீல் பின் ஹஸனா (ரழி) மற்றும் இக்ரிமா (ரழி) ஆகியோர்களின் தலைமையில் சென்ற படையை முஸைலமா வெற்றி கொண்டிருந்தான். முஸ்லிம்களை வெற்றி கொண்டபின், காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் மீண்டும் ஒரு படை வருகின்றது என்ற கேள்விப்பட்ட முஸைலமா மீண்டும் 40 ஆயிரம் பேர் கொண்ட படையைத் திரட்டினான். இரண்டு படைகளும் மிகவும் உக்கிரமாக போரிட்டன. இரண்டு படைகளும் கடுமையாகப் போரிட்டதில் முஸைலமாவின் படைகள் முஸ்லிம்களுக்கு ஒரு இன்ஞ் நிலத்தைக் கூட விட்டுத் தராத அளவுக்கு போரிட்டனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்டு அதனை மதிப்பீடு செய்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், முஸ்லிம்களின் படைகளை அவரவர் குலத்தின் அடிப்படையில் பிரித்தெடுத்தார்கள். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தலைவரை நியமித்தார்கள். பின் அவர்களிடம் பந்தயம் கட்டி, யார் உங்களில் முன்னேறுகின்றார்கள் என்பதை நான் பார்த்துக் கொண்டிருப்பேன், எங்கே பார்க்கலாம் யார் எதிரிகளை ஊடறுத்து முன்னேறிச் செல்கின்றார்கள் என்பதை.., என்று உசுப்பேற்றி அவர்களது வீரத்தைத் தட்டி விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்களது திட்டம்.., நன்கு வேலை செய்ய ஆரம்பித்தது. ஒவ்வொரு குலத்தவர்களும் தங்களது குலப் பெருமையைக் காட்டிட இது தான் சந்தர்ப்பம் என்று தங்களது உடல், பொருள், ஆவி அத்தனையையும் தியாகம் செய்து போரிட்டார்கள்.

முஸ்லிம்களின் வேகத்தை எதிர்க்கத் திராணியற்ற முஸைலமா படைகளின் எதிர்ப்பு வலுவிழக்க ஆரம்பித்தது. அவர்கள் இப்பொழுது பின்வாங்கி ஓட ஆரம்பித்தார்கள். இறுதியில் தங்களது கோட்டைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டார்கள். அந்தக் கோட்டையின் சுவர்கள் மிக உயரமாக இருந்தன. அதன் கதவுகள் மிகவும் உறுதியாக இருந்தன.

எனவே, கோட்டை மீது ஏறிக் குதிக்கவோ அல்லது கதவை உடைத்துக் கொண்டு கோட்டைக்குள் செல்லவோ இயலாத நிலையில் முஸ்லிம்கள் கோட்டையை முற்றுகையிட்டு நின்று கொண்டிருந்தனர்.

நிலமையின் தீவிரத்தைப் புரிந்து கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள் தனது தோழர்களை அழைத்து என்னை கோட்டையின் உள்ளே சென்று விழும்படியாகத் தூக்கி எறியும்படி கூறினார். இறைவழியில் உயிரைத் தியாகம் செய்ய வந்த அந்தத் தோழர்கள், தங்களது தோழரின் திட்டத்தைச் செயல்படுத்த முன் வந்தனர். வலுவான நபர்கள் இணைந்து பரா பின் மாலிக் (ரழி) அவர்களைக் கோட்டையின் உள்ளே இருந்த தோட்டத்திற்குள் தூக்கி எறிந்தனர். அச்சமற்ற நிலையில் உயரே வானிலிருந்து விழுந்த மனிதரைக் கண்ட முஸைலமா வின் ஆட்கள், அச்சத்தால் நடுங்கினர். மேலும், தங்களுக்கு எதிரான படைகள் இப்பொழுது நிலத்தை விட்டு விட்டு, வானிலிருந்து இறங்கி வருவதாக நினைத்து கதிகலங்கினர். இந்தச் சூழ்நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பரா பின் மாலிக் (ரழி) அவர்கள், எதிரிகளைச் சாய்த்த வண்ணமே, கோட்டையின் கதவுப் பகுதிக்கு வந்து, கதவைத் திறந்து விட்டார். கோட்டைக் கதவு திறக்கப்பட்டதும், காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமையில் கோட்டையைச் சுற்றி முற்றுகையிட்டுக் கொண்டிருந்த இஸ்லாமியப் படைகள் இப்பொழுது கோட்டைக்குள் நுழைய ஆரம்பித்தனர்.

சற்று நேரத்திற்குள் கோட்டை முஸ்லிம்களின் வசமாகியது. முஸைலமாவும் அவனது ஆட்களும் போரில் கொல்லப்பட்டார்கள். அந்தக் கோட்டைக்குள் இருந்த தோட்டம் இப்பொழுது தண்ணீருக்குப் பதிலாக இரத்தத்தால் குளித்துக் கொண்டிருந்தது. இதனால் இந்தப் பூங்காவுக்கு மரணப் பூங்கா என்ற பெயரும் வந்தது. முஸைலமாவை வெற்றி கொண்டபின், கோட்டையின் வனப்பு மிகுந்த பகுதிகளில் இஸ்லாமியப் படைகள் சற்று ஓய்வெடுத்தனர்.

படைகள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பொழுது, அபுபக்கர் (ரழி) அவர்களிடமிருந்து வந்த ஆணை ஒன்று காலித் பின் வலீத் (ரழி) அவர்களை ஈரான் மற்றும் ஈராக் நோக்கிச் செல்ல வைத்தது. கலீஃபாவின் ஆணையைப் பெற்றுக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், 12 ஆயிரம் வீரர்களுடன் ஈராக் நோக்கிப் பயணப்பட்டார்கள். ஹிஜ்ரி 11 ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் 12 ம் நாளன்று ஈராக்கின் பள்ளத்தாக்குப் பகுதியான அப்லா வைத் தாக்கும்படி உத்தரவு வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும், அந்தப் பகுதியின் ஆட்சியாளராக ஹர்மஸ் க்கு ஒரு அழைப்பு மடல் ஒன்றை அனுப்பி வைத்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்த மடலில் கீழ்க்காணும் வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

ஓ ஹர்மஸ்! இஸ்லாத்தை ஏற்றுக் கொள்..! அல்லது இஸ்லாமிய ஆட்சியை ஏற்றுக் கொள்..! இன்னும் வரியையும் செலுத்தி விடு. இல்லையென்றால், நீ எவ்வாறு இந்த உலக வாழ்வை நேசிக்கின்றாயோ அதனை விட மரணத்தை நேசிக்கக் கூடிய கூட்டத்தை நீ சந்திப்பது என்பது தவிர்க்க இயலததாகி விடும் என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்தைப் பார்த்த ஹர்மஸ் செய்த வேலை என்னவென்றால், உடனே ஈரானுடைய பேரரசனுக்கு தகவல் அனுப்பி, மிகப் பெரிய படை ஒன்றை தனக்கு உதவியாக அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தான். அவனது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஈரான் மன்னர், ஒரு மிகப் பெரும் படையை அனுப்பி வைத்தார்.

ஆனால் காலித் பின் வலீத் (ரழி) அவர்களது தலைமையில் இப்பொழுது இருக்கக் கூடிய படைவீரர்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரமே இருந்தது. இரண்டு படைகளும் மோதவிருக்கும் வேலையில், ஹர்மஸ் பெருமையின் காரணமாக, தன்னை முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் பார்க்கலாம் என்று மார் தட்டிக் கொண்டு நின்றான்.

அவனது பெருமையை அதிக நேரம் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் நீடிக்கவிடவில்லை.

எடுத்த எடுப்பிலேயே அவன் மீது தனது வாளைப் பாய்ச்சி, இறுதி மூச்சை விடும்படி செய்தார். போர் இன்னும் ஆரம்பிக்கவில்லை, ஆனால் தனது படைத் தளபதியையே இழந்து நின்ற ஹர்மஸின் படைகள் அச்சத்தால் நடுங்க ஆரம்பித்தன. அவர்களது அச்சம் நியாயமாக்கப்பட்டது. அவர்கள் வேரறுந்த மரம் போலச் சாய்ந்தனர். முஸ்லிம்கள் வெற்றி பெற்றனர். இன்னும் கனீமத் - போர்ப் பொருட்களாக ஏராளமானவற்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டார்கள், இன்னும் ஹர்மஸ் அணிந்திருந்த விலை மதிக்க முடியாத பூ வேலைப் பாடுகளுடன் கூடிய தலைக் கவசத்தையும் முஸ்லிம்கள் போர்ப் பொருளாகப் பெற்றார்கள்.

ஒரு லட்சம் திர்ஹம் விலைமதிப்புள்ள அந்த தலைக் கவசததை அபுபக்கர் சித்தீக் (ரழி) அவர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களுக்குப் பரிசாக வழங்கி கௌரவித்தார்கள்.

எப்பொழுது இந்தப் படைத்தளபதி ஈராக்கில் நுழைந்தாரோ, அப்பொழுதே வெற்றியும் நிச்சயிக்கப்பட்டு விட்டது.

இன்னும் எல்லாப் போர்களிலும் அதாவது தாத்துஸ் ஸலாசில், வலீஜாப் போர், அலீஸ் போர், அம்கீஸிய்யா, ஹைரா, அன்பர், ஐனுல் தமர், ஹஸீர், ஃகனாஃபஸ், மஸீஃக், ஸமீல் மற்றும் ஃபரஸ் ஆகிய போர்களிலும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் போரிட்ட இஸ்லாமியப் படை வெற்றிகளைக் குவித்தது. ஈராக்கில் மட்டும் இரண்டு வருடங்கள் தங்கியிருந்து 15 போர்களில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். எதிரிகளை விட ஆள் பலத்திலும், ஆயுத பலத்திலும் குறைவாக இருந்த போதிலும், எதிரிகளைச் சந்தித்த அத்தனை போர்களிலும் முஸ்லிம்களே வெற்றி பெற்றனர்.

குறைந்த வளங்களோடு, குறைந்த கால அளவில் இந்தளவு வெற்றிகளை இன்றும் கூட எந்த படைத்தளபதியும் பெற்றதில்லை என்பதே வரலாறு.

தாதுல் சலாஸில் போர் இஸ்லாமியப் படைகள் ஈராக்கில் நடத்திய போர்களில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட முதல் போர் இந்த சலாஸில் போர் தான். இந்தப் போர் வரலாற்றில் ஹஃபீர் போர் என்றும் மாற்றுப் பெயருடன் அழைக்கப்படுகின்றது. ஹஃபீர் என்ற இந்த இடம் பெர்சிய வளைகுடாவின் அருகே அமைந்துள்ளது. மேலும் மதீனாவுக்கும் பஸராவுக்கும் இடையே உள்ள வழித்தடத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த ஹர்மெஸ் ஈரான் ஆட்சியாளர்களிடமிருந்து அதிக ஒத்துழைப்புகளையும், உதவிகளையும் பெற்றுக் கொண்டிருந்தான். ஹர்மஸ் மிகவும் அகங்காரமும், ஆணவமும் கொண்ட மன்னனும், இன்னும் அவன் தலையில் சூடியிருக்கக் கூடிய மணிமுடியில் தங்க இலைகளால் செய்யப்பட்டதும், இன்னும் வைரம், வைடூரியங்களால் அலங்கரிக்கப்பட்டதுமாக இருந்ததுடன், அதன் மதிப்பு அன்றைய திர்ஹத்தில் ஒரு லட்சம் மதிப்புடையதாகவும் இருந்தது. இந்தப் போரில் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் யானையைப் பயன்படுத்தினார்கள். அல்லாஹ்வின் மிகப் பெரிய படைப்பாகிய அந்த மிருகத்தை அந்தப் பகுதி மக்கள் அதுவரை யாரும் கண்டதில்லை என்பதால், மிகப் பெரிய விலங்கைப் பார்த்தவுடன் அவர்கள் திகிலடைந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் பத்தாயிரம் முஸ்லிம்களுடன் ஈராக் பகுதிக்குள் நுழைந்த போது, எட்டாயிரம் முஸ்லிம்களுடன் ஜாலு என்ற இடத்திலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்கள், இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களுடன் இணைந்து கொண்டார்கள். இருபடைகளுக்கும் தளபதிப் பொறுப்பேற்ற காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், மொத்த படைகளையும் மூன்று பிரிவுகளாகப் பிரித்தார்கள்.

ஒரு படைப்பிரிவுக்கு மத்னா பின் ஹாரிதா (ரழி) அவர்களையும், இன்னுமொரு பிரிவுக்கு அதீ பின் ஹாதிம் (ரழி) அவர்களையும் இன்னும் மூன்றாவது பிரிவுக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்களே தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். இந்த அனைத்துப் பிரிவுகளும் எதிரிகளை எதிர்ப்பதில் முன்னணியில் இருந்தன.

ஆனால் ஹர்முஸ் தனது படைகளை இருபிரிவுகளாகப் பிரித்து, ஒவ்வொரு பிரிவுக்கும் தளபதிகளாக அரச குடும்பத்தவர்களையே நியமித்தான். அந்த அணிகள் வலது அணி மற்றும் இடது அணி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. இன்னும் ஆண்கள் அனைவரும் போரிலிருந்து புறமுதுகிட்டு ஓடாதபடி, அனைவரும் சங்கிலியால் பிணைக்கப்பட்டனர். எனவே தான் இந்தப் போர் சலாஸில் போர் என்றழைக்கப்படுகின்றது. அரபியில் சலாஸில் என்றால் சங்கிலி என்ற அர்த்தமாகும்.

இப்பொழுது போர் ஆரம்பமாகியது. அந்தக் கால வழக்கப்படி முதலில் தனி மனிதர்கள் மோதிக் கொண்டதன் பின் தான் உக்கிரமான போர் ஆரம்பமாகும். அந்த அடிப்படையில் முதல் இரண்டு வீரர்கள் மோதிக் கொண்டார்கள். இப்பொழுது அங்கு ஒரு சதித் திட்டம் அரங்கேற்றப்பட்டது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனைச் சந்திக்கும் முறை வரும் பொழுது, ஹர்முஸ் ன் படைவீரர்கள் விரைந்து செயல்பட்டு, காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கிட வேண்டும் என்பது தான் அந்த சதித் திட்டம். அதன்படி இப்பொழுது ஹர்முஸ் மன்னனும், காலித் பின் வலீத் (ரழி) அவர்களும் மோதும் கட்டம் வந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹர்முஸ் மன்னனை நோக்கி நகரத் தொடங்கியதும், ஈராக்கிய வீரர்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் எண்ணத்துடன் முன்னேறினர். காலித் பின் வலீத் (ரழி) அவர்களைத் தாக்கும் நோக்கத்துடன் ஹர்முஸ் ன் ஆட்கள் முன்னேறுவதைக் கண்ட காகா பின் அம்ர் (ரழி) அவர்கள் விரைந்து செயல்பட்டு, அவர்களைத் தடுத்துத் தாக்கியதுடன், அந்த இடத்திலேயே ஹர்முஸ் ன் படைவீரர்கள் பலரைக் கொன்று குவித்தார். இந்த சூழ்நிலை மாற்றத்தில் சற்று நிதானமிழந்த ஹர்முஸ் ஐ க் காலித் பின் வலீத் (ரழி) தன் வாளால் செயலிழக்கச் செய்தார்கள். நிரந்தரமாக இந்த உலகத்தை விட்டே அவனை அனுப்பி வைத்தார்கள்.

32 போர் கடுமையாக நடந்தது, தலைவனை இழந்த ஹர்முஸ் - ன் வீரர்கள் தலைதெறிக்க பின்வாங்கி ஓடினார்கள். இன்னும் ஆயிரக்காண வீரர்களையும் இழந்தார்கள். எஞ்சியிருந்த படைகளை யூப்ரடிஸ் நதிக்கரை வரையிலும் விரட்டிக் கொண்டு போய் விட்டு வந்தார்கள் முஸ்லிம் வீரர்கள்.

அலீஸ் போர் அலீஸ், இந்த நகரம் யூப்ரடிஸ் நதிக் கரையின் ஓரத்தில் ஹைரா மற்றம் அப்லாஹ் ஆகிய நகரங்களுக்கு இடையே அமைந்த ஊராகும். அரபுக் குலத்தவர்கள் சிலர் இந்த நதிக்கரையில் குடியமர்ந்து கொண்டு, ஈராக் மன்னனுடன் இணைந்து முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்வதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள். முஸ்லிம்களிடம் பல முறை தோற்றதின் காரணமாக அவர்களின் மனதில் வெறுப்பு எனும் நெருப்பு கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் அந்த இடத்தை அடைந்ததும் சிறிதும் தாமதிக்காமல் தாக்குதலைத் தொடுத்தார்கள். அவர்களில் மிகப் பிரபலமான வீரரெனப் போற்றப்பட்ட மாலிக் பின் கைஸ், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாக்குதலின் முன் தாக்குப் பிடிக்க முடியாமல் மரணத்தைத் தழுவினான். மாலிக் பின் கைஸ் - ன் மரணத்தைக் கண் முன் கண்ட அவனது படைகள், தலைதெறிக்க புறமுதுகு காட்டி ஓட ஆரம்பித்தார்கள். இன்னும் அவர்கள் சாப்பிடுவதற்காக தயாரித்து வைத்திருந்த ரொட்டியைக் கூட சாப்பிடுவதற்கு நேரம் கொடுக்கவில்லை காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். அவர்கள் கொண்டு வந்திருந்த அனைத்தையும் விட்டு விட்டு ஓட்டமெடுக்க ஆரம்பித்தார்கள். இந்தப் போரில் தான் முதன் முதலாக முஸ்லிம்கள், கோதுமை மாவினால் செய்யப்படும் சப்பாத்தி போன்ற ரொட்டியைப் பார்த்தார்கள். இந்தப் போரில் எதிரிகளின் தரப்பில் 70 ஆயிரம் நபர்கள் கொல்லப்பட்டனர்.

கைரா போர் கைரா என்பது அப்போதைய ஈராக்கின் தலைநகராக விளங்கியது. இந்த நகரைக் கைப்பற்றுவதன் மூலம் முஸ்லிம்களுக்குத் தொந்திரவு கொடுத்துக் கொண்டிருந்த அரபுக் குலங்களைக் கட்டுப்படுத்த முடியும் என்பது முஸ்லிம்களின் திட்டமாக இருந்தது. எனவே, திட்டம் வகுப்பதில் தீரரான காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கைராவைக் கைப்பற்ற முடிவு செய்தார்கள். மேலும் இந்த நகரம் யூப்ரடிஸ் கதிக் கரையின் அருகே இருந்த காரணத்தினால், பயணத்திற்கு கடல் மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்தார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். முஸ்லிம் போர் வீரர்கள் கைராவை நோக்கி வருவதை அறிந்த கைராவின் கவர்னர் தனது மகனது தலைமையின் கீழ் முஸ்லிம்களை எதிர்ப்பதற்காகப் படையை அனுப்பி வைத்தார். இன்னும் கைராவை நெருங்குவதற்கு முன்பாகவே முஸ்லிம்களைத் தடுத்து நிறுத்தி விட வேண்டும் என்றும் கைராவின் கவர்கர் விரும்பினார். ஆனால், நேருக்கு நேர் நடந்த மோதலில் கைராவின் கவர்னரது மகனின் தலையைத் துண்டித்து விட்டார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள். இந்தப் போரின் போது கைராவின் கவர்னருக்கு மிகவும்  கைசேதமான நேரமாக இருந்தது, அதாவது அவரது மகன் போரில் கொல்லப்பட்டான், அவரது கூட்டு நாடாக இருந்த ஈரானின் மன்னரும் அப்போது இறந்திருந்தார். பயத்தினால் சூழப்பட்ட அவன் தானும், தனது மக்களுமாக கோட்டையைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்து கொண்டான். கைராவில் அமைந்துள்ள இந்தக் கோட்டை மிகவும் உறுதியானதும், பாதுகாப்பானதும் கூட. ஆபத்தான சமயங்களில் தற்காப்புக்கு உபயோகப்படுத்துவதற்காக இந்தக் கோட்டை அமைக்கப்பட்டிருந்தது. முஸ்லிம்கள் இந்தக் கோட்டையை ஒரு நாள் இரவு, ஒரு நாள் பகல் என முற்றுகையிட்டார்கள். சில முஸ்லிம் வீரர்கள் அந்தக் கோட்டைப் பாதுகாப்பையும் சமாளித்து உள்ளே சென்று விட்டார்கள். பின் அந்தக் கைரா மக்கள் முஸ்லிம்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அந்த சமாதான ஒப்பந்தத்தின் சரத்துக்கள் பின்வருமாறு எழுதப்பட்டன : · வருடம் ஒன்றிற்கு பாதுகாப்பு வரியாக ஒரு லட்சத்து 90 ஆயிரம் திர்ஹம்களை வரியாகச் செலுத்துவது · முஸ்லிம்களுக்காக ஈரானில் இருந்து உளவு பார்ப்பது · இதற்குப் பிரதிபலனாக அவர்களது வணக்கத்தளத்தையோ அல்லது அவர்களது உடமைகளுக்கோ எந்த சேதத்தையும் முஸ்லிம்கள் ஏற்படுத்த மாட்டார்கள் என்ற உத்தராவதம்.

தொடர்ந்து போரிட்டு வந்து கொண்டிருக்கக் கூடிய முஸ்லிம்களுக்கு ஓய்வு அளிக்கக் கூடிய இடமாக கைராவைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அங்கேயே ஒரு வருடம் தங்கியிருந்தார்கள். இன்னும் மிகப் பரந்த பிரதேசமாகிய ஈராக்கையும், அதன் சுற்றுப் புறங்களில் உள்ள பகுதிகளை ஒருங்கிணைப்பதற்காக, மிகவும் தேர்ச்சி பெற்ற படைத் தளபதிகளான தரார் பின் அஸ்வர் (ரழி), காகா பின் அம்ர் (ரழி) மற்றும் மதனா பின் ஹாரிதா (ரழி) ஆகியவர்களை அனுப்பி வைத்தார்கள். இதன் காரணமாக இஸ்லாத்தின் கொடி மிகப் பரந்த நிலப்பகுதிகளிலும் ஒளி வீச ஆரம்பித்தது.

அபுபக்கர் (ரழி) அவர்கள் மிகப் பிரபலமான தளபதிகளான அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி), யஸீத் பின் அபூசுஃப்யான் (ரழி), ஆமிர் முஆவியா பின் அபூசுஃப்யான் (ரழி), அம்ர் பின் அல் ஆஸ் (ரழி) ஆகியோர்களின் தலைமையில் ரோமப் பகுதிகளுக்கு ஒரு படையை அனுப்பி வைத்தார். இந்தப் படையின் சிரியாவின் பல பகுதிகளுக்கும் சென்றதோடல்லாமல், சென்ற பகுதிகளிலெல்லாம் இஸ்லாத்தின் வெற்றிக் கொடியை நாட்டி வைத்தது. இப்பொழுது ரோமப் படைகளுடன் மோதுவது என்ற அபுபக்கர் (ரழி) அவர்களுடைய முடிவுடன் இந்த வெற்றிகளைக் கணக்கிடும் பொழுது, இப்பொழுது சந்திக்கவிருக்கின்ற சூழல் மிகவும் பாரதூரமானதாக இருந்தது. எனவே, முஸ்லிம்களின் அனைத்துப் பிரிவும் இப்பொழுது ஒன்று சேர்ந்து யர்முக் ஆற்றங்கரையில் குழுமினர்.

முஸ்லிம்களின் இந்தப் படை நகர்த்தலைக் கேள்விப்பட்ட ரோமப் பேரரசன் ஸீஸர் தனது மந்திரிப் பிரதானிகளிடம், நிலைமையின் விபரீதத்தை இட்டு கலந்தோசனை செய்த பொழுது, இப்பொழுது நாம் முஸ்லிம்களிடம் மோத வேண்டாம் என்ற கருத்தை மன்னர் மந்திரிப் பிரதானிகளிடம் தெரிவித்தான். ஆனால் மந்திரிகளோ, மன்னரின் கருத்தை ஏற்காமல்..,  முஸ்லிம்களுக்கு நாம் ஒரு பாடத்தைக் கற்பித்துக் கொடுக்க வேண்டும், இன்னும் அந்தப் பாடத்தை அவர்களின் சந்ததிகள் கூட மறக்கக் கூடாது என்று உருமினர். இறுதியாக, மந்திரிகளின் ஆலோசனை தான் வெற்றி பெற்றது. முஸ்லிம்களின் மீது படையெடுத்துச் செல்வது என்று முடிவாகியது.

முஸ்லிம்களைக் களம் காண 4 லட்சம் ரோமப் படைவீரர்கள் தயார் செய்யப்பட்டனர்.

ஆனால் முஸ்லிம்களின் தரப்பிலோ ஒட்டு மொத்தமாக 46 ஆயிரம் படை வீரர்கள் தான் இருந்தனர். இன்னும் இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயலப்படாமல், பல்வேறு தளபதிகளின் கீழ் யர்முக் ஆற்றின் வௌ;வேறு பகுதிகளில் தனித்தனியாகப் பிரிந்திருந்தனர்.

இந்த நிலையில் யர்முக் ஆற்றின் கரைக்கு தனது படையினருடன் வந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், நிலைமையின் பாதகத்தை உணர்ந்து, அனைத்துத் தளபதிகளையும் அழைத்து ஒரு ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தினார். இதனடிப்படையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளபதியின் கீழ் போர் செய்வது என்றும், இதன் மூலம் ஒவ்வொரு தளபதிக்கும் வாய்ப்புக் கிடைக்கும் என்ற ஆலோசனை முன் வைக்கப்பட்டது. அந்த ஆலோசனையை அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்டனர். முதல் நாள் போருக்கு காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமை தாங்குவது என்றும் ஒருமனதாக முடிவாகியது.

எப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்றாற்களோ, அப்பொழுது வீரர்களின் வீரத்தையும், உயிர் தியாக வேட்கையையும் உசிப்பி விடுவதற்கானதொரு வீர உரையை அவர்களுக்கு மத்தியில் ஆற்றினார். இந்த உரையின் தாக்கம் ஒவ்வொரு வீரரின் நாடி நரம்புகளிலும் பரவி, இப்பொழுது அவர்களது தாகமெல்லாம் எதிரிகளைச் சந்திப்பதிலும், அதில் வீர மரணமடைந்து அந்த முடிவறாத சுவர்க்கத்தை அனந்தரங் கொள்வதிலும் நிலைத்திருந்தது. மற்ற உலக பந்தங்களெல்லாம் அவர்களிடம் விடை பெற்று நின்றது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்கள் : என்னருமை உயிர் தியாகிகளே..! இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள்..! மிகவும் நினைவு கூறத் தக்க நாள்..! இந்த நாளில் நமது இறைநம்பிக்கை சோதனைக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றது, அதற்கான பயிற்சி நம் முன் காத்திருக்கின்றது. எனவே, இன்றைய இந்த தினத்தில் நமது முரட்டுத்தனம், பாரம்பரியப் பெருமைகள், தனிப்பட்ட நபரின் சுயநலத்திற்காக பாடுபடுதல் அல்லது பிறர் நம்மைப் புகழ வேண்டும் என்பது போன்ற இஸ்லாத்திற்கு விரோதமான அனைத்தையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

என்னருமை உயிர் தியாகிகளே..! அல்லாஹ்வின் திருப்பொருத்தம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போரிடுங்கள்.

இன்றைக்கு நம்முடைய படைக்கு மிகப் பெரும் தளபதிகள் பலர் பொறுப்பேற்றிருக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் நன்னம்பிக்கையாளர்களும், இன்னும் நம்பத்தகுந்தவர்களாகவும், அதனை விட நீங்களும் நானும் அவர்களது உத்தரவிற்குக் கட்டுப்பட்டு நடக்கும் தகுதிபடைத்தவர்களாகவும் இருக்கின்றார்கள். இன்றைய தினம் நீங்கள் என்னுடைய பொறுப்பின் கீழ், என்னுடைய உத்தரவுக்குக் கீழ்படிந்து நடக்கக் கூடிய படைவீரர்களாக, என்னுடைய தலைமையின் கீழ் திரண்டிருக்கின்றீர்கள். இஸ்லாத்தின் பெருமையை நிலைநாட்டவும், இஸ்லாம் வெற்றி பெற்றிடவும் இப்பொழுது நாம் உயிர்த்தியாகம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு போர்க்களத்தில் நுழைய இருக்கின்றோம். நமக்கு உதவவும், நம்மைப் பாதுகாக்கவும் அல்லாஹ் ஒருவனே போதுமானவன்..! என்ற உரையை நிகழ்த்தி முடித்ததும், இரண்டு படைகளும் மோதுவதற்குத் தயாராக யர்முக் ஆற்றின் கரையில் சந்தித்துக் கொண்டன.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களைப் பார்த்த ரோமப் படைத்தளபதி மஹன் கொக்கரிக்க ஆரம்பித்தான்.

வறுமையும், ஏழ்மையும், உடுத்த உடை கூட இல்லாத நிலைமையும் தான் உங்களை இங்கு வரத் தூண்டி இருக்கும் என்று நினைக்கின்றேன். நீங்கள் விரும்பினால் உங்கள் ஒவ்வொருவருக்கும் பத்து தினார்களையும் இன்னும் விலையுயர்ந்த உடைகளையும், நல்ல உணவுகளையும் தருகின்றேன். பெற்றுக் கொண்டு இடத்தைக் காலி செய்து விட்டுச் செல்லுங்கள். இன்னும் அடுத்த வருடமும் கூட உங்களுக்கு இது போன்றே தரத் தயாராக இருக்கின்றேன். நீங்கள் இங்கு வந்து தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை, நானே உங்களிடத்திற்கு அனுப்பி வைக்கின்றேன் என்று ஏளனமாகக் கூறினான்.

ரோமப் படைத்தளபதி மஹனின் இந்த ஏளனம் மற்றும் திமிர்ப் பேச்சை செவிமடுத்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்..! மஹன்....?! கவனமாகக் கேட்டுக் கொள். நாங்கள் வந்த நோக்கத்தை நீ தவறாக எடை போட்டு விட்டாய்..! நாங்கள் எதிரியின் இரத்தத்தைக் குடித்து தாக சாந்தி அடைந்த கொள்ளத் துடிப்பவர்கள். அதிலும் ரோமர்கள் இரத்தங்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதையும் கேள்விப்பட்டோம், அதனைச் சுவைத்துப் பார்க்கவே இங்கு வந்தோம் என்று உரத்துக் கூறினார்.

இதனைக் கூறிக் கொண்டே தனது குதிரையைக் காற்றில் பறக்க விட்ட காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், அல்லாஹு அக்பர் என உரத்து முழங்கி இஸ்லாத்தின் கொடியை உயர்த்திப் பிடித்தார், அத்துடன் எதிரியைத் தாக்க ஆரம்பிக்குமாறு முஸ்லிம்களுக்கு உத்தரவும் பறந்தது. ஏற்கனவே, வெற்றி அல்லது வீர மரணம் என்று களம் புகுந்திருந்த முஸ்லிம்கள், உத்தரவு கிடைத்ததும் தான் தாமதம், தங்களது நோக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்க ஆரம்பித்தார்கள்..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் தனது தோழர்களைப் பார்த்து உரக்க முழங்க ஆரம்பித்தார்.

எனது தோழர்களே..! சுவனத்தின் தென்றல் காற்று இதமாக வீசுவதை நீங்கள் உணரவில்லையா..! அதன் குளிர்ச்சி உங்களை மகிழ்விக்கக் காத்திருப்பதை நீங்கள்  அறியவில்லையா..! வெற்றியும், நற்பேறுகளும் காத்திருக்கின்றன..! ம்...! முன்னேறுங்கள்..! என்று தனது தோழர்களுக்கு ஊக்க மருந்து கொடுக்க ஆரம்பித்தார்.

சுவனத்துச் சோலைகளின் அழகையும், வனப்பையும் திருமறைக் குர்ஆன் வசனங்களின் மூலம் ஏற்கனவே மனக் கண்களால் தரிசித்து வைத்திருந்த முஸ்லிம்கள், அதனை நித்தியமாக அடைந்து கொள்வதற்கு இப்பொழுது முழு முயற்சியை மேற்கொண்டார்கள்.

அதற்கு உத்வேகமளித்தது தளபதி காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் உணர்ச்சி மிக்க உரை.

வீரத்தின் விளை நிலங்கள் இப்பொழுது கூலிக்கு மாறடிக்கும் கூட்டத்தினரை பதம் பார்க்க ஆரம்பித்தார்கள். எங்கும் குழப்பமும், மரண ஓலங்களும் ஒலித்திட என்ன செய்வதென்றே தெரியாது ரோமப் படைகள் விழி பிதுங்க ஆரம்பித்தன. உணர்ச்சி மிக்க உரையை நிகழ்த்தி விட்டு, தானும் அந்த உயரிய அந்தஸ்தை அடைய வேண்டுமே என்ற நோக்கத்தை மனதில் தேக்கி வைத்திருந்த காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், தனது நோக்கத்தை செயலில் அடைந்து காட்ட அவரும் வலது பக்கமாக இருந்து எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு எதிரிகளின் மையப் பகுதிக்கே சென்று விட்டார். அத்துடன் மின்னலென வீசப்பட்ட அவரது வாள் வீச்சு, எதிரிகளின் தோல்விக்கு முடிவுரை எழுத ஆரம்பித்தது.

முதல் நாள் போரில் ரோமர்கள் தங்களது கூலிப் பட்டாளத்தில் ஒரு லட்சத்து இருபதாயிரம் வீரர்களை இழந்திருந்தார்கள்.

யர்முக் போர்க்களத்தின் முக்கியக் த்காட்ச்சிகள் சில..! வீர மரணம் அடைந்து அந்த சுவனத்துத் தென்றலை முகர்ந்து பார்த்து விட வேண்டும் என்ற துடிப்பு யர்முக் போர்க்களத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு முஸ்லிம் வீரரிடத்திலும் காணப்பட்டது. அவர்களது அந்த ஆசையை ஏற்கனவே காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் வீர உரை கிளறி விட்டிருந்தது.

ஒரு வீரர் அபூ உபைதா பின் அல் ஜர்ராஹ் (ரழி) அவர்களிடத்தில் வருகின்றார்..! அபூ உபைதா அவர்களே..! இன்று நடக்கக் கூடிய போரில் நான் வீர மரணமடைய வேண்டும் என்ற ஆசை என்னை மேலிடுகின்றது. அவ்வாறு நான் வீர மரணமடைந்து விட்டால், இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நான் என்ன கூற வேண்டும் என்பதைக் கூறுங்களேன் என்று வினவி நின்றார்.

கண்ணியமிக்க, புகழுக்குரியோனாகிய அல்லாஹ்..! இந்தப் போர்ப் புலிகளுக்கு, வீரத்தியாகிகளுக்கு வாக்களித்ததை நிறைவேற்றி விட்டான் என்று கூறுங்கள் என்று பதில் கூறினார் அபூ உபைதா (ரழி) அவர்கள்.

அபூ உபைதா (ரழி) அவர்களின் இந்தப் பதிலைக் கேட்ட, இக்ரிமா என்ற அந்தத் தோழர், அபூ உபைதா (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தினை எனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொள்ளுமுன் இறைநிராகரிப்பாளர்களின் கூடாரத்தில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிராகக் கலந்து கொண்ட போர்களில் கூட நான் புறமுதுகிட்டு ஓடாதவன். இன்றைக்கு சுவனம் என்னை அழைக்கும் பொழுது நான் திரும்பியா ஓடி விடுவேன்..! இல்லை இல்லை..! என்று கூறியவாறே..! எனது தோழர்களே..! என்னைப் பின்பற்றி வாருங்கள் என்று கூவியவாறே..! தனது தோழர்களை அழைத்துக் கொண்டு எதிரிகளை ஊடறுத்துக் கொண்டு வாளைச் சுழற்றிக் கொண்டே சென்றார். சற்று நேரத்திற்கெல்லாம் எதிரியின் வாள் இக்ரிமா (ரழி) அவர்களைப் பதம் பார்க்க, சுவனத்தின் சுகந்தத்தை.., அவர் அடைய நினைத்த அந்த குளிர்ச்சியான சோலைகளுக்குள் நுழைந்து விட்டார்.

போர் உக்கிரமமான முறையில் நடந்து கொண்டிருந்தது. இரவும் தொடர்ந்து நீடித்தது.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் எதிரியின் முகாமிற்குள்ளேயே நுழைந்து, ரோமப் படைத்தளபதியின் கூடாரத்திற்குள் நுழைந்து விட்டார். இப்பொழுது எதிரிகள் உயிர் தப்பினால் போதுமென்று ஓட ஆரம்பித்திருந்தனர். இரவு நடந்த போரில் எதிரிகளை விரட்டி விரட்டி, அவர்களது தலைகளை முஸ்லிம்கள் கொய்தனர். முஸ்லிம்களில் பலருக்கும் கடுமையான காயம் ஏற்பட்டிருந்தது.

இன்னுமொரு சம்ப்பவம்.;..! இந்த யர்முக் போரில் தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடத்தில் ஏற்படுத்தி வைத்திருந்த சகோதரத்துவமும், இன்னும் தியாகமும் மீண்டும் ஒரு முறை வெளிப்பட்டது.

வரலாற்றிலும் இந்த சம்பவம் நிலைத்து விட்டது. இன்றைக்கும் என்றைக்கும் முஸ்லிம்களுக்கு ஒரு பாடமாகவும் அமைந்து விட்டது.

போர் நடந்து கொண்டிருக்கின்றது. மூன்று முஸ்லிம் வீரர்கள் கடுமையான காயம் பட்டு, உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றார்கள். தாகம் அவர்களை வாட்டிக் கொண்டிருக்கின்றது. இதனைப் பார்த்த ஒருவர், அவர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதற்காக அருகில் சென்றால், அவர் தனக்கு அருகில் தாகத்தோடு போராடிக் கொண்டிருப்பவருக்கு முதலில் தண்ணீர் கொடுக்கும்படி கூறுகிறார். அவரிடம் தண்ணீர் கொடுக்கச் சென்றால், தன்னை அடுத்து தாகத்தால் வாடிக் கொண்டிருக்கக் கூடியவருக்கு முதலில் தண்ணீர் கொடுத்து வரும்படிக் கூறுகிறார். இவ்வாறாக, தனக்குத் தேவையிருந்தும் தன்னுடைய சகோதரனின் தேவைக்கு முக்கியவத்தும் அளித்தார்கள். மீண்டும் மூன்றாமவருக்கு அருகில் சென்று தண்ணீர் கொடுக்கச் சென்ற பொழுது, அவர் முதல் நபருக்குத் தண்ணீர் கொடுத்து வருமாறு கேட்டுக் கொள்ள, இவ்வாறாக தண்ணீரை யாருக்கும் கொடுக்க இயலாமல் சுற்றிச் சுற்றி வந்த பொழுது, இறுதியில் தண்ணீர் குடிக்காமலேயே மூவரும் மரணமடைந்து விட்ட காட்சி அங்கே நடந்தது. இன்றளவும் அந்தக் காட்சி வரலாறாக ஏடுகளில் பதிவாகி, வரக் கூடிய சந்ததியினருக்கு நற்பாடமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது.

இன்னுமொரு சுவாரஸ்ய்யமான சம்ப்பவம்.;..! இந்த யர்முக் போரில் இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. ரோமப் படைக்கு தலைமை தாங்கி வந்திருந்த தளபதிகளுள் ஒருவரான ஜர்ஜாஹ் என்பவர் காலித் பின் வலீத் (ரழி) அவர்களைச் சந்தித்து, காலித் பின் வலீத் அவர்களே..! நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி, உண்மையான பதிலை நீங்கள் கூற வேண்டும்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.., கேளுங்கள்..! நிச்சயமாகப் பதிலளிக்கின்றேன்.

உங்களது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வானத்திலிருந்து பிரத்யேகமாக வாளொன்றைப் பெற்று உங்களிடம் கொடுத்துள்ளார்களோ..! ஏனெனில், உங்களைச் சந்திக்கும் எதிரிகள் எல்லோரும் தோற்று ஓடுகின்றார்களே..! அதனால் தான் கேட்கின்றேன் என்றார், ஜர்ஜாஹ்.

இல்லை..! இல்லை..! வானத்திலிருந்து பிரத்யேகமாக எந்த வாளும் வரவில்லை.. இது காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் பதிலாக இருந்தது.

பின் ஏன் உங்களை ஸைபுல்லாஹ் (அல்லாஹ்வின் வாள்) என்றழைக்கின்றார்கள்? அல்லாஹ் எங்களுக்கு வழிகாட்ட இறைத்தூதரை அனுப்பி வைத்தான். சிலர் அவர் கூறிய கருத்துக்களை ஏற்றுக் கொண்டார்கள், அவர் மீது அன்பு கொண்டார்கள். இதயங்களில் ஏற்றுக் கொண்ட அந்த கொள்கையை உயிரை விடவும் நேசித்தார்கள். தூதருக்குக் கட்டுப்பட்டார்கள். பலர் அவரை எதிர்த்தார்கள், அவர் கொண்டு வந்த கொள்கையை ஏற்க மறுத்து உதாசினம் செய்தார்கள்.

முன்பொரு காலத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களையும், அவர்களைப் பின்பற்றியவர்களையும் குறிப்பாக இஸ்லாத்தின் கொடிய விரோதியாக இருந்தவன் தான் நான். அல்லாஹ் எனது இதயத்தில் இஸ்லாத்தின் வெளிச்சத்தை ஏற்றி வைத்தான், நான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் முன்னிலையில் சத்தியத்தை ஏற்றுக் கொணடேன், இஸ்லாமிய அணியில் நானும் ஒருவனானேன். ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என்னை பார்த்துக் கூறினார்கள் : காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நீங்கள் அல்லாஹ்வின் வாள்..! உங்களது வாள் வலிமையானது எதிரிகளின் வல்லமையை அழித்தொழிக்கும்.

எனவே தான், அன்றிலிருந்து எனது பெயருக்கு முன் ஸைபுல்லாஹ் என்ற பட்டம் இணைந்து கொண்டது. நாங்கள் ஓரிறைக் கொள்கையை மக்கள் முன் வைக்கின்றோம்.

இறைவன் ஒருவனே..! வணங்கத்தக்க இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சான்று பகருமாறு மக்களை அழைக்கின்றோம் என்று கூறினார் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

இந்தக் கொள்கையை நான் ஏற்றுக் கொண்டால் நீங்கள் பெற்றிருக்கக் கூடிய இதே நற்பேறுகளை நானும் அடைந்து கொள்ள முடியுமா? இன்னும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! குறிப்பாக உங்களைப் போன்றே நானும் ஆக முடியுமா? என்று கேட்டார் என்ற அந்த ரோமப் படைத்தளபதி.

ஏன் முடியாது. நிச்சயமாக முடியும். இன்னும் என்னை விட நீங்கள் உயர் தகுதிகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும் என்றார்கள் காலித் பின் வலீத் (ரழி) அவர்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் விளக்கத்தினால் கவரப்பட்ட ஜர்ஜாஹ் என்ற அந்த ரோமப் படைத்தளபதி, காலித் பின் வலீத் (ரழி) அவர்களே..! நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள விரும்புகின்றேன். எனக்கு சத்திய சான்றைக் கற்றுத் தாருங்கள். வணங்கத்தக்க இறைவனாக அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கின்றேன், அவனால் அனுப்பி வைக்கப்பட்ட தூதர் முஹம்மது (ஸல்) அவர்களையும் ஏற்றுக் கொள்கின்றேன் என்று கூறி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் ஆலோசனைப்படி, குளித்துத் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வந்த ஜர்ஜாஹ் அவர்கள், காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் திருக்கரங்களினால் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டார்கள். இரண்டு ரக்அத் தொழுகைகளையும் தொழுது, நேர்வழி காட்டிய இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்திக் கொண்டார்.

தான் படை நடத்தி வந்த ரோமப்படைக்கு முடிவுரை எழுதி விட்டு, இஸ்லாமிய அணியில் இணைந்து முகவுரை எழுதத் தயாராகி விட்டார் அந்தத் தளபதி. ரோமப்படைக்குத் தளபதியாக வந்தவர், இப்பொழுது இஸ்லாமிய அணியில் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தலைமையின் கீழ் சாதாரணப் படைவீரராகப் பணியாற்ற ஆரம்பித்த அவர், இஸ்லாத்தின் மேன்மைக்காகவும் இன்னும் தானும் உயிர்த்தியாகியாக மாறி அந்த சுவனத் தென்றலைச் சுவாசிக்கப் புறப்பட்டு விட்டார்.

என்னே.. அவரது தியாகம்...! அவர் இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்டதற்கும் அவர் உயிர் தியாகியாக மாற்றம் பெறுவதற்கும் இடைப்பட்ட காலப் பகுதியாக இந்த இரண்டு ரக்அத் தொழுகைக்கான நேரம் மட்டுமே தடையாக இருந்தது. சற்று முன் இறைநிராகரிப்பாளர்களின் அணியில் இருந்தவர், அடுத்த நிமிடம் இறைநம்பிக்கையாளராக மாற்றம் பெற்று, சில நிமிடங்களிலேயே உயிர்த்தியாகிகளின் பட்டியலில் சேர்ந்து விட்ட அவர், மிகப் பெரும் அதிர்ஷ்டசாலி தான்.

இறுதி நிலை எதிரிகளின் நெஞ்சங்களில் அச்சத்தை விதைத்த அந்த வீரத்தின் விளை நிலத்தில் மரணத்தின் விதைகள் வளர்ந்து விருட்சமாக வளர ஆரம்பித்தன. பலவீனங்கள் அவரது நெஞ்சத்தை நோயுற முயன்று தோற்றுப் போனதால், பலவீனம் மரணமாக மாறியது.

வேங்கை போல நடந்த அவரது கால்கள் இப்பொழுது படுக்கையில் நிலைகுலைந்து கிடந்தன. மரணம் அவரை நெருங்க ஆரம்பித்தது. மரணப்படுக்கையில் கிடந்த அந்த மாவீரர், தனது எண்ணங்கள் நிறைவேறாத நிலைகுறித்து, குமுறிக் குமுறி அழ ஆரம்பித்தார்.

நான் எத்தனை போர்களில் கலந்து கொண்டிருப்பேன். எத்தனை வாட்களையும், அம்புகளையும் எனது உடல் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் உயிர்தியாகியாக மாறி, சுவனத்துத் தோட்டங்களிலும், இறைவனுடைய அர்ஷிலும் பச்சைப் பறவையாகப் பறந்து திரியத் துடித்தேனே..! எனது உடலில் தான் எத்தனை எத்தனை தழும்புகள்..! இதில் ஒன்றாவது என்னை உயிர்த்தியாகியின் அந்தஸ்தில் சுவனத்தில் சேர்க்கவில்லையே..! எனது ஆசைகள் நிறைவேறாத நிலையில் மரணம் என்னைத் தழுவுகின்றதே..! என்று குமுறிய அவரது விழிகளிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தோடியது.

அவரது கவலைகள் அவரைக் கரைசேர்க்கவில்லை. உயிர்த்தியாகி என்ற அந்தஸ்தை அடையும் பாக்கியம் அவருக்குக் கிடைக்காமலேயே மரணத்தை அவர் தழுவிக் கொண்டார்.

உடலை விட்டு உயிர், இறைவனின் பால் சென்று விட்டது.

அவர் மரணமடைந்த பொழுது, ஆட்சிப் பொறுப்பில் உமர் (ரழி) அவர்கள் இருந்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் மரணத்தைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள் கண்கள் கலங்கினார்கள். மதீனா நகரமே சோகத்தில் மூழ்கியது. காலித் பின் வலீத் (ரழி) அவர்கள், இறுதியாக விட்டுச் சென்றவைகள் அவரது ஆயுதமும், அவரது குதிரையும் தான் என்பதைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள், உண்மையில் அவர் மிக உயர்ந்த மனிதர் தான் என்று புகழாரம் சூட்டினார்கள்.

உமர் (ரழி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், காலித் பின் வலீத் (ரழி) அவர்களை தளபதிப் பொறுப்பில் இருந்து நீக்கி விட்டார்கள். எப்பொழுது உமர் (ரழி) அவர்களின் அந்த உத்தரவு கிடைத்ததோ, அப்பொழுதே தனது பதவியைக் காலி செய்து விட்டு, எந்த முணுமுணுப்பும் காட்டாமல் அடுத்தவருக்கு வழி விட்டதோடு, சாதாரணப் படைவீரராகவே தனது இறுதிக் காலம் வரை செயலாற்றி வந்தார். உன்னதமான நோக்கங்களுக்குச் சொந்தக்காரரான அவர், இஸ்லாமும், அதன் கொள்கைகளும் இந்தப் பூமியில் நிலைபெற வேண்டும், இறைவனது சத்திய வார்த்தைகள் இந்தப் பூமிப் பந்தை ஆள வேண்டும், அதற்காக உடலாலும், பொருளாலும், உயிராலும் சேவை செய்வது ஒன்றே குறிக்கோளாகக் கொண்ட அந்த உத்தமர், அதற்காக தளபதிப் பொறுப்பில் இருந்து தான் செயல்பட முடியும் என்றில்லாமல், சாதாரணப் படைவீரனாகவும் இருந்து செயல்பட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினார். அவரது இந்த உத்தமமான, நேர்மையான, தூய்மையான எண்ணங்கள் இன்றைக்கும் நமக்கொரு வரலாற்றுப் படிப்பினையாக இருந்து கொண்டிருக்கின்றது.

தனது இஸ்லாமிய வாழ்வை மிகப் பெரும் படைத்தளபதியாக ஆரம்பித்து, சாதராண படைவீரராக முடித்துக் கொண்டார். இஸ்லாத்தை மேலோங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து போர்களில் கலந்து கொண்டதன் காரணமாக, அவரது உடலின் ஒவ்வொரு பாகமும் விழுப்புண்களாகல் சூழப்பட்டிருந்தது, இன்னும் ஒவ்வொரு பாகமும் வலியால் ரணமாகி, வேதனையைத் தந்து கொண்டிருந்தன.

என்றைக்கு அவர் மரணமடைந்தாரோ அன்றைய தினம் தான் அவரது முதல் ஓய்வு நாளாகப் பரிணமித்தது. சுவனச் சோலைகளில் தஞ்சம் புகுந்த அந்தத் தினம் தான் அவர் ஓய்வு எடுக்கும் முதல் தினமாகவும் இருந்தது.

அவரது மரண ஊர்வலம் அவரது வீட்டிலிருந்து தொடங்குகின்றது. அவரது உடல் அவரது இல்லத்திலிருந்து வெளிக் கொண்டு வரப்பட்ட பொழுது, கண்ணீருடன் தனது மகனை அனுப்பி வைத்த அவரது தாயார், மகனே..! நீ வாழ்ந்த காலங்களில் சிங்கத்தை விட வீரமாக வாழ்ந்தாய். அதே போல நதியை விட பிறர் மீது கருணையைப் பொழிந்து வாழ்ந்தாய் என்று புகழாரம் சூட்டிய அவரது தாய், இன்னும் மகனே..! எவ்வாறு சிங்கம் தனது குட்டிகளை அரவணைத்துப் பாதுகாக்குமோ அது போல இந்த இஸ்லாமிய உம்மத்தைப் பாதுகாத்து வளர்த்து வந்தாய்.

யா அல்லாஹ்...! எனது மகனை உன்னிடம் அடைக்கலமாகத் தந்து விட்டேன், அவன் மீது கருணை புரிந்தருள்வாயாக..! என்று பிரார்த்தித்தார்கள்.

ஆம்..! அந்தத் தாயின் பிரார்த்தனைகளின் பிரதிபலனை நிச்சயமாக அவர் மறுமை நாளிலே கண்டு கொள்வார். கண்களில் குளிர்ச்சியைப் பெற்றுக் கொள்வார். அவன் எப்பொழுதும் என்னை சந்தோஷமாகவே வைத்திருந்தான், எனவே, யா அல்லாஹ்..! மறுமை நாளிலே அவனுக்கு நீ சந்தோஷத்தை அளிப்பாயாக என்றும் காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயார் தனது மகனின் மறுமைக்காகப் பிரார்தித்தார்கள்.

காலித் பின் வலீத் (ரழி) அவர்களின் தாயாரது பிரார்த்தனைகளின் வரிகளைக் கேள்விப்பட்ட உமர் (ரழி) அவர்கள், அவரது தாயார் கூறிய அனைத்தும் உண்மையே..! அவர் கூறிய அனைத்திற்கு உரித்தானவரே..! என்று புகழாரம் சூட்டினார்கள்.

இப்பொழுது காலித் பின் வலீத் (ரழி) அவர்களது உடல் மண்ணறைக்குள் இறக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. தளபதியை இழந்த தோழர்களின் இதயங்கள் சோகத்தால் எரிமலையாகக் குமுறிக் கொண்டிருந்தாலும், இறைவனின் முடிவை ஆமோதித்தவர்களாக அமைதி காத்தார்கள், முழுச் சூழ்நிலையும் நிசப்தமாக இருந்தது. காற்றில் அசையக் கூடிய இலையின் ஓசையும், காலடியில் படக் கூடிய சறுகுகளின் ஓசையும் கூட அந்த வேளையில் தெளிவாகக் கேட்டுக் கொண்டிருந்தன.

அமைதி..! அமைதி...! பூரண அமைதி...! வெற்றியைத் தவிர வேறெதனையும் பெற்றுத் தராத அந்தத் தளபதியின் உடல் மண்ணிற்குள் வைக்கப்பட்டதும், குமுறிக் கொண்டிருந்த எரிமலைகள் இப்பொழுது உதடுகளின் ஓரத்தில் வந்து நின்று வெடிக்கக் காத்திருந்தன. கண்கள் பனிக் குடத்தை சுமந்து கொண்டிருந்தன.

சற்று தூரத்தில் இன்னொரு தோழரும் நடந்து கொண்டிருக்கும் அடக்க நிகழச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆம்..! அந்தத் தோழரும் ஒரு இணை பிரியாத தோழர்தான்.

ஒவ்வொரு போரிலும் தனது தலைவனை முதுகில் சுமந்து கொண்டு, தனது தலைவன் இடும் கட்டளைகளுக்கு மாறு செய்யாமல், எதிரிகளை ஊடறுத்துச் சென்று தலைவனின் பணியை எளிதாக்கியவரும் இந்தத் தோழர் தான்.

ஆம்..! அந்தத் தோழர் யாருமல்ல..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் கலந்து கொண்ட அனைத்துப் போர்களிலும் கலந்து கொண்ட அவரது குதிரையான அஸ்கர் தான் அந்தத் தோழர்.

இனி தனது தலைவனை என்றுமே நாம் பார்க்கப் போவதில்லை என்று அறிந்த அஸ்கரின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் திரண்டு, முத்துக்கள் திவளைகளாக அதனது கண்ணத்தை நனைத்துக் கொண்டு காற்றாற்று வெள்ளமாக உருண்டோடிக் கொண்டிருந்தது.

அமைதியைக் கிழித்துப் போட்டது அஸ்கரின் கண்ணீர், எரிமலையாய் வெடித்துச் சிதறின தோழர்களின் இதயச் சிரைகள்..! அஸ்கரின் கண்களில் வழிந்தோடிய கண்ணீரைக் கண்ட தோழர்களது இதய எரிமலை வெடித்துச் சிதறின, உதடுகள் துடித்தன.., கண்கள் கண்ணீரைச் சொறிய ஆரம்பித்தன.

இருளைக் கிழித்த ஒளியைப் போல அமைதியும் அங்கே அழிந்தே போனது, எங்கும் தோழர்களின் விம்மிய ஓசை..! காலித் பின் வலீத் (ரழி) அவர்கள் ஹிஜ்ரி 21 ல் மரணமடைந்தார்கள். அவர்களின் உடல் ஹம்மாஸ் - ல் நல்லடக்கம் செய்யப்பட்டது. நிறைவான வாழ்க்கை வாழ்ந்த அவர், படைத்தவனைச் சந்திக்கப் புறப்பட்டு விட்டார்.

நன்றி: தமிழ்இஸ்லாம்.காம்

Trackback(0)
கருத்துக்கள் (3)add comment
0
A.Abdul wahab:
assalamu alaikum we wish and pray for your guidence for our entier umma
1

January 08, 2011 11:05
0
ABUIMRAN:
ISLATHIL NILATHIRUPOM. ETHIRIGALAI MIGAITHIRUPOM. ALLAHU AKBAR.
2

March 21, 2011 11:16
0
mohamedzakkariashajida:
alhamdulillah.
3

August 21, 2011 15:04

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:153 நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

புதிய கருத்துகள்

mohammad rafiq : முகத்தை திரையிட்டு மறைப்பதும் மார்க...


mohamed ASHIQ : share with me more.....


monisha.chennai : wrong news modi great man one man army


s.abdul nishath : the use full website for satyamarkam. To use more & more muslim people for dinyath


சத்தியமார்க்கம்.காம் : அன்புச் சகோதரர் Peer Mohamed. அஸ்ஸலாமு அலைக்...


ARULKUMAR.A COIMBATORE : PLEASE AVOID ALCHOCAL CONSUMPITION AND JUNK FRUITS.TAKE FRUITS AND VEGITABLES ITEMS DAILY AND WEEKLY...


Peer Mohamed : Very good effort. I seek your permission to publish these articles in TamilIslamicAudio.com website....


Ansary : First of all i would like to thank Br. Nooruddin for giving all of us such a good translation of Sah...


kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...



You are here  : முகப்பு இஸ்லாம் நூல்கள் காலித் பின் வலீத் (ரலி)
Twitter
RSS
YouTube
English