சத்தியமார்க்கம்.காம்

ஈகைப் பெருநாள் வாழ்த்து print Email
கதை-கவிதை - கவிதை
சனி, 19 செப்டம்பர் 2009 23:51

உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்

உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்

எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்

இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே!

நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்

நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்

என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே

இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே!


பொய்யில்லை; புறமில்லை; பொல்லாங்குப் பேச்சில்லை

பண்பற்ற செயலில்லை; பாவமில்லை; பேதமில்லை

மெய்யொன்றின் தேட்டங்கள்; மேன்மைக்கே நாட்டங்கள்

மெய்ப்புலனில் மனநலனில் மாண்புடனே மாற்றங்கள்

உய்வுற்று வாழுதற்கே ஓரிறையின் ஓர்பரிசாய்

உலகுதித்தாய்; உணர்வளித்தாய் ஒப்பற்ற ரமளானே!

வையத்துள் வாழ்வாங்கு வாழ்கின்ற ஓர்வரத்தை

வானத்தின் மீதிருந்து வழங்கிவிட்டாய் நன்றிகளே!


இரவினிலும் இறைவணக்கம்; இதயத்துப் பூமணக்கும்

இன்முகமே கண்டிருக்கும் இப்பாரில் நல்லிணக்கம்

இறைவனுக்கே தலைதாழும் என்கின்ற உள்ளுறுதி

யாவருமே சமமென்ற ஏற்றத்தை ஒலித்திருக்கும்

மறையதனை ஓதிவர மனதுக்குள் தாழ்திறக்கும்

மண்ணுலகில் வாழ்வதற்கு மகத்தான வழிபிறக்கும்

பிறையுதிக்கும் நன்னாளில் பரிசளிக்கும் இறையோனின்

பேரருளில் நனைகின்ற பேராவல் பூத்திருக்கும்.


வாய்மையுடன் இறையச்சம் வளர்க்கின்ற பயிற்சியினை

வழங்கிடுதே ரமளானும் வல்லோனின் பெருங்கருணை

தாய்மையினும் மிகைக்கின்ற தூயோனாம் அல்லாஹ்வின்

தண்ணருளை வேண்டுவமே தகுதிகளைப் பெறுவதற்கே!

தூய்மையிலே நனைகின்றோம் துல்லியமாய் நோன்பாலே

துடைத்திட்ட பளிங்காகத் துலங்கிடுதே எம்மனங்கள்.

போய்வருக ரமளானே..புத்துணர்வை அளித்துவிட்டாய்

பல்லாண்டு உனைக்காணும் பாக்கியத்தைக் கேட்போமே!

---

நன்றி : சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்)

+966 050 7891953

www.ezuthovian.blogspot.com

www.mypno.com

 

சத்தியமார்க்கம்.காம் வாசக நெஞ்சங்களுக்கும் அனைத்துச் சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

கருத்துக்கள் (5)add comment
0
இராஜகிரியார்:
சத்தியமார்க்கம்.காம் குழுவினருக்கும் மற்றும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் இனிய ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்.
1

September 21, 2009 23:05
0
"கவியன்பன்" கலாம்:
உன்பால் இருக்கும் அன்பால்
உன்னை வாழ்த்தும் என் வெண்பா

அரபகம் சென்றும் அழகு தமிழில்
மரபு கவியாத்த மாண்புமிகு நண்பா
வியந்தேன் உனது விருத்தப்பா கண்டே
நயந்தே வழங்குமென் வாழ்த்து


-"கவியன்பன்" கலாம், அதிராம்பட்டினம்
2

September 23, 2009 20:25
0
அபூ பௌஸீமா:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

அன்பின் இஸ்லாமியச் சகோதரர்களே! வாழ்த்துக்களில் இஸ்லாம் காட்டித்தந்துள்ள அழகான வழிமுறை, "அஸ்ஸலாமு அலைக்கும்" அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு" என்பதுதான்.

"இனிய வாழ்த்துக்கள்", "ஈத் முபாரக்" இப்படியானவற்றை வாழ்த்தட்டை வடிவில் டிஜிடல் வாழ்த்துமடல் வடிவில் வாழ்த்துத் தெரிவிக்கும் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி வந்தது? நிச்சயமாக யூத கிறிஸ்தவர்களிட்மிருந்து வந்ததுதான். இஸ்லாம் எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் வழிகாட்டாமல் விட்டுச் செல்லாது. கண்மூடிப் பின்பற்றுவதற்கு முன் பிரித்தறிய வேண்டும். ஏனென்றால் அல்-குர் ஆனை அல்-புர்கான்(வேறுபடுத்திக் காட்டுவது, பிரித்து அறிவிப்பது) என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

ரம்மியமான கவிதை.

வாழ்த்துக்கள் என்று மொட்டையாகத் தெரிவிப்பதை - யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுவதைத் தவிர்த்து - இந்த இனிய பெரு நாளில் உங்களுக்கு எனது இதயபூர்வமான ஸலாம். "அஸ்ஸலாமு அலைக்கும்" என்றோ அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்" என்றோ அல்லது "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு" என்றோ வாழ்த்துத் தெரிவிக்கப் பழகிக் கொள்வோமாக. ஸலாமைப் பரப்புவோமாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
3

September 24, 2009 22:29
0
M.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும்

அன்பு சகோதரர்களே

பெருநாள் அன்று நபி ஸல் அவர்கள் "தகப்பலல்லாஹ்" அல்லாஹ் உங்கள் நற் செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்று அல்லது "தகப்பல் மின்னா வ மின்கும்." அல்லாஹ் நமது நற்செயல்களை ஏற்றுக் கொள்வானாக என்றோ வாழ்த்தியதாகவும் நாமும் இதையே வாழ்த்த வேண்டும் மற்றதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு பெருநாள் சொற்பொழிவில் கூறினார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
4

September 25, 2009 06:31
0
அபூ பௌஸீமா:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்

சகோ. M.S.K. அவர்களுக்கு நன்றி. அப்படியான வாழ்த்துக்களுக்கான ஆதாரங்களை வைக்கக் கூடிய சகோதரர்கள் அவற்றை முன் வைத்து நற்பணியாற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

அல்லாஹ் நம்மனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக.

வஸ்ஸலாம்
அபூ பௌஸீமா
5

October 02, 2009 04:32

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

Random Quran Verses

2:188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

விருப்பத் தேர்வுகள்


You are here  : முகப்பு கவிதை கேளுங்கள் ஈகைப் பெருநாள் வாழ்த்து