| பழகு மொழி (பகுதி-8) |
|
|
| தொடர்கள் - மொழியியல் | |||
| வியாழன், 03 செப்டம்பர் 2009 20:07 | |||
|
(1):5:1 உயிர் வருக்கம் அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 உயிரெழுத்துகளும் சொல்லின் முதலில் வருக்கமாக வரும். ஆத்திச்சூடியிலிருந்து காட்டுகள்: அறஞ்செய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல், எண்ணெழுத் திகழேல், ஏற்ப திகழ்ச்சி, ஐய மிட்டுண், ஒப்புர வொழுகு, ஓதுவ தொழியேல், ஒளவியம் பேசேல்.(1):5:2 உயிர்மெய் வருக்கம் க, ச, ஞ, த, ந, ப, ம, ய, வ ஆகிய எழுத்துகளும் சொல்லுக்கு முதலில் வரும். கண்டொன்று சொல்லேல், சனி நீராடு, தந்தைதாய்ப் பேண், நன்றி மறவேல், பருவத்தே பயிர்செய், மண்பறித் துண்ணேல், வஞ்சகம் பேசேல். "எல்லாரிடமும் இணங்கி, நெகிழ்வுத் தன்மையுடன் நடந்து கொள்க" என்று அறிவுரை கூறுமுகமாய், "ஙப்போல் வளை" என்பதாக ஆத்திச்சூடியில் வருகிறது. எனினும், இக்கால எழுத்து வழக்கில் 'ங' வருக்கமாய் வருவதில்லை; ஆனால், காட்டுகளாகப் பயன்படுவதுண்டு: "ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்" (- தொல்காப்பியம் - எழுத்து 25); "ஙஞண நமன வயலள ஆய்தம்" (- யாப்பருங்கல விருத்தி). ஞகர வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ, ஆகியன மட்டும் சொல்லுக்கு முதலில் வரும். ஞகரத்துக்குக் காட்டாக, "ஞயம்பட உரை" என்று ஆத்திச்சூடியில் வருகிறது. "நயம்பட உரை" என்பதன் முதற்போலியாக அங்கு 'ஞ' பயன் படுத்தப் பட்டுள்ளது. எனினும் "ஞமலி" (நாய்) எனும் நல்ல தமிழ்ச் சொல், 'ஞ'வில் தொடங்குவது ஈண்டு நோக்கத் தக்கது. மேலும், ஞாலம்=உலகம், ஞெகிழி=கொள்ளிக்கட்டை, ஞொள்கல்=இளைத்தல் ஆகிய அரிய சொற்களும் தமிழில் உள. யகர வரிசையில் ய, யா ஆகிய இரு எழுத்துகள் தமிழ்ப் பெயர்ச் சொற்களின் முதற்போலியாகவும் யு, யூ, யோ, யௌ ஆகிய எழுத்துகள் வடமொழிச் சொற்களுக்காகவும் சொல்லின் முதலில் வருவதுண்டு: எமன்=யமன், ஆனை=யானை. இவையன்றி, யாங்கனம் (எவ்வாறு) யாது (எது) என வினா எழுத்தாகவும் யாகாரம் பயன்படுத்தப் படுவதுண்டு. யகர வரிசை வருக்கத்தில் வடமொழிச் சொற்களான யுகம், யூகம், யோகம், யௌவனம் ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளவையாம். வகர வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை ஆகிய எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்: வரிசை, வாஞ்சை, விறகு, வீடு, வெண்ணெய், வேடன், வைகறை.
(1):5:2:1 ககர வருக்கம் கடிவது மற, காப்பது விரதம், கிழமைப்பட வாழ், கீழ்மை யகற்று, குணமது கைவிடேல், கூடிப் பிரியேல், கெடுப்ப தொழி, கேள்வி முயல், கைவினை கரவேல், கொள்ளை விரும்பேல், கோதாட் டொழி, கெளவை அகற்று.
(1):5:2:2 சகர வருக்கம் சக்கர நெறி நில், சான்றோ ரினத்திரு, சித்திரம் பேசேல், சீர்மை மறவேல், சுளிக்கச் சொல்லேல், சூது விரும்பேல், செய்வன திருந்தச்செய், சேரிடம் அறிந்து சேர், சையெனத் திரியேல், சொற்சோர்வு படேல், சோம்பித் திரியேல். குறிப்பு: ச்+அ=ச; ச்+ஐ=சை; ச்+ஔ=சௌ ஆகிய மூன்றும் தமிழ்ச் சொல்லின் முதலில் இடம் பெறா என்பதாகத் தொல்காப்பியம் கூறுகிறது: சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: சங்கு, சட்டை, சட்டம், சருகு, சரடு, சத்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'சந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. அஃது, இரு சொற்கள் சந்திக்கும்போது ஏற்படும் மாறுதல்களைக் குறிப்பதாகும். அதைப் "புணரியல்" என்றும் கூறுவர்.
(1):5:2:3 தகர வருக்கம் தக்கோ னெனத்திரி, தானமது விரும்பு, திருமாலுக் கடிமைசெய், தீவினை யகற்று, துன்பத்திற் கிடங்கொடேல், தூக்கி வினைசெய், தெய்வ மிகழேல், தேசத்தோ டொத்துவாழ், தையல்சொல் கேளேல், தொன்மை மறவேல், தோற்பன தொடரேல்.
(1):5:2:4 நகர வருக்கம் நன்மை கடைப்பிடி, நாடொப்பன செய், நிலையிற் பிரியேல், நீர்விளை யாடேல், நுண்மை நுகரேல், நூல்பல கல், நெற்பயிர் விளை, நேர்பட வொழுகு, நைவினை நணுகேல், நொய்ய வுரையேல், நோய்க்கிடங் கொடேல்.
(1):5:2:5 பகர வருக்கம் பழிப்பன பகரேல், பாம்பொடு பழகேல், பிழைபடச் சொல்லேல், பீடு பெறநில், புகழ்ந்தாரைப் போற்றிவாழ், பூமி திருத்தியுண், பெரியாரைத் துணைக்கொள், பேதைமை யகற்று, பையலோ டிணங்கேல், பொருடனைப் போற்றி வாழ், போர்த்தொழில் புரியேல்.
(1):5:2:6 மகர வருக்கம் மனந்தடு மாறேல், மாற்றானுக் கிடங்கொடேல், மிகைபடச் சொல்லேல், மீதூண் விரும்பேல், முனைமுகத்து நில்லேல், மூர்க்கரோ டிணங்கேல், மெல்லினல்லாள் தோள்சேர், மேன்மக்கள் சொற்கேள், மைவிழியார் மனையகல், மொழிவ தறமொழி, மோகத்தை முனி.
(1):5:2:7 வகர வருக்கம் வல்லமை பேசேல், வாது முற்கூறேல், வித்தை விரும்பு, வீடு பெறநில், வெட்டெனப் பேசேல், வேண்டி வினைசெயேல், வைகறைத் துயிலெழு.
(1):5:2:8 பிறமொழிச் சொற்களுக்கு பிறமொழிச் சொற்களுக்காக டகரம், ரகரம், லகரம் ஆகியன சொல்லின் முதல் எழுத்தாகப் பயன் படுவதுண்டு: டச்சு, ரகசியம், லஞ்சம் போன்றவற்றை அப்படியே எழுதுவதில் தவறில்லை. இடச்சு, இரகசியம், இலஞ்சம் என இகரம் சேர்த்து எழுத வேண்டுவதில்லை.
-தொடரும், இன்ஷா அல்லாஹ். <முன்னுரை | பகுதி - 1 | பகுதி - 2 | பகுதி - 3 | பகுதி - 4 | பகுதி - 5 | பகுதி - 6 | பகுதி - 7>
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (1)
![]()
//ஆனால், அம்மூன்றில் சகரத்தில் தொடங்கும் தமிழ்ச் சொற்கள் நிறைய உள. காட்டாக: சங்கு, சட்டை, சட்டம், சருகு, சரடு, சத்தம் (கூலி) ஆகியவற்றைக் குறிப்பிடலாம். மேலும் இலக்கண வகைகளுள் 'சந்தி' எனும் பெயரில் ஓர் இலக்கணம் இருப்பதும் ஈண்டு நோக்கத் தக்கது.//
இலக்கணத்திலேயே சகரத்தில் துவங்கும் சொல் ஒன்று இருக்க, தொல்காப்பியம் அவ்வாறு கூறுவது தவறு தானே? 1
November 05, 2009 08:09
கருத்து எழுதுக :
|