சத்தியமார்க்கம்.காம்

தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது print Email
ஐயமும்-தெளிவும் - முஸ்லிம்களுக்காக
ஞாயிறு, 01 மார்ச் 2009 08:25

இறைவேதம்ஐயம்: தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?

மின்னஞ்சல் வழியாகச் சகோதரர் Mazlan Ameen

தெளிவு:

தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.

(தொழுகையில்) ''உள்ளச்சத்துடன் - கட்டுப்பட்டு - நில்லுங்கள்'' (அல்குர்ஆன், 2:238)

(அவர்கள்) ''தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள்'' (அல்குர்ஆன், 23:2)

ஒருவர் தம்மைத் தொழுகைக்குத் ஆயத்தப்படுத்திக்கொண்டு, தொழுகையின் ஆரம்ப நிலையில் நின்று, தொழுகைக்குள் நுழையும் முதல் தக்பீர், ''தக்பீர் தஹ்ரீமா'' எனப்படும். இத்துவக்க தக்பீரைக் கூறியவுடன் தொழுகைக்கு வெளியே செயலாற்றும் உண்ணுதல், பருகுதல், பேசுதல் போன்ற உலகச் செயல்பாடுகள் விலக்கப் பட்டதாகிவிடும். தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும். அந்நேரம் தொழுபவர் தன் கவனம் முழுமையும் இயன்றவரை தொழுகையில் மட்டுமே செலுத்த வேண்டும். தொழுகையில் இஸ்லாம் கற்பிக்கும் முறைகளை முடிந்த அளவுக்குக் கடைப்பிடித்து உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்; மற்றவற்றை ஒதுக்கிவிட வேண்டும்.

'முடிந்த அளவுக்கு' என்பதில் தொழுகையின்போது எதிர்பாராது நாம் எதிர் கொள்ளும் தும்மல், இருமல் போன்ற உபாதைகளின்போது சளியை உமிழ்தல் / துடைத்துக் கொள்ளுதல் ஆகியவையும் மனிதருக்குத் தொல்லை தரும் ஊர்வன / பறப்பனவற்றை அப்புறப் படுத்தலும் தொழுகைக்குக் குறைவை ஏற்படுத்தா என்பதற்கு நபிவழியில் சான்றுகள் உள்ளன.

மேற்சொன்னவை அனைத்தும் தொழுகையில் நமது கவனம் சிதறுவதற்குக் காரணமாக இருந்தாலும் அவை அனைத்தும் நமது விருப்பத்துக்கு மாற்றமாக, நாம் எதிர்பாராமல் நடப்பவை என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தங்கள் கேள்வியில் கண்டவாறு தொழும்போது குர்ஆன் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு ஓதும்போதும் ஒரு ஸ்டாண்டில் வைத்துப் பார்த்து ஓதும்போதும் அடுத்த பக்கத்தைத் திருப்புவதற்காக அடிக்கடி நமது கைகளைப் பயன் படுத்த வேண்டி வரும். அப்போதெல்லாம், "தொழுகையில் நிற்கும்போது நபி (ஸல்) அவர்கள் தங்கள் இடக்கையை நெஞ்சில் வைத்து அதற்குமேல் வலக்கையை வைத்திருப்பார்கள்" என்ற நபிவழிக்கு அடிக்கடி மாறு செய்ய வேண்டி வரும்.

[நபித்தோழர் வாஇல் இப்னு ஹுஜ்ரு (ரலி) அவர்களது ஆதாரப் பூர்வமான இந்த அறிவிப்பை இமாம் இப்னு ஹுஸைமா, பஸ்ஸார் ஆகிய இருவரும் பதிவு செய்திருக்கிறார்கள்.  நபித்தோழர் ஹல்புத் தாஇ (ரலி) அவர்களின் ஆதாரப் பூர்வமான அறிவிப்பை இமாம் அஹ்மது அவர்கள் தங்களது முஸ்னதில் பதிவு செய்திருக்கிறார்கள். இவ்வனைத்தையும் புகாரீ ஹதீஸ் எண் 698க்கு விரிவுரையாக ஃபத்ஹுல் பாரீயில் இமாம் அஸ்கலானீ அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளார்கள்.]

மேலும், கைகளிலோ ஸ்டாண்டிலோ குர் ஆன் பிரதிகளை வைத்துக் கொண்டு, அதில் பார்வையைச் செலுத்தி ஓதும்போது நமது கவனம் முழுவதும் காற்றடித்தால் குர்ஆனின் பக்கங்கள் மாறிவிடுமோ என்ற எண்ணத்திலும் அது கீழே விழுந்து விடாமல் இருப்பதிலும் குவிக்கப்படும். இதுவும் தொழுகையின் ஒழுங்குகளுக்கு மாற்றமானதாகும்.

"நல்லது, நன்மையானது" என்று நாமாக நினைத்துக் கொண்டு, வணக்க-வழிபாடுகளில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தராத எதையும் புகுத்தி விடக் கூடாது. "நீண்ட குர்ஆன் வசனங்கள் மனப்பாடம் இல்லையென்றால் குர்ஆன் பிரதிகளைப் பார்த்துத்தான் ஓதியாக வேண்டும்" என்று இஸ்லாம் நம்மைக் கட்டாயப் படுத்தவே இல்லை. மேலும் நீண்ட குர்ஆன் வசனங்கள் ஓதித்தான் தொழ வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. மாறாக, ஒரு இஷாத் தொழுகையில் நீண்ட அத்தியாயமான சூரத்துல் பகரா முழுவதையும் ஓதித் தொழ வைத்த முஆத் இபுனு ஜபல் (ரலி) அவர்களைப் பற்றி "தொழுகையை அளவுக்கதிகம் நீட்டுகிறார்" என்று புகார் சொல்லப் பட்டவேளை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களைக் கடிந்து கொண்டார்கள். மேலும், "அவ்வாறு நீட்ட வேண்டாம்; அஷ்ஷம்ஸு, அல்-லைல், அல்-அஃலா, ஆகிய அத்தியாயங்களை ஓதிப் போதுமாக்கிக் கொள்க" என்று அறிவுரை கூறினார்கள். [புகாரீ ஹதீஸ் எண் 660] எனும்போது, இஸ்லாத்தில் இல்லாத வழிகளை நாமாக ஏற்படுத்திக் கொண்டு, அதன் மூலம் நமக்கு நாமே தொல்லைகளைச் சுமக்க வேண்டுவதில்லை.

"மார்க்கம் எளிமையானது; அதை (உங்களுக்கு நீங்களே) கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்" [புகாரீ ஹதீஸ் எண் 38] என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைப்படி, தொழும்போது குர்ஆன் பிரதிகளைப் பார்த்து ஓதுவதற்குக் கட்டாயப் படுத்தும் இஸ்லாமிய வழிகாட்டல் ஏதுமில்லாததால் அதைத் தவிர்த்துக் கொண்டு, எளிமையான இஸ்லாத்தைக் கடினமாக்காமல் நடைமுறைப் படுத்துவதே சரியான நபிவழியாகும்.

முற்றாக அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!
Trackback(0)
கருத்துக்கள் (19)add comment
0
ஹஸன் கமருதீன்:
// தொழுகை என்பது வணக்கங்களின் சிகரமாகும் // மிகச்சிறப்பான பதில்... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும்.
1

March 02, 2009 12:03
0
ஜி என் (பரங்கிப்பேட்டை):
தொழுகையை சீரமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நீங்கள் பதில் கொடுத்திருந்தாலும் பதில் முழுமையாக அமையவில்லை என்றே தோன்றுகின்றது. நெஞ்சில் கை கட்டியுள்ள நிலையில், பக்கங்களை புரட்ட அவசியமில்லாமல் டிஜிட்டல் பேனர்களில் தானியங்கியாக குர்ஆன் பக்கங்கள் வரும் போது அதை பார்த்து ஓதுவதால் சுன்னாவிற்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. தேவைகளையும் அவசியத்தையும் கருதி சில செயல்பாடுகளை தொழுகையின் உள்ளேயே செய்யலாம் என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அந்த செயல்பாடுகளை 'உள்ளச்சத்துக்கு மாற்றமானவை' இஸ்லாம் சொல்லவில்லை. தொழுகையின் தடுப்புக்கு முன்பாக நாய், மாதவிடாய் பெண்கள் செல்வார்கள் அது எங்கள் தொழுகையை பாழ்படுத்தாது என்று நபித்தோழர்கள் அறிவிக்கும் செய்தி நாம் அறிந்ததுதான். தொழுகையில் நிற்கும் போது முன்னால் செல்லும் பெண்கள் - மிருகங்கள் உட்பட பார்க்கும் நிலை ஏற்பட்டால் அது இறையச்சத்திற்கு மாற்றம் என்று முடிவெடுக்க முடியாது. சில இடங்களில் தொழும் போது பெண்களை பார்ப்பதை தவிர்க்கவே முடியாது எனும் போது, அந்த நிலையில் தொழுகை பாழ்படாது எனும் போது, குர்ஆனை பார்த்து ஓதுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது நியாயமான வாதமாக தெரியவில்லை. எல்லோராலும் மனப்பாடம் செய்து ஓத முடியும் என்று சொல்ல முடியாது, மனப்பாடம் செய்துதான் ஓத வேண்டும் என்று கூறவும் முடியாது. மனப்பாடம் இல்லாத நிலையில் குர்ஆனை சராளமாக ஓதத் தெரிந்த ஒருவர் நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழ விரும்புகிறார் என்றால் அவர் பார்த்து ஓதுவதில் என்ன தவறு வந்து விடப் போகின்றது. (ஜமாஅத் தொழுகையை சுருக்கி தொழ வேண்டும் என்று உங்கள் பதிலில் குறிப்பிட்டுள்ளீர்கள். சரி தனியாக தொழுபவர் விரும்பினால்..?) தொழுகைக்கு சற்றும் சம்மந்தமில்லாத செயல்கள் கூட தொழுகையின் உள்ளே நடக்கும் போது அது இறையச்சத்திற்கு எதிரானதல்ல எனும் போது தொழுகையின் முக்கிய அங்கமான குர்ஆன் ஓதுதலை 'சுடாது' என்று சொல்ல போதிய ஆதாரங்கள் காட்டப்படவில்லை.
2

March 03, 2009 19:18
0
S.S.K:
// தொழுகையின் தடுப்புக்கு முன்பாக நாய், மாதவிடாய் பெண்கள் செல்வார்கள் அது எங்கள் தொழுகையை பாழ்படுத்தாது என்று நபித்தோழர்கள் அறிவிக்கும் செய்தி நாம் அறிந்ததுதான். தொழுகையில் நிற்கும் போது முன்னால் செல்லும் பெண்கள் - மிருகங்கள் உட்பட பார்க்கும் நிலை ஏற்பட்டால் அது இறையச்சத்திற்கு மாற்றம் என்று முடிவெடுக்க முடியாது. சில இடங்களில் தொழும் போது பெண்களை பார்ப்பதை தவிர்க்கவே முடியாது எனும் போது, அந்த நிலையில் தொழுகை பாழ்படாது எனும் போது, குர்ஆனை பார்த்து ஓதுவதை தவிர்க்க வேண்டும் என்று சொல்வது நியாயமான வாதமாக தெரியவில்லை.// அன்பு சகோதரர் ஜி. என் அவர்களே தாங்கள் மேலே கூறியுள்ளவைகள் தொழுபவர் தக்பீர் தஹ்ரீம் கூறிய பின் அவருக்கு அதில் தொடர்பில்லாத வகையில் நிகழ்ந்து விடும் சம்பவங்கள் இது தொழுகையை பாழ்படுத்தாது என்பது வேறு அதே நேரம் தொழுகைக்கு குர் ஆன் பிரதியை கையில் வைத்துக் கொண்டு புரட்டிக் கொண்டு வாசித்து தொழுவது என்பது வேறு விஷயங்கள் என்பது மறுக்க இயலாது. உதாரணத்திற்கு தொழும் போது பள்ளியில் உள்ள குர் ஆன் பிரதிகள் மீது பார்வை படுவது அல்லது சில பள்ளிகளில் உள்ள லாயிலாஹா இல்லல்லாஹு முஹம்மது ரஸூலுல்லாஹ் போன்ற வாசகங்கள் இதர குர் ஆன் வசனங்கள் உள்ள படங்கள் காலண்டர் போன்றவை மீது பார்வை செல்வது என்பதை போன்றது. அதே போல் டிஜிடல் பேனர்கள் விஷயமும் தொழுபவர் செய்யும் ஏற்பாடு எனில் தொழுபவர் கவனம் வேண்டுமென்றே செல்லும் நிலை வருகிறது என்பதை கவனிக்கவும். தொழுகைஹில் தக்பீர் கூறிய பின்னர் இயன்ற வரை (தாம் மனனம் செய்துள்ள)குர் ஆன் வசனங்கள் ஓதுங்கள் என்று கூறிய நபி ஸல் அவர்கள் அன்று இருந்த எழுதப் பட்ட பிரதிகளை பார்த்து ஓத கூறவோ அனுமதிக்கவோ அதை ஸஹாபாக்கள் செயல் படுத்தவோ இல்லை யெனும் போது சந்தேகமான இதை தவிர்ப்பது தொழுகையின் உள் புதிய ஒன்றை ஏற்படுத்துவதை தவிர்க்க வழி வகுக்கும் என்றே கருதுகிறேன்.... அல்லாஹ் மிக அறிந்தவன்.
3

March 04, 2009 05:48
0
அல் அமீன்:
அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர் ஜி.என். அவர்களின் வாதம் நியாயமானது போன்று தோன்றினாலும் சகோதரர் SSK அவர்களின் சுட்டிக்காட்டல் சகோதரர் ஜி.என். அவர்களின் வாதத்தில் தவறு உள்ளதைத் தெளிவாக காண்பித்தது. தொழுகையில் எதேச்சையாக நிகழும் சம்பவங்கள் என்பது வேறு, டிஜிட்டல் பேனராக இருந்தாலும் டிஜிட்டல் கைப்பேசியாக இருந்தாலும் தொழுபவர் தானே ஏற்பாடு செய்து கொண்டதன் மீது 'கவனத்தை' வைத்துத் தொழுவது என்பது வேறு. முழுமையாக மனப்பாடம் இல்லாதவர்களும் நன்றாக ஓதத்தெரிந்து மனப்பாடம் இல்லாதவர்களும் தொழுகையில் குர்-ஆனைப் பார்த்து ஓத வேண்டும் என்று எந்த வழிக்காட்டலும் இல்லாதபோது, தொழுகையில் தானேகவே ஒன்றைப் புகுத்துவதைத் தவிர்த்துக் கொள்வது தானே சிறந்தது? தொழுகை என்பது முழு கவனத்துடன் இறைவனுக்குச் செலுத்த வேண்டிய வணக்கமாகும். அது குர்-ஆனை மனனம் செய்யும் இடமோ அல்லது குர்-ஆன் ஓதிக்கொண்டிருக்கும் இடமோ அல்ல என்பது நாம் எப்பொழுதும் கவனத்தில் வைக்க வேண்டிய விஷயமாகும். நல்ல செயல் என்று நாம் செய்யும் செயல்கள், ஒரு செயலின் முக்கிய நோக்கத்தைச் சிதைத்து விடும்படி அமைந்துவிடலாகாது.
4

March 04, 2009 07:41
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் ஜி.என், //தொழும் பொழுது குர்ஆனைத் திறந்துப் பார்த்து அல்லது கைகளில் ஏந்திக் கொண்டு அதைப் பார்த்து ஓத அனுமதி உள்ளதா?// என்பதே கேள்வி. அதில் டிஜிட்டல் குர்ஆனைப் பற்றியோ தனித்துத் தொழுவது பற்றியோ குறிப்பாக்கிக் கேட்கவில்லை என்றாலும் பதில் பொதுவானதே. 'திரையில் ஓடுகின்ற டிஜிட்டல் வசனங்களைப் பார்த்து ஓதிக் கொள்ளலாம்' என்று நீங்கள் அளிக்க விரும்பும் அனுமதி, 'தனியாக/வீட்டில் தொழும்போது ...' என்று தொடங்கும் என்று நினைக்கிறோம். நீங்கள் கூறவருவதுபோல், வீட்டில் தொழும்போது டிஜிட்டல் குர்ஆனைப் பார்த்து சப்தமிட்டு நான் ஓதித் தொழுதால், என் மகனும் என்னைப் போன்றே சப்தமிட்டு ஓதித் தொழ விரும்பி, தனக்கென ஒரு தனி டிவைஸ் கேட்பான். நான் மறுக்கவும் முடியாது. ஏனெனில், நான் விரும்பி அடைய விரும்பும் 'நன்மை'யை என் மகனுக்கு மறுக்க முடியாதே!. அடுத்து என் மனைவிக்கும் ஒன்று வாங்க வேண்டும். சிக்கனம் கருதி ஒன்றை வைத்துக் கொண்டு மூவரும் ஒரு திரையைப் பார்த்து (சப்தமிட்டு) குர்ஆனை ஓதித் தொழும் சூழ்நிலையில் அது தொழுகையா அல்லது கிராஅத் போட்டியா என்று வேறுபடுத்திப் பார்க்க இயலாதாகி விடும். 'மார்க்கம் எளிதானது; அதை நீங்கள் கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்' என்பது நபிமொழி. அந்த மார்க்கத்தின் தலையாய வழிபாடான தொழுகை என்ற வணக்கத்தில் கூடுதலாக ஒன்றைப் புகுத்திப் புதுமை செய்வதற்கு நமக்கு அனுமதியில்லை என்பதே நமது நிலைப்பாடு. 'மார்க்கத்தில் நாமாகக் கூடுதல் செய்வது கூடாது' எனக் கூறுவதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. 'நாஃப்' என்ற செயல் மறுப்புக்கு ஆதாரம் தேவை என நாம் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அதற்கு மாற்றமாக, 'கூடும்' என்று ஒரு 'ஃபிஅல்' - செயலைக் கூட்ட முயலுபவரே ஆதாரங்களைத் தரக் கடமைப் பட்டவர் (அத்தலீலு அலல் முத்தஈ). மேற்கொண்டு விமர்சனம் இருந்தால் எழுதுங்கள். நன்றி!
5

March 04, 2009 09:31
0
இப்னு ஹமீது:
அளவான அழகான விளக்கம்! சகோதரர் ஜி என் அவர்களுக்கு, டிஜிட்டல் பேனர்களில் ஓடும் அல்லது ஓட்டப்படும் பக்கங்கள் ஓதுபவரின் கட்டுப்பாட்டில் இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம். இரு நிலைகளிலும் தொழுகையிலிருந்து கவனம் சிதற நாமே வழியமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கச் சட்டமியற்ற ஆதாரம் இல்லை என்றே சத்தியமார்க்கம் தளத்தினரின் பதிலில் இருந்து விளங்க முடிகிறது. நன்றி!
6

March 04, 2009 18:23
0
abdul azeez:
அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்களுக்கும் டிஜிட்டல் நவீன சாதனங்கள் மூலம் ஒருவர் தொழும் தொழுகை செல்லும் என்றால் ! அது ஜமாஅத் தொழுகைக்கும் பொருந்தும். அப்ப டிஜிட்டல் முறையை சகோதரர் ஜி.என் சரி என்றால். சம்பளம் மிச்சப்படுத்தலாம் என்று ஊர் ஜமாஅத் சகோதரர்கள் யோசனை செய்து ஒரு பள்ளியில் தொழ வைக்கும் இமாமை பின் தொடர்ந்து அணைத்து பள்ளிவாசலிலும் தொழலாம் என்று டி.வி. மூலம் இமாமத்தை டெலி காஸ்ட் செய்துவிடுவார்கள் அப்ப அந்த டி.வியில் தெரியும் இமாமை பின் தொடர்ந்து தொழ முடியுமா ? டிஜிடலை நீங்கள் அங்கீகரித்தால் இதையும் மறுக்கமுடியாது. இன்னொன்று ருக்ஊ நிலையில் திடீரென்று மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் கியாமத் நாள் வரை அப்படியே ! இருக்கனும். வணக்க வழி பாடுகளில் எந்த நிலையில் ரசூல் ( ஸல் ) நம்மை விட்டுச் சென்றார்களோ அதுவே சிறந்தது. மா சலாம். அப்துல் அசீஸ்.
7

March 05, 2009 01:48
0
இப்னு ஹமீது:
//இன்னொன்று ருக்ஊ நிலையில் திடீரென்று மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டால் கியாமத் நாள் வரை அப்படியே ! இருக்கனும். // சகோ அப்துல் அஸீஸ், உங்கள் வாதமும் கருத்தும் நன்றாக இருந்தாலும் மேற்சுட்டிய வண்ணம் வாதிப்பதைத் தவிர்க்கலாமே! தொழவைக்கும் இமாம் இறக்க நேர்ந்தால் கூட மாமூம் என்ன செய்ய வேண்டும் என இஸ்லாத்தில் சட்டம் உள்ளபோது, மேற்கண்டவாறு கேள்விகள் வைப்பது நையாண்டி போல உள்ளது. என் கருத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மனம் புண்பட நேர்ந்தால் மன்னியுங்கள்.
8

March 05, 2009 19:07
0
abdul azeez:
// என் கருத்தில் தவறிருந்தால் சுட்டிக் காட்டுங்கள். மனம் புண்பட நேர்ந்தால் மன்னியுங்கள். // அப்படி எதுவும் இல்லை சகோதரர் இப்னு ஹமீது பொத்தாம் பொதுவாக // ஒருவர் நீண்ட அத்தியாயங்களை ஓதி தொழ விரும்புகிறார் என்றால் அவர் பார்த்து ஓதுவதில் என்ன தவறு வந்து விடப் போகின்றது // மேலும் சகோ குறிப்பிட்ட பெண்கள், நாய்கள் ஆதாரம் எல்லாம் நாமாக ஏற்படுத்திக்கொண்டது கிடையாது. எதேச்சையாக நடக்கும் சம்பவம். மேலும் இந்த வகையான நவீனங்களை வணக்க வழிபாடுகளில் புகுத்துவதால். அதன் பின் விளைவுகள் இப்படியெல்லாம் வரும் இதற்க்கெல்லாம் என்ன ? தீர்வு என்று சிந்திக்கவும், மேலும் இந்த மாதிரியான பின் விளைவுகள் நவீனம் புகுத்த விரும்பும் சகோதரர்கள் மனதில் முக்கியமாக இருக்கவேண்டும். என்று அழுத்தம் கொடுப்பதற்காகவே ! அந்த வகையான வார்த்தை போட்டேன். அல்லாஹ் மன்னிப்பானாகள். மேலும் நீங்கள் மாமூன் விஷயமாக. குறிப்பிட்ட சட்டம் // தொழவைக்கும் இமாம் இறக்க நேர்ந்தால் கூட மாமூம் என்ன செய்ய வேண்டும் என இஸ்லாத்தில் சட்டம் உள்ளபோது // இதற்க்கு பொருத்தி பார்க்க முடியுமா ? அதாவது டெலி காஸ்ட் மூலம் டி.வியில் தெரியும் இமாம் இறந்து விட்டார் என்று முடிவு செய்து அந்த சட்டத்தை எடுத்துக் கொள்வதா ? அல்லது அந்த இறப்பு சம்பவ சட்டத்தை மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் பயன் படுத்தலாம். என்று நாமளாகவே ஊகித்து பயன்படுத்திக் கொள்ளலாமா ? ஏன் ? என்றால் இந்த ஊகம் இதில் தினித்தோமானால் மற்ற எல்லா வகையான சட்டத்திற்கும் ஊகத்தை பொருத்தவேன்டிவரும் குறிப்பாக பெண்கள் விஷயத்தில் கணவன் இறந்து விட்டால் ``இத்தா'' இருக்கவேண்டிய கால அளவை கணவன் காணாமல் போய் விட்டாலும் இந்த ``இத்தா'' சட்டத்தை பயன் படுத்தி வேறொரு திருமணம் செய்து கொள்ளமுடியும். மேலும் டி.வியில் தெரியும் இமாம் சூரா ஓதுகையில் தடுமாறினால் பின்னால் நிற்ப்பவர்கள். எடுத்து திருத்தி சொல்லுவார்கள். ஆனால் பின்னால் நின்று தொழுபவர்களுக்கு அந்த சூரா தெரியவில்லை என்றால். இமாம் அப்படியே ஒதிவிடுவார்.அல்லாஹ் பிழைகள் பொருப்பவன். ஆனால் டிவியை பார்த்து பின் தொழுபவர்களுக்கு. ஒரு வேலை அந்த சூரா நன்கு தெரியும் என்றால் ! அதை அந்த இமாமுக்கு எதுத்து சொல்லும் வாய்ப்பு கிடைக்காது. பாருங்கள் ஒரு இமாமை பின் தொடருபவர்களுக்கு. தவறுகள் எடுத்துச் சொல்லும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது மற்றவர்களுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஆனால் நபி ( ஸல் ) அவர்கள் ஆக்கிக் கொடுத்த இமாமத் அவரை பின் தொடர்பவர்களுக்கு எந்த பாகுபாடும் இல்லை. இன்னும் நிறைய இந்த மாதிரி சொல்லலாம். சகோதரரே ! மா சலாம். அப்துல் அசீஸ்.
9

March 05, 2009 23:20
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர்களுக்கு, நமது கலந்துரையாடல்களில் புதிய விஷயங்கள் பலவற்றைத் தெரிந்து கொள்ள முடிகிறது, அல்ஹம்து லில்லாஹ்! இங்குக் கேட்கப் பட்டிருக்கும் வினாவுக்கான மிகச் சுருக்கமான விடையொன்று இருக்கிறது. அதாவது, தொழுகைக்குத்தான் குர்ஆன் ஓதுதல் கட்டாயம்; குர்ஆன் ஓதுவதற்குத் தொழுகை கட்டாயமில்லை. கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!; நம் அனைவருக்கும் நேர்வழியைக் காட்டியருள்வானக!
10

March 06, 2009 07:09
0
அல் அமீன்:
அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர்களின் கருத்துப்பரிமாற்றங்கள் இன்னும் தெளிவை ஏற்படுத்துகின்றன. இது போன்ற திறந்த கருத்துப்பரிமாற்றங்கள் மென்மேலும் ஆக்கபூர்வமாக நடக்கட்டும். அல்லாஹ் அருள் புரிவானாக. சகோதரர் அப்துல் அஸீஸ் அவர்கள் வெளிப்படையாக மனதில் தோன்றிய ஒரு சாத்தியக்கூறை எடுத்துக் கூறி அவ்வாறு நடந்தால் என்னசெய்வது? என கேள்வி எழுப்பி இருந்தார். சகோ. இப்னு ஹமீது கூறியது போன்று அது நையாண்டி போன்று தோன்றினாலும் அவர் எடுத்துக் கேட்டதில் தவறு ஏதும் இருப்பதாக தெரியவில்லை. மனதில் தோன்றும் எண்ணத்தை - நேர்மையாக இருக்கும் பட்சத்தில் - தவறு ஏதும் இல்லையே! தற்பொழுது அவரே மீண்டும் கூறிய மற்றொரு உதாரணத்திலிருந்து இன்னொன்றும் எண்ணத்தோன்றுகிறது. தொழுகையில் திருகுர் ஆனைப் பார்த்து ஓதுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், சகோ. ஜி என் கூறியது போன்று இமாம்கள் டிஜிட்டல் பேனரைப் பார்த்தும் ஓதலாம் தானே? அவ்வாறு செய்தால் தவறு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லை தானே? அது போன்று இமாமும் அதனைப் பார்த்து ஓத, இமாம் சரியாகத் தான் ஓதுகிறாரா? என்பதைத் தொழுபவர்களும் பார்த்துப் பின் தொடர,... தொழுகையின் நோக்கமே சிதைந்து விடும். எனவே தொழுகையில் திருகுர் ஆனைப் பார்த்து ஓதுவது தொழுகையின் நோக்கத்தைச் சிதைப்பதால் அதனை அனுமதிக்காமல் இருப்பது தான் சரியானது.
11

March 06, 2009 10:35
0
abdul azeez:
டிஜிடல் பேனர் சாதனம் தொழுகை என்னும் வணக்கத்தில் சேர்க்கவேண்டும் என்றால் டெலி காஸ்ட் டி.வியும் மறுக்கமுடியாத ஒன்று. இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. டிவியில் தெரியும் குர்ஆன் எழுத்தையும் பார்த்து ஓதலாம். அதுவும் ஒரு டிஜிடல் பேனர் சாதனம் மாதிரித்தான். நான் எதற்கு டி.வி. யை மட்டும் உதாரணம் சொல்கிறேன் என்றால் ! டிஜிடல் பேனர் இன்று நம் சகோதரர்களால் அங்கீகரிக்கப்பட்டால் நாளை இந்த டி.வி. நிச்சயமாக வந்துவிடும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்க்கனவே ! நான் குறிப்பிட்ட இமாமத் விஷயம் தொழுகையில் நடைமுறைக்கு வந்துவிட்டால். ஒரு சாரார் இமாம் தவறுகளை எடுத்துக்கூறும் சந்தர்ப்பம் மறுக்கப்படுவது மட்டும் அல்லாமல். மற்றொன்டையும் நாம் பார்க்கனும் ஐந்து வேலை தொழுகை டெலி காஸ்ட் செய்யப்பட்டால் `` ஜும்ஆ'' தொழுகைக்கும் அந்த இமாமத்தை டி.வியில் ஒலி பரப்பவேன்டிவரும். அப்படி அதை செய்யவரும்போது ஜும்ஆ வில் குத்பா என்னும் பேருரை தமிழிலோ அல்லது அரபியிலோ இமாம் பயான் செய்வார் இந்த பயான் ஒரு வணக்கமாக இருந்தாலும் இமாமாக ஒருவரை பார்த்து பேசவும் முடியும். மற்றும் மக்களில் உள்ள ஒருவரும் தாமாக முன் வந்து இமாமை பார்த்து முக்கியமான விஷயமாக இருந்தால் பேசவும் முடியும். இந்த ஹதீத் அனைவருக்கும் தெரிந்தது தான். ஜும்ஆ வில் ஒருவர் வந்து உட்க்காந்து விடுவார் அவரை பார்த்து நபி ( ஸல் ) அவர்கள் இரண்டு ரக்அத் தொழ சொன்ன கட்டளை. அதே போல். மக்களில் ஒருவர் இமாம் குத்பா ஓதும் போது நடந்த சம்பவம் உள்ளது. பாருங்கள் இந்த ஹதீதை. பாகம் 1, அத்தியாயம் 15, எண் 1014 அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். ஜும்ஆ நாளில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது 'தாருல்களா' எனும் வாசல் வழியாக ஒருவர் வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே எங்களுக்கு மழை பொழியச் செய்யுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் கைகளை உயர்த்தி, 'இறைவா! எங்களுக்கு மழை nhழியச் செய்வாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அல்லாஹ்வின் மீது அணையாக வானத்தில் திரண்ட மேகத்தையோ பிரிந்து கிடக்கும் மேகங்களையோ நாங்கள் காணவில்லை. எங்களக்கும் (அதாவது மதீனாவுக்கும்) 'ஸல்ஃ' என்னும மலைக்குமிடையே எந்த வீடும் கட்டிடமும் இருக்கவில்லை. (வெட்ட வெளியாக இருந்தது.) அப்போது அம்மலைக்கப் பின்புறமிருந்து கேடயம் போன்று ஒரு மேகம் தோன்றி வானத்தின் மையப் பகுதிக்கு வந்து சிதறி மழை பொழிந்தது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, ஆறு நாள்கள் சூரியனையே நாங்கள் பார்க்கவில்லை. அடுத்த ஜும்ஆவில் நபி(ஸல்) அவர்கள் நின்று உரைநிகழ்த்தும்போது ஒருவர் அதே வாசல் வழியாக வந்தார். நின்றவாறே நபி(ஸல்) அவர்களை நோக்கி, ' இறைத்தூதர் அவர்களே! செல்வங்கள் அழிந்துவிட்டன. பாதைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன. எனவே மழையை நிறுத்துமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். உடன் நபி(ஸல்) அவர்கள் தம் கைகளை உயர்த்தி 'இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)' என்று பிரார்த்தித்தார்கள். உடனே மழை நின்றது. நாங்கள் வெயிலில் நடந்து சென்றோம். இரண்டாவதாக வந்த மனிதர்முதலில் வந்தவர் தாமா? என்று அனஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'தெரியாது' என்றனர் என ஷரீக் கூறுகிறார். இந்த ஹதீதிர்க்கொப்ப டிவி.யை பார்த்து பின் தொடருபவர்கள் எப்படி சில விஷயங்களை பயான் சொல்லும் இமாமுடன் பேசமுடியும். எங்கு டெலி காஸ்ட் செய்கிறார்களோ அங்கு போக வேண்டிவரும் அல்லது அப்படி போக நேர்ந்தால் ஜும்ஆ தொழுகை பாழ் படும். ஏன் ? என்றால் அந்த பயானில் பேசக் கூடிய அனுமதி இருந்தும். இந்த சந்தர்ப்பமும் டிவி பின் தொடர்பவர்களுக்கு. மண்ணாக தான் போகிறது. மா சலாம். அப்துல் அசீஸ்.
12

March 07, 2009 01:58
0
ஜி என் (பரங்கிப்பேட்டை):
அஸ்ஸலாமு அலைக்கும். கருத்திட்டு வரும் அனைத்து சகோதரர்களுக்கும், சத்தியமார்க்கம் நிர்வாகத்திற்கும் நன்றி! சில கருத்துக்கள் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு தொடர்பில்லாமல் இருக்கின்றன. சில கருத்துக்கள் நெருக்கமானதாக இருந்தாலும் முழுமையானதாக இல்லை. மூன்று கோணங்களில் பதிவுகள் உள்ளன. 1) தொழுகையில் உள்ளச்சத்துடன் நில்லுங்கள் என்பது. தொழுகையில் சில செயல்கள் ஏற்படுவதால் அது உள்ளச்சத்திற்கு எதிராக ஆகாது என்பதில் நாம் அனைவரும் ஒன்றுபடுகிறோம் என்பதால் அதில் பிரச்சனையில்லை. 2) நெஞ்சில் கை கட்டும் சுன்னாவிற்கு மாற்றம் நிகழும் என்பதால் கைகளில் குர்ஆனை வைத்துக் கொண்டு ஓத முடியாது என்பதிலும் ஒன்று படுகிறோம். 3) குர்ஆனை ஓத வேண்டும் என்பதில் பார்த்து ஓதலாமா என்பதில் மட்டும் கருத்து மாறுபாடுகள் இருக்கின்றது நமக்குள். எனவே மூன்றாவதை மட்டும் எடுத்துக் கொள்வோம். மூன்றாவதில் முக்கியமான எதிர் கருத்தாக நான் கருதுவது 'நபிவழியில் வழிகாட்டல் இல்லை' என்ற வாதமேயாகும் (msk - சத்தியமார்க்கம்) குர்ஆன் ஓதுவேண்டும் என்ற கட்டளைத்தான் இருக்கின்றதே தவிர, மனனம் செய்து ஓதுங்கள் என்ற கட்டளையை எங்கிருந்துப் பெற்றீர்கள் என்பதை தெளிவுபடுத்தவும். இப்படி நாம் கேட்டால் நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மனனம் செய்துதான் ஓதியுள்ளார்கள் - பார்த்து ஓதவில்லை என்ற பதிலே உங்கள் தரப்பிலிருந்து கிடைக்கும். நபி(ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் மனனம் செய்துஓதியுள்ளார்களே தவிர மனனம் செய்துதான் ஓத வேண்டும் என்ற ஏவலை அவர்கள் முன் வைக்கவில்லை. மனனம் செய்து ஓதுபவர்களுக்கு பார்த்து ஓத வேண்டிய அவசியமில்லை என்பதால் பார்த்து ஓதும் அவசியம் அன்றைக்கு ஏற்படவில்லை என்பதையும், மிக குறைந்த அளவே எழுத படிக்கத் தெரிந்தவர்கள் இருந்தார்கள், அவர்களும் மனன சக்தியில் தீவிரமாக இருந்தார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டால் பார்த்து ஓதும் நிகழ்வு நடக்கவில்லை என்ற வாதத்தை நாம் முன் வைக்க முடியாது. ஒன்றில்லையென்றால் மட்டொன்று என்ற நிலையில், குர்ஆன் மனனமில்லாதவர்கள் பார்த்து ஓதலாம் என்று பேசும் போது ழுமுக்க மனனம் செய்தவர்களை இங்கு எடுத்துக் காட்டுவது பொருத்தமானதுதானா என்பதை அறிய விரும்புகிறேன். இனி மற்ற வாதங்களுக்கு வருவோம். டிஜிட்டல் பேனர் அல்லது சுவற்றில் எழுதப்பட்டுள்ள - தொங்கவிடப்பட்டுள்ள குர்ஆன் வசனங்கள் இவற்றை தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டிய சந்தர்பத்தில் ஒருவர் பார்த்து ஓதுகிறார் என்றால் வேண்டுமென்றே அவரது கவனம் அங்கு சென்றாலும் (தொழுகையில் ஒரு அங்கமான குர்ஆன் ஓத வேண்டும் என்ற செயலையே அவர் அங்கு செய்கிறார் - சகோதரர் அல் அமீன் கவனிப்பாராக.) அதனால் அவரது தொழுகை எப்படி பாழ்படும் என்பதை விளக்கவும். மனனம் செய்த இமாம் கிராஅத் ஓதுகிறார் மஃமும்களில் குர்ஆன் அறிந்தவர்கள் அவரது கிராஅத்தை கவனித்து வருகிறார்கள் (கவனித்து வந்தால் தான் அவருக்கு இடற்பாடு ஏற்படும் போது எடுத்துக் கொடுக்க முடியும்) இப்போது கவனித்து வருபவர்களின் தொழுகை பாழ்படும் என்று சொல்வீர்களா.. தொழுகையில் இல்லாத ஒரு செயலை நாமாக வேண்டுமென்றே செய்தால் தான் சகோதரர்கள் எடுத்து வைத்துள்ள அனைத்து வாதங்ளும் பொருந்தும். குர்ஆன் ஓதுங்கள் என்ற ஒரு செயல் நடைபெறும் போது இந்த வாதங்களை அங்கு பொருத்த முடியாது. //வீட்டில் தொழும்போது டிஜிட்டல் குர்ஆனைப் பார்த்து சப்தமிட்டு நான் ஓதித் தொழுதால், என் மகனும் என்னைப் போன்றே சப்தமிட்டு ஓதித் தொழ விரும்பி, தனக்கென ஒரு தனி டிவைஸ் கேட்பான். நான் மறுக்கவும் முடியாது. ஏனெனில், நான் விரும்பி அடைய விரும்பும் 'நன்மை'யை என் மகனுக்கு மறுக்க முடியாதே!. அடுத்து என் மனைவிக்கும் ஒன்று வாங்க வேண்டும். சிக்கனம் கருதி ஒன்றை வைத்துக் கொண்டு மூவரும் ஒரு திரையைப் பார்த்து (சப்தமிட்டு) குர்ஆனை ஓதித் தொழும் சூழ்நிலையில் அது தொழுகையா அல்லது கிராஅத் போட்டியா என்று வேறுபடுத்திப் பார்க்க இயலாதாகி விடும்.//சத்திய மார்க்கம். இதை வலுவான வாதமாகத்தான் எடுத்து வைத்துள்ளீர்களா... சரி செலவை குறையுங்கள். 10 ரூபாய், 20 ரூபாய்க்கு விற்கக் கூடிய ஒரு ஆயத்துல் குர்ஸி பேனர் வீட்டில் மாட்டப்பட்டுள்ளது. (மூவருக்கு மூன்று வேண்டுமானாலும் வாங்கி மாட்டிக் கொள்ளலாம்) அதை பார்த்து ஓதுவதில் செலவீனம் குறைவுதான். அதே போன்று பார்த்து ஓதினால் மட்டும் தான் கிராஅத் போட்டி வருமா..? ஒருவீட்டில் மனனம் செய்த மூவர் இருந்து மூவரும் சம நேரத்தில் தொழுகையில் சப்தமாக ஓதினாலும் கிராஅத் போட்டியோ என்று நினைக்கத் தோன்றாதா.... சகோதரர் அப்துல் அஜீஸ் அவர்களின் வாதம் பொருத்தமானதாக இல்லை. ஏனென்றால் இமாமைப் பின்பற்றுபவர்கள் இமாமின் தவறை சுட்டிக் காட்டும் பொறுப்பிலுள்ளவராகிறார் என்பதால் டெலிகாஸ்ட் நிகழ்ச்சிகளை பின்பற்றி தொழமுடியாது என்பது நமது நிலைப்பாடு. எனவே அது குறித்து நாம் இங்கு எந்தகருத்தும் வைக்கவில்லை. //தொழுகையில் திருகுர் ஆனைப் பார்த்து ஓதுவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டால், சகோ. ஜி என் கூறியது போன்று இமாம்கள் டிஜிட்டல் பேனரைப் பார்த்தும் ஓதலாம் தானே? அவ்வாறு செய்தால் தவறு ஏற்படுவதற்கும் வாய்ப்பு இல்லை தானே? அது போன்று இமாமும் அதனைப் பார்த்து ஓத, இமாம் சரியாகத் தான் ஓதுகிறாரா? என்பதைத் தொழுபவர்களும் பார்த்துப் பின் தொடர,... தொழுகையின் நோக்கமே சிதைந்து விடும்// அல் அமீன். தொழுகையில் இமாம் ஓதும் போது அவர் சரியாக ஓதுகிறாரா என்று கவனிப்பது தொழுகையின் நோக்கத்தை சிதைத்து விடும் என்றால், மனனம் செய்து ஓதும் போதும் 'அவர் சரியாக ஓதுகிறாரா..' என்று கவனிக்க முடியாமல் போகும். - பிறகு அவர் தவறாக ஓதினால் எப்படி திருத்துவீர்கள். சரியாக ஓதுகிறாரா என்று கவனித்து தவறும் போது திருத்திய ஹதீஸ்களை என்ன செய்வீர்கள்? கடைசியாக. தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டும் என்ற கட்டளைத்தான் உள்ளது. மனனமுள்ளவர்கள் மனப்பாடமாக ஓதுவார்கள் மனனமில்லாமல், அதே சமயம் ஓத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் பார்த்து ஓதினால் அதை 'கூடாது' என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் காட்டப்படாத நிலையே நீடிக்கின்றது என்பதை நினைவூட்டி முடிக்கிறேன். (எல்லா நுணுக்கங்களையும் அறிந்தவன் இறைவன்)
13

March 07, 2009 04:00
0
S.S.K:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் ஜி என் அவர்களே தொழுகை என்பது ஐந்து வேளையும் நிரைவேற்றப் பட வேண்டிய, ''ஸல்லூ கமா ர அய்து மூனி யுஸல்லீ'' (என்னை எவ்வாரு தொழக் கண்டீரோ அவ்வாரு தொழுங்கள்.. ) என்று ஏவப்பட்ட ஒரு கடமையான வணக்கமாகும். குர் ஆன் ஓதுவது என்பது ஒரு எழுத்துக்கு 10 நன்மைகள் பெற்று தரும் ஒரு நன்மையான காரியம். இதையும் ஒரு வணக்கம் என்றாலும் இதுவும் தொழுகையும் இரு வேறு விஷயங்கள் ஆகும்... குர் ஆன் ஓதுவது தொழுகையாகாது, தொழுகையில் நிலையில் இருக்கும் போது குர் ஆன் ஓதப்படவேண்டியுள்ளது. கைர். தொழுகையின் நோக்கம் அல்லாஹ்வை (நபிவழி படி) வணங்கிட வேண்டும் என்பதாகும். அதே போல் உங்களில் குர் ஆன் அதிகம் அறிந்தவர் இமாமத் செய்யுங்கள் அதில் சம் நிலையில் இருந்தால்.......... என்று ஹதீஸ் தொடருகிறது நாம் அறிந்த ஒன்றே. ஆக தொழுகை என்பது தாங்கள் கீழே கூறியுள்ள படி... // தொழுகையில் இமாம் ஓதும் போது அவர் சரியாக ஓதுகிறாரா என்று கவனிப்பது தொழுகையின் நோக்கத்தை சிதைத்து விடும் என்றால், மனனம் செய்து ஓதும் போதும் 'அவர் சரியாக ஓதுகிறாரா..' என்று கவனிக்க முடியாமல் போகும். - பிறகு அவர் தவறாக ஓதினால் எப்படி திருத்துவீர்கள். சரியாக ஓதுகிறாரா என்று கவனித்து தவறும் போது திருத்திய ஹதீஸ்களை என்ன செய்வீர்கள்?// இமாம் சரியாக ஓதுகிறாரா என்று கவனிப்பது பிரதான நோக்கமல்ல இமாம் மறதியில்/ தவறுதலாக ஓதுவதை அறிந்தால் சுட்டிக்காட்டிட வேண்டுமென்பது வேறு. ஏனெனெல் அந்த காலத்தினர் மனன சக்தியுடையவர்கள் எனினும், அந்த காலத்திலும் குர் ஆன் அன்று இருந்த சாதனங்களாகிய எலும்புகள், தோல்கள், போன்றவற்றில் எழுதப் பட்டதன் நோக்கமே மறதி ஏற்படுவதிலிருந்து பாது காத்திட, மனனம் செய்ய, ஓத கற்பிக்க, ஓதிட போன்ற நோக்கங்களுக்காக.... ஆக அன்றும் இருந்த இப்பிரதிகளை கையில் வைத்து எழுத படிக்க அறிந்த பல நபித்தோழர்கள் தாம் தொழுத போது, தொழவைத்த போது, ஓதியதாக (ஒரே ஒரு சம்பவம் பலவீனமான ஹதீஸ் கூட இமாம் தவறை திருத்திட வேண்டும் எனும் நோக்கத்தில் கூட) நாமறிந்த வரை காணமுடியவில்லை. எனும் போது இதையும் இன்னும் காட்டப்பட்ட விஷயங்களை பொருட் படுத்தாமல் தொழுகையில் இதை சேர்க்கும் விதமாக... //கடைசியாக. தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டும் என்ற கட்டளைத்தான் உள்ளது. மனனமுள்ளவர்கள் மனப்பாடமாக ஓதுவார்கள் மனனமில்லாமல், அதே சமயம் ஓத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் பார்த்து ஓதினால் அதை 'கூடாது' என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் காட்டப்படாத நிலையே நீடிக்கின்றது என்பதை நினைவூட்டி முடிக்கிறேன். (எல்லா நுணுக்கங்களையும் அறிந்தவன் இறைவன்) // என்பது சரியான கருத்தல்ல என்பதை மீண்டும் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன். அன்புடன். S.S.K.
14

March 07, 2009 10:07
0
வஹ்ஹாபி:
//தொழுகையில் குர்ஆன் ஓத வேண்டும் என்ற கட்டளைத்தான் உள்ளது. மனனமுள்ளவர்கள் மனப்பாடமாக ஓதுவார்கள் மனனமில்லாமல், அதே சமயம் ஓத வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்கள் பார்த்து ஓதினால் அதை 'கூடாது' என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் காட்டப்படாத நிலையே நீடிக்கின்றது// அன்புச் சகோதரர் ஜி.என், 'தொழுகையை நிலைநிறுத்துங்கள்' என்ற கட்டளைதான் உள்ளது என்று சொல்லி, தான் நினைத்தவறெல்லாம் தொழுது கொள்ளாமல் அதற்கான வழிகாட்டும் வழிமுறைகள் யாவை? என்பதையும் 'என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்' என்பதில் அடங்கியுள்ள செயற்முறைகளையும் தேடியெடுத்து, பார்த்துப் பார்த்துத் தொழுகையை அமைத்துக் கொள்ள வேண்டியது ஒரு முஸ்லிமுடைய கடமையாகும். பிரதிகளைப் பார்த்தாகிலும் தொழுகையில் கூடுதலாக ஓதியாக வேண்டும் என்று கட்டாய நிலை இல்லையே! குர் ஆன் ஓதுவதில் இன்பம் கண்ட நபித்தோழர்கள் சிலரிடம் எழுதிப் பதியப் பட்ட குர்ஆன் வசனங்கள் இருந்தன. அதிகமாக ஓதுவதற்காக எந்த நபித்தோழரும் (தனித்தத் தொழுகையிலும்) எழுதப் பட்டதை கையில் வைத்துக் கொண்டு ஓதித் தொழுத முன்மாதிரி எதுவும் காணக் கிடைக்கவில்லை. '... எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும் அல்லாஹ்வின் அருளைத் தேடுவதற்காக பூமியில் விரைய வேண்டியவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்களும் உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான். ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள் ...' [073:020]. மேற்காணும் வசனம் முஸ்லிம்கள் அனைவரையும் பார்த்துப் பன்மையில் பேசுகிறது. அல்லாஹ் நமக்கு எளிதானதையே விரும்புகிறான். அதை மறுப்பதோ மீறுவதோ சரியானதல்ல. //'மார்க்கம் எளிதானது; அதை நீங்கள் கடினமாக்கிக் கொள்ளாதீர்கள்' என்பது நபிமொழி. அந்த மார்க்கத்தின் தலையாய வழிபாடான தொழுகை என்ற வணக்கத்தில் கூடுதலாக ஒன்றைப் புகுத்திப் புதுமை செய்வதற்கு நமக்கு அனுமதியில்லை என்பதே நமது நிலைப்பாடு. 'மார்க்கத்தில் நாமாகக் கூடுதல் செய்வது கூடாது' எனக் கூறுவதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. 'நாஃப்' என்ற செயல் மறுப்புக்கு ஆதாரம் தேவை என நாம் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அதற்கு மாற்றமாக, 'கூடும்' என்று ஒரு 'ஃபிஅல்' - செயலைக் கூட்ட முயலுபவரே ஆதாரங்களைத் தரக் கடமைப் பட்டவர் (அத்தலீலு அலல் முத்தஈ).// தொழுகையில் குர்ஆன் ஓதுவது ஒரு வணக்கத்தின் உள்ளேயுள்ள இன்னொரு வணக்கமாகும். அந்த வணக்கத்துள் இல்லாத ஒன்றைப் புகுத்த விரும்பினால் அதற்கான முன்னுதாரணச் சான்றை முன்வையுங்கள். அதுதான் நேர்மை!
15

March 08, 2009 12:06
0
mohideen s.fareed:
அன்புச் சகோதரர்களே, நான் சீனாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வேலை செய்கிறேன். இந்த இடத்தில் முஸ்லிமாக நான் மட்டுமே உள்ளேன். மூன்று ஜுமா தொழுகைகளைத் தொடர்ந்து விட்டால், அவர் முஸ்லிமாக தொடர இயலாது சமீபத்தில் நான் அறிந்தேன். ஆனால், நான் இங்கு ஜுமா அன்று தனியாக லுஹர் தொழுகிறேன். எனக்கு இதற்கான பதிலை தயவுசெய்து அனுப்பி வையுங்கள். வஸ்ஸலாம் ஃபரீத்
16

March 11, 2009 06:17
0
சத்தியமார்க்கம்.காம்:
அன்புச் சகோதரர் முஹைதீன் ஃபரீத், தங்கள் கேள்வி, சத்தியமார்க்கம்.காம் தளத்தின் கேள்வி-பதில் தனிப்பகுதிக்கு அனுப்பப் பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் பதில் கிடைக்கும்; தயவு செய்து காத்திருக்கவும்.
17

March 11, 2009 06:39
0
j.aneess fathema:
தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்ப்பதற்கோ அல்லது கைகளில் ஏந்தி அதைப் பார்த்து ஓதுவதற்கோ நாமறிந்தவரை மார்க்கத்தில் வழிகாட்டல் ஏதும் இல்லை.
18

July 28, 2010 14:51
0
முஹம்மது மபாஸ்:
தொழும்போது குர்ஆனைத் திறந்து பார்த்து ஓத ஆதாரமில்லை தெளிவாகிவிட்டது இதை சொன்னால் ஏற்கும் நிலையில் இமாம் இல்லை அவ்வாறிருக்க அவரை பின்தொடர்ந்து தொழலாமா?
19

November 23, 2010 09:28

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 

இறைமறை

இப்பக்கத்தை PDF வடிவில் சேமிக்க...

தேடுக...

Random Quran Verses

2:188 அன்றியும், உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும், நீங்கள் அறிந்து கொண்டே பிற மக்களின் பொருள்களிலிருந்து(எந்த) ஒரு பகுதியையும், அநியாயமாகத் தின்பதற்காக அதிகாரிகளிடம் (இலஞ்சம் கொடுக்க) நெருங்காதீர்கள்.

புதிய கருத்துகள்

kalibulla : very good and happy news go ahead,.


Ibrahim ulavi london : Assalamu alaikum, This is very happy news for every muslim . our brother CNM SALIM And brother Imran...


j.ameer ali : On our part, let all of us pray for his good health and long life service to our society. By J.Ameer...


Ansary : This is a great news to know. He is doing fine. This is a very good example to other District Collec...


y.m.anari : ஹிஜாப் பற்றி இந்தத் தளத்தினர் குரான்...


Jaffer : Masha Allah ...May allah bless him and guide him to strive in the straight path.


Karunakaran : Salute to Collector Ahmad... You are the REAL hero!


haneefm : رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَن...


M Muhammad : Assalamu Alaikum Dear Brother J Ameer Ali KSA // Dear editor, would you please send the complete ad...


Li_Brothers : கணக்குகள் சரி பார்க்கப்படும் அந்த மற...


j.ameer ali, ksa : Dear editor, would you please send the complete address of that Elders' orphanage,Rajagiri to my e-...


j.ameer ali, ksa : May Almighty Allah show our society the right path of living. Is there no Imam and Jumma prayers in ...


சுலைமான் : புறம் ஒரு சமூகத் தீமை. கூர்மையான வரிக...


Noor Huq : Thank u for the information. Starting college like this is very neccessary for the women living ar...


faizal : masha allah.Its very useful


mohamed iqbal : அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ், ம...



You are here  : முகப்பு இஸ்லாம் ஐயமும்-தெளிவும் முஸ்லிம்களுக்காக தொழுகையில் குர்ஆனைப் பார்த்து ஓதுவது
Twitter
RSS
YouTube
English