| சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-3 |
|
|
| தொடர்கள் - ஆய்வுக் கட்டுரைகள் | ||||
| செவ்வாய், 14 அக்டோபர் 2008 07:43 | ||||
|
உஸாமா பின் லாடன், அல்காயிதா, ஹமாஸ்! சிமி தடை செய்யப்பட்ட மறுநாள், மத்திய உள்துறைச் செயலர் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்து, "சிமிக்கு உசாமா பின் லாடன், அல்-காயிதா, பலஸ்தீன கொரில்லா போராளிகளான ஹமாஸ் போன்றவற்றுடன் தொடர்புண்டு" என அறிவித்தார். தேவிரோத ஒளி-ஒலிப் பேழைகளும் பிரச்சார உபகரணங்களும் சிமியிடமிருந்து கண்டெடுத்ததாகவும் செயலர் அறிவித்தார். சிமி உறுப்பினர்கள் தில்லி மற்றும் முக்கிய நகரங்களில் தாலிபான் ஆதரவுத் துண்டு பிரசுரங்கள் வினியோகித்ததைப் பார்த்ததாகவும் அவர் அறிவித்தார். இப்படி அறிவித்தபோதோ அதற்கு முன்போ அதன் பின்னரோ இதனைக் குறித்த எந்த ஓர் ஆதாரத்தையும் அவர் வெளியிடவில்லை. ஏழு ஆண்டு காலத்திற்கிடையில், இணையத்திலிருந்து எவருக்கு வேண்டுமானாலும் நகலெடுக்க எளிதான உஸாமா பின் லாடனின் ஒளிக்கோப்புகளும் அமெரிக்கத் தீவிரவாதத் தாக்குதல்கள் தொடர்பான இணையத்திலிருந்து சர்வசாதாரணமாக எடுக்கக் கூடிய ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தல் என்பது, சிமிக்கு எதிரான கிரிமினல் குற்ற வழக்குகளில் வழக்கமாகிப் போனது. தடை செய்யப்பட்டு ஒரு நாளிற்குள்ளேயே ஆதாரமில்லாததும் தெளிவில்லாததுமான குற்றச்சாட்டுகள் தொடர்ந்து சுமத்திக் கொண்டிருத்தல் என்ற தந்திரத்தை அரசு பிரயோகிக்கத் துவங்கியிருந்தது. 2001க்குப் பிறகு காவல்துறையும் உளவுத்துறையும் கைகோர்த்துக் கொண்டு செய்த தேர்ந்த தந்திரமாக இருந்தது அது. நாஸி பிரச்சாரக்குழு அமைச்சர் ஜோஸப் கீபல்ஸ் அறிவுறுத்திய விதத்தில், ஆதாரங்களைச் சோதனைக்கு உட்படுத்தக் கோரிக்கை எழும்பவிடாத விதத்தில், வெறும் குற்றச்சாட்டுகளைச் சத்தியங்களாக நம்பச் சொல்லி, அரசு இவ்விதப் பொய் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சுமத்த ஆரம்பித்தது. சாதாரணமாக, எந்த ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடைபெறும்போதும் முக்கிய அமைச்சர்களும் காவல்துறையும் சிமிக்கெதிராகக் குற்றச்சாட்டு சுமத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். செய்தி ஊடகங்கள் அவற்றை எவ்விதக் கூச்சமும் இன்றி அப்படியே முகப்புப் பக்கத்தில் உச்சக்குரலில் விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், சுமத்தப் படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓர் ஆதாரத்தைக்கூட எவரும் பொதுவில் வைக்கவில்லை. நீதிமன்றத்தில் ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப் படும் ஆதாரங்களெல்லாம் குற்ற விசாரணைகளை எள்ளி நகையாடும் விதத்தில் அமைந்திருந்தன. அன்றைய தினம், சிமிக்கெதிராக அதுபோன்ற எண்ணிலடங்காக் குற்றச்சாட்டுகள் வெளியாயின. பிரச்சினை உருவாக்கக் கூடிய சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் அச்சடித்து வினியோகிக்கவும் மதவெறியை வளர்க்கும் பத்திரிகைச் செவ்விகள் அளித்ததாகவும் சிமி மீது உள்துறைச் செயலர் குற்றம் சுமத்தினார். ஆனால், மதவெறி உருவாக்கக் கூடிய பத்திரிகைக் குறிப்புகளையோ பிரச்சினை உருவாக்கும் படியான வாசகங்கள் அடங்கிய ஒரு துண்டுப் பிரசுரத்தையோ சுவரொட்டியையோ ஆதாரங்களாக அவர் நீதிமன்றத்திலோ பொது இடத்திலோ கடைசிவரை சமர்ப்பிக்கவில்லை. சட்டரீதியான செயல்பாடுகள்கூட சட்டவிரோதமும் தேசவிரோதமுமான செயல்பாடுகளாக முத்திரை குத்தப்பட்டன. மார்ச் 2001இல் தில்லியில் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிராக இந்தியா முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்க சிமி அழைப்பு விடுத்திருந்தது. சிமி தடை செய்யப்படுவதற்குக் காரணமான சட்டவிரோதச் செயல்பாடாக நீதிமன்றத்தில் இதையும் பட்டியலிடப்படும் கூத்து இன்னமும் தொடர்கின்றது. "சிமி யூனிட்கள் திருக்குர்ஆன் எரிக்கப்பட்டப் பிரச்சனையைப் பரவலாக இணையம் வழியாகப் பரப்பின" என நீதிமன்றத்தில் உள்துறைச் செயலர் தெரிவித்தார். "சிமி உறுப்பினர்களின் இணைய உபயோகம், அவர்களின் தேசவிரோதமான இலட்சியங்களுக்கான ஆதாராமாகும்" என்றும் அவர் கூறினார். அவரது சில குற்றச்சாட்டுகள், அபத்தங்களும் நம்பவே முடியாததுமாகும். "குற்றம் சுமத்தப் பட்டிருப்பவர், சிமி உறுப்பினர்களுக்கு நீச்சல் மற்றும் குதிரையேற்றத்திற்குப் பயிற்சியளித்தார். அவர் தன் வீட்டு வாசலில் நின்று கொண்டு இந்தியாவுக்கு எதிரான வாக்கியங்களைக் கூவிக்கொண்டிருந்தார்" என்றும் "சிமி, இம்மாநிலத்தை இந்தியாவிலிருந்து துண்டாடக் கோருவதாக"வும் மகாராஷ்டிரா காவல்துறை நீதி மன்றத்தில் கூறுகிறது. இரண்டு ஆண்டு தடை என்ற காலக்கெடு கடந்தவுடன், அப்போது துணைப் பிரதமராக இருந்த அத்வானி 2003 செப்டம்பர் 27 அன்று எவ்வித விளக்கத்திற்கும் காத்திராமல் மற்றொரு இரண்டு ஆண்டுகளுக்கு சிமியைத் தடை செய்தார் - முன்னர் சுமத்தப்பட்ட அதே படுபயங்கரமான குற்றச்சாட்டுகள் அடங்கிய 'புதிய' காரண்த்தோடு. முதல் தடவை போன்றதற்குச் சமமான அதே தடை. ஆனால், வழக்கம்போல் ஆதாரங்கள் எதுவும் முன்வைக்கப் படவில்லை. இத்தடைக்கு இடையில் 2004இல் பாராளுமன்றத்தேர்தலில் என்.டி.எ ஆட்சியை இழந்து யு.பி.எ ஆட்சியைப் பிடித்தது. புதிய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், செப்டம்பர் 2005இல் சிமி தடைக்கான காலாவதி முடிய அனுமதித்தார். ஆனால், நான்கு மாதம் கடந்து 2006 பிப்ரவரி 7 அன்று திடீரென சிமியை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மூன்றாவது முறையாக மத்திய அரசு தடை செய்தது. இவ்வருடம் (2008) பிப்ரவரி 7 அன்று நான்காவது முறையாக சிமி தடை செய்யப்பட்டிருக்கின்றது. மீண்டுமொரு முறை 2006இல் சுமத்தப்பட்ட அதே குற்றச்சாட்டுகள் காரணங்களாகச் சொல்லப் பட்டுள்ளன - எவ்வித ஆதாரமும் இன்றி. இந்த நான்கு கட்டத் தடைகளுக்கிடையில் நாடு முழுவதும் சிமி உறுப்பினர்கள் என கூறப்படுபவர்களுக்கு எதிராக நூற்றுக்கணக்கான கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களுக்கே வேகமாக ஜாமீனில் வெளி வருவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. ஜாமீன் கிடைத்தவர்களில் அனேகம் பேருக்கும், கைது செய்யப்பட்ட 90 நாட்களுக்குள் சட்டப்படி குற்றப்பத்திரிக்கை வழங்கக் காவல்துறையினரால் இயலாததாலேயே வெளியில் வர முடிந்தது. சுமத்தப்பட்டக் குற்றங்களுக்கு எவ்வித ஆதாரமும் இல்லாமலேயே அதிகமானவர்கள் குறைந்தது ஓராண்டோ இரண்டு ஆண்டுகளோ சிறையில் வாடினர். ஜாமீனில் வெளி வந்த நூற்றுக்கணக்கானவர்கள் இப்பொழுதும் ஆண்டுக் கணக்கில் நீண்டு போகும் வழக்குகளில் சிக்கிண்டு அவதிப்பட்டுச் சீரழிந்து வருகின்றனர். பல வழக்குகளின் விசாரணைகூட இதுவரை துவங்கப்படவில்லை. அபத்தமானதிலிருந்து மிகக்கொடூரமான குற்றங்கள்வரை சுமத்தப்பட்டு பெரும்பாலோர் இப்பொழுதும் சிறையில் வாடுகின்றனர். எனினும் அவர்களுக்கெதிராகப் புதுப்புது வழக்குகள் பதிவு செய்யப்படுவதற்கு மட்டும் குறைச்சலில்லை. புதிய கைதுகள் அநேகம் அநேகம் முஸ்லிம்களைச் சிறையில் கொண்டு சேர்க்கின்றன. நீதிமன்றங்கள் முந்தைய வழக்குகளில் ஆதரமில்லாததைக் காட்டி மூடும் பொழுது, விடுதலையாகி வெளிவருபவர்களை மீண்டும் கைது செய்து, புது வழக்குத் தொடுத்துச் சிறையில் அடைக்கின்றனர்.
உண்மையில், சிமிக்கெதிராகப் பல வழக்குகளும் தீர்க்கமான திட்டமிடலுடன் உருவாக்கப்பட்டவைகளாகும். அதில் பிரதிகள் சிமி உறுப்பினர்கள் என்றுகூட குற்றம் சுமத்தப்பட்டிருக்க மாட்டார்கள். அபூர்வமாகத் தீர்ப்பு வெளியான சில வழக்குகளில்கூட, இந்தியா முழுவதும் உள்ள நீதிபதிகள் சிமி உறுப்பினர்களை விடுதலை செய்யக் காரணம், காவல்துறை நீதிமன்றத்தில் அவர்களுக்கு எதிராக முன்வைக்கும் ஆதாரங்களின் தரக் குறைவினால்தான். சட்டவிரோதமாக அறிவிக்கப்பட்ட ஒரு தீவிரவாத குழுவிற்கு எதிராக காவல்துறை ஆதாரங்கள் உண்டு எனக் கூறினால் அதன் அர்த்தம், காவல்துறை வெறும் சூழ்நிலைகளையும் ஊடகங்களில் எழுதப்படுகின்ற கட்டுக் கதைகளையும் அடிப்படையாக வைத்து அறிவிக்கின்றது என்று புரிந்து கொள்ள வேண்டும். இன்ஷா அல்லாஹ் தொடரும்.. பிற பகுதிகள்: வாழ்க்கைகளைக் கசக்கி எறியும் வழக்குகள்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-1) "பொய்யைத் திரும்பத் திரும்பக் கூறு!" என்ற நாஸி தந்திரம்! (சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம்-2) குற்றத்தை ஏற்றுக் கொள்ளும் (செல்லாத) ஒப்புதல் வாக்குமூலங்கள்! சிமி-டெஹல்கா அறிக்கை-பாகம் 4)
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (0)
![]() கருத்து எழுதுக :
|