| வல்லரசுகளின் விளையாட்டில் தொலைந்து போன டாக்டர் ஆஃபியா சித்திக்கீ |
|
|
| செய்திகள் - உலகச் செய்திகள் | |||||||
| ஞாயிறு, 24 ஆகஸ்டு 2008 12:07 | |||||||
கடந்த மார்ச் 30, 2003 அன்று சிந்து மாகாணம் கராச்சியில் உள்ள குல்ஷனே இக்பால் பகுதியில் உள்ள தனது தாயின் வீட்டிலிருந்து பஞ்சாப் மாகாணமான ராவல்பிண்டிக்குக் கிளம்பினார் டாக்டர் ஆஃபியா சித்திக்கீ. டாக்ஸியில் ஏர்போர்ட்டிற்குக் கிளம்பிச் சென்றவர் ஏர்போர்ட் சென்று சேரவில்லை. செல்லும் வழியிலேயே பாகிஸ்தானின் உளவுத்துறையினரால் (Pakistani intelligence agencies) மடக்கப்பட்டார் என்றும் American Federal Bureau of Investigation (FBI) யிடம் ஒப்படைக்கப்பட்டார் என்கின்றன ஊடகங்கள். ஒரு வயதுப் பச்சிளம் பாலகன் உட்பட மூன்று குழந்தைகளுக்குத் தாயான டாக்டர் ஆஃபியா சித்திக்கீ குழந்தைகளுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 30. சொல்லி வைத்தது போல் இரு நாட்கள் கழித்து அமெரிக்காவின் செய்தி ஊடகமான NBC யில் செய்திகள் வெளியாகத் துவங்கின. அதாவது டாக்டர் ஆஃபியா, ஒஸாமா பின் லேடனின் தீவிரவாத அமைப்புகளுக்குப் பணப் பரிமாற்றம் செய்வதாகக் காரணம் காட்டி தேடப்படுவதாகத் திரும்பத் திரும்பச் செய்திகள் வரலாயின. NBC யின் இச்செய்தியினை டாக்டர் ஆஃபியாவின் தாயார் திருமதி. இஸ்மத் (தற்போது உயிருடன் இல்லை) வன்மையாக மறுத்துள்ளார். டாக்டர் ஆஃபியா நரம்பியலில் விஞ்ஞானியாக (neurological scientist) இருப்பதையும் அவர் தம் கணவர் அம்ஜத்துடன் அமெரிக்காவில் வாழ்ந்து வந்ததையும் சுட்டிக் காட்டினார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 1, 2003 இல் ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது ஒரு உருது தினசரி நிருபரின் கேள்விக்கு பக்கிஸ்த்தான் உள்துறை அமைச்சர் ஃபைசல் சாலிஹ் ஹயாத் அளித்த பேட்டி ஒன்றில் டாக்டர் ஆஃபியா கைது செய்யப்பட்டிருப்பதை அவசர அவசரமாக மறுத்துள்ளார். அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 2, 2003 இல் வேறொரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இதே கேள்விக்கு இதே அமைச்சர் அளித்த பதில் வேறு மாதிரியாக மாறியிருந்தது. டாக்டர் ஆஃபியாவுக்கு அல் காய்தா தொடர்பிருப்பதாகவும் அதனைத் தொடர்ந்து அவர் தலைமறைவாகி விட்டதாகவும் தெரிவித்தார். கூடவே "டாக்டர் ஆஃபியாவின் செயல்பாடுகளை அறிந்தீர்களாயின் நீங்கள் திகைத்துப் போவீர்கள்" என்றும் பேட்டியளித்துள்ளார். இப்படி டாக்டர் ஆஃபியா பற்றிய அமைச்சரின் தாறுமாறான பேட்டி வெளியாகியும் ஆஃபியாவின் தாயாரின் மறுப்பிற்கும் ஒருவாரத்திற்குப் பின் உளவுத்துறையினர் டாக்டர் ஆஃபியாவின் வீடு தேடி வந்து கடுமையாக எச்சரித்து விட்டுச் சென்றுள்ளனர் என்று கராச்சியின் பிரபல ஆங்கில இதழ் சிறப்புச்செய்தி வெளியிட்டது. "பெரும் தீவிரவாதிகளுடன் உங்களுக்குத் தொடர்பு உண்டு என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் உங்கள் மகள் காணாமல் போனதைப் பற்றி நீங்கள் ஊதி பெரிதாக்குவது உங்களுக்கு நல்லதில்லை" என்றும் "மீறினால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்!" என்றும் டாக்டர் ஆஃபியாவின் தாயாருக்கு "அன்பு" எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டாக்டர் ஆஃபியாவின் நிலை என்ன ஆனது என்று தெரியாமல் ஒட்டு மொத்த மக்களும் திணறிக் கொண்டிருந்த வேளையில், ஆப்கானிஸ்தானின் பக்ரம் (Bagram) சிறையில் Prisoner 650 என்ற பட்டப் பெயர் கொண்ட ஒரு பெண் சித்ரவதைப் படுத்தப் படுவதாக செய்திகள் கசியத் துவங்கின. கொடுமைகளின் உக்கிரம் தாங்க இயலாமல் தொடர்ந்து கைதி எண் 650 சுய நினைவை இழந்துள்ளதாக அத்தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து அமளிகள் ஆரம்பித்தன. களேபரம் உச்சகட்டத்தை எட்டிவிட, அழுத்தம் தாங்கமுடியாமல் பிரிட்டிஷ் மேலவை உறுப்பினர் நஜீர் அஹ்மத் இது தொடர்பான கேள்வியை அவையில் எழுப்பி பற்றிய தனது ஆதாரங்களை முன்வைத்துள்ளார். அதன்படி Prisoner 650 என்று பெயரிடப்பட்ட அப்பெண்மணி உடல் ரீதியாக கடுமையான சித்ரவதைகளுக்கு உள்ளாகியிருப்பதாகவும் சிறைக் காவலர்களால் தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சித் தகவலையும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளார். கொடுமையின் உச்சகட்டமாக Prisoner 650 என்ற அப்பெண், பெண்களுக்கான கழிப்பறைகளைப் பயன்படுத்த மறுக்கப்பட்டார் என்றும் சக ஆண் கைதிகளுக்கான கழிப்பறைகளில் அவர்களின் கண்ணெதிரே .... ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ரம் சிறைச்சாலையில் ஒரு பெண் கடந்த நான்கு ஆண்டுகளாக விவரிக்க இயலா அளவிற்கு இவ்வாறு துன்புறுத்தப்பட்டு வருவதாக குரல் எழுப்பியவர் ஜூலை 6, 2008 இல் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையாளரான யுவான் ரிட்லி. சமீபத்தில் செய்தி சேகரிப்பு ஒன்றிற்காகச் சிறைச்சாலைக்குச் சென்றிருந்த அவர் அங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் வன்கொடுமைகளைக் கண்டு பதறிப் போனார். நொடி கூட தாமதிக்காமல் இச்செய்தியைப் பத்திரிகையாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்து வெளி உலகிற்குக் கொண்டு வந்து, உதவிக்கரங்கள் நீள வேண்டுமென்ற உறுதியான குரல் கொடுத்துள்ளார். (வாசிக்க: Press TV யின் Four years in Bagram as Prisoner 650 - Yvonne Ridley) "அப்பெண்ணை நான் சாம்பல் நிறப் பெண்மணி என்றுதான் சொல்வேன். ஏனெனில் அப்பெண் பார்ப்பதற்கு ஒரு பிசாசு போன்றிருந்தாள். ஈனஸ்வரத்தில் புலம்புவதையும் அழுவதையும் அலறுவதையும் சிறைச்சாலையில் உள்ளவர்கள் எப்போதும் கேட்பார்களாம்" என்று பதைபதைக்கிறார் யுவான் ரிட்லி. அப்பெண் யார் என்று தெரியாத நிலையில் மனிதாபிமான அடிப்படையில் அவரை மீட்டுக் கொண்டு வருவதற்காகப் பாகிஸ்தான் விரைந்தார் யுவான் ரிட்லி. {mosimage}பயணத்தின் போது முஆஜம் பெக் என்ற முந்தைய குவாண்டனமோ சிறைவாசி ஒருவர் எழுதிய The Enemy Combatant என்ற நூலை வாசித்த போது அவருக்குப் பொறி தட்டியது. (YouTube வீடியோ - screams of a Muslim sister) அந்த நூலில் முஆஜம், இஸ்லாமாபாத்தில் வைத்து கடந்த பிப்ரவரி 2002 இல் தான் கைது செய்யப்பட்டு பக்ரம் சிறையில் ஒரு வருடம் அடைக்கப்பட்டதாகவும் அதன் பின் குவாண்டனமோ சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டதாகவும் எழுதியிருந்தார். தனது அறைக்குப் பக்கத்து அறையில் அப்பெண் பல ஆண் காவலர்களால் கொடுமைப் படுத்தப் படும் ஒவ்வொரு வேளையிலும் தனது நெஞ்சு விம்மி வெடித்து விடுவதை உணர்ந்ததாக தனது நூலில் கூறியுள்ளார். முஆஜம் 2005 ஆம் ஆண்டு குவாண்டனமோவில் இருந்து விடுதலை ஆனபின் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இந்நூலை எழுதியிருந்தார். இதனைத் தொடர்ந்து Justice Party கட்சியின் தலைவராக உள்ள இம்ரான் கான், கொடுமைகளைச் சந்திக்கும் அப்பெண் டாக்டர் ஆஃபியாதான் என்று தனது ஐயத்தினை வெளிப்படுத்தியுள்ளார். Prisoner 650 என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அப்பெண் பற்றியத் தகவல்களை அமெரிக்காவும் பாகிஸ்தான் அரசும் இணைந்து சாமர்த்தியமாக மறைத்துள்ளதைச் சுட்டிக்காட்டினார். அன்றிலிருந்து இன்றுவரை, அமெரிக்காவோ பாகிஸ்தான் அரசோ டாக்டர் ஆஃபியாவைக் கைது செய்து பக்ரம் சிறைச்சாலையில் அடைத்த விஷயத்தை வெளியே சொல்லாததன் மர்மம் என்ன என்பதே பலரின் கேள்வியாக உள்ளது. இது தொடர்பாக அல் ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்ட டாக்குமெண்டரி (மேலே) கடந்த டிசம்பர் 30, 2003 இல் டாக்டர் ஆஃபியாவின் மூத்த சகோதரியான டாக்டர் ஃபவுஜியா சித்திக்கீ மற்றும் MNA உறுப்பினரான இஜாஜூல் ஹக் இருவரும் மேலே நாம் கூறிய அமைச்சர் ஃபைஸல் சலாஹ் ஹயாத்தைச் சந்தித்தனர். ஏற்கனவே முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்திருந்த பொறுப்புள்ள பதவியில் உள்ள அமைச்சர் அச்சமயத்தில் பதிலளிக்கையில் கைது செய்யப்பட்ட டாக்டர் ஆஃபியா ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுவிட்டதாக கூறியுள்ளார்.
Prisoner 650 என்ற அடையாளப்பெயர் சூட்டப்பட்டுக் கடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் டாக்டர் ஆஃபியாவிற்கு, இன்னின்ன முறையிலான சித்திரவதைகள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகத் தான் இத்தகைய அடையாளப்பெயர் இடப்பட்டுள்ளது என்ற சந்தேகமும் உள்ளது. {mosimage}ஏற்கெனவே இதற்கு முன்பு குவாண்டனமோ சிறையில் அடைக்கப்பட்டுப் பின்னர் கடும் போராட்டத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட அல்ஜஸீரா செய்தியாளர் ஸாமி அல் ஹாஜிற்கு (வாசிக்க: சத்தியமார்க்கம்.காம் செய்தி) Prisoner 345 என்ற அடையாளப்பெயர் சூட்டப்பட்டிருந்ததும் அத்தகைய அடையாளப்பெயர் கொண்ட கைதிகளுக்குத் தனிப்பட்ட முறையிலான சித்திரவதைகள் செய்யப்படும் என்றும் செய்தி வெளியாகி இருந்தது.
இச் செய்தியறிந்தபின் இன்று வரை மக்கள் மனதில் விம்மி எழும்பிக் கொண்டிருக்கும் கேள்விகள்: - இவ்வளவு அமளிகள் நடந்தும் கண்டும் காணாதது போல் காவல்துறையும், உளவுத்துறையும் மவுனம் காப்பது ஏன்? - டாக்டர் ஆஃபியா இப்போது FBI யின் பாதுகாவலில் சிறைவைக்கப்பட்டுள்ளாரா அல்லது ISI யின் பாதுகாவலில் வைக்கப்பட்டுள்ளாரா? எது எப்படியோ அமெரிக்காவும், பாகிஸ்தானின் முந்தைய முஷர்ரஃப் அரசும் இணைந்து அல் காய்தா பெயர் சொல்லி இது நாள் வரை நடத்தி வந்த கொய்தலில் எண்ணிலடங்கா அப்பாவிகள் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாகியுள்ளனர் என்பது மட்டும் நிச்சயம். அரசியல் சதுரங்க விளையாட்டில் பகடைக் காயாய் மாறிப்போன, உடலில் உயிர் மட்டுமே எஞ்சியுள்ளதாகக் கருதப் படும் அப்பாவியான டாக்டர் ஆஃபியா திரும்பி வர இறைவனைப் பிரார்த்திப்போம். (பார்க்க: வீடியோ: இஸ்லாம் என்ன சொல்கிறது?)
கூடுதல் தகவல்களுக்கு உதவிய தளங்கள்: Muslimpad.com / Teeth.com தொகுப்பு: அபூ ஸாலிஹா
பகிர்ந்து கொள்க
இச்செய்தியை நண்பருக்கு அனுப்ப
Trackback(0)
கருத்துக்கள் (3)
![]()
அஸ்ஸலாமு அலைக்கும்....
அரசியலில் இருப்பவர்களுக்கு அல்லாஹ்விடம் அச்சம் இல்லை போலும் . அல்லாஹ் அனைத்தயும் பார்த்துக்கொண்டு இருக்கிறான் என்பதை மறந்தவர்களாக நாற்காளி சுகத்திற்கும்,
அமெரிக்கா போன்ற குள்ளநரிகளின் சூழ்சிக்கும், அடிபணிந்து அப்பாவிகளின் வாழ்க்கையில் . விளையாடுகிறார்கள். படித்த பெண்மனிக்கே இந்த நிலமை என்றால்......???
1
August 25, 2008 09:16
கருத்து எழுதுக :
|