சத்தியமார்க்கம்.காம்

தலைமைத்துவம் (நபிமொழி) print Email
நற்சிந்தனைகள் - பொன்மொழிகள்
திங்கள், 01 மே 2006 13:30


'' 'உங்களின் தலைவர்களில் நல்லோர் யார், தீயோர் யார் என்பதனை நான் உங்களுக்கு அறிவிக்க வேண்டாமா?

எவர்களை நீங்கள் நேசிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களை நேசிக்கின்றீர்களோ அவர்களும் அன்றி, எவர்களுக்கு நீங்கள் (இறைவனிடம்) இறைஞ்சுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களுக்காக (இறைவனிடம்) இறைஞ்சுகின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிக நல்லவர்கள் ஆவர்.

மேலும், எவர்கள் மீது நீங்கள் சினமுறுகின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்கள் மீது சினமுறுகின்றார்களோ அவர்களும் அன்றி, எவர்களை நீங்கள் சபிக்கின்றீர்களோ அவர்களும், எவர்கள் உங்களைச் சபிக்கின்றார்களோ அவர்களும் தாம் தலைவர்களில் மிகத்தீயோர் ஆவர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: உமர் (ரலி) ஆதாரம்: திர்மிதீ

''மக்கள் நன்மையிலும் தீமையிலும் குறைஷிகளைப் பின்தொடர்ந்திருக்கின்றனர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

'' 'இந்த மார்க்கம் பன்னிரண்டு கலீஃபாக்கள் காலம் வரை மிகைத்தும், ஆற்றல் வாய்ந்ததாகவும் இருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷி களாகவே இருப்பர்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதன்பின் என்ன நடக்கும்? என்று கேட்கப்பட்டதற்கு, 'விஷமமும் குழப்பமும் தாம் ஏற்படும்' என்று அவர்கள் பதிலுரைத்தனர்.'' அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

'' 'நீங்கள் எல்லோரும் ஒருவரின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து இருக்கும் நேரத்தில் உங்களிடம் எவரேனும் வந்து, உங்களின் ஒற்றுமையை உடைக்கவும், உங்களின் ஜமாஅத்தை (கூட்டதைப்) பிரித்து விடவும் நாடினால் அவரை நீங்கள் கொன்று விடுங்கள்' என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அர்ஃபஜதுப்னு ஷுரைஹ் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்

'' 'நீங்கள் அனைவரும் அதிகாரிகளே! மேலும் நீங்கள் அனைவரும் உங்களின் (கீழுள்ள) பிரஜைகள் பற்றிக் கேட்கப்படுவீர்கள். அதுவே (ஒரு வீட்டின்) தலைவர் அவ்வீட்டின் அதிகாரியாவார். அவருடைய வீட்டினரைப் பற்றி அவரிடம் கேட்கப்படும். அன்றி, மனைவியும் தன் கணவரின் இல்லத்திற்கு அதிகாரியாவாள். அவள் தன் பிரஜைகளைப் பற்றிக் கேட்கப்படுவாள். மேலும் ஊழியனும் தன் முதலாளியின் பொருள்களுக்கு அதிகாரியாவாள். அவன் (தன்னுடைய) பிரஜைக(ளான பொருள்க)ளைப் பற்றிக் கேட்கப்படுவான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) ஆதாரம்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ

'' 'எவரை அல்லாஹ் பிரஜைகளின் தலைவராகச் செய்து அவர் இறக்கும்வரை அவர்தம் பிரஜைகளுக்கு மோசம் செய்து கொண்டே இருப்பாராயின் அல்லாஹ் அவர் மீது சுவனபதியைத் தடை செய்து விடுகிறான்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுற்றுள்ளேன்.'' அறிவிப்பவர்: ஹஸனுல் பஸரீ அவர்கள் மஃபலுப்னு யஸார் (ரலி) அவர்கள் மூலமாக அறிந்து ஆதாரம்: புகாரீ, முஸ்லிம்

'' 'மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிக உவப்பானவரும் அவனருகே அமர்ந்திருப்பவரும் எவரெனில் நீதமான தலைவராவார். அன்றி, மறுமை நாளில் அல்லாஹ்வுக்கு மனிதர்களில் மிகக் கோபமானவரும் அவனை விட்டும் வெகு தொலைவில் அமர்ந்திருப்பவரும் எவரெனில் அநியாயம் செய்யும் தலைவராவார்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ ஸஈத் (ரலி) ஆதாரம்: திர்மிதீ

'' 'நாயகமே! தாங்கள் என்னை எதற்கும் நியமிப்பதில்லையே' என்று நான் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன். அப்பொழுது அவர்கள் என் தோளில் தங்களின் கையால் ஒரு தட்டுத் தட்டிய பின், 'அபூ சர்ரே! நிச்சயமாக, நீர் ஒரு பலஹீனமானவர். இஃது ஒரு நம்பிக்கையான வேலையாகும். அன்றி, மறுமை நாளில் இதனால் இழிவையும் துன்பத்தையும் அடைய நேரும். ஆனால் அதன் கடமையைச் சரிவர நிறைவேற்றியும் அதுபற்றிய எல்லாப் பொறுப்புக்களையும் செய்தும் இருப்பவரைத் தவிர்த்து' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.'' அறிவிப்பவர்: அபூ சர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம், அபூதாவூத்

தொகுப்பு: அபூ ஸாலிஹா

Trackback(0)
கருத்துக்கள் (1)add comment
0
ameer:
நமது அனைத்துச் சகோதரர்களுக்குமான தலைமைத்துவ செய்தி
1

July 09, 2009 19:14

கருத்து எழுதுக :
தட்டச்சு மொழி மாற்ற crtl+g அழுத்துங்கள்.
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு
Twitter
RSS
YouTube
English